ஜெயபாலன் த

ஜெயபாலன் த

எம் பி சார்ள்ஸ்ம் கொரோனாவும்: கொரோனா வைரஸில் இருந்து தப்பினாலும் ரிஎன்ஏ வைரஸில் இருந்து தப்பிக்க முடியவில்லை!!!

கொரோனாவையே கட்டுப்படுத்தும் தடுப்பூசி பத்து மாதங்களில் ரெடியாகிவிட்டது. ஆனால் தமிழ் தேசிய வைரஸ்களின் அழிவில் இருந்து தமிழ் மக்களை எந்தக் கடவுளாலும் காப்பாபற்ற முடியவில்லை. ஐம்பது வருடங்களாக இந்த தமிழ் தேசிய வைரஸ்கள் உருமாறி, உருமாறி காலத்திற்குக் காலம் தமிழ் மக்களை அழித்து வருகின்றன. சிங்கள பேரினவாதத்துடன் போட்டி போட்டு தமிழ் மக்களை அழித்து வருகின்ற இந்த தமிழ் தேசிய வைரஸ்கள்: தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய புடுங்கிகள்: (ரெலோ, புளொட், புலி) என்றெல்லாம் உருமாறி தமிழ் மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பிடுங்கி எடுத்துக்கொண்டுள்ளனர்.

கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்த கதையாக தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோதாவில் வீம்பு பேச்சுக்களும் வீம்புத்தனங்களும் செய்து தமிழ் மக்களை இன்று கடைநிலையில் கொண்டுவந்து விட்டுள்ளனர். அன்று ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் தலைமைகளும் சரி, இன்று பாராளுமன்றம் செல்கின்ற அரசியல் தலைமைகளும் சரி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இவர்கள் எல்லோருக்கும் அறிவு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. அதனால் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் முட்டாள்களாகவே எண்ணுகின்றனர். முன்னவர்களது அதிகாரவெறிக்கு தமிழ் மக்கள் மண் மூட்டைகளாக்கப்பட்டனர். பின்னையவர்களது பாராளுமன்றக் கதிரைகளுக்கு தமிழ் மக்கள் மந்தைக் கூட்டங்களாக்கப்பட்டனர்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் தேசிய ஆயுதக் குழுக்களும் கட்சிகளும் தமிழ் மக்களின் குருதியயை குடித்தே வருகின்றனர். இதில் இரா சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், த சித்தார்த்தன் எல்லோருமே ஒரே டிஎன்ஏ உள்ள வைரஸ்கள் தான். இந்த வரிசையில் கடைசியில் உருமாற்றம் அடைந்தவர்கள் தான் சி வி விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் மற்றும் அவரில் இருந்து திரிபடைந்த மணிவண்ணன்.

வைரஸ்கள் திரிபடைந்து உருமாற்றம் பெறும் பொழுது பொதுவாக அவற்றின் வீரியம் குறைவடைந்து பலவீனமாகும். ஆனால் தமிழ் தேசிய வைரஸ்கள் திரிபடைந்தாலும் அவற்றின் தமிழ் மக்களை அழிக்கின்ற ஆற்றலில் எவ்வித பலவீனமும் ஏற்படவில்லை. அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு அனைத்து நிலைகளிலும் இவர்கள் தமிழ் மக்களை அழித்தொழித்து வருகின்றனர். பொறுப்பற்ற முட்டாள்கள் பொறுப்பான பதவிகளில் அமருகின்ற போது சமூகம் பேரழிவை நோக்கித் தள்ளப்படுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

இதற்கு வளர்ந்த நாடுகள் வளர்முக நாடுகள் என்று விதிவிலக்குகள் இல்லை. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்மினதும் இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடியினதும் முட்டாள் தனமான முடிவுகளே இந்நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவிற்குப் பலியாகக் காரணம். இன்று உலகமெங்கும் வளர்முக நாடுகளில் கொரோனாவிற்கு மக்கள் பலியாவதற்கு முக்கிய காரணம் பிரித்தானிய, அமெரிக்க அரசுகளின் பணத்தாசை மட்டுமே. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பதவிக்கு வரும்வரை கொரொனா தடுப்பூசியின் உரிமத்தை சிறிதுகாலத்திற்கு விட்டுக்கொடுப்பதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் பதவிக்கு வந்த பின் அதனை அடக்கியே வாசிக்கின்றார்.

