ஜெயபாலன் த

ஜெயபாலன் த

தீர்ப்பு: பிரசவத்தின் போது ஏற்பட்ட மரணத்திற்கு கிங்ஸடன் வைத்தியசாலை பிரசவ பகுதி ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ பொறுப்பல்ல.

Kingston_Hospitalசுகதேகி யான ஆண் குழந்தையொன்றை கிங்ஸ்ரன் வைத்தியசாலையில் பிரசவித்த தாய் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக இறந்தமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுள்ளது. சிறிலங்கா போக்குவரத்து இணைப்பாளர் சசித்ரா கலேலுவ (38) பிராங் அவன்யூ நியுமெய்டனில் வசிக்கும் இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 25ம் திகதி 1 மணியளவில் இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து மரணமானார். மரணவிசாரணை அதிகாரி டொக்டர் பீற்றர் எலியாஸ் வாக்கு மூலத்தை நெறிப்படுத்தினார்.  திருமதி சசித்ரா கலேலுவவின் மரணத்தைப் பற்றிய முழு விபரங்களையும் விளக்கினார். அந்நேரம் சசித்ரா கலேலுவவின் கணவரும் பிரசன்னமாயிருந்தார்.

லண்டன் தென்மேற்கு மரணவிசாரணை அதிகாரியின் விசாரணையின் போது டொக்டர் மற்றும். பிரசவ வைத்திய நிபணர், பதிவாளர் போனறோர் குழந்தையின் பிரசவத்திற்கு சுகாதார முறைப்படி கருவிகளை பாவித்ததைத் தெளிவு படுத்தினர்.

ஓர் பாதூரமான விசாரணை இந்த மரணம் தொடர்பாக நடந்துள்ளது. டொக்ரர் அந்த நோயாளியின் பெண்ணுறுப்பில் உள்ள ஒரு சிறு நரம்பு இரத்த ஓட்டமின்றி தடைப்பட்டதை விசாரணையின் போது தெரிவித்தார். இந்த முறைப்பாட்டின் முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என டொக்டர் எலியாஸ் சசித்திரா கலேலுவவின் கணவரை வினவிய போது, இந்த விசாரணை முடிவை மாற்றியமைக்க முடியுமென்று தான் எண்ணவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் அவர்  ஒரு தாதி மாணவியை இரத்தம் ஏற்றுவதற்கு உடனடியாக அதனைக் கொண்டு வரும்படி அழைத்தபோது அவர் 35 நிமிடங்கள் கழித்தே கொண்டு வந்துள்ளார். எப்படி இருப்பினும் இறுதித்தீர்ப்பில் கிங்ஸடன் வைத்தியசாலை பிரசவ பகுதி ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ பொறுப்பல்ல. இங்கு நடைபெற்ற விசாரணையில் கடும் தண்மையை கருத்தில் கொண்டு தனிப்பட்ட முறையில் சமாதானமாகின்றோம் எனத்தெரிவித்தார். கிங்ஸடன் வைத்தியசாலை பேச்சாளர் தமது ஆழந்த அனுதாபங்களை திருமதி கலேலுவ குடும்பத்தினருக்கு தெரிவித்ததுடன் இது ஒரு துரதிஸ்ட விதமான சம்பவம் என்றும் தெரிவித்தார்.

நோயாளிகளின் பராமரிப்பும், பாதுகாப்பும் முன்னுரிமையிலும் நம்பிக்கையிலுமே தங்கியுள்ளது. ஜனவரி மாதம் இவ்வைத்தியசாலை நிர்வாகம் இத்தவறுக்கும், பாதுகாப்பின்மைக்கும் மன்னிப்புக் கேட்டது.

13 வயதுச் சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்!

ரூரிங்கில் இருந்து மிற்சம் செல்லும் 280ம் இலக்க பஸ்ஸில் எறிய சிறுவன் ஒருவனை நபரொருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். யூன் மாதம் 22ம் திகதி பகல் 12.05 மணிக்கு நடைபெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பஸ் நிறுத்தத்தில் வைத்து குறித்த நபர் சிறுவனின் முழங்காலில் கையை வைத்தபடி உரையாடியுள்ளார். பின் சிறுவன் பிகர்ஸ்மார்ஸ் என்ற இடத்தில் இறங்கிய போது அவனைப் பின்தொடர்ந்து அவனின் மறைவிடத்தைத் தடவி ‘இது பெரியதா’ எனக்கேட்டுள்ளார். இச்சிறுவனுடன் நட்பு கொள்ள விரும்பவதாகவும், சிறுவன் அவனது வேலையை முடித்துவிட்டுத் திரும்பும் வரை தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.  பயத்தில் அச்சிறுவன் சத்தமிட்டு தனது உறவினர் ஒருவரை உதவிக்கு அழைத்தபோது அம்மனிதர் ஓடிவிட்டார்.

ஆறடி உயரம். 30 வயது மதிக்கத்தக்க அம்மனிதரின் நடை உடையை அவதானித்த போது அவர் ஓர் இலங்கையராக இருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் இலங்கையரா என்பது உறுதியாகவில்லை. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக உறவில் உள்ள ஆண்கள் இவ்வாறான பாலியஸ் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவது தற்போது வெளிவருகின்றது. 

தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன்

Sitharthan_Speaking_at_Memorialதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் வி தர்மலிங்கம் அவர்களின் 25வது நினைவு தின நிகழ்வுகள் யாழ். கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அவரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 நடைபெற்றது.

தர்மலிங்கமும் சக பாராளுமன்ற உறுப்பினருமான ஆலாலசுந்தரமும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வினால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களது படுகொலைகளுக்கு முன்னரும் பின்னரும் தமிழ் விடுதலை அமைப்புகள் அரசியல் படுகொலைகளை ஒரு அரசியலாகவே முன்னெடுத்தனர்.

தமிழரசுக் கட்சி (தமிழர் விடுதலைக் கூட்டணி) அல்பிரட் துரையப்பாவுடன் பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைத்த அரசியல் படுகொலைக் கலாச்சாரம் அவர்களையே பலியெடுக்க முற்பட்டபோது அவர்களுக்குப் பிறந்த ஞானம் காலம் கடந்ததாகி விட்டது. இக்கலாச்சாரத்திற்கு வித்திட்ட இன்றைய அரசியல் தலைவர்களான இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா ஆகியோர் இதுவரை தமது அரசியல் தவறுகளை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதற்காக வருந்தவும் இல்லை. 

Selvam Adaikalanathan TNA_TELOபாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோரை படுகொலை செய்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக இருக்கின்ற செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பாக மெளனமாகவே உள்ளார். இவர்களது படுகொலைகள் மட்டுமல்ல தமிழீழ விடுதலை இயக்கத்தினுள் இடம்பெற்ற உட்படுகொலைகள் அவர்களால் படுகொலை செய்யப்பட்ட ஏனைய இயக்கப் போராளிகள் பொது மக்கள் என இக்கொலைப் பட்டியலும் நீளமானது. இவை தொடர்பாக அவ்வமைப்பிற்கு தலைமை தாங்கும் ஜனநாயக வழிக்குத் திரும்பிய செல்வம் அடைக்கலநாதனுக்கும் தனது கடந்த காலம் பற்றிய பொறுப்புணர்வு உண்டு.

அல்பிரட் துரையப்பாவுடன் ஆரம்பமான இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் அதனை முன்னின்று நடாத்திய வே பிரபாகரனின் படுகொலையில் முடிவடைந்துள்ளது. வே பிரபாகரனின் படுகொலைக்குப் பின்னான 15 மாதங்களில் குறிப்பிடத்தக்கதான அரசியல் படுகொலைகள் நிகழவில்லை. இருப்பினும் இப்படுகொலை அரசியல் ஏற்படுத்திய அச்சம் இன்னமும் மக்கள் மனங்களில் இன்னமும் ஆறாத வடுவாக உள்ளது.

