::விளையாட்டு
::விளையாட்டு
இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.
இந்திய இருபது20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அறிவித்த விராட் கோலி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய இருபது20 அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன்.
இதில், 5-6 ஆண்டுகள் அணித் தலைவராக இருந்துள்ளேன். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்க தயாராவதற்கு இடம் தேவை என கருதுகிறேன்.
இருபதுக்கு20 அணியின் தலைவராக இருந்தபோது அணிக்காக என்னிடம் இருந்த அனைத்தையும் வழங்கியுள்ளேன். தீவிர ஆலோசனைக்கு பின்னர், இருபதுக்கு20 அணி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.
துபாயில் நடைபெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் பதவி விலகவுள்ளேன் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி, டெஸ்ட் அணி, இருபதுக்கு20 என அனைத்து அணியின் தலைவராக விராட் கோலி இருந்து வந்தார்.
இதேவேளை ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராகவும் விராட் கோலி இருந்து வருகிறார். இருப்பினும், கோலி தலைமையில் பெங்களூரூ அணி இதுவரையில் ஒருமுறை கூட சம்பியன் பட்டம் வென்றதில்லை.
இதற்கிடையில், விராட்கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சரியாக சோபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இருபதுக்கு20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராட் கோலி நேற்று அறிவித்துள்ளார்.
ரி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெறுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
17 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் ஊடாக தான் பெற்றுக் கொண்ட அனுபவம் மற்றும் அறிவு தொடர்ந்தும் தேவைப்படப்போவதில்லை அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் தனது கிரிக்கெட் வாழ்வில் இறுதியாக இருந்த ரி20 போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டுக்கு ஆதரவு வழங்கும் வகையில் எப்பொழுதும் புதுமுக வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டை நேசிப்பவர்களுடன் தொடர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்டுக்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சாமிக கருணாரத்ன 24 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் போர்டின் மற்றும் ரபாடா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதற்கமைய, 121 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 14.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடித்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹென்ரிக்ஸ் 56 ஓட்டங்களையும், டீ கொக் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.
அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரை தென்னாபிரிக்கா அணி வௌ்ளையடிப்பு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.
உலகக் கிண்ண ரி20 போட்டிக்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.
அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு,
தசுன் ஷானக்க (தலைவர்)
தனஞ்சய டி சில்வா (உப தலைவர்)
குசல் பெரேரா
தினேஸ் சந்திமல்
அவிஷ்க பெர்னாண்டோ
பானுக ராஜபக்ஷ
சரித் அசலங்க
வனிந்து ஹசரங்க
கமிந்து மெண்டிஸ்
சாமிக கருணாரத்ன
மஹீஷ் தீக்ஷன
பிரவீன் ஜயவிக்ரம
நுவன் பிரதீப்
துஷ்மந்த சமீர
லஹிரு மதுஷங்க
லஹிரு குமார
பினுர பெர்னாண்டோ
அகில தனஞ்சய
புலின தரங்க
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பெண்களை கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை செய்தால், ஆப்கான் ஆடவர் அணியுடன் கிரிக்கெட் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின், அந்நாட்டைத் தலிபான் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு இடைக்கால அரசு அமைக்கவும் முடிவு செய்து அமைச்சரவைப் பட்டியலை அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே பெண்களுக்கு உரிமைகள் முழுமையாக வழங்கப்படும் என அறிவித்திருந்த தலிபான் தீவிரவாதிகள், திடீரென பெண்கள் அரசியலில் பங்கேற்கத் தடை விதித்துள்ளனர். பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதித்து, கிரிக்கெட் விளையாடவும் அனுமதி மறுத்துள்ளனர்.
தலிபான்கள் தீவிரவாத அமைப்பின் கலாச்சாரப் பிரிவின் துணைத் தலைவர் அஹமத்துல்லாஹ் வாசிக் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியமில்லை என்று கருதுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவது தேவையற்றது. கிரிக்கெட்டில் பெண்கள் பங்கேற்றால் அவர்களின் உடல், முகம் ஆகியவை மூடப்படாது. அனைவரும் பார்க்கும் வகையில் உடல் உறுப்புகள் தெரியக்கூடும். இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இப்போதுள்ள சூழலில் பெண்கள் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டும் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல” எனத் தெரிவித்தார்.
ஆனால், வரும் நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணி ஆஸ்திரேலியாவில் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஆப்கனில் மகளிர் கிரிக்கெட் விளையாடத் தலிபான்கள் தடை விதித்தால், ஆடவர் அணியுடன் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என ஆஸ்திேரலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில், “மகளிர் கிரிக்கெட் என்பது கிரிக்கெட் சபைக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கண்ணோட்டம். எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் பெண்களும் கிரிக்கெட் விளையாட ஒவ்வொரு அளவிலும் ஆதரவு தருவோம்
ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருப்தாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. பெண்கள் கிரிக்கெட்டைத்தலிபான்கள் தடை செய்தால், ஹோபர்ட்டில் நவம்பர் மாதம் ஆப்கன் ஆடவர் அணியுடன் ஆஸ்திரேலிய அணி, விளையாடும் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதைத் தவிர ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேறு வழியில்லை” எனத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சார்ட் கோல்பெக் கூறுகையில், “ பெண்கள் கிரிக்கெட் விளையாட தலிபான்கள் தடை விதித்திருப்பது ஆழ்ந்த கவலையளிக்கிறது. பெண்கள் பங்கேற்பு இல்லாமல் எந்த விளையாட்டையும் ஏற்றுக்கொள்வது சாத்தியமற்றது.
சர்வதேச விளையாட்டு அமைப்பு, குறிப்பாக ஐ.சி.சிஅமைப்பு தலிபான்கள் நிலைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஐசிசி செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், “தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்த செய்தி கவலையளிக்கிறது. இந்தத் தடையின் தாக்கம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டு வளர்வதில் சிக்கல் ஏற்படுத்தும். இது தொடர்பாக அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒக்டோபர் 17-ந் திகதி முதல் நவம்பர் 14-ந் திகதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.அவர் இந்திய அணிக்கு 2 உலக கோப்பை (2007-ல் 20 ஓவர், 2011-ல் ஒருநாள் போட்டி) மற்றும் ஐ.சி.சி. சாம்பியன் டிராபி கோப்பையை (2013) பெற்றுக்கொடுத்து இருக்கிறார்.
34 வயதான அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மகிழ்ச்சியும், நன்றியும் மட்டுமே இப்போது என்னை வரையறுக்கும் இரண்டு வார்த்தைகளாகும்.
இவ்வாறு அஸ்வின் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.
அவர் கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடினார். அஸ்வின் 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அஸ்வின் உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தற்போது திகழ்கிறார். அவர் 79 டெஸ்டில் ஆடி 413 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கேப்டன் விராட் கோலி அவருக்கு ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.