கொரோனா தடுப்பூசிக்கான உரிமம் விட்டுக்கொடுக்கப்பட்டு இருந்தால் உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பு வக்சின் உருவாக்கப்பட்டு கூடிய விரைவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் பெரும் தடையாக உள்ளன. இவர்களே இன்றைய கொரோனா கொலையாளிகள். தங்களுக்கு தேவையான போது மனித உரிமை அரசியலைத் தூக்கிப் பிடிக்கும் இவர்கள் இப்பொழுது தங்களால் பல்லாயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதை நாசுக்காக மூடி மறைக்கின்றனர். இவர்களுடைய மேற்குலக பிரச்சார ஊடகங்களும் அதனை கண்டும் காணாமல் மௌனமாய் உள்ளன. தமிழ் தேசிய வைரஸ்களைப் போன்றவர்களே இன்னும் இந்த காலனித்துவத்திற்கு அடிமைச்சானம் எழுதிக்கொடுத்துவிட்டு கதையளந்து திரிகின்றனர்.

பொது மக்களின் வரிப்பணத்திலும் உலகெங்கும் இருந்து பெறப்பட்ட தகவலையும் அறிவையும் கொண்டு தயாரிக்கப்பட்ட வக்சீனுக்கு இப்பொது ஒரு சில உலகப்பெரும் மருத்துவ நிறுவனங்கள் உரிமம் பாராட்டுகின்றன. ரஸ்யாவினதும் சீனாவினதும் வக்சீனே இன்று வளர்முக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வக்சீனை உற்பத்தி செய்து பிரித்தானியாவுக்கு வழங்கிய இந்தியாவுக்கே தன்னிடம் உள்ள வக்சினில் ஒரு பகுதியயை பிரித்தானியா வழங்க மறுத்திருந்தது சில வாரங்களுக்கு முன் வந்த செய்தி.

சுற்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்காமல், கேட்காமல், தீரவும் விசாரிக்காமல் சார்ள்ஸ் நிர்மலநாதன் என்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர், “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று பாராளுமன்றத்தில் முழங்கினார்; அல்ல யாருக்கோ முதுகு சொறிந்தார்.

உலகில் கொரோனாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பொலிஸ் அதிகாரம் உடைய நாடுகளே. அந்தக் கட்டமைப்புத் தான் அந்நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவியது. (அது மட்டுமே காரணம் அல்ல என்பதையும் குறித்துக்கொள்க.) அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையும் ஒப்பீட்டளவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு இலங்கையின் இராணுவக் கட்டமைப்பும் ஒரு காரணம் என்பதை மருத்துவத்துறை சார்ந்தவர்களே ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் விட்ட அறிக்கைகளில் வடக்கு கிழக்கில் கொரோனா தடுப்பு மையங்களை உருவாக்குவதற்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தாங்களும் ஏதோ அறிக்கை வெளியிட வேண்டும், பாராளுமன்றத்தில் முழங்க வேண்டும் என்பதற்காக சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அறிக்கை விடுவது பின்னர் அதுபற்றி மௌனமாக இருப்பது என்பது இவர்களுடைய சாக்கடை அரசியல் தந்திரம். அதற்கு தானும் சளைத்தவன் அல்ல என்பதை சாரள்ஸ் நிர்மலநாதன் நிரூபித்துள்ளார். “சுகாதாரத்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த செயற்பாடு தொடர்ந்தால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது” என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்து உள்ளார். எதை எதிர்ப்பது எதை ஆதரிப்பது என்ற விவஸ்தையே இல்லாத முட்டாள்களை பாராளுமன்றம் அனுப்பியதன் விளைவை தமிழ் மக்கள் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.

இந்த தமிழ் தேசிய வைரஸ்களுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டால் எஞ்சியுள்ள தமிழ் சமூகமும் அழிந்துபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு விடயம் பற்றி பேசுவதாக இருந்தால் அதனைப் பற்றி தேடி ஆய்வு செய்து பேச வேண்டும். இல்லையேல் தெரியாத விடையத்தை பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தெரியாத விடையத்தை தெரிந்தது போல் காட்டி இப்படி ஊதிக்கெடுக்கின்ற ஆண்டிகள் சேர்ந்து தமிழ் மக்களுக்கு தமிழீழ மடம் கட்டித் தர வெளிக்கிட்டு உள்ளனர். இவர்கள் மடம் கட்டுகிறார்களோ இல்லையோ தமிழ் மக்களுக்கு கொல்லி வைப்பது என்றே விறகுக்கட்டைகளுடன் வலம்வருகின்றனர். ஜாக்கிரதை!