Memory_of_Dharmalingam_Vஅமரர் வி தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வு கௌரிகாந்தன் தலைமையில் மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது. மலராஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது. புளொட் தலைவரும் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குலநாயகம், முன்னாள் தபாலதிபர் கணேசவேல், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி தற்பரானந்தன், முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வை பாலச்சந்திரன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி ரி லிங்கநாதன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள் சுரேந்திரன், குமாரசாமி மற்றும் பல முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். 

இலங்கையின் இனவாதக் கட்சிகளாகக் கொள்ளப்படும் ஜேவிபி மற்றும் ஜாதி ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பெயருக்காகவேனும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளன. ஆனால் தமிழரசுக் கட்சியோ தமிழர் விடுதலை இயக்கமோ இதுவரை தங்கள் அரசியல் தவறுகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. தந்தையைப் பலிகொடுத்த தனயனின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இதுவரை தங்கள் அமைப்பு மேற்கொண்ட அரசியல் படுகொலைகளுக்கு மன்னிப்புக் கோரவில்லை.

TULF Leader V Anandasangareeதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தேசம் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையைத் தூண்டியதற்காகவும் அவரது இறுதிக் கிரியைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது என்று தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈபிஆர்எல்எப்) தங்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் படுகொலைக்களுக்காக பகிரங்கமாகவே மக்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தனர்.

தங்கள் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்பதன் மூலம் ஏற்கனவே விடப்பட்ட தவறுகளை திருத்தவோ மாற்றி அமைக்கவோ அல்லது இழக்கப்பட்ட உயிர்களை மீளளிக்கவோ முடியாது. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் விடப்படமாட்டாது என்ற நம்பிக்கையைப் பெறமுடியும். பாதிக்கப்பட்டவர்களுடன் மீளுறவை ஏற்படுத்தவும் வழியேற்படும்.

ஆனால் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்தும் தங்கள் அரசியலை நியாயப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திலும் இவ்வாறான தவறுகளுக்கு இவர்கள் இடமளிப்பார்கள் என்பதும் அதனையும் அவர்கள் நியாயப்படுத்துவார்கள் என்றே கொள்ளவேண்டி உள்ளது.

People_at_Memorialதமிழ் அரசியல் தலைமைகள் முதலில் தங்கள் அரசியல் தவறுகளை தமிழ் மக்கள் முன் ஒப்புக்கொள்ளவும் அவ்வாறான தவறுகள் இனி இடம்பெறமாட்டாது என்ற உறுதிமொழியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறான அரசியல் பொறுப்புணர்வை தமிழ் அரசியல் தலைமைகள் உருவாக்கினால் மட்டுமே தமிழ் மக்கள் இலங்கை அரசை அதன் தவறுகளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்த முடியும். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்களின் எதிரியாகவே கருதப்பட்டு வரும் எதிரியாகவே உள்ள இலங்கை அரசிடம் தமிழ் மக்கள் நியாயம் கேட்பதற்கு உள்ள உரிமையைக் கூட தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. அதனை வழங்கவும் தயாரில்லை.

ஆகவே தமிழ் தலைமைகள் தமிழ் மக்களிடையே உண்மையையும் மீளுறவையும் ஏற்படுத்தும் சுயமுயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகால போராட்டத்தில் விடுதலை அமைப்புகளாலும் இலங்கை அரசபடைகளாலும் கொல்லப்பட்ட மற்றும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ஆண்டுதோறும் இவர்களை நினைவுகூருவதற்கான நினைவுநாள் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும். கடந்த காலம் பற்றிய உண்மைகளை குழிதோண்டிப் புதைப்பதனால் தமிழ் மக்கள் மத்தியில் மீளுறவை ஏற்படுத்த முடியாது. உண்மைகளை வெளிக்கொணர்ந்து தவறுகளை ஏற்றுக்கொண்டு மட்டுமே மீளுறவை ஏற்படுத்த முடியும்.

தமிழ் போராட்டங்கள் – ஜி20 போராட்டங்கள் போன்றவை தடை செய்யப்படலாம்!!!

Steve_O_Connellலண்டனில் இடம்பெற்ற தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் ஜி20 போன்ற பெரும்  போராட்டங்களை மெற்றோ பொலிட்டன் பொலிஸார் தடைசெய்யவதற்கான தெரிவு அவர்களுக்கு இருப்பதாக அமைச்சரவை உறுப்பினர் ஸ்ரீவ் ஓ கொன்னல் தெரிவித்துள்ளார். இவர் மெற்றோ பொலிட்டன் பொலிஸ் ஆணையகத்தின் குரொய்டன் – சட்டம் பகுதிப் பிரதிநிதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இக்கருத்தை யூலை 22ல் இடம்பெற்ற இக்குழுவின் சந்திப்பில் வெளிப்படுத்தி இருந்தார்.

பிரித்தானியாவில் ஆட்சியில் உள்ள கொன்சவேடிவ் – லிபிரல் டெமொகிரட் கூட்டாட்சி மெற் பொலிஸ் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு 25 வீதத்தால் குறைத்துள்ளது. அதனால் மெற் பொலிஸ் தனது சேவைகளை மட்டுப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது. அதனால் 7.5 மில்லியன் பவுண் செலவை ஏற்படுத்திய தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்; ஜி20 போராட்டங்கள் என்பனவற்றை எதிர்காலத்தில் அனுமதிக்க முடியுமா என்ற ஐயம் எழுப்பப்பட்டு உள்ளது.

‘தற்போதுள்ள நெருக்கடியான  சூழலில் வாழ்பவர்களை எது முக்கியம் எனக் கேட்டால் அவர்கள் இளைஞர்களின் வன்முறை, கடத்தல், பாதுகாப்பு என்பனவே முக்கியமானது எனப் பதிலளிப்பார்கள். போராட்டங்களைக் கவனிப்பது முக்கிய பொறுப்பாக இருக்க முடியுமா?’ என்று ஸ்ரீவ் ஓ கொன்னல் கேள்வி எழுப்பி உள்ளார்.

‘நான் ஒட்டுமொத்தமாக அனைத்து போராட்டங்களையும் தடை செய்யும் நிலைப்பாட்டைக் கொள்ளவில்லை. பிரித்தானியாவில் போராட்டங்களுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு.  பெரும்பாலான போராட்டங்கள் அனுமதிக்கப்படும். ஆனால் தமிழ் மக்களின் ஜீ20 போன்ற பெரிய அளவிலான போராட்டங்களே இதனால் பாதிக்கப்படும்’ என்றும் ஸ்ரீவ் ஓ கொன்னல் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மெற் பொலிஸ் கொமிஸ்னர் சேர் போல் ஸ்ரீபன்சன் ‘பிரித்தானியாவுக்கு கருத்துச் சுதந்திரம் தொடர்பில் ஒரு பாரம்பரியம் உண்டு. லண்டனில் இடம்பெறும் போராட்டங்கள் அதில் முக்கியமானவை. இது லண்டன் நகருக்கும் பெருமை சேர்க்கின்ற விடயம்’ எனத் தெரிவித்து இருந்தார்.

சேர் போல் ஸ்ரீபன்சன் மேலும் தெரிவிக்கையில் ‘எதிர்காலத்தில் போராட்டங்களை ஏற்பாடு செய்பவர்களே அவற்றைக் கண்காணிப்பதற்கான தொண்டர்களை ஏற்பாடு செய்வதன் மூலம் பொலீஸ்க்கு ஏற்படும் செலவைத் தவிர்க்க முடியும்’ என்றார்.

