ஜெயபாலன் த

ஜெயபாலன் த

வெம்பிளியில் இளைஞர்களின் குழு மோதல்!! ஐவருக்கு மார்ச் 24ல் தண்டனை!!!

Lancelot_Roadதமிழ் இளைஞர் குழுக்களிடையே வெம்பிளியில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட ஐவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு உள்ளனர். மார்ச் 1இல் ஓல்ட்பெயிலியில் இவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை மார்ச் 24ல் வழங்கப்பட இருக்கின்றது.

2009 ஓகஸ்ட் 7ல் வெம்பிளியில் இடம்பெற்ற இளைஞர் குழுக்களிடையேயான மோதல் தொடர்பாகவே இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஹரோ குழுவினர் சவுத் ஹரோ பார்க்கில் ஜக் டானியல் அருந்திக் கொண்டு இருந்துவிட்டு ஈலிங் றோட்டில் உள்ள பாம் பீச் ரெஸ்ரோரன்ருக்கு சென்றுள்ளனர்.

வழியில் லான்ஸ்லொட் வீதியில் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முறுகல் உருவானது. ஹரோ குழுவினர் ஈலிங் றோட் டிஎம்எக்ஸ் குழுவினரை கொல்லப் போவதாகப் பயமுறுத்தினர். அருகில் இருந்த கார் தரிப்பு நிலையத்திலிருந்து டிஎம்எக்ஸ் குழுவினரது எண்ணிக்கை பெருத்தது. இது அருகில் உள்ள சிசிரிவியில் பதிவாகி உள்ளது. இது நீதிமன்றில் யூரிகளுக்கும் காண்பிக்கப்பட்டது.

இம்மோதலில் வாகீசன் பரமலிங்கத்தின் தாடை உடைக்கப்பட்டதுடன் முகத்திலும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஹரோ குழுவைச் சேர்ந்த அருள்முருகன் செபமாலை, வாகீசன் பரமலிங்கத்தை கிரிக்கட் பற்றினால் அவரது முகத்திலும் தலையிலும் பலமுறை தாக்கி உள்ளார். அதனால் வாகீசனின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களும் முகத்தில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. அவரது தாடையையும் அருள்முருகன் செபமாலை உடைத்திருந்தார். 

அதற்கு முன்னர் வாகீசன் பரமலிங்கம், அருள்முருகன் செபமாலையை கொலை செய்யப் போவதாகக் கூறி அவரது முகத்தை பிக்காஸினால் தாக்கி இருந்தார்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள்:

ஐங்கரன் தர்மலிங்கம் (24) டிஎம்எக்ஸ் குழு) – கிறீன்போர்ட் : ஐங்கரன் ஆயுதம் (இரும்புக் குற்றி) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

அருள்முருகன் செபமாலை (22) (டிஎம்எக்ஸ் குழு) – கென்ரன் : அருள்முருகன் செபமாலை ஆயுதம் (கிரிக்கட்பற்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் திட்டமிட்ட நோக்குடன் உடற்காயத்தை ஏற்படுத்தியதற்காகவும் குற்றவாவாளியாகக் காணப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சிக் குற்றச்சாட்டில் இருந்து அருள்முருகன் தவிர்க்கப்பட்டார்.
 
பார்த்தீபன் பரமலிங்கம் (30) (ஹரோ குழு) – என்பீல்ட் : பார்தீபன் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் (போத்தல்) வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

வாகீசன் பரமலிங்கம் (27) (ஹரோ குழு) – சறே : வாகீசன் ஆயுதம் (பிக்காஸ்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

மதுசூதன் சச்சிதானந்தன் (28) (ஹரோ குழு) – ரெய்னர்ஸ் லேன் : ஆயுதம் (கூரிய ஆயுதம் கத்தி) வைத்திருந்ததற்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். மதுசூதன் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவர்களுடன் கென்ரனைச் சேர்ந்த அஜித்குமார் தர்மராஜா (26) இவரின் தந்தை கந்தையா தர்மராஜா (48) இருவர் மீதும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அஜித்குமார் ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். சம்பவத்தின் போது அவ்விடத்தில் நின்ற அஜித்குமாரும் தந்தையும் அங்கு உருவான பதட்டத்தை தணிக்க முயன்றமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு அவர்களுடைய குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

காஸ்ச் பொயின்றில் பணம் எடுக்க முற்பட்டவரிடம் பணம் பறிமுதல்!

லண்டன் றெட் பிறிஜ் பிகைவ் லேனில் உள்ள பார்க்ளேய்ஸ் வங்கி காஸ்ச் பொயின்ரில் பணம் எடுக்க முற்பட்டவரின் பணத்தை இளைஞர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார். மார்ச் 11 காலை பதினொரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் வங்கியின் CCTVயில் தெளிவாகப் பதிவாகி இருந்ததுடன் அவ்வாதாரங்கள் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளைச் செயலாளர் பொன் சிவசுப்பிரமணியம் அவர்களே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார். தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முற்பட்ட போது காஸ்ச் பொயின்ரில் இருந்து வந்த 300 பவுண்களையும் ஏற்கனவே அவர் வங்கியில் இருந்து எடுத்திருந்த 400 பவுண்களையும் அவரது வொல்லற்றையும் பறிகொடுத்துள்ளார் பொன் சிவசுப்பிரமணியம்.

தான் எதிர்பார்த்திராத வகையில் ஓரிரு நிமிடங்களுக்குள் நடந்த இந்தச் சம்பவத்தால் தனது வங்கிக் நடவடிக்கைகளை வங்கி உறைநிலையில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார் பொன் சிவசுப்பிரமணியம். CCTVயில் சம்பவம் பதிவாகி இருந்த போதும் சம்பந்தப்பட்டவரைக் கைது செய்து தனது பணத்தை மீளப்பெற முடியுமா? என்பது சந்தேகம் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

ஏப்ரல் தேர்தலில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் 25 வீதத்தால் வீழ்ச்சி அடையலாம்!!! : த ஜெயபாலன்

gajendrakumar_ponnampalamSambanthan_R_TNAஏப்ரல் 8ல் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படும் தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ் வாக்குகள் பெருமளவில் சிதறிச் செல்கின்ற நிலையில் உள்ளதால்  2010 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் வரை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2004 தேர்தலில் வடக்கு கிழக்கில் இருந்து 23 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றிருந்தனர். இவர்களில் 22 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் ஒருவர் ஈபிடிபி யின் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டு இருந்தார். இத்தேர்தலில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படக் கூடிய தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 15 ஆகக் குறையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ஆயுத முனையில் இடம்பெற்ற போட்டி பெரும்பாலும் இருமுனையினதாக அமைந்ததால் தமிழ் வாக்குகள் சிதறுண்ணாமல் இருந்தது. அதனால் ஜனநாயகமற்ற அரசியல் பலம்வலுவானதாக அமைந்தது. ஆனால் இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் (ஜீனியர் விகடனில் மட்டுமே வாழ்கின்றனர்.) ஆயுத பலத்தினால் அவர்கள் கட்டியிருந்த ஒற்றுமை சிதறி அவர்களுடைய அரசியல் ஆதரவுத் தளம் ஈடாடியுள்ளது. அதனால் தமிழ் வாக்குகள் மிகவும் சிதறிப் போயுள்ளது.

2004 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தின் 9 ஆசனங்களுள் 9 ஆசனங்களும், வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுள் 5 ஆசனங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுள் 4 ஆசனங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுள் 2 ஆசனங்களும், அம்பாறை மாவட்டத்தில் 7 ஆசனங்களுள் ஒரு ஆசனமும் தமிழ் பிரதிநிதிகளுக்கு அதாவது ஈபிடிபி கட்சிக்கு ஒரு ஆசனமும் ஏனையவை விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் கிடைத்தது. வடக்கு, கிழக்குப் பிரதேசத்துக்குரிய 31 ஆசனங்களுள் 23 ஆசனங்கள் தமிழ் பிரதிநிதிகளுக்குக் கிடைத்தது. இம்முறை 15 ஆசனங்களாகக் குறைந்துவிடலாம் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக மே 18க்குப் பின்னான அரசியலில் ஆர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இருந்து ஓரம்கட்டியது. அதனால் அவர்களில் கிசோர் சிவநாதன், கனகரத்தினம், க தங்கேஸ்வரி ஆகியோர் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணிக்குச் சென்றனர். ந சிறிகாந்தா, எம்கே சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஜனாதிபதித் தேர்தலின் போதே இடதுசாரி முண்ணணியுடன் இணைந்து கொண்டனர். ஏனையவர்கள் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டனர். இவர்கள் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் கட்சியின் பட்டியலில் போட்டியிடுகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இந்த முன்னணியின் குறிப்பான நபர்கள். குறிப்பாக வன்னி யுத்தத்தின் போது வெளிநாடுகளில் தங்கி இருந்து வெளிநாட்டில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரண்டறக் கலந்த இவர்களுக்கு வடக்கு கிழக்கில் ஆதரவுத் தளம் இருக்கின்றதோ இல்லையோ புலம்பெயர்ந்த நாடுகளில் பலமான ஆதரவுத் தளம் உள்ளது.

