::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

இறுதிப்போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி !

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்டுக்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சாமிக கருணாரத்ன 24 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் போர்டின் மற்றும் ரபாடா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதற்கமைய, 121 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 14.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடித்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹென்ரிக்ஸ் 56 ஓட்டங்களையும், டீ கொக் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரை தென்னாபிரிக்கா அணி வௌ்ளையடிப்பு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.

விடைபெற்றார் சிம்பாப்வே அணியின் முன்னணி துடுப்பாட்டவீரர் பிரெண்டன் டெய்லர் !

சிம்பாப்வே அணியின் முன்னணி துடுப்பாட்டவீரர் பிரெண்டன் டெய்லர். 35 வயதான இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதன்முறையாக ஜிம்பாப்வே அணியில் அறிமுகம் ஆனார். தற்போது வரை 34 டெஸ்ட், 204 ஒருநாள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 6 சதங்களுடன் 2320 ஓட்டங்களும், ஒருநாள் போட்டியில் 11 சதங்களுடன் 6677 ரன்களும், டி20-யில் 934 ஓட்டங்களும் அடித்துள்ளார்.
தற்போது அயர்லாந்து- சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஓய்வு பெறும் கடைசி போட்டியில் சிறப்பான வகையில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தொடக்க வீரராக களம் இறங்கிய டெய்லர் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இதன்மூலம் ஏமாற்றத்துடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த பயணத்திற்காக எப்போதும் நன்றிக்குரியவனாக இருப்பேன். நன்றி. என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண ரி20 போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு !

உலகக் கிண்ண ரி20 போட்டிக்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு,

தசுன் ஷானக்க (தலைவர்)
தனஞ்சய டி சில்வா (உப தலைவர்)
குசல் பெரேரா
தினேஸ் சந்திமல்
அவிஷ்க பெர்னாண்டோ
பானுக ராஜபக்ஷ
சரித் அசலங்க
வனிந்து ஹசரங்க
கமிந்து மெண்டிஸ்
சாமிக கருணாரத்ன
மஹீஷ் தீக்ஷன
பிரவீன் ஜயவிக்ரம
நுவன் பிரதீப்
துஷ்மந்த சமீர
லஹிரு மதுஷங்க
லஹிரு குமார
பினுர பெர்னாண்டோ
அகில தனஞ்சய
புலின தரங்க

பெண்கள் கிரிக்கெட் விளையாடினால் உடல் தெரியும் என்ற தலிபான்களுக்கு அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை கொடுத்த பதிலடி !

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பெண்களை கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை செய்தால், ஆப்கான் ஆடவர் அணியுடன் கிரிக்கெட் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின், அந்நாட்டைத் தலிபான் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு இடைக்கால அரசு அமைக்கவும் முடிவு செய்து அமைச்சரவைப் பட்டியலை அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே பெண்களுக்கு உரிமைகள் முழுமையாக வழங்கப்படும் என அறிவித்திருந்த தலிபான் தீவிரவாதிகள், திடீரென பெண்கள் அரசியலில் பங்கேற்கத் தடை விதித்துள்ளனர். பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதித்து, கிரிக்கெட் விளையாடவும் அனுமதி மறுத்துள்ளனர்.

தலிபான்கள் தீவிரவாத அமைப்பின் கலாச்சாரப் பிரிவின் துணைத் தலைவர் அஹமத்துல்லாஹ் வாசிக் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியமில்லை என்று கருதுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவது தேவையற்றது. கிரிக்கெட்டில் பெண்கள் பங்கேற்றால் அவர்களின் உடல், முகம் ஆகியவை மூடப்படாது. அனைவரும் பார்க்கும் வகையில் உடல் உறுப்புகள் தெரியக்கூடும். இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இப்போதுள்ள சூழலில் பெண்கள் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டும் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல” எனத் தெரிவித்தார்.