ஸ்ரீவ் ஓ கொன்னலின் கருத்தை எதிர்த்த மெற் பொலிஸ் ஆணையகத்தின் தொழிற்கட்சி உறுப்பினர் வாஸ் சோகுரோஸ் ‘ஸ்ரீவ் ஓ கொன்னல்  எமது போராடும் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை கீழ்ப்படுத்தவும் பொலீஸ் வரவுசெலவுத் திட்டத்தை மேலும் 25 வீதத்தால் குறைக்கவும் சொல்கின்றாரா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

லண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் மக்டோனால்ட் சாப்பிட்டார் என சண் டெய்லி மெயில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதற்கு எதிராக பரமேஸ்வரன் தொடுத்த வழக்கில் நீதிமன்ற விசாரணைகள் இல்லாமலேயே இரு தரப்பினரும் உடன்பாட்டுக்கு வந்து யூலை 29ல் இரு பத்திரிகைகளும் தங்களது செய்தி தவறானது எனத் தெரிவித்தனர். இரு பத்திரிககைளும் இணைந்து 77500 நட்டஈடு வழங்கவும் உடன்பட்டனர்.

வர்த்தக முக்கியஸ்தரின் பல்கலைக்கழக இறுதியாண்டில் படிக்கும் மகன் தற்கொலை !!!

Kannan_Shanmugakumaranபிரித்தானிய தமிழ் வர்த்தகப் புள்ளியாக அறியப்பட்ட சண் என்ற சண்முககுமாரன் நவரட்ணம் அவர்களின் மகன் யூலை 23 2010ல்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத் துறையில் இறுதியாண்டில் கல்விகற்கும் கண்ணன் சண்முககுமாரனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: சண் குடும்பத்தினர் தம் வியாபார நிறுவனத்திற்கு அருகில் குடியிருந்தனர். லூட்டனில் உள்ள இவர்களின் வீட்டில் தனியாக தங்கியிருந்து மகன் கண்ணன் படித்துக் கொள்வது வழமை. தற்போது சமர் ஹொலிடே என்பதால் அப்போதும் கண்ணன் தனியாக லூட்டனில் தங்கி படித்து வந்தார். சம்பவத்திற்கு முதல்நாள் இரவு யூலை 22 சண் குடும்பத்தினர் கண்ணனை வந்து பார்த்து அவருக்கான உணவுகளை எல்லாம் தயாரித்து உணவருந்தி மகிழ்ந்து இருந்ததாக சண் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

மறுநாள் யூலை 24 அன்று லூட்டனில் உள்ள அவர்களின் வீட்டை நீண்ட காலமாகப் பராமரித்து துப்பரவு செய்யும் வெள்ளைகார வயோதிப மாது வழமைபோல் தனது கடமைகளைச் செய்யச் காலை வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கே கண்ணன் வேட்டியில் சுருக்கிட்டு மாடிப் படிக்கட்டுப் பகுதியில் தொங்கிக் கொண்டு இருந்தார். அதனைப் பார்த்துப் பயந்துபோன வயோதிப மாது அவசரசேவைக்கு உடனடியாக அழைப்பு விடுத்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் மருத்துவப் பிரிவினரும் கண்ணனின் உடலை மருத்துவ வண்டியில் எடுத்துச் சென்றனர். பொலிஸார் கண்ணனின் லப்ரொப்பையும் மோபைல் போனையும் தடயப் பொருட்களாகக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் மதியம் ஒரு மனியளவில் ஃபமிலி லெய்சன் ஒபிசர்ஸ் சண் குடும்பத்திற்கு இந்த அதிர்ச்சியான துக்ககராமான செய்தியைத் தெரியப்படுத்தினர். அவர்கள் லூட்டன் வந்த போது கண்ணனின் உடல் ஏற்கனவே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருந்தது.

தங்கள் மகனின் மிகச் சடுதியான உயிரிழப்பை ஏற்றக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாத வேதனையுடள் குடும்பத்தினர் தவிப்பதை சண்னின் நண்பர் லண்டன் குரலுக்கு விபரித்தார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான தற்கொலைகள் வழமையாகி வருகின்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களால் இதனைப் புரிந்துகொள்ள இயலாமல் உள்ளதுடன் குடும்பத்தை நிலைகுலையச் செய்கின்றது. தற்கொலை பற்றிய விழிப்புணர்வு தமிழ் சமூகத்திற்கு மிக அவசியமாகின்றது.

முகாமைத்துவ இறுதியாண்டு மாணவனான கண்ணன் ரக்பீ விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். தனது உடலை திடகாத்திரமாகவும் பலமாகவும் வைத்திருப்பதில் நாட்டம் உடையவர். அவரைத் தன்னையே அழிக்கும்படி தூண்டிய மனநிலைக்கு என்ன காரணம் என்பதை குடும்பத்தினராலும் நண்பர்கள் உறவுகளாலும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

2008ல் அகிலன் கோபாலகிருஸ்ணன் தனது மருத்துவ காரணங்களால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். தங்கள் மகனின் இழப்புப் போன்று மற்றவர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க தொலைபேசி ஆலோசனைச் சேவையை கோபாலகிருஸ்ணன் தம்பதிகள் அகிலன் நினைவாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சண் குடும்பத்தினர் மிகுந்த கடவுள் நம்பிக்கையும் கடவுள் பக்தியும் உடையவர்கள். நல்லூரில் 10ம் திருவிழாவைச் செய்து வந்த இவர்கள் ஆச்சுவே முருகன் ஆலயத்தில் 10வது திருவிழாவைச் சிறப்பாகச் செய்து வந்தனர். கண்ணனும் மிகுந்த கடவுள் பக்தி உடையவர். இறுதியில் அந்த வேட்டியிலேயே தன்னுயிரையும் முடித்துக் கொண்டார்.

இவருடைய ஓகஸ்ட் 1 2010ல் இறுதிக் கிரியைகள் ஹென்டனில் இடம்பெற்றது.

வியூகம் சஞ்சிகையின் இதழ் 2 வெளியீடு

Viyoogam_02_Coverமே 18 இயக்கத்தின் கோட்பாட்டு சஞ்சிகையான வியூகம் சஞ்சிகையின் 2வது இதழ் வெளியீடு ரொறன்ரோவில் செப்ரம்பர் 12ல் நடைபெறவுள்ளது. சிங்கள தேசியவாதத்தின் தோற்றம் பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும் சூழலியலும் நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சியும் வீட்டு வேலைக்கு ஊதியம் தொடர்பான முன்மொழிவுகள் போன்ற கட்டுரைகளுடன் வியூகம் இதழ் 2 வெளியாகி உள்ளது.

2009 மே 18க்குப் பின் உருவான அரசியல் திருப்புமுனையை தளமாக்கி உருவாகிய மே 18 இயக்கம் கோட்பாட்டு தளத்தின் அவசியத்தை உணர்ந்து வியூகம் என்ற கோட்பாட்டு சஞ்சிகையையும் ஆரம்பித்தனர். இதன் முதலாவது இதழின் வெளியீடு ரொறன்ரோ லண்டன் பிரான்ஸ் ஆகிய நகரங்களில் இடம்பெற்றது. மே 18 இயக்கம் தத்துவார்த்த விவாதத்துடன் மட்டும் தன்னை மட்டிறித்திக் கொள்ளாமல் யதார்த்த அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல்களில் யதார்த்தபூர்வமான அரசியல் முடிவுகளை மேற்கொண்டிருந்தது. மேலும் பொதுத்தளத்தில் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

Viyoogam_02_Coverபல்வேறு அரசியல் பின்னணிகளில் இருந்தவர்களையும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் முன்னைய அரசியலின் தொடர்ச்சியாக இல்லாமல் புத்வேகத்துடன் ஆரம்பிப்பதற்காக மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மே 18 2009 ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. அதிலிருந்து முகிழ்த்துள்ளது மே 18 இயக்கம். புலம்பெயர் சூழலில் காணப்படுகின்ற தத்துவார்த்த தனிநபர் வித்தகப் போட்டிக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ளாது மே 18 இயக்கம் அதன் அரசியலை முன்னெடுக்கின்றது.