போட்டியிடுகின்ற கட்சிகள்:

தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் (தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி), தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளொட், ஈழவர் ஜனநாயகக் கட்சி, இடதுசாரி முன்னணி, என தமிழர் தரப்பு கட்சிகளும் அத்துடன் சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி உட்பட சிங்கள கட்சிகளிலும் பல தமிழர்கள் போட்டியிடுகின்றனர். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் போட்டியிடுகிறது.

தேர்தல் களம்:

யாழ் மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 324 வேட்பாளர்கள், 15 அரசியல் கட்சிகளிலும்; 12 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். 250 000 குறைவானவர்களே யாழ் மாவட்டத்தில் வாக்களிக்க கூடியவர்களாக உள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் 6 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 253 வேட்பாளர்கள் 16 அரசியல் கட்சிகளிலும் 12 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2 66 976.

திருகோணமலை, மூதூர், சேருவல தொகுதிகளை உள்ளடக்கிய திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 217 வேட்பாளர்கள்  17 அரசியல் கட்சிகளிலும், 14 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். 241,133 வாக்காளர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.

கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதிகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 360 வேட்பாளர்கள்  17 அரசியல் கட்சிகளிலும் 28 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். மட்டக்களப்பு  மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 333 644 ஆகும். 

அம்பாறை மாவட்டத்தில் 7 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 660 வேட்பாளர்கள் 18 அரசியல் கட்சிகளிலும் 48 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 420 835.

இலங்கையிலேயே அதிகூடுதலான பிரிவுகள் போட்டியிடுகின்ற மாவட்டமாக அம்பாறையும் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பும் உள்ளது.

யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லீம் மக்கள் துரத்தியடிக்கப்பட்டதால் இழக்கப்பட்ட அவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் இத்தடவை அவர்களுக்கு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டி:

வடக்கு கிழக்கில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருந்த ஏகபிரதிநித்ததுவம் இத்தேர்தலில் அடிபட்டுப் போய்விடும் நிலையே உள்ளது. இருந்தாலும் வடக்கு கிழக்கில் கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 முதல் 10 வரையிலான ஆசனங்களை வடக்கு கிழக்கில் தக்க வைக்கும் என எதிர்வு கூறல்கள் உள்ளது. தமிழ் தேசியத்திற்கான முன்னணி ஆர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் சவாலாக அமையும். தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தாங்கள் வெளியேறுவதற்கு காரணமாக இருந்த ஆர் சம்பந்தனை திருகோணமலையில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தீவிரமாக உள்ளது. இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவு ஊடகங்கள் பெரும் ஆதரவை வழங்கி உள்ளன. புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளத்தால் உருவாக்கப்பட்ட புதிய துரோகியாக ஆர் சம்பந்தன் உள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர் குரலை தாயக மக்கள் செவிமடுக்கின்றார்களா என்பதும் இத்தேர்தலில் தெரிந்துவிடும்.

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் உண்டு நெருக்கடிகள்! விபரீதங்கள் ஏற்படுமுன் உதவியை நாடுங்கள்!!! உளவியலாளர் யோகா பேரின்பநாதன்

Psychologyஉடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் உண்டு நெருக்கடிகள்! விபரீதங்கள் ஏற்படுமுன் உதவியை நாடுங்கள்!!! உளவியலாளர் யோகா பேரின்பநாதன் பதலளிக்கின்றார்.

பகுதி 1

லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன?
ஒருவருக்கு இரண்டு விதமாக உளவியல் பிரச்சனைகள் வரலாம். ஓன்று அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றையது அவர் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனைகள்.

1)அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள்:
உதாரணமாக மரணம்- நெருங்கிய உறவினரோ நண்பரோ இறப்பது, வேலை இல்லாமல் போதல் போன்ற நிகழ்வுகள்.
2) ஒருவர் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனைகள்:.
உதாரணமாக, ஒரு நிலபரத்தை எதிர்நோக்கும்போது, அதைக் கையாளும் முறையால் வரக்கூடிய மனநெருக்கடி, இதனால் உறவு முறைகளில் சங்கடங்கள், ஒரு விஷயத்தை தீர்மானிக்க முடியாத மனக்குழப்பநிலை போன்றவை எற்படலாம். காரணம்- முக்கியமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாத நிலை. ஆகவே உளவியல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அடிப்படையான காரணம் ஒருவரது மனவலிமை மனத்திடத்தைப் பொறுத்தது.

லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகளை எவ்வாறு அடையாளம் காணலாம்?

உளவியல் பிரச்சனைகள் என்று நீங்கள் கூறுவது ‘மனஉழைச்சல்’ அல்லது ‘மன நெருக்கடி’ என்று நினைக்கிறேன்.
மன உழைச்சலால் ஒருவர் கஸ்டப்படுகிறார் என்ற அடையாளங்களைக் கூறமுன், stress-மனநெருக்கடி: depression- மனஉழைச்சல்:
மனஉழைச்சல் என்னும்போது pressure. ஓரளவு pressure இருந்தால் ஒருவர் காரியங்களைச் செய்து முடிப்பதற்கு ஒரு motivation ஆக இருக்கும். மற்றும், கட்டாயம் கவலை தரக்கூடிய சம்பவங்களால்தான் ஒருவர் மனநெருக்கடியை அனுபவிக்கக் கூடும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக புதுவீடு மாறும்பொழுது, பிள்ளைப்பேறு நாட்கள், திருமணம், பிறந்ததின விழா ஏற்பாடு செய்யும்போதுகூட ஒருவர் stress அனுபவிக்கக்கூடும். stressன் அளவு கூடும்போது மனஉழைச்சல் (depression) வரக்கூடும். ஒருவருக்கு மன உழைச்சல் கூடினாலோ அல்லது கூடியகாலம் நீடித்தாலோ அது அவருடைய மனநிலையையோ அல்லது உடல்நிலையையோ பாதிக்கக்கூடும்

மனஉழைச்சலை அனுபவிப்பவர்களுக்கு இருக்கக்கூடிய சில அறிகுறிகள்: (symptoms)
நித்திரையின்மை, பசியின்மை அல்லது மாறாக கூடியளவு நித்திரை, அளவுக்கதிகமான பசிகூட வரலாம், விரக்தி, எதிலும் நாட்டமின்மை, மனக்குழப்பநிலை, அதிகூடிய களைப்பு, பயம், ஒரு முடிவு எடுக்க முடியாத மனநிலை, மற்றவர்கள்மீது பிழை காண்பது, அதிவிரைவில் அதிகூடிய கோபம், தன்னம்பிக்கை குறைதல், தனிமையை நாடுதல், தோற்றுவிட்டதுபோல் உணர்வு.

உடல்நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:
தொடர்ந்து தலை இடிப்பது (migraine), தலைநோ, தலை எரிவு, நெஞ்சு படபடப்பு, இருதயநோய்கள், வயிற்றில் அல்சர் உண்டாவது, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கோளாறுகள் (irritable bowel syndrome) வாய் காய்ந்து போதல், muscle tension போன்றன.

லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகளுக்கு எவ்வாறான உதவிகள் பெறக்கூடியதாகவுள்ளது?

உளவியல் பிரச்சனை அல்லது மன உழைச்சல் இருக்கிறது என்று அறிந்தால் முதலில் தங்கள் குடும்ப வைத்தியரை நாடி ஆலோசனை பெறவேண்டும். ஒருவர் தனக்கு உளவியல் பிரச்சனை இருக்கிறது என்று அறிந்து அதற்கான உதவியை நாடுவது அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான ‘முதல்படி’ என்று கூறலாம்.

counselling சம்பாஷனைகள் மிகவும் உதவி செய்யும். counselling சம்பாஷனையின்போது மனம்திறந்து கதைத்துக் கொண்டே வருவதால் ஒருவருடைய எண்ணங்கள், உணர்வுகள் என்பன ஆழமாக அலசப்பட்ட பிரச்சனைகளைப்பற்றி ஒரு சீரான முறையில் தெளிவாக யோசிக்கக் கூடிய மனநிலை உருவாகும். இது அவருடைய வாழ்க்கையை திருப்திகரமான முறையில் கொண்டு செல்வதற்கு உதவும். Helplines மூலமும், அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற சேவைகள் மூலமும், நிபுணர்கள் மூலமும் உதவிகளைப் பெறலாம்.

லண்டன் குரல்: உள்ளத்தை எவ்வாறு ஆரோக்கியமானதாக வைத்திருக்க முடியும்?