ஆனால், வரும் நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணி ஆஸ்திரேலியாவில் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஆப்கனில் மகளிர் கிரிக்கெட் விளையாடத் தலிபான்கள் தடை விதித்தால், ஆடவர் அணியுடன் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என ஆஸ்திேரலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை  வெளியிட்ட அறிவிப்பில், “மகளிர் கிரிக்கெட் என்பது கிரிக்கெட் சபைக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கண்ணோட்டம். எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் பெண்களும் கிரிக்கெட் விளையாட ஒவ்வொரு அளவிலும் ஆதரவு தருவோம்

ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருப்தாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. பெண்கள் கிரிக்கெட்டைத்தலிபான்கள் தடை செய்தால், ஹோபர்ட்டில் நவம்பர் மாதம் ஆப்கன் ஆடவர் அணியுடன் ஆஸ்திரேலிய அணி, விளையாடும் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதைத் தவிர ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேறு வழியில்லை” எனத் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சார்ட் கோல்பெக் கூறுகையில், “ பெண்கள் கிரிக்கெட் விளையாட தலிபான்கள் தடை விதித்திருப்பது ஆழ்ந்த கவலையளிக்கிறது. பெண்கள் பங்கேற்பு இல்லாமல் எந்த விளையாட்டையும் ஏற்றுக்கொள்வது சாத்தியமற்றது.

சர்வதேச விளையாட்டு அமைப்பு, குறிப்பாக ஐ.சி.சிஅமைப்பு தலிபான்கள் நிலைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஐசிசி செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், “தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்த செய்தி கவலையளிக்கிறது. இந்தத் தடையின் தாக்கம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டு வளர்வதில் சிக்கல் ஏற்படுத்தும். இது தொடர்பாக அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்திய 20 ஓவர் அணியில் மீள இணையும் அஸ்வின் – ஆலோசகராக முன்னாள் தலைவர் டோனி !

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒக்டோபர் 17-ந் திகதி முதல் நவம்பர் 14-ந் திகதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.அவர் இந்திய அணிக்கு 2 உலக கோப்பை (2007-ல் 20 ஓவர், 2011-ல் ஒருநாள் போட்டி) மற்றும் ஐ.சி.சி. சாம்பியன் டிராபி கோப்பையை (2013) பெற்றுக்கொடுத்து இருக்கிறார்.

34 வயதான அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மகிழ்ச்சியும், நன்றியும் மட்டுமே இப்போது என்னை வரையறுக்கும் இரண்டு வார்த்தைகளாகும்.

இவ்வாறு அஸ்வின் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.

அவர் கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடினார். அஸ்வின் 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அஸ்வின் உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தற்போது திகழ்கிறார். அவர் 79 டெஸ்டில் ஆடி 413 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கேப்டன் விராட் கோலி அவருக்கு ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆண்டுகளின் பின்பு இலங்கை நிகழ்திய சாதனை – தென்னாபிரிக்காவை சிதறடித்த இலங்கை பந்துவீச்சாளர்கள் !

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே இரு அணிகளும் ஒரு போட்டிகள் வீதம் வெற்றி பெற்றிருந்த நிலையில் , தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற போட்டியில் இன்றையதினம் இரு அணிகளும் களமிறங்கின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். அவர் தவிர துஷ்மந்த சமீர 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தென்னாபிரிக்கா சார்பில் பந்து வீச்சில் கே. மஹராஜ் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, 204 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 30 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 78 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

அவ்வணி சார்பில் க்ளெசென் அதிகபட்சமாக 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அறிமுகவீரர் மஹீஸ் தீக்சன 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். துஷ்மந்த சமீர 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக துஷ்மந்த சமீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று 3 வது போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2 – 1 என கைப்பற்றியதுடன், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் தென் ஆபிரிக்காவை ஒருநாள் தொடரில் வெற்றிகொண்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இறுதிநாளில் மாறிய போட்டியின் திசை – இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியபந்துவீச்சாளர்கள் !