ஆயினும் புலம்பெயர் நாடுகளில் புரட்சியைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்கள் போன்று செயற்படுகின்ற கீபோட் புரட்சியாளர்களை மே 18 இயக்கத்தின் செயற்பாடுகள் அச்சத்திற்கு உள்ளாக்கியது. அதனால் அதற்கு எதிரான காழ்புணர்வுகள் கீபோட் புரட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. மக்கள் என்ற முகமூடிக்குள் தனிநபர் சார்ந்த விம்பங்களைக் கட்டிக்கொண்டு இவர்கள் செய்கின்ற அரசியலுக்கு மே 18 இயக்கத்தின் இரண்டாவது இதழ் இன்னமும் அச்சுறுத்தும்.

வியூகம் இதழ் 2 இன் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றிய விபரம்:
May_18_Movement_Viyoogam02

மே 18 இயக்கம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

Prof_Hoole_at_Thesam_Meeting_27Aug10பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல்  நேற்று நாடு திரும்பினார். 2006ல் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஹூல்  தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை அச்சுறுத்தலையடுத்து இலங்கையை விட்டு வெளியேறி இருந்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் நியோர் Rensselaer Polytechnic Institute இல் தன் தன் கற்பித்தலை மேற்கொண்டு இருந்த பேராசிரியர் செம்ரம்பர் 2 2010ல் மீண்டும் இலங்கை சென்றடைந்துள்ளார். நியூயோர்க்கில் இருந்து இலங்கை செல்வதற்கு முன்னதாக தேசம்நெற் அழைப்பில் லண்டன் வந்திருந்த பேராசிரியர் ஹூல் லண்டனில் இடம்பெற்ற கல்வியியல் சந்திப்புக்களில் கலந்துகொண்டிருந்தார். ஓகஸ்ட் 29 2010ல் இடம்பெற்ற சந்திப்பில் ‘வடக்கு – கிழக்கு (வடகிழக்கு) இல்/க்கான கல்வி’ என்ற தலைப்பில் 45 நிமிட பேருரையை வழங்கினார்.

Prof_Hoole_at_London_Meeting_29Aug10ஓகஸ்ட் 31 முதல் அவருடைய அமெரிக்க கல்வி நிறுவனத்தின் வேலையில் இருந்து நீங்கும் இவர் தான் பிறந்த தன்னை வளர்த்த மண்ணான யாழ்ப்பாணத்திற்கு தன் சேவையை வழங்க செல்வதாக தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். சர்வதேச பல்கலைக்கழகங்களில் 17 ஆண்டுகள் பேராசிரியராக பணியை முடித்துக்கொண்டு இலங்கைப் பேரதனைப் பல்கலைக்கழகத்தில் தன் கற்பித்தலைத் தொடர்ந்த போதும் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைய முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார். மிகவும் முடிய இறுக்கமான  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் எப்போதும் தனக்கு வெளியே இருந்து வருபவர்களை உள்வாங்க முன்வருவதில்லை. கிணற்றுள் தவளையாகவே இந்நிர்வாகம் செயற்பட்டு வந்தது. பல்கலைக்கழக கணணியில் துறையை நிறுவி செயற்பட வைத்த பேராசிரியர் ஹூல்  யாழ் பல்கலைக்கழகத்தில் கணணியியல் துறைக்கு விண்ணப்பித்த போது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அவரது விண்ணப்பத்தை கவனத்தில் எடுக்கத் தவறியது. தற்போது மேற்படி துறைக்கு அவரை நியமிக்குமாறு நீதிமன்றம் ஆணை பிற்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பேராசிரியர் ஹூல்  இன்னும் சில தினங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணமாகின்றார்.

பேராசிரியர் ஹூல்  உடன் அவரது துணைவி துஸியந்தி ஹூல்  உம் மகன் யோவான் ஹூல்  உம் யாழ் செல்கின்றனர். துஸியந்தி ஹூல்  உம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்த போதும் அவரது விண்ணப்பமும் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் முதல் யோவான் ஹூல் யாழில் தன் இடைநிலைக் கல்வியைத் தொடர உள்ளார். பேராசிரியர் ஹூல் யாழ் திரும்புவதும் தனது கற்பித்தல் கடமையை தொடர முடிந்தால் இது பலருக்கும் முன்னுதாரணமாக அமையும். புலம்பெயர்நாடுகளில் கல்வியியல் செழிப்புடன் உள்ளவர்கள் தங்கள் ஆற்றலை தம் மக்களுடன் பகிந்துகொள்வதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாக இது அமையும்.

Sooriyasegaram_Mஇடதுசாரி சிந்தனையாளரும் கடந்த காலங்களில் தேசம்நெற் கூட்டங்களில் அறியப்பட்டவரும் ஆன சூரியசேகரம் தற்போது இலங்கை சென்று யாழ் மாநகரசபைக்கு ஆலோசகராக கடமையாற்றுகின்றார். கம்டன் கவுன்சிலின் பெரும்தெருக்கள் திணைக்களத்தில் இருந்து ஓய்வுபெற்ற இவர் தனது அனுபவங்களை ஆற்றலை யாழ் மாநகரசபையுடன் பகிர்ந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. மிகவும் அவசியமான ஒரு காலகட்டத்தில் பேராசிரியர் ஹூல்  யாழ் வருகிறார் எனத் தெரிவித்த சூரியசேகரம் பேராசிரியர் ஹூல்  போன்ற ஆளுமைகள் யாழ் கல்விச் சமூகத்திற்கு அவசியமானது எனத் தெரிவித்தார்.

அறிவுத் தேடலுடன் தம முன்னேற்றத்திற்கான தாகத்துடன் உள்ள தாயக மக்களுக்கு பேராசிரியர் ஹூல்  போன்று பல்துறை சார்ந்தவர்களும் தங்கள் சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் முன்வருவது லண்டனில் இடம்பெற்ற சந்திப்புக்களில் மிகவும் வரவேற்கப்பட்டது. இலங்கை செல்வது தொடர்பில் ஆரம்பத்தில் ஒரு தயக்கம் இருந்தாலும் லண்டனுக்கு வந்ததன் பின் கிடைத்த ஆதரவும் வாழ்த்துக்களும் தன்னை உற்சாகப்படுத்தியதாக லண்டனில் இருந்து விமானம் ஏறுவதற்கு முன் பேராசிரியர் ஹூல்  தெரிவித்தார்.

Prof_Hoole_Meeting_27Aug10தன்னிடம் பலரும் பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்ததாகக் கூறிய பேராசிரியர் ஹூல்  தனது எல்லைக்குட்பட்ட விடயங்களை மட்டுமே தன்னால் மேற்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார்.

யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தருக்கான பதவிக்காலம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி இரு கட்டங்களினூடாக தெரிவு செய்யப்படுகின்றது. முதற்கட்டத்தில் பல்கலைக்கழக சபையில் உள்ள உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் University Grants Commission வழங்கப்படும். அடுத்து பல்கலைக்கழக கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்வார்.