நிறையுணவு ( balanced diet) ஒழுங்கான தேகாப்பியாசம், சரியான முறையில் மூச்சுப்பயிற்சி செய்தல், ஓடுதல், நடத்தல், நீந்துதல், relaxation, யோகாப்(பயிற்சி)பியாசம், meditation போன்றவை உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
மனதிற்குள் எல்லாப் பிரச்சனைகளையும் வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதால் மனநிலை, உடல்நிலை என்பன பாதிக்கப் படலாம். ஆகவே உதவியை நாடுவது மிகவும் அவசியம்.

பகுதி 2

லண்டன் குரல்: புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உளவியல் பிரச்சினைகள் உள்ளனவா? அவர்கள் மத்தியில் உள்ள குறிப்பான உளவியல் பிரச்சினைகள் என்ன?

புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் குறிப்பாக இருக்கக்கூடிய உளவியல் பிரச்சினைகள்:
1) தாயகத்தில் ஏற்பட்ட அனுபவங்களால் உண்டான தீர்க்கப்படாத உணர்வுகளின் தாக்கங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள்.
2) கலாச்சார வேறுபாட்டால் பெற்றோருக்கும் ஜரோப்பிய நாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்.
3)தனிமை- கணவன் கூடிய நேரம் வேலை செய்யும் இடத்தில் செலவிட்டால் வீட்டுவேலை பிள்ளைகளின் அலுவல்கள் நாளிலும் பொழுதிலும் செய்யும் மனைவிக்கு வரக்கூடிய நெருக்கடி.
4) காசுப் பிரச்சனையால் வரக்கூடிய தாக்கங்கள்.
5) Imigratiom status பிரச்சனைகள்
6) எங்கள் சமூகத்தினரால் ஏற்படக்கூடிய அழுத்தம். (pressure)

லண்டன் குரல்: உளவியல் பிரச்சினைகள் என்பது குறிப்பிட்ட வயதினர் மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினையா? அல்லது அனைத்து வயதினர்க்கும் ஏற்படக் கூடிய பிரச்சினையா?

உளவியல் பிரச்சனைகள் சிறுவர் முதல் பெரியோர்வரை அனுபவிக்கக்கூடும்.

லண்டன் குரல்: உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலை, வன்முறை, குடும்ப வன்முறை போன்ற பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. இவற்றுக்கும் உளவியலுக்கும் தொடர்புகள் உள்ளதா?

முக்கியமாக உளவியல் பிரச்சனைகளால் தான் தமிழ் மக்கள் மத்தியில் கூடுதலான தற்கொலை, வன்முறை போன்றவை நடக்கின்றன

லண்டன் குரல்: தாயகத்தில் ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சினைகள் புலம்பெயர்ந்த சமூகத்தில் ஏற்படக் கூடிய உளவியல் பிரச்சினைகளில் இருந்து வேறுபபட்டதா? புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இது நாட்டுக்கு நாடு வேறுபாடு உள்ளதா?

தாயகத்தில் இருக்கும் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் புலம்பெயர்ந்த சமூகத்தின் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் சில வேறுபாடுகள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தாயகத்தில் சொந்தக்காரர், பக்கத்து வீட்டுச் சினேகிதர் என்று ஒவ்வொரு நாளும் கண்டு கதைத்து கவலைகளையும், பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன. ஜரோப்பிய நாட்டு வாழ்க்கை முறையில் சினேகிதரையோ, உறவினரையோ பார்ப்பதென்றால் ரெலிபோன் பண்ணி அவர்களின் சௌகரியத்தைப் பொறுத்துத்தான் சந்திக்கக் கூடியதாக இருக்கிறது.

மற்றும் அங்குள்ள பெற்றோரின் சிந்தனைகளும் நம்பிக்கைகளும் பிள்ளைகளின் சிந்தனைகளும் நம்பிக்கைகளும் மாறுபட வாய்ப்பில்லை ஏனெனில் கலாச்சார முரண்பாடு இல்லாததே காரணம்.

லண்டன் குரல்: தமிழ் மக்கள் ஒரு சமூகமாக அவர்கள் எதிர்நோக்குகின்ற உளவியல் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகள் வெளியில் கதைத்து disscuss பண்ணி இவை வராமல் எப்படித் தவிர்க்கலாம் என்று அதற்கான செயல்களைச் செய்ய வேண்டும். பிரச்சனைக்கான விடயங்களைக் கண்டறிந்து அந்தந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களைக்கொண்டு சொற்பொழிவு மூலமும் வேறு வழிகளிலும் மக்களிற்கு விழிப்புணர்ச்சியைக் கொண்டுவந்து விபரீதங்களைக் குறைப்பதற்காக ஆவண செய்ய வேண்டும்.

லண்டன் குரல்: Counselling சம்பாஷணைகளால் ஏற்படக்கூடிய பயன்கள் என்ன?

கவலைதரும் சம்பவங்கள் அதனால் ஏற்படக்கூடிய எண்ணங்கள் உணர்வுகளை Counselling சம்பாஷணைகள் ஒத்துக் கொள்ளக்கூடிய மனநிலையைக் கொடுக்கிறது. இதனால் ஒருவருடைய தன்னம்பிக்கை கூடுகிறது. மனதில் சாந்தம் ஏற்படுகிறது. தன்னால் முடியும் இன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என்னும் மனஎழுச்சி ஏற்படும். மனநிலையிலும் உடல் நிலையிலும் உள்ள பாதிப்புக்கள் குறையும் அல்லது நீங்கும்.

கவலையால் வரக்கூடிய விளைவுகளைக் குறைப்பதற்கு Counselling சம்பாஷணைகள் உதவுகின்றன.

ஒருவரது வாழ்க்கையை ஒரு சீரான முறையில் அணுகக்கூடிய மன வலிமையைக் கொடுக்கிறது. Counselling அனுபவமும் அதனால் ஏற்படக்கூடிய விழிப்புணர்ச்சியும் ஒருவருக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை சீரானமுறையில் அணுகுவதற்கான மனவலிமையைக் கொடுத்து பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய மனதைரியத்தைக் கொடுக்கிறது.

லண்டன் குரல்: Counselling சம்பாஷணைகள் எவ்வாறு நடைபெறும்?

Counsellorம் உதவியை நாடுபவரும் முதலில் சந்திக்கும்போது Counsellor எத்தனை தடவைகள் சந்திக்க வேண்டும் ஒவ்வொரு சந்திப்பும் எவ்வளவு நேரம் நீடிக்கும் கநநள என்ன என்பன போன்ற விஷயங்களை விளங்கப்படுத்தி ஒரு conttraact எழுதி ஒத்துக் கொள்வார்கள்.

சந்திப்புகளின்போது Counsellor ஒருபோதும் உதவியை நாடுபவரை எடைபோட மாட்டார். அறிவுரைகூற மாட்டார். குறைகூற மாட்டார். எல்லாவற்றையும் கவனமாகக்கேட்டு தகுந்தமாதிரிக் கதைத்துக்கொண்டு வருவார். தகுந்த கேள்விகள் கேட்பதன் மூலமும் ஆதரவான முறையில் கதைப்பதன்மூலமும் உதவி செய்வார்.

சில சமயங்களில் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப மனம்விட்டுக் கதைப்பதால் ஒருவருடைய உணர்வுகள் எண்ணங்கள் அனுபவங்கள் என்பன மிகவும் ஆழமான முறையில் அலசப்பட்டு எல்லா விஷயங்களும் தெளிவாகத் தெரியத் தொடங்கும். இது ஒருவருக்குத் தேவையான எதிர்கால இலக்குகளை நிர்மாணிப்பதற்கு உதவுகிறது.

9 பால்குடம் அறிமுகப்படுத்தினால் 10வது பால்குடம் இலவசம் ! தாயக மக்களின் பெயரில் வசூல் !! எட்மன்டன் நாகபூசணி அம்பாளுக்கே அனைத்தும் வெளிச்சம் !!! : த ஜெயபாலன்

Chief Priest Kamalanatha Kurukkalதாயக மக்களின் பெயரில் அரசியலும் வியாபாரமும் புலம்பெயர்ந்த நாடுகளில் வெகு அமோகமாக நடைபெறுகின்றது. குறிப்பாக தாயக மக்களுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்களும் பொது ஸ்தாபனங்களும் தங்கள் கணக்கியல் கோவைகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதில்லை.

என்பீலட் நாகபூசணி அம்மன் ஆலயம் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்படுகின்றது என்ற பெயரிலேயே ஒன்பது பேர் இணைந்து இந்த ஆலயத்தை உருவாக்கினர். வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலயமும் அதே நோக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட போதும் அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆர் ஜெயதேவனுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை நழுவிச் சென்றது.