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.
இதில் 4வது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை துடுப்பெடுத்தாட செய்யச் சொன்னது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்கு முழு இலக்குகளையும் இழந்தது. தாகூர் 57 ஓட்டங்கள் , கோஹ்லி 50 ஓட்டங்கள் பெற்றதே அதிகமாக இருந்தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, 290 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் ஒல்லி போப், அதிகபட்சமாக 81 ஓட்டங்கள் விளாசினார். இந்த தொடரின் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவ், இந்தியா சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்தார்.
இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். ஆரம்பவீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, நிலைத்து ஆடிய ரோகித் சர்மா, சதம் விளாசினார். அவர் 256 பந்துகள் விளையாடி 127 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சார்பில் செத்தேஷ்வர் புஜாரா, ரிஷப் பண்ட், ஷிராதுல் தாக்கூர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 466 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் மூலம் 368 ஓட்டங்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. நேற்று 4வது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்கள் எடுத்தது.
ஆனால், இன்று ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.
இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் கண்டு, அணியின் ஸ்கோரை உயர்த்தியபோதும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடவில்லை. டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி ஆகியோர் முறையே 5, 0, 0 ஆகிய ஓட்டங்களில் வெளியேறியது இங்கிலாந்துக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.
இந்தியாவுக்காக உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி, 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி வரும் 10 ஆம் தேதி மான்சஸ்டரில் தொடங்குகிறது.

இங்கிலாந்து மண்ணில் அதிக சதங்கள் – கிரிக்கெட்டின் பிதாமகன் பிரட்மன் சாதனையை நெருங்கும் ரோகித் !

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணினக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம் பெற்று வருகிறது.

ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் வெளிநாட்டு மண்ணில்  ரோகித் சர்மா தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இந்த சதத்தின் மூலமாக ரோகித் சர்மா இங்கிலாந்து மண்ணில் மொத்தமாக ஒன்பது சதங்களை பூர்த்தி செய்த வீரராக தன்னை அடையாளப்படுத்தினார்.

இங்கிலாந்து மண்ணில் அதிக சதங்களை பதிவு செய்த வீரராக கிரிக்கெட்டின் பிதாமகன் பிரட்மன் காணப்படுகிறார், பிரட்மன் இங்கிலாந்து மண்ணில் 11 சதங்களை பூர்த்தி செய்திருக்கும் அதே நேரத்தில், மேற்கிந்திய தீவுகளின் விவ்வியன் ரிச்சர்ட்ஸ் 9 சதங்களை இங்கிலாந்தில் பெற்றுள்ளார்.

இவர்களுக்கு அடுத்து இந்திய வீரர் ரோகித் சர்மா அனைத்து வகை போட்டிகளிலும் இங்கிலாந்து மண்ணில் வைத்து 9 சதங்களை பூர்த்தி செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மலான் , ஷம்ஸி அசத்தல் ஆட்டம் – இரண்டாவது போட்டியில் இலங்கை தோல்வி !

தென்னாபிரிக்கா அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாக இருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதனைடுத்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 283 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் மலான் 121 ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்துவீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் சாமிக கருணாரத்ன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

5 விக்கெட் வீழ்த்திய ஷம்சிஅதனடிப்படையில் 284 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இலங்கை அணி களமிறங்கிய நிலையில் மீண்டும் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனையடுத்து போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணிக்கு D/L முறைப்படி 265 என்ற இலக்கு நடுவர்களால் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 36.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் தப்ரைஸ் ஷம்ஸி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.

லண்டன் ஓவலிலும் குழப்பம் – ஜார்வோ கைது !

இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட்  தொடரில் ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இவர் ஏற்கனவே லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டின் போது அத்துமீறி ஊடுருவினார். அதனால் லீட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியைப் பார்க்க அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, 4-வது டெஸ்ட் நடக்கும் லண்டன் ஓவலிலும் அவர் நேற்று திடீரென மைதானத்திற்குள் ஓடிவந்து பந்து வீசுவது போல் சைகை காட்டினார். அத்துடன் வந்த வேகத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ மீதும் மோதினார். பிறகு பாதுகாப்பு ஊழியர்கள் அவரைப் பிடித்துச் சென்றனர். இதனால் 5 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மைதானத்திற்குள் திடீரென நுழைவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள ஜார்வோவை லண்டன் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.