2006ல் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ஹூல் தெரிவு செய்யப்பட்ட போதும் அவர் தனது கடமையைச் செய்வதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு இழைத்த பல்வேறு அநியாயங்களின் பட்டியலில் கல்விச் சமூகத்தை சீரழித்தது குறிப்பிடக்கூடிய ஒன்று.

தற்போது யாழ் திரும்பும் பேராசிரியர் ஹூல் யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கான பதவிக்கு போட்டியிட உள்ளார். அவர் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் தற்போது பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆயினும் பேராசிரியர் ஹூல் உடைய வெளிப்படையான பேச்சும் நேர்மையான நடவடிக்கைகளும் அவரது தெரிவுக்கு எதிரானதாக அமையலாம் என்ற அச்சமும் கல்வியியலாளர்கள் மத்தியில் உள்ளது.

Thavarajah_Sபேராசிரியர் ஹூல் ஓகஸ்ட்30ல் ரிபிசி வானொலியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் கல்வி நிலை தொடர்பாகவும் குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விநிலை தொடர்பாகவும் உரையாடினார். இக்கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தவராஜா பேராசிரியர் ஹூல் 2006ல் தனது துணை வேந்தர் பணியை மேற்கொள்ள முடியாது போனது துரதிஸ்டமானது என்றும் அவர் தற்போது யாழ் திரும்பிச் செல்வது பாராட்டுக்கு உரியது என்றும் தெரிவித்தார். பேராசிரியர் ஹூல் உடைய தகமையுடன் இலங்கையில் யாரும் இல்லை எனத் தெரிவித்த எஸ் தவராஜா அவருடைய சேவைக்கான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

பேராசிரியர் ஹூல் கலந்துகொண்ட ஒவ்வொரு சந்திப்பும் அவர் யாழ் செல்ல எடுத்த முடிவை மனதார வாழ்த்துவதாகவும் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைந்திருந்தது. பேராசிரியர் ஹூல் அங்கு அதிசயம் எதையும் நிகழ்த்த முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு இது மாற்றத்திற்கான முதற்படியாக அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

புலிகளுக்கு சார்பான – எதிரான – அரசுக்கு நம்பகமற்றவர்களின் A to Z வரையான பெயர்ப்பட்டியல்

LTTE LOGOA முதல் Z வரையான பெயர்கள் கொண்ட பட்டியலும் அவர்களது அரசியல் நிலைப்பாடும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் தற்போதைய இலங்கை அரசையும் மையப்படுத்தி அவர்கள் என்ன அரசியல் நிலைப்பாட்டில் உள்ளனர் என்ற குறிப்புகளுடன் இத்தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் அமைப்புகள் ஊடகங்கள் பற்றிய தகவல்களும் அவற்றின் அரசியல் நிலைப்பாடுகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் இப்பட்டியலில் தெளிவாகத் தெரியக் கூடிய தவறான தகவல்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து காலமான சதாசிவம் கிருஸ்ணகுமார் (கிட்டு) முதல் நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சோல்கைம் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக இலங்கை அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக கூறிவருகின்ற அமெரிக்க செனட்டர் புருஸ்பெயின் உட்பட பலரது பெயர்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரித்தானியாவில் ரூட் ரவி உட்பட பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகக் குறிக்கப்பட்டு உள்ளனர். கவுன்சிலர் போல் சத்தியநேசன், ஆர் ஜெயதேவன் போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உடையவர்கள் என்றும் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பலரது பெயர் விபரங்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் அடங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் புலிகள் தொடர்பான அரசியல் நிலைப்பாடும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும்  சிங்கள மக்கள் மத்தியில் அரசுக்கு மாறுபட்ட கருத்துடைய பிரயன் செனவிரரட்னே போன்றவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் காட்டப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் உள்ளவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் கே பி க்கு ஆதரவானவர்கள், கே பி க்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் குறிப்பிடப்பட்டு உள்ளனர். கே பி க்கு ஆதரவானவர்கள் என்ற வகைப்படுத்தலைத் தவிர அரச ஆதரவாளர்கள் என்று யாரையும் குறிப்பிடவில்லை. ஏசியன் ரிபியூன் ஆசிரியரை டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர் என்றே குறிப்பிட்டு உள்ளது.

இப்பட்டியல் யாரால் என்ன நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டது என்றோ ஏன் வெளியிடப்பட்டது என்றோ இதுவரை தெரியவில்லை. ஆனால் இப்பட்டியல் ஏதோ ஒரு வகையில் தற்போதைய இலங்கை அரசினால் நம்பகமற்றவர்களாக கருதுபவர்களின் பட்டியலாகவே பெரும்பாலும் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள் தற்போதைய இலங்கை அரசு மீது விமர்சனம் உடையவர்களே பெரும்பாலும் இப்பட்டியலில் உள்ளனர்.

இப்பட்டியல் இலங்கைநெற்றில் இருந்து பெறப்பட்டு இங்கு பதிவு செய்யப்படுகின்றது.

LTTE_ACTIVISTS_and_LTTE_and_GOVERNMENT_OPPONENTS

உண்ணாவிரதத்தில் மக்டோனால்ட் சாப்பிடவில்லை என்பதை பரமேஸ்வரன் நீதிமன்றத்தில் நிரூபித்தார்.

Parameswaran_Subramaniyam_judgementபிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனால்ட் பேகர் சாப்பிட்டார் என்று செய்தி வெளியிட்ட டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகள் ஆதாரம் இன்றி செய்தி வெளியிட்டதை ஒப்புக் கொண்டுள்ளன. இப்பத்திரிகைகளுக்கு எதிராக பரமேஸ்வரன் சுப்பிரமணியம் தொடுத்த வழக்கின் தீர்ப்பு (July 29 2010) பரமேஸ்வரனுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் 77500 பவுண்கள் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த எட்டு மாதங்களாக தான் மிகுந்த அவமானங்களை சந்தித்ததாகவும் இந்த நிலையில் இன்று வந்துள்ள தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பரமேஸ்வரன் பிபிசி தமிழோசைக்கு இன்று தெரிவித்துள்ளார். தனது சட்ட நடவடிக்கைக்கு தமிழ் அமைப்புகள் ஆதரவுதர முன்வரவில்லையென்றும் No Win No Fee என்ற அடிப்படையிலேயே தான் வழக்கைத் தொடுத்ததாகவும் பரமேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார்: பரமேஸ்வரன்

உண்ணாவிரதி பரமேஸ்வரனின் 7.1 மில்லியன் பவுண் மக்டோனால் பேகர் : த ஜெயபாலன்

75 நாட்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!!! : த ஜெயபாலன்

யூலை ’83 முதல் கருகிய கால்நூற்றாண்டு : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

Black July 19831983 யூலை இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டம். இன்றைய முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டம். யூலை 23 1983ல் ஸ்தாபன வடிவம் பெற்ற இந்த வன்முறை அரசியல் மே 18 2009 வரை கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி பாரிய அழிவை ஏற்படுத்தியது. இந்த வகையில் கருப்பு யூலை என்ற குறியீடு 1983 முதல் அடுத்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களது வாழ்வினை இருட்டில் கருமையிலேயே விட்டிருந்தது. இந்த மிகக் கொடிய கால்நூற்றாண்டு வரலாற்றிற்கு நாம் இன்றும் சாட்சியாக வாழந்து கொண்டுள்ளோம்.