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் 2002 யூலையில் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான தற்போது ஆலயம் அமைந்தள்ள கட்டிடம் 2003ல் 370 000 பவுண்களுக்கு வாங்கப்பட்டது. நவரட்ணம் சண்முகநாதன், அந்தோணிப்பிள்ளை காந்தரூபன், கதிரவேற்பிள்ளை சிவசின்மியநாதன், பொன்னையா கைலாயபதிவாகன் ஆகியவர்களின் பெயரில் தற்போதைய ஆலயக் கட்டிடம் அமைந்துள்ளது.

Nagapoosani Amman Trustee Vahanவடக்கு கிழக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவுவதை தங்கள் நீண்டகாலத் திட்டமாக அறிவித்து இருந்த ஆலய நிர்வாகம் இந்த ஆலயத்தை பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் Charity Commission கீழ் பதிவு செய்யவில்லை. இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் கட்டிடங்கள் வாங்கும் போது நன்கொடைகள் பெறப்படும் போதும் வரி விலக்குச் சலுகைகள் இருந்தும் இவர்கள் தங்களைப் பதிவு செய்வதைத் தவிர்த்துள்ளனர். பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்வது என்பது ஒரு பொது அமைப்பினது நல்லநடைமுறை. கணக்கு விபரங்கள் பொதுநல அமைப்புகளின் ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படும். ஆனால் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயம் அதனை பல ஆண்டுகளாகச் செய்யவில்லை.

Nagapoosani Amman Kodi Archchanaiஆயினும் தாயக மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் பல்வேறு ஆலயப் பூஜை முறைகளை அறிமுகப்படுத்தி நிதி வசூலில் தீவிர ஆர்வம் காட்டி வந்தது. வன்னி யுத்தம் மிகத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் 2009 ஜனவரி முதல் மார்ச் வரை தாயக மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் கோடி அர்ச்சனை என்ற பூஜையை அறிமுகப்படுத்தி ஒரு நாளுக்கு ஆயிரம் பவுண்கள் என்ற அடிப்படையில் 100 நாட்களுக்கு 100,000 பவுண்கள் திரட்டி இருந்தனர்.

தற்போது மாசி மகத்தை முன்னிட்டு 1008 குடம்பால் அபிசேகம் மேற்கொள்ள உள்ளதாகவும் அந்த நிதி தாயகத்தில் முதியோர் இல்லம் அமைக்க வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஒரு பால் குடம் 10 பவுண்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒன்பது பேர்ரை அழைத்துவந்து பால்குடம் எடுத்தால் 10வது குடம் இலவசமாக வழங்கப்படுவதாக அவ்வாலயத்திற்குச் சென்றுவரும் பக்தர் ஒருவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு ஒரு இணையத்தளம் இருந்த போதும் அவ்விணையத் தளத்தில் ஆலய நிர்வாகம் பற்றியோ அல்லது ஆலயம் மேற்கொள்ளும் உதவித்திட்டங்கள் பற்றியோ எவ்வித தகவலும் அதில் காணப்படவில்லை.

Nagapoosani Amman Trustee Rubarah with LTTE Leader Thamilchelvanலண்டனில் உள்ள ஆலயங்களில் பொருளாதாரரீதியாகக் கூடுதல் லாபமீட்டும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் அதன் கணக்கு விபரங்களையோ அதன் உதவி நடவடிக்கைகளையோ இணையத்தில் வெளியிடத் தயக்கம் காட்டி வருகின்றது.

இது பற்றி ஆலயத்தின் தனாதிகாரி பசுபதி அவர்களிடம் கேட்டபோது ஆலயத்திற்கு நேரில் வந்து அவற்றைப் பார்வையிட முடியும் என்றும் தொலைபேசியில் அவற்றை தெரிவிப்;பது சிரமம் என்றும் தெரிவித்தார். ஆலயத்திற்கு வரும் அனைத்து வருமானங்களிலும் செலவு போக மிகுதியை தாயகத்திற்கு அனுப்பி வருவதாகவும் அவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். எதற்காக இதுவரை பொதுநல அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யவில்லை எனக் கேட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுக்கே தாங்கள் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

Nagapoosani Amman Trustee Rubarajமுதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் எனஉதவி கேட்பவர்களுக்கு உதவி வருவதாகத் தெரிவித்த அவர் நேரில் வரும்பட்சத்தில் அவற்றைப் பார்வையிடலாம் எனவும் தெரிவித்தார். பல்கலைக் கழகங்களில் கற்கும் 15 வன்னி மாணவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய்களை வழங்கி வருவதாகவும் சென் ஜோன்ஸ் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னி மாணவர்களுக்கு உதவி வருவதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

லண்டன் குரலின் அடுத்த இதழில் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்துடனான சந்திப்பின் விபரங்களை வெளியிடுவோம்.

என்பீலட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பூஜைமுறைக்கு ஒத்த பூஜைமுறைகள் கனடாவில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்திலேயே இடம்பெற்றது. இவ்வாலயம் ஸ்பாபறோவில் விக்ரொரியா பார்க் லோறன்ஸ் சந்திப்பில் அமைந்தள்ளது. இங்கு லட்ச தீப அர்ச்சனை என்ற முறையை அறிமுகப்படுத்திய குருக்கள் ஒரு சுட்டி தீபத்தை 2 கனடிய டொலருக்கு விற்பனை செய்தார். ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எத்தினை தீபச்சுட்டிகளையும் வாங்கி ஏற்றலாம். ஆனால் லட்ச தீபங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்றப்பட வேண்டும். இது வெற்றியளிக்கவே குருக்கள் கோடி தீப அர்ச்சனையை அறிமுகப்படுத்தினார். இவற்றின் தொடர்ச்சியே என்பீல்ட் கோடி அர்ச்சனையும் பால்குடமும்.

தாயகத்திற்கு என்ற பெயரில் பெரும் எடுப்புகளில் நிதி வசூலிப்புகள் நடைபெறுகின்றது. ஆனால் இவ்வாறு பெரும் எடுப்புகளில் சேகரிக்கப்படும் நிதிக்கு என்ன நடந்தது என்பதனை நிதி சேகரிப்பில் முன்னிள்றவர்கள் வெளியிடுவதில்லை. இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு வணங்கா மண். பலநூறாயிரம் செலவில் அனுப்பப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் பாவணைக்கு உதவாதி நிலையை அடைந்தன. சுண்டக்காய் கால்ப் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றளவில் புலம்பெயர்ந்த மக்கள் வழங்கிய நிதி விரயமானது.

Nagapoosani Amman Trustee Vahan with LTTE Leader Thamilchelvanதற்போது நிதி சேகரிப்பில் ஈடுபடும் ஒரு சில அமைப்புகள் மட்டுமே தமது கணக்குக் கோர்வைகளில் வெளிப்படைத் தன்மையைப் பேணுகின்றன. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் நீண்டகாலமாகவே பெருமளவு உதவித் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. அத்துடன் அதன் கணக்கு விபரங்களையும் இணையத்தில் வெளிப்படையாகவே வெளியிட்டும் வருகின்றது. அதனால் அடியார்களது நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

புலம்பெயந்த நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் முடிந்தவரை தாயக மக்களுக்கு உதவமுன்வர வேண்டும் அதே சம்யம் தங்கள் கணக்குக் கோவைகளை வெளிப்படையாகப் பேணவும் முன்வர வேண்டும். அது மட்டுமே அவர்களுடைய நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உள்ள ஒரே வழி.

”புலிகளின் தமிழீழக் கொள்கையில் இருந்து தங்களை விடுவிக்கும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களால் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு உதவ முடியாது!” : INTERNATIONAL CRISIS GROUP – ICG

international_crisis_group‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் கொள்கையில் இருந்து தங்களை விடுவிக்கும் வரை புலம்பெயர்ந்த தமிழர்களால் இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு உதவ முடியாது’ என இன்ரநசனல் கிறைசிஸ் குறூப் பெப்ரவரி 23ல் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ‘THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ள 25 பக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE – EXECUTIVE SUMMARY : INTERNATIONAL CRISIS GROUPஇன்ரநசனல் கிறைசிஸ் குறூப் முரண்பாடுகளைத் தடுப்பதற்கும் தீர்ப்பதற்குமான ஒரு சுயாதீன அமைப்பு. ஐந்து கண்டங்களிலும் நேரடியாக களநிலைமைகளை ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு ஆலோசனைகளையும் இவ்வமைப்பு வழங்கி வருகின்றது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பெரும்பாலும் பிரிவினையை விரும்புவதாகவும் இதுவே அவர்களுக்கும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான போராட்டத்தில் ஆர்வம்கட்டுவதிலும் பார்க்க தங்கள் வாழ்வை மீளக்கட்டமைப்பதிலேயே கூடுதலாகக் கவனம் செலுத்துவதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

வெளிநாடுகளில் வாழ்கின்ற ஒரு மில்லியன் வரையான தமிழர்களால் தாங்கள் தனித்து ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அறிக்கை  புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியும் அமைப்புகளும் இலங்கையில் மீள் எழக்கூடிய வன்முறையின் அளவினை அதிகரிக்கச் செய்யும் என எச்சரித்து உள்ளது.

உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி தமிழ் ஈழத்திற்கான ஆதரவு இல்லையென்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இவ்வறிக்கை புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழீழ பிரிவினைக் கோரிக்கை மகிந்த ராஜபக்ச அரசினை அச்சமடையச் செய்வதன் மூலம் அரசு கடுமையான பயங்கரவாதத் தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு உதவுவதாக தெரிவித்து உள்ளது.

இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்களின் நிதி இலங்கையின் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள இவ்வறிக்கை இத்தாக்கம் எவ்வாறானததாக அமையும் என்பது வரும் மாதங்களில் தமிழ் மக்களை கொழும்பு அரசு எவ்வாறு அணுகப் போகின்றது என்பதிலேயே தங்கி உள்ளதாகத் தெரிவித்து உள்ளது. மேலும் சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் தமிழர்களுடையதும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுடையதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வைப்பதிலும் தங்கி உள்ளது என அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் இலங்கை அரசு முரண்பாட்டின் காரணத்தை இனம்கண்டு நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை இன்ரநசனல் கிறைசிஸ் குறூப் வலியுறுத்தி உள்ளது. தமிழர்கள் அரசியல் ரீதியாக ஓரம்கட்டப்படுவதையும் அவர்கள் பாதுகாப்பின்மையாக உணர்வதும் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை வலியுறுத்தி உள்ளது.

இதற்கு இந்தியா, ஜப்பான், மேற்கு நாடுகள் மற்றும் பல்கலாச்சார அமைப்புகள் தமிழ் மக்களைப் பலப்படுத்த வேண்டும் எனவும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் ஐநா விசாரணைகளை மேற்கொள்ளக் கோர வேண்டும் என்றும் அவ்வறிக்கை ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் உதவிகள் உரிமை மீறல்களுடன் பிணைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

கனடா உதயன் பத்திரிகை தாக்கப்பட்டது! முன்பு வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு பத்திரிகையை அகற்றி இருந்தது! : த ஜெயபாலன்

Uthayan_Canada15 வருடங்களாக கனடாவில் வெளிவருகின்ற கனடிய உதயன் பத்திரிகை பெப்ரவரி 20 இரவு தாக்கப்பட்டு உள்ளது. 10,000 பிரதிகள் வெளியாகின்ற வாரப்பத்திரிகை கனடாவில் இடம்பெறுகின்ற அரசியல் கயிறு இழுப்பில் சிக்குண்டு தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரியவருகின்றது. கனடிய உதயன் பத்திரிகையின் ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் இது பற்றி தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் ‘உன்னுடைய நண்பர்கள் இலங்கை சென்று மகிந்தவைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள். நீ உன்னுடைய ஒபிஸ்க்கு போய்ப் பார். உனக்கு ஒரு செய்தி கிடைக்கும்.’ என்று தொலைபேசியில் தெரிவித்ததாகக் கூறினார். மேற்படி தாக்குதலால் 12000 டொலர்கள் நட்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு உள்ளதாகவும் உதயன் ஆசிரியர் தெரிவித்தார்.

கனடிய உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதற்கு தேசம்நெற் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது. ஊடகங்களின் சுயாதீனமான செயற்பாடுகளைத் தடுக்கின்ற இவ்வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமானவை என்றும் இவற்றுக்கு எதிராக அனைத்து உரிமை அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தேசம்நெற் கேட்டுக்கொண்டுள்ளது. மக்களுக்கு தகவல் அறியும் சுதந்திரத்தை தடுக்க முனைகின்ற இவ்வாறான நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்ல எனவும் தேசம்நெற் குறிப்பிட்டு உள்ளது.

வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகை வழமை போன்று பெப்ரவரி 19 வெள்ளிக்கிழமை வெளியானது. அதன் பிரதிகள் வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் பொது இடங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு இருபத்திநான்கு மணிநேரத்தில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை என்று தெரிவித்த உதயன் ஆசிரியர் இச்சம்பவத்திற்கு முன்னர் தனக்கு சில தொலைபேசி மிரட்டல்கள் விடப்பட்டதாகவும் அந்தப் பின்னணியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

Logendralingam_Lமே 2009 வரை கனடாவில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு தான் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கி வந்ததாக தேசம்நெற்க்குத் தெரிவித்த உதயன் ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் மே 2009க்குப் பின் அன்று போராடியவர்களிடையே ஏற்பட்ட பிளவும் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிவித்தார். அண்மையில் கனடாவில் இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பை முன்னெடுத்த குழுவினர் ஏற்கனவே தங்களது பத்திரிகையை வியாபார நிறுவனங்களில் இருந்தும் பொது இடங்களில் இருந்தும் அகற்றியதை அவர் சுட்டிக்காட்டினார். வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு சார்பான ஆக்கங்களை வெளியிட்ட போதும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று காரணம் கூறியே கனடிய உதயன் பத்திரிகையை அவர்கள் அகற்றியதாகத் தெரிவித்தார் லோகேந்திரலிங்கம்.

கனடா உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதை கனடா தமிழீழச் சங்கத்தின் பிரதிநிதி துரைராஜாவும் கண்டித்திருந்தார். இது தொடர்பாக தேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்த துரைராஜா ‘உதயன் பத்திரிகை செய்திப் பத்திரிகை என்ற வகையில் கனடாவில் நடைபெறுகின்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்தகொண்டு நடுநிலைமையாகச் செய்திகளை விடுகின்ற பத்திரிகை’ என்றும் ‘அதனைத் தாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது’ என்றும் தெரிவித்தார்.

அண்மையில் கனடிய வர்த்தகக் குழுவொன்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து அனாதைச் சிறார்களுக்குச் சேகரித்த 20 000 கனடிய டொலர்களை ஜனாதிபதியிடம் கையளித்து இருந்தது. இச்சந்திப்பில் கனடிய தமிழர் ஐக்கிய சபை, கனடிய – ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் ஆகிய அமைப்புகளில் அங்கம் வகிக்கும் வர்த்தக பிரபலங்கள் குலா செல்லத்துரை, கணேசன் சுகுமார், இருதய மருத்துவ நிபுணர் பொன் சிவாஜி ஆகியோர் கலந்துகொண்டு மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தனர். இவர்கள் கனடிய உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கத்தின் நண்பர்கள்.

‘ஜனாதிபதியைச் சந்தித்தவர்கள் எனக்கு மட்டுமல்ல கனடாவில் உள்ள பலருக்கும் நண்பர்கள்’ என்று தெரிவித்த உதயன் பத்திரிகை ஆசிரியர் அவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்ததிலோ அல்லது ஜனாதிபதியிடம் நிதியைக் கையளித்ததிலோ தனக்கு எவ்வித உடன்பாடும் இல்லையெனத் தெரிவித்தார். மேலும் இச்சந்திப்புப் பற்றிய எவ்வித செய்தியும் உதயன் பத்திரிகையில் வெளிவரவில்லை எனவும் அவர் தெரிவி;த்தார். அச்செய்தியை வெளியிட்டால் தன் மீதும் தனது அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் தனக்கு இருந்ததாகவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவ்வாறான செய்தி எதுவுமே பிரசுரிக்கப்படாத நிலையில் சில ஊடகங்கள் அவ்வாறான செய்தி வெளியாகியதாலேயே தனது அலுவலகம் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளதாகவும் உதயன் ஆசிரியர் குற்றம்சாட்டினார்.

சுதந்திரமாக ஊடகங்களை நடாத்த முடியாத அளவுக்கு சுயதணிக்கை செய்து செய்திகளை வெளியிட வேண்டிய நிலை இன்னமும் கனடாவில் உள்ளதாக தனது மனவருத்தத்தை வெளியிட்ட லோகன் லோகேந்திரலிங்கம் உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதற்கு எதிராக 300 000 மக்கள் வாழும் கனடாவில் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையும் இடம்பெறாதது மனவருத்தத்தை ஏற்படுத்துவதாகம் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

புலிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’! வியூகம் அமைக்கின்றார் ஆர் சம்பந்தன். : த ஜெயபாலன்

Sampanthan_Rதமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் பற்றிய முடிவை இறுதிக் கட்டத்திலேயே அறிவிக்க உள்ளது. 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை. இறுதிக் கட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதன் மூலம் ஆசனங்கள் வழங்கப்படாதவர்கள் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியில் இறங்கிவிடாமல் தடுக்கவே அக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இரகசியமாக வைத்திருப்பதாக தேசம்நெற்றுக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இம்முறை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனங்கள் வழங்கப்பட மாட்டாது என அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர் சம்பந்தன் லண்டனில் தெரிவித்து இருந்தார். இச்செய்தி முதன்முறையாக பெப்ரவரி 10ல் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன் இதே தகவலை எம் கெ சிவாஜலிங்கமும் பெப்ரவரி 17ல் தி ஐலண்ட் பத்திரிகைக்குத் தெரிவித்து இருந்தார். http://www.island.lk/2010/02/17/news30.html

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யார் போட்டியிடுவது என்பது இறுதி நேரத்திலேயே வெளியிடப்பட இருக்கின்றது. இதன் மூலம் விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் ஏனைய கட்சிகளுடன் பேசி ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது கடினமாக்கப்படும் மேலும் சுயேட்சையாக நிற்பது பற்றிய முடிவுகளை எடுப்பதற்கும் கால அவகாசம் இருக்காது. இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்கால்’ கட்ட ஆர் சம்பந்தன் குழு தயாராகி வருவது தெரியவருகின்றது.

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலகட்டத்தில் அவரினால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானவர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாக மாறிய போதும் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலேயே அங்கம்வகித்தார். ஜனாதிபதித் தேர்தலில் கூட ஆர் சம்பந்தனுக்காக எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வாக்களித்தவர்.

தற்போது ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’இல் முதல் களப்பலியாகி உள்ளார் தங்கேஸ்வரி கதிர்காமநாதன். அவரைத் தொடர்ந்து கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல) மற்றும் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, விநோதரலிங்கம் சுப்பிரமணியம் ஆகியோர் ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்கால்’ இல் பலியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும் வெல்லப்படக் கூடிய ஆசனங்கள் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

தங்கேஸ்வரி கதிர்காமநாதன் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் மறுக்கப்படவுள்ள மற்றுமொருவர் பத்மினி சிதம்பரநாதன். பத்மினி சிதம்பரநாதனுக்கும் ஆசனம் மறுக்கப்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு பெண் வேட்பாளர்கள் யாரும் இருக்கின்றார்களா என்பது சந்தேகமே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் வெல்லப்படக் கூடிய தொகுதிகளில் நிறுத்தப்படுவார்கள் என தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட முடிவெடுத்து உள்ளார். எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா ஆகியோர் விக்கிரமபாகு கருணாரட்னவின் என்எஸ்எஸ்பி கட்சியில் போட்டியிடுவது பற்றி பேசிவருகின்றனர்.

இவை ஒருபுறமிருக்க முன்னால் ஈபிடிபி உறுப்பினரும் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தனின் ஆலோசகருமான கலாநிதி விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளதாகத் தெரியவருகின்றது. கலாநிதி விக்கினேஸ்வரன் ஆர் சம்பந்தனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய மற்றுமொருவர் ஓய்வுபெற்ற நீதிபதி விக்கினேஸ்வரன் எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஆதரித்தவர். இவரது கருத்துக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலம் சேர்த்து இருந்தது.

கடந்த தேர்தல் போலல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பாராளுமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியை பலவீனமான நிலையில் எதிர்கொள்ள உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்கின்ற சக்திகள் இல்லாத காரணத்தினால் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக அரசியல் இப்பாராளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

Viyoogamஇலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்றை மே 18 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. ‘விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டாயிற்று!, தற்போது ஜனாதிபதி தேர்தலும் நடந்து முடிந்து விட்டது!, பாராளுமன்ற தேர்தலுக்கு நாள் குறித்தாயிற்று!’ ஆயினும் ‘யுத்தம் முடிந்த பின்பு அரசியல் தீர்வு என்றார்கள்!’ ஆனாலும் தமிழ் மக்களின் துயரங்கள் தொடர்கின்றன …’ என மே 18 இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

‘தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்ன ?’ என்ற கேள்வியுடன் தங்கள் கலந்தரையாடலை மேற்கொள்ள அவர்கள் அனைவரையும் அழைத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின் மழைக்கு முளைக்கின்ற காளான்கள் போன்று என்ஜிஓ க்களிலும் வேகமாக பல்வேறு அமைப்புகள் ‘புரட்சிகர’ கோசத்துடன் ஆரம்பித்து உள்ளன. ஏற்கனவே உறக்க நிலையில் இருந்த அமைப்புகளும் அறிக்கைகளை வெளியிட்டு தங்கள் இருப்பை வெளியிட்டுக் கொண்டன. இவற்றினிடையே மே 18 இயக்கம் தன்னுடைய கோட்பாட்டு இதழ் ஒன்றையும் வெளியிட்டு தொடர்ச்சியாக ரொறன்ரோ, லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களில் சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றின் தொடர்ச்சியாகவே ஸ்காபுரோவில் தற்போதைய அரசியல் நிகழ்வு பற்றிய பொதுக் கூட்டத்தையும் கலந்துரையாடலையும் மே 18 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பல்வேறு அமைப்புகளும் அரிசியல் ரீதியில் நழுவல் போக்கைக் கடைப்பிடித்து தங்கள் அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தாமல் இருக்கையில் மே 18 இயக்கம் இடதுசாரித் தலைவரான விக்கிரமபாகு கருணரட்னாவில் விமர்சனங்கள் இருந்த போதும் இன்றைய சுழலில் இலங்கை மக்கள் குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்கள் விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இக்கலந்துரையாடலிலும் மே 18 இயக்கம் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் தனது அறிவிப்பை தெரிவிக்கும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை எவ்வாறு செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவிக்கலாம்.

பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்: மே 18 இயக்கம்
முடிவல்ல… புதிய தொடக்கம்!

இடம்: Scarborough Civic Center (Room 1 & 2)
காலம்: 20-02-2010 (Saturday)
நேரம்: 2:30 pm – 6:00 pm

தொடர்புகளுக்கு: viyooham@gmail.com

மே 18 இயக்கம் தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு:

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

மட்டக்களப்பில் அகிலன் இல்லத் திறப்பு விழா.இலங்கையின் 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தமும் அது மிகக் கோரமாக முடிவடைந்ததும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாழ்நிலையை மிகமோசமான பின்னடைவுக்குத் தள்ளியுள்ளது. இந்த யுத்தத்தால் தங்கள் உழைப்பையும் சேமிப்புக்களையும் இழந்து பல்லாயிரம் பேர் நிர்க்கதியாகி உள்ளனர். பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வை இந்த யுத்தம் சின்னா பின்னப்படுத்தியும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்நிலையை அழித்தும் உள்ளது. இந்த அழிவுகளை மிகக் கணிசமான அளவுக்கு குறைத்து மக்களின் இழப்பைத் தடுத்திருக்க முடியும். ஆனால் அதனை யுத்தத்தில் இருந்த இரு தரப்புகளுமே செய்யவில்லை. அதனால் யுத்தம் ஏற்படுத்திய சுமைகளை மக்களே சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.தமிழீழ விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை சிறார்கள் நடந்து முடிந்த யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் மீட்கப்பட்டனர். படையணிகளில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். தற்போது சரணடைந்து எட்டு மாதங்கள் வரை ஆகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் இவர்களது விடுதலையும் விவாதப் பொருளாகி சில நூறு போராளிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்களது எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இப்போராளிகள் வன்முறைக்குப் பழக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவது அவசியமானது. ஆனால் அரசு அதனை எவ்வாறு கையாள்கின்றது என்பது தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. அரசு இதுவரை யார் யாரை இவ்வாறு தடுத்து வைத்திருக்கின்றோம் என்ற பெயர் விபரத்தைக் கூட வெளியிடவில்லை. சரணடைந்த அல்லது யுத்தத்தின் போது பிடிக்கப்பட்ட இவர்கள் அதற்கான சர்வதேச விதிகளின் கீழ்நடத்தப்பட வேண்டும் போன்ற அடிப்படை அம்சங்களைக் கூட அரசு திருப்திப்படுத்தவில்லை.

டி லா சாலே பிரதேர்ஸின் நிர்வாகத்தில் உள்ள சென் சேவியர் பாடசாலை.இந்நிலையில் சில நூறு சரணடைந்த குழந்தைப் போராளிகள் செஞ்சோலை மற்றும் காந்த ரூபன் அறிவுச்சோலை சிறார்கள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரில், மன்னார் சென் சேவியர் பாடசாலையில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில் மன்னார் டி லா சலே பிரதேர்ஸ் இனால் சென் சேவியர் பாடசாலையில் 50 மாணவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே படையணிகளில் சேர்க்கப்பட்ட இம்மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரை இழந்தவர்கள். உறவுகளை இழந்தவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்டு இருந்த இச்சிறார்கள் தங்களையொத்த சக குழந்தைகளில் இருந்து மிகவும் மாறுபட்ட இயல்புகளைக் கொண்டிருந்ததாக இவர்களைப் பொறுப்பேற்றுப் பராமரிக்கின்ற டி லா சலே பிரதேர்ஸ் தெரிவிக்கின்றனர். இச்சிறார்கள் தொடர்ச்சியாக விசேட உளவியல் சிகிச்சைகளையும் பெற்று தற்போது இயல்பு மாணவர் வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.