இலங்கையின் இரத்தம் தோய்ந்த கால்நூற்றாண்டு வரலாற்றை இன்று திரும்பிப் பார்க்கும் போது, அண்மையில் காலமான தமிழ் – சிங்கள மக்களிடையே உறவுப்பாலமாக இருந்த தோழர் உபாலி குரே அவர்களின் சிந்தனையூடாகப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும் என் நினைக்கின்றோம். அவர் தனது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாக தனது பெறாமகன் முறையான உறவுக்கார இளைஞனுக்கு எழுதிய மடலில் இருந்து …..

Upaly Cooray‘‘ அன்புள்ள பெரிய மருமகனுக்கு!

உன்னுடைய பெயரை இங்கு தவிர்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தக் கடிதத்தின் நோக்கம் உன்னைத் தொல்லைப் படுத்துவதோ அன்றி உன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்ல. உன்னுடைய FACEBOOK இல் வெளியாகியிருந்த வீறாப்பும் வெற்றிக் களிப்பும் கொண்ட அபிப்பிராயங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றை மீளவும் நான் இங்கு சொல்ல எண்ணவில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் மீதான இராணுவரீதியான வெற்றியைத் தொடருகின்ற ஆதிக்க வாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றி, உன்னைப் போன்ற கல்வியும் அறிவும் கொண்ட ஒரு இளைஞனிடம் இருந்து இதைவிட ஒரு விமர்சனப் பாங்கான பகுப்பாய்வை நான் எதிர்பார்த்திருந்திருக்க வேண்டும்.

உங்களுடைய வெற்றிக் களிப்பு, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் ஆயுதக் கிளர்ச்சிக்கு வித்திட்ட ஆழமான பிரச்சினைகளை எண்ணிப் பார்க்கத் தவறுகிறது. 1977இன் தமிழருக்கெதிரான இனக் கலவரம், 1981இல் மிகவும் பெறுமதி வாய்ந்த யாழ் பொதுநூல்நிலைய எரிப்பு, இவைகளைச் சரித்திரத்தில் இருந்து இது அழித்துவிட முடியாது. 1983இல் அரசினால் ஏவிவிடப்பட்ட இனக்கலவரத்தின் போது நாடு பூராவிலும் இருந்த தமிழர்கள் மீது பரந்தளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது பல தமிழ் செயற்பாட்டாளர்கள் காணாமல் போனார்கள். பலர் கிரமமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். இவைகள் எல்லாம் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டவை…..’’
சிங்கள சமூகத்தைச் சேர்ந்த, தனது மரணம் வரை இன உறவுகளைக் கட்டியெழுப்ப முயன்ற ஒரு சிந்தனையாளனின் வாக்குமூலம் இது.

1983 யூலை இனக்கலவரம் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்தது, இந்த இனக்கலவரங்களின் பின்னால் அப்போது ஆட்சியில் இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் கரங்கள் இருந்தமை ஆதாரங்களுடன் வெளிவந்திருந்தது. தங்களுடைய இனவாத நடவடிக்கைகளை பெரும்பான்மை மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்கும், அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தை தமதாக்கிக் கொண்டு தங்கள் குறுகிய நலன்களை பூர்த்தி கொள்வதற்குமாகும்.

எழுபதுகளின் பிற்பகுதியில் உருவான தமிழ் எழுச்சியையும் அரசுக்கெதிரான தமிழ் மக்களின் போக்கையும் கட்டுப்டுத்த சந்தர்ப்பம் பார்த்திருந்த அரசு கிடைத்த சந்தர்ப்பத்தினை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. தமிழ் மக்கள் மீது யுத்தப் பிரகடனம் செய்யும் அறிக்கைகளையும் இனவாத பேச்சுக்களையும் பேசி, தமிழ் மக்களின் மீதான 1958க்களில் நடைபெற்ற கலவரங்களை போன்றதொரு கலவரத்தை நினைத்து ஏங்கியவர்களுக்கு 1983 யூலை 23 சம்பவம் வாய்ப்பாக அமைந்தது. அன்று யாழ்ப்பாணம் திருநல்வேலிச் சந்தியில் வெடிக்க வைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடி 13 இராணுவத்தினரைப் பலியெடுத்தது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த சந்தர்ப்பம் பார்த்து இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு தமிழர் மீது கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இதே ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவருமான ஜே ஆர் ஜெயவர்த்தனாவே 1958, 1977 இனக்கலவரங்களுக்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.

J R Jeyavarthaneதமிழ் மக்களுக்கு எதிரான இனக் கலவரங்களில் முன்னின்ற ஐக்கிய தேசியக் கட்சியுடனும் அதன் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனே உடனும் தமிழரசுக் கட்சியும் அதன் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் எப்போதும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தனர். இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் கூட்டுக்களில் தமிழ் அரசியல் தலைமைகளான தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தனை இனக்கலவரங்களின் பின்னும் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே கூட்டினை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

1983 இனக்கலவரம் பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை மீது தலையீடு செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. பனிப்போரின் உச்சமாக இருந்த அக்காலப்பகுதியில் உலக நாடுகள் இரு அணிகளாக பிரிந்து நின்றன. இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்த போதும் அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எதிரான நிலையைக் கொண்டிருந்தது. ஆனால் ஜே ஆர் ஜெயவர்த்தனே தலைமையிலான இலங்கை அரசு அமெரிக்க சார்பு நிலையைக் கொண்டிருந்தது.

இந்தியாவின் பிராந்திய நலன்களும் இந்தியாவின் தேவைகளும் இலங்கை அரசிற்குகெதிராக இந்த இனக்கலவரத்தை இந்தியா பயன்படுத்த முற்பட்டது. இதன் விளைவு இலங்கையில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் ஆயுத வடிவம்பெற்று மக்கள் சக்தியிலும் ஆயுதங்களின் சக்தியே மகத்தானது என தமிழ் விடுதலை இயக்கங்கள் தமிழ் மக்களைக் கைவிட்டு இந்தியா வழங்கிய ஆயுதங்களை இறுகப் பற்றிக் கொண்டனர். உரிமைப் போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாக ஆனது.

இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் பல சமூக முன்னணியாளர்களும் சமூகநலவாதிகளும் ‘மக்கள் அரசியல் மயப்படுத்தப்படாத போராட்டம் – அரசியல் முன்னிலைப்படுத்தப்படாத போராட்டம் – மக்களின் பங்கு பற்றல் இல்லாத போராட்டம் – தோல்வியிலேயே முடியும்’ என்பதை அறைந்து சொன்ன போது ஆயுதங்கள் மீதான போதை அவர்களது மதியை மயக்கச் செய்தது. இறுதியில் ஆயுதங்கள் மீது காதல் கொண்ட சந்தர்ப்பவாத சக்திகளின் தலைமையில் இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டு தோல்வியுற்றது.

அரசியல் மயப்படுத்தப்டாத இப்போராட்டம் இலகுவில் வல்லரசுகளின் கைப்பொம்மையாகி அல்லது வல்லரசுகளின் வல்லாதிக்கத்திற்குட்பட்டு இலகுவில் தோல்வியை அடையும் என்பதை அன்றே சுட்டிக்காட்டிய அரசியல் சிந்தனையாளர்கள் இன்று அதன் முடிவையும் தாங்கள் வாழ்நாளிற்குள்ளாகவே கண்டும் உள்ளனர். இந்தச் சிந்தனைகள், அறிவுறுத்தல்கள் இவை எல்லாவற்றையும் மீறி ஆயுதங்களை மட்டுமே நம்பி இந்தப் போராட்டத்தை நடாத்தி இன்று அந்த போராட்டம் ஆரம்பித்த இடத்தில் இருந்து பின்னோக்கி வெகுதொலைவிற்கு மக்களைக் கொண்டு சென்றுள்ளது.