அகிலன் இல்லம் பொறுப்பெற்ற குழந்தைப் போராளிகளில் ஒரு பகுதியினர்.டி லா சலே பிரதேர்ஸ் இச்சிறார்களைத் தவிரவும் மேலும் நூறு வரையான சிறார்களைப் பராமரிக்கின்றனர். ஆனால் இந்த இரு தொகுதி சிறார்களையும் இணைத்துப் பராமரிப்பதில் அவர்கள் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதனால் இவ்விரு தொகுதி சிறார்களையும் தனித்தனியாக பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட படையணிகளில் பயிற்றப்பட்ட இச்சிறார்கள் ஏனைய சிறார்களைக் காட்டிலும் விசேட தேவைகளைக் கொண்டிருப்பதும் புரிந்து கொள்ளத்தக்கதே.

இதே நிலையே பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் உள்ள சிறார்கள் மத்தியிலும் காணப்பட்டது. இச்சிறார்களைப் பொறுப்பெடுப்பதில் புலம்பெயர்ந்த அமைப்புகள் பல பின்னடித்திருந்தன. இச்சிறார்களால் பின்னாட்களில் சிக்கல்கள் எழலாம் என்ற அச்சம் பொறுப்பெடுக்க முன்வருபவர்கள் மத்தியில் காணப்பட்டது. வவுனியா அகிலாண்டேஸ்வரி இல்லத்திடம் செஞ்சோலைச் சிறார்கள் மற்றும் குழந்தைப் போராளிப் பெண்கள் உட்பட 160 பேர் வரை ஒப்படைக்க அரசு முன் வந்தது. ஆனால் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளைப் பொறுப்பேற்க அவ்வில்லத்தினர் மறுத்துவிட்டதாக அறியவருகின்றது. இச்சிறுமிகளை கட்டுப்படுத்துவது பராமரிப்பது போன்ற விடயங்களில் தங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என அவ்வில்லத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட முன்னால் போராளிகளான இச்சிறார்கள் பெரும்பாலும் கைவிடப்பட்ட மறக்கப்பட்ட நிலையே காணப்பட்டது.

டி லா சாலே பிரதேர்ஸின் பொறுப்பில் இருந்த சிறுவர்களை லண்டன் அகிலன் பவுண்டேசன் பொறுப்பேற்றது.இச்சுழலிலேயே லிற்றில் எய்ட் அம்பேபுச பின்னர் அங்கிருந்து பம்பலப்பிட்டிக்கு அனுப்பப்பட்ட சிறார்கள் தொடர்பில் முன்னின்று சில உதவித் திட்டங்களை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக மன்னார் டி லா பிரதேர்ஸின் பராமரிப்பில் உள்ள சிறார்களைப் பொறுப்பெற்கும்படியான வேண்டுகோள் லிற்றில் எய்ட்க்கு விடுக்கப்பட்டது. ஆனால் லிற்றில் எய்ட் அவர்களைப் பொறுப்பெற்று பராமரிக்கும் நிதி நிலையைக் கொண்டிருக்காத நிலையில் அச்சிறார்களைப் பராமரிப்பதற்கான நிதிப் பொறுப்பினை லண்டன் அகிலன் பவுண்டெசன் பொறுப்பேற்கவும் முன்வந்து.

மன்னாரில் சிறுவர் இல்லம் அமைப்பதற்கான இடம்பார்க்கப்படுகின்றது.ஜனவரி 21 அன்று சென் சேவியர் கல்லூரியில் உத்தியோகபூர்வமாக அச்சிறார்களை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன், லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன், இவ்விரு அமைப்புகளின் சார்பிலும் த ஜெயபாலன், டி லா சாலே பிரதேர்ஸ் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர். இச்சிறு நிகழ்வின் பின்னர் சென் சேவியர் கல்லூரியிலும் அதற்கு அருகாமையிலும் தங்க வைக்கப்ட்டுள்ள இச்சிறார்களை தங்க வைப்பதற்கான புதிய கட்டிடம் ஒன்றின் அவசியம் பற்றிப் பேசப்பட்டது. லண்டன் திரும்பிய பின்னர் டி லா சாலே பிரதேர்ஸ் க்குச் சொந்தமான நிலத்தில் இச்சிறார்களைத் தங்க வைப்பதற்கான கட்டிடம் ஒன்றைக் கட்டிக் கொடுப்பதற்கும் லண்டன் அகிலன் பவுண்டேசன் முன்வந்துள்ளது.

குழந்தைப் போராளிகளுடன் எம் கோபாலகிருஸ்ணன்.மன்னார் சென் சேவியர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட இச்சிறார்களுடன் ஒரு குறுகிய உரையாடலை நடத்த முடிந்தது. நாம் சந்தித்த சிறார்கள் பெரும்பாலும் பெற்றோரை தம் குழந்தைப் பருவத்திலேயே இழந்தவர்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதங்கள் திணிக்கப்பட்டவர்கள். இவர்களது உடல்கள் யுத்தத்தினால் பல் வகைப்பட்ட காயங்களுக்கும் உள்ளாகி இருந்தது. கடந்த காலத்தில் இருந்து மீள முடியாமல் எதிர்காலத்தை எதிர்கொள்கின்ற இவர்கள் பயணிக்க வேண்டிய பாதை மிகக் கரடுமுரடானதாக உள்ளது. தற்போது இவர்கள் சென் சேவியர் பாடசாலையில் காபொத உயர்தர வகுப்பில் படிக்கின்றனர். இன்னும் சிலர் 5ம் 6ம் வகுப்புகளில் படிக்கின்றனர். இவர்களிடையே படிக்க வேண்டிய ஆர்வத்தில் எவ்வித குறையும் இல்லை. ஆனால் அதற்கான வாய்ப்பும் சுழலும் தான் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினையாக உள்ளது.

சென் சேவியர் இல்லத்தில் சிறார்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அறை.மாணவப் பருவம் என்பது வாழ்வில் மிக இனிமையான பருவம். சுமைகளற்று கவலைகளற்று சுகமான சுமைகளைத் தாங்கிக் கனவுகாண்கின்ற பருவம். ஆனால் இந்த மாணவர்களுக்கு அது அவ்வாறில்லை. ஒரு அறையிலேயே 20 பேர்வரை படுத்து உறங்குவதற்கு மட்டும் உள்ள இடைவெளியில் அவர்களால் என்ன செய்துகொள்ள முடியும். அவர்கள் தினம் தினம் பொழுதைக் கழிப்பதற்கே பெரும் அவஸ்த்தைப்படுவதை பார்க்கக் கூடியதாக இருந்தது.  அவர்கள் கடந்து வந்த பாதை மிகக் கடுமையானதும் கொடுமையானதும். ஆனால் அவர்களது இன்றைய வாழ்வும் கனமானதாகவே உள்ளது. அவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் நம்பிக்கையும் வழங்கப்படுவதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

London_Sivan_Kovil_illam_Toilet_Not_in_useஉணவு உடை உறைவிடம் கல்வி என்ற அடிப்படைத் தேவைகள் மட்டும் ஒரு மாணவனுக்கு போதுமானதாக அமையாது. அவர்களது பொழுது போக்கிற்கும் சிந்தனையை விருத்தி செய்வதற்குமான சுழல் அமைய வேண்டும்.

இந்தச் சுழல் மன்னாரில் மட்டும் அல்ல நான் சென்று பார்த்த ஏனைய இல்லங்களிலும் காணப்படவில்லை அடிப்படைத் தேவைகளை வழங்கப்படுகின்றது என்ற விடயத்தில் ஆறுதல் அடையக் கூடியதாக இருந்தது. மாணவர்களும் அதற்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கத் தவறவில்லை. அவர்கள் மேலதிகமாக எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் நிலையை உணர்ந்து தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதை என்னால் உணர முடிந்தது. அவர்களது தேவைகளை உணரந்து அவர்களது எதிர்கால விருத்திக்குத் தேவையான உதவிகளை வழங்குவது புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது கடமையாகும்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.மட்டக்களப்பில் லண்டன் அகிலன் பவுண்டேசன் உறவுகளை இழந்த உறவுகளால் பராமரிக்க முடியாத நிலையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றை ஜனவரி 23ல் திறந்து வைத்தது. இந்நிகழ்வில் லண்டனில் இருந்து சென்றவர்களும் சமூக அந்தஸ்துடையவர்களும் விளக்கேற்றியது முக்கியமல்ல. அங்கு தங்கி வாழப் போகின்ற சிறுமி ஒருத்தியும் விளக்கேற்றி நிகழ்வைச் சிறப்பித்தார். இவ்வாறான நிகழ்வுகளில் அச்சிறுவர்கள் கெளரவிக்கப்படுவது மிக அவசியம்.