இன்றும் இந்த கடந்த காலம் பற்றிய மதிப்பீடோ அல்லது விமர்சனமோ இல்லாமலேயே அடுத்த நகர்வுக்குத் தயாராகின்றனர். எமது கடந்த காலத்தை மதிப்பீடு செய்து தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு பற்றிய எவ்வித விவாதமும் இன்றி ஓடுகிற பஸ்ஸில் ஏற முற்படுகின்றனர். அவ்வாறு செய்யாதவர்களுக்கு துரோகிப் பட்டம். கடந்த போராட்டத்தின் தப்பான பண்புகள் இன்னும் தொடர்வதையே இது காட்டுகின்றது. இராணுவ சாகசங்களையே போராட்டம் என்று அடுத்த சந்ததிகளுக்கு படிப்பித்தும் ஆயிற்று. இதிலிருந்து வெளிவருவதும் மக்கள் அறிவூட்டப்படுதலும் மிகவும் சிக்கலான நிலையாகியும் விட்டது, இந்த சிக்கலிலிருந்து வெளியேற எமது கடந்த போராட்டத்தையும் நமது போராட்டவாதிகளின் போக்குகளையும் முழுமையாக மீள்மதிப்பீடு செய்தாக வேண்டிய அவசியமான காலகட்டம் இது.

Black July 1983இந்த 1983 யூலைக் கலவரத்தின் பின்னரும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கையின் இனவாத அரசுகள் தங்களது இனவாதப் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அல்லது இனவாத அரச இயந்திரம் மாற்றங்களை அனுமதிக்கவில்லை. இனவாத நடவடிக்கைகள் யுத்தத்தின் பின்னணியில் மிகவும் துரிதமாக இடம்பெற்றது. இந்த இனவாத நடவடிக்கைகளை தமிழ் மக்கள் ஸ்தாபனமயப்பட்டு கண்டிக்கவோ அதற்கு எதிராக செயற்ப்படவோ முடியாதபடி தமிழ் மக்களை வலிந்து பிரதிநிதித்துவப்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்தனர். இன்னோர் வகையில் இந்த இனவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் நெய்யூற்றி வளர்த்தும் விட்டனர்.

இனமுரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி சிங்கள பேரினவாதக் கட்சிகள் எவ்வாறு குறுகிய அரசியல் லாபம் பெற்றனரோ அவ்வாறே தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களின் தொடர்ச்சியான தமிழீழ விடுதலைப் புலிகளும் இனவாதத்தைக் கூர்மைப்படுத்தி தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

இந்த இனக்கலவரத்தை தூண்டிய காரணங்களில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கை அரசும் அதற்கான முழுமையான பொறுப்புகளைக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொலீசாரும் இராணுவத்தினரும் சிங்களக் காடையர்கள் இனவாதிகளுடன் சேர்ந்து தாமும் இணைந்தே இந்த 1983ம் ஆண்டு இனக்கலவரத்தை நடாத்தி தமிழ் மக்களை கொன்று குவித்தனர், இந்த ஈனச்செயலுக்கு பொறுப்பான பலர் இன்றும் பல முக்கிய அரச பொறுப்புக்களில் உள்ளனர். இவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை,

அதேசமயம் இந்த 1983 யூலை கலவரத்திற்கு சற்று முன்னான தமிழ் ஆயுத அமைப்புகளின் நகர்வுகள் இங்கு பதிவு செய்யப்படுவது அவசியம். யூலை 23 1983 திருநெல்வேலிச் சந்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னால் இருந்த உள்நோக்கத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

TELO_Thangaththuraiதமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ வெலிக்கடைச் சிறையில் இருந்த தமது தலைவர்களான குட்டிமணி தங்கத்துரை ஆகியோரை சிறையை உடைத்து வெளிக்கொணர்வதற்காக 24 இளைஞர்களை பயிற்சியளித்து வெலிக்கடைசிறையை தாக்கும் திட்டம் ஒன்றை செய்வதற்கு ஆயத்தமாக இருந்த வேளையிது. ‘இந்த தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் அதன் தலைவர் வே பிரபாகரனிடமும் உதவிகள் கேட்கலாம்’ என்று சில ரெலோ உறுப்பினர்களிடம் அபிப்பிராயம் இருந்தது. ஆனால் இதற்கிடையே சில ரெலோ உறுப்பினர்கள் வே பிரபாகரனே தமது ரெலோ தலைவர்களை காட்டிக் கொடுத்தவர் என்று குற்றம்சாட்டினர். அவர்கள் ‘ரெலோ தலைவர்களை உயிருடன் வெளியே எடுப்பது வே பிரபாகரனுக்கு விருப்பமானதாக இருக்காது’ என்றும் கூறினர். ‘வே பிரபாகரன் இந்த திட்டத்தை குழப்புவார்‘ என்ற பலமான அபிப்பிராயத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். இந்த அபிப்பிராயத்தை அன்று கொண்டிருந்தவரில் ரெலோ சுதனும் முக்கியமானவர். இவர் இப்போது லண்டனில் வாழ்கிறார்.

TELO_Kuddymani‘தமிழீழ விடுதலைப் புலிகளோ அதன் தலைவர் வே பிரபாகரனோ உதவி செய்யத் தேவையில்லை.உபத்திரவம் இல்லாது இருந்தாலே போதும். இப்போதைக்கு எந்த இராணுவத் தாக்குதலையோ இராணுவத்தினர்க்கு எதிரான சேட்டைகளையோ செய்ய வேண்டாம்’ என புலிகளிடம் கேட்பதாக முடிவாகியது. சிறீசபாரத்தினத்தின் இணக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை இதே சுதன் சந்தித்து மேற்கூறிய வேண்டுகோளை விடுத்திருந்தார். ரெலோ சுதன் கலட்டி அம்மன் கோவிலடியில் வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கண்ணனிடம் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது. (கண்ணன் இன்றும் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார்.) ரெலோ தலைவர் தங்கத்துரை பிரபாகரனின் இம்மாதிரியான தாக்குதல்களை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததாயும் இத்தகவலை வே பிரபாகரனுக்கு அனுப்பியதாயும் இந்த ரெலோ உறுப்பினர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இராணுவ சாகசங்களை நிறுத்தவில்லை. இராணுவத்தினர் மீது மேற்கொள்ளளும் வலிந்த தாக்குதல்களை, துப்பாக்கிப் பிரயோகங்களை நிறுத்தவில்லை. திருநெல்வேலித் தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றினர். இனக்கலவரம் வெடித்தது. வெலிக்டை சிறையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை கொல்லப்பட்டனர்.

LTTE Leader V Pirabakaranஇன்றும் லண்டனில் வாழும் முன்னாள் ரெலோ உறுப்பினர்களிடம் இந்த 13 இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் ரெலோ தலைவர்களை வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்குடனேயே செய்யப்பட்டதாக திடமாக நம்புகிறார்கள். அதேவேளை இந்தக் காலங்களில் சிறையில் இருந்த தங்கத்துரை தனது நீதிமன்ற உரைமூலம் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு உள்ள நியாயத்தை முக்கியமாக இது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதையும் எடுத்து கூறி இருந்தார். இவ்வுரை தங்கத்துரை போராட்டம் பற்றிய சரியான போக்கைக் கொண்டிருந்தார் என்பதைக் கோடிற்று நின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் தங்கத்துரையை சிறையிலிருந்து மீட்டிருந்தால் வே பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நடாத்தியிருந்திருக்க முடியுமா? பின்னாளில் ஏற்பட்ட அரசியல் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா? என்பது ஆர்வத்திற்குரிய விவாதமாக அமையும்.

அன்று 1983 யூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு வன்னியில் குடியேறிய மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில் இடம்பெற்ற யுத்தங்களுக்கும் கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாகினர். இன்றும் இந்த வன்னி அகதி முகாம்கிளிலிருந்து வெளியேறி தங்க இடம் இல்லாது இருப்பவர்கள் இவர்களே.

இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே மூல காரணமாக இருந்த போதும் சுதந்திரக் கட்சி இவ்விடயத்தில் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. இலங்கை அரச இயந்திரத்தை இனவாத நச்சுச் சுழலில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கு சுதந்திரக் கட்சி காத்திரமான பங்களிப்பினை இதுவரை மேற்கொள்ளவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள சுதந்திரக் கட்சிக்கு தற்போது அமைந்துள்ள அரசியல் சூழல் மிகவும் வாய்ப்பானதொன்று. அதனை முழுமையாகப் பயன்படுத்தி அரசு இயந்திரத்தை இனவாதச் சூழற்சிக்கு வெளியே கொண்டுவர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசினால் முடியும். ஆயினும் அவர்கள் தாம் அதற்குத் தயாரில்லை என்பதனையே அவ்வரசின் இராணுவப் போக்கு உணர்த்துகின்றது. இன்றும் வன்னி முகாம்களில் உள்ள இந்த மக்கள் 1983ம் ஆண்டின் இனவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு வெளியேறிய அப்பாவி மலையக மக்கள் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் அறியாதவர்களா என்ன? இன்றைய அரசின் நடவடிக்கைகள் தம் குறுகிய அரசியல் நலன்களுக்காக நாட்டை மற்றுமொரு இனவாதச் சுழற்சிக்குள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசு தள்ளுகின்றதோ என்ற அச்சம் தமிழ் மக்களிடையெ எழுவது தவிர்க்க முடியாதது.

Rehabilitation_Wanni வன்னி அகதி முகாம்களில் உள்ள மீதமான மக்கள் மட்டுமல்ல பெயரளவில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களும் தமக்கென வாழ விவசாயம் செய்ய நிலமற்றவர்கள், வீடற்றவர்களாகும். இந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமலும் அந்த இளம்பிள்ளைகளின் கல்வியில் அக்கறையில்லாமலும் அரசுக்கு என்ன வெற்றி விழா, ஆண்டுவிழா தேவைப்படுகின்றது. இப்படிப்பட்ட இனவாத போக்கே இலங்கையில் தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக போராட முற்பட்டதும் இராணுவத்தினரை தாக்கும் எண்ணம் உருவாகக் காரணம் ஆனது என்பதை இன்னும் உணராமல் இருப்பது இவர்களும் வரலாற்றைக் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
இந்த மக்களின் அவல நிலையை இன்றுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டுகொள்வதாக இல்லை. தம் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதற்கு அப்பால் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்திரமாக எதனையும் செய்துவிடவில்லை. அந்த மக்களை வன்னி முகாம்களில் சென்று பார்ப்பதற்குக் கூட அவர்கள் போராடவில்லை. பொறுப்பு வாய்ந்த அரசு ஆட்சியில் உள்ளது எனக் கூறிக்கொள்ளும் சுதந்திரக் கட்சியின் தமிழ் ஆதரவாளர்களும் அமைப்பாளர்களும் தோழமைக் கட்சிகளும் கூடி தமது சுதந்திரக்கட்சி அரசியல் உறவுகளை முழுமையாக இந்த மக்களுக்காக பயன்னபடுத்த முடியாதவர்களாகவே உள்ளனர்.

இக்கட்டுரையை மீண்டும் உபாலி குரேயின் சிந்தனையின் அடிப்படையிலேயே நிறைவுக்குக் கொண்டு வருவது பொருத்தமாக இருக்கும். அவர் மேற்குறிப்பிட்ட கடிதத்தில்…..

‘‘இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றால், எங்களுக்கு இன்று தேவையானது வெற்றி குறித்த பெருந்தன்மையே அல்லாமல் வெற்றிக் களிப்பல்ல. நாங்கள் அவர்களோடு உடன்பாடு கொள்ள வேண்டிய தேவை இல்லாவிடினும் அவர்களை நோக்கி நாங்கள் நட்புக்கரம் நீட்ட வேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமேயன்றி இனிமேலும் சண்டைக்குப் போகக்கூடாது. அவர்களுடைய குறைகளை நாங்கள் கேட்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகளை அடைவதற்கு நாங்கள் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும். இன்னும் உங்கள் வெற்றிக் களிப்பு எங்களுடைய கலாச்சாரத்திற்கு அந்நியமானது. உதாரணத்திற்கு, துட்டகைமுனு, எல்லாளனை வெற்றி கொண்டபின், எல்லாளனுடைய சமாதிக்குச் சென்றபோது எல்லாளனுக்கு மரியாதை செலுத்துமுகமாக ஒவ்வொரு குதிரைவீரனும் அந்தச் சமாதிக்கு மண்டியிட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். இந்த உயர்நிலையின் வழிநின்றுதான் நாங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை அணுகவேண்டும்.’’

இந்த மனமாற்றம் பேரினவாதத் தலைமைகள் மத்தியில் ஏற்பட்டாக வேண்டும். அதற்கு முதல் நிபந்தனை இந்த மனமாற்றம் பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். கடந்த கால்நூற்றாண்டு கால ஆயுதப் போருக்கு செலவழித்து ஆயிரக்கணக்கான லட்சக்கணக்காண கோடிக்கணக்கான பணத்தை சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுக்க அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கப் பயன்படுத்தி இருந்தால் எமது நியாயமான உரிமைகளை வென்றெடுக்க சிங்கள, முஸ்லீம் மக்கள் தோளோடு தோள் நின்றிருப்பார்கள். உபாலி குரேயின் கடிதத்திற்கு அந்த உறவுக்கார இளைஞன் வருமாறு பதிலளிக்கிறான்…..

”என் அன்புக்குரிய பெரிய அங்கிள்,

உங்களுடைய இந்தக் கட்டுரையை என்னுடைய FACEBOOK இலும், சில இலங்கையரின் FACEBOOK இலும் பிரசுரித்தேன். என்னுடைய நண்பர்களில் 20 பேருக்கும் அதிகமானவர்கள் யுத்தம் பற்றிய தங்கள் அபிப்பிராயத்தை இதற்குப் பின் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய கட்டுரை மூலமாக அவர்களுடைய அபிப்பிராயங்ளை மாற்ற முடிந்தததையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இதைக் கட்டாயம் ஒரு பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

தயவுசெய்து இதுபற்றி யோசியுங்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் எனக்கு அனுப்பி வைத்ததற்காக நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரியமுடன்”

இலங்கை இந்த இனவன்முறை என்கிற நச்சு வட்டத்தில் இருந்து வெளியேற தமிழ் – சிங்கள – முஸ்லீம் சமூகங்களில் இருந்து பல உபாலி குரேக்கள் தோன்ற வேண்டும். தமிழ் இளைஞர்கள் ஏந்திய ஆயுதங்களிலும் பார்க்க உபாலி குரே போன்றவர்களின் சிந்தனையும் எழுத்தும் இன மத பேதங்களைக் கடந்து அவர்களின் இதயங்களையும் சிந்தையையும் வெற்றிகொள்ளும். உபாலி குரேயின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அதன் முடிவில் இசைக்கப்பட்ட பொப் மாலியின் பாடல் இன்னும் மெல்லியதாக காதோரம் ஒலித்துக் கொண்டுள்ளது…..

Get up, stand up!
Stand up for your rights!
Get up, stand up!
Don’t give up the fight!