எம் கோபாலகிருஸ்ணன் தனது மகனின் நினைவாக மேற்கொள்ளும் பல்வேறு சமூகப்பணிகளில் இச்சிறார்களைப் பராமரிப்பதும் ஒன்று. மன்னாரில் டி லா சாலே பிரதேர்ஸின் பொறுப்பில் உள்ள 50 சிறார்கள், மட்டக்களப்பில் திறக்கப்பட்ட அகிலன் இல்லத்தில் 40 சிறார்கள் இவர்களைவிடவும் ஏனைய சிறுவர் இல்லங்களுக்கு பகுதியாக 35 சிறார்களுக்குமான நிதிப் பொறுப்பினை லண்டன் அகிலன் இல்லம் பொறுப்பேற்று நடாத்துகின்றது. இவற்றைவிட 15 முதியோர்களையும் லண்டன் அகிலன் இல்லம் பராமரிக்கின்றது.

திலகவதியார் இல்லச் சிறுமிகளுடன் த ஜெளபாலன்.மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட அகிலன் இல்லம் அங்கு லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் பராமரிக்கப்படுகின்ற திலகவதியார் சிறுமிகள் இல்லத்திற்கு அருகில் உள்ளது. இவர்களுக்கும் கல்வி உட்பட அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டு இருந்தது. அச்சிறுமிகளுடன் உரையாடியதில் அவர்கள் தங்கள் நிறைவை வெளிப்படுத்திக் கொண்டனர். ஆனால் அவர்களும் தங்கள் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்தியே வைத்திருந்தனர். அச்சிறுமிகள் உட்பட இவ்வாறான சிறுவர்களது கனவுகள் பரந்து விரிந்ததாக இருக்கவில்லை. படித்து கிளாக் ஆசிரியை ஆக வரவேண்டும் என்றளவில் தான் அவர்கள் தங்கள் கல்விக் கனவை மட்டுப்படுத்தி இருந்தனர்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.இராணுவக் கெடுபிடிகளோ மற்றும் தொல்லைகளோ தங்களுக்கு இதுவரை இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதே கருத்தை அங்குள்ள ஏனைய இல்லங்களும் தெரிவித்தன. இராணுவத்தினரிடம் இல்லங்கள் பற்றிய விபரங்கள் உண்டு. அவர்களுடன் இல்ல நிர்வாகம் நல்லிணக்கமான உறவைப் பேணி வருகின்றது.

மட்டக்களப்பில் அகிலன் இல்லத்தின் திறப்பு விழாவிற்கு அப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரியும் அழைக்கப்பட்டு இருந்தார். அது சற்று சங்கடத்தையும் ஏற்படுத்தியது. ஏற்பாட்டாளர்களிடம் அது பற்றி விசாரித்த போது ஒரு இராணுவ அதிகாரியை அழைப்பதால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் நாளை ஒரு பிரச்சினை என்று வந்தால் தேவையற்ற கெடுபிடிகளைத் தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த இல்லங்கள் தொடர்பான நடவடிக்கைகள் எதற்கும் இடைஞ்சல்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும் எனத் தெரிவித்தனர். அங்கு மக்கள் தங்கள் நாளாந்த வாழ்வை நகர்த்த சமயோசிதமாக நடந்து கொண்டு முரண்பாடுகளைத் தவிர்த்து தங்கள் வாழ்வை நகர்த்துகின்றனர்.

லண்டண் கனகதுர்க்கை அம்மன் ஆலய ரஸ்டி தேவசகாயமும் அவருடைய துணைவியாரும்.மேலும் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் பெருமளவிலான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஒரு குறுகிய காலம் ஆலயத்தில் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தால் இப்பணிகளில் தடையேற்பட்டு இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு எதிராக சில ஆலய ரஸ்டிகள் செயற்பட்டனர். இது பற்றிய விரிவான கட்டுரைகள் செய்திகள் லண்டன் குரலில் வெளிவந்திருந்தது. ஆனால் மீண்டும் நிர்வாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட எஸ் கருணைலிங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மீள ஆரம்பித்து வைத்ததை ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய ரஸ்டிகளில் ஒருவரான தேவசகாயம் கிழக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் நடந்த வைபவம் ஒன்றில் சுட்டிக்காட்டினார்.

வன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எம் கோபாலகிருஸ்ணன் உதவித்தொகை வழங்குகின்றார்.ஜனவரி 23ல் வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 25 மாணவர்களுக்கு தலா 25000 ரூபாய் படி உதவித் தொகை வழங்குகின்ற திட்டத்தை லண்டன் அகிலன் பவுண்டேசன் மேற்கொண்டது. அன்றைய நிகழ்வில் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் 5000 ரூபாய் வழங்கப்பட்டது. கிழக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

செட்டிபாளையம் விபுலானந்தர் இல்லத்தில் மாணவர்கள் உணவு உண்பதற்கும் கல்வி கற்பதற்குமான மண்டபம் ஒன்று – அகிலன் மணிமண்டபம் – கட்டப்பட்டு இந்த விஜயத்தின் போது திறந்து வைக்கப்பட்டது.

லண்டன் சிவன் கோவில் இல்லச் சிறுமிகளுடன்.மட்டக்களப்பில் லண்டன் சிவன் கோவில் இல்லம் ஒன்றும் உள்ளது. இந்த இல்லத்தில் 20 சிறுமிகள் வரையுள்ளனர். இவர்களது உணர்வுகளும் தேவைகளும் மற்றைய இல்லங்களில் உள்ளவர்களில் இருந்து வேறுபட்டதல்ல. இவர்களது கனவுகளும் கூட ஆசிரியைகளாக வர விரும்புவதாகவே இருந்தது. இந்தச் சிறார்கள் யாரும் எதிலும் குறைகூற விரும்பவில்லை. தங்களுக்கு கிடைத்ததை எண்ணி திருப்தியடைந்துள்ளனர். ஆனால் அவர்களை இந்நிலைக்கு அப்பால் எடுத்துச் சென்று அவர்களை தங்கள் சொந்தக் காலில் நிலைக்கச் செய்கின்ற பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு உண்டு.

மட்டக்களப்பில் உள்ள லண்டன் சிவன் கோவில் இல்லம் - படுக்கை மண்டபம்.தற்போது லண்டனில் இருந்து அகிலன் பவுண்டேஸன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் என்பனவே பெரிய அளவிலான உதவிப் பணிகளை முன்னெடுக்கின்றன. ஏனைய நாடுகளில் இருந்தும் சில சில உதவிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் தமது வருமானத்திற்கு ஏற்ப பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறவுகளை இழந்த குழந்தைகளுக்கு தனிப் பெற்றோருக்கு (தாயை அல்லது தந்தையை இழந்தவர்களுக்கு) உதவ முன்வந்தால் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

மன்னாரில் புதிய தங்;குமிடத்திற்குக் கட்டப்பட்டுக் கொண்டுள்ள குளியல்பகுதி.தமிழ் மக்களை இன்றைய நிலையிலிருந்து மீட்பது அரசின் கடமையென்றும் அவ்வாறு அப்பொறுப்புக்களை ஏற்பது இனவாத அரசின் இனவாத நடவடிக்கைகளுக்கு உதவும் என்றும் கூறி இப்பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் தத்துவ அரசியல் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நெருங்காமல் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து டயரெக் டெபிற்றில் நடாத்திய அரசியலற்ற வன்முறையின் விளைவுகள் தாம் இன்று அந்த மக்கள் அனுபவிக்கும் இந்த துயரங்களுக்கு அடிப்படை. அதே போல் ஆனால் டயரெக்டெபிற்றும் செலுத்தாமல் வெறும் வாய்ச்சொல் புரட்சியாளர்களை நம்பும் நிலையில் இலங்கைத் தமிழ் சமூகம் இன்றில்லை. அவரவர் தங்கள் அரசியல் அடையாளங்களை பில்ட் அப் செய்ய வாய்ச்சொல் புரட்சிகளும் தத்துவங்களும் உதவுமேயன்றி தங்களை அர்ப்பணிக்கத் தயாரற்ற இந்த வாய்ச்சொல் வீரர்கள் கூவித்தான் பொழுது விடிய வேண்டும் என்ற அவசியம் அங்கில்லை.

யுத்தம் ஏற்படுத்திய இந்தச் சுமைகளை சுமப்பது ஒன்றும் இலகுவானதல்ல. அதிலும் யுத்தத்தில் தங்கள் தாய் தந்தையரையும் உறவுகளையும் இழந்த சிறார்களின் மீது இச்சுமைகளை சுமத்திவிட முடியாது. இந்தச் சிறார்கள் விடயத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்திலும் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரும் பொறுப்பு உண்டு. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினால் இந்தப் பொறுப்புக்களை தாங்கும் வலுவில்லை. அப்பொறுப்புக்களை ஏற்கின்ற கடமைப்பாடு மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பொங்கு தமிழ் கொண்டாடிய மற்றும் கொண்டாடாத தமிழ் மக்களுக்கு உண்டு.