இலங்கையின் வரலாற்றில் இல்லாத சுற்றுச்சூழல் அனர்த்தம்! இரு வாரங்களாகியும் அணையாத தீ!!

எம்வி எக்ஸ் பிரஸ் பேர் என்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பல் இரு வாரங்களாகியும் தொடர்ந்தும் எரிந்துகொண்டும் கடலுக்குள் வெடித்துச் சிதறிக்கொண்டும் உள்ளது. இலங்கை – இந்திய கரையோர கடற்படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவர முடிந்த போதும் பல முயற்சிகளை எடுத்த போதும் கப்பல் தொடர்ந்தும் எரிந்த வண்ணமே உள்ளது. தற்போது இலங்கையயை நோக்கி விசுகின்ற பருவக்காற்று இத்தீயை கட்டுப்படுத்த பெரும் தடையாக இருந்து வருகின்றது. கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் சிப்பந்திகள் 25 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். ஆனால் கப்பலில் ஏற்றி வரப்பட்ட ஆபத்தான இரசாயணப் பொருட்கள் மற்றும் 300 தொன் எரிபொருட்கள் என்பன அளவிட முடியாத சேதத்தை இலங்கையின் கடற்பரப்பில் ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையின் மேற்கு கரையான நீர்கொழும்பு களுத்துறையைச் சுற்றியுள்ள 50 மைல் பிரதேசம் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. நுண் பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயணப் பொருட்கள்: நைற்றிக் அமிலம், சோடியம் குளோரைட் என்பன கடலில் கலப்பதுடன் கடல் வாழ் உயிரினங்களையும் பாதிப்படையச் செய்கின்றன. இப்பகுதிகளில் மீன் பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளதுடன் அயலில் உள்ள பகுதிகளிலும் மக்கள் கடலுணவுகளை பெற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். ஏற்கனவே கோவிட் இனால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் நெருக்கடியால் மேலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

“கடலுக்குள் செல்லாமல் வியாபாரத்தைச் செய்யாமல் எப்படி தனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்?” தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றார். டேவிட் பெர்னான்டோ. நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் நீர்கொழும்புப் பகுதி மீனவர். இந்த அனர்த்தத்தால் சிறிது காலத்திற்கு மக்கள் கடல் உணவுகளை தவிர்க்கவே விரும்புவார்கள் என்று சொல்லும் டேவிட் பெர்னான்டோ அவர்கள குற்றம்சொல்ல முடியாது என்றும் அவர்கள் கடலுணவை சாப்பிடத் தயங்குவது நியாயம்தானே என்றும் டேவிட் பெர்னான்டோ தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

கடற்பரப்பில் கடந்த இரு வாரங்களாக தொடரும் இந்த அனர்த்தம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. கரையொதுங்கும் கழிவுகள் எதனையும் தொட வேண்டாம் என கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அனர்த்தத்தை கட்டுப்படுத்தவும் கரையொதுங்கும் கழிவுகளை பாதுகாப்பானமுறையில் அகற்றவும் ஆயிரக்கணக்கான கடற்படையினர் பாதுகாப்பு அங்கிகளோடு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கை, பிரித்தானியாவின் பயண அபாயப் பட்டியலில் சேர்க்கப்பட்டது!

சில மணிநேரங்களுக்கு முன்னதாக பிரித்தானிய அரசு இலங்கையை தனது சிவப்பு அபாய பட்டியலில் சேர்த்துக்கொண்டது. பிரித்தானியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்வது என்ற முடிவை எடுப்பதற்கு வசதியாக வீதிப் போக்குவரத்து சமிஞை நிறப் பட்டியலை அறிமுகப்படுத்தியது. அதன்படி பச்சை நிறப்பட்டியலில் அடங்கும் நாடுகளுக்கு பிரித்தானியர்கள் பெரும் கெடுபிடிகள் இல்லாமல் பயணம் செய்யக் கூடியதாக இருந்தது. மஞ்சள் அல்லது அம்பர் நிறப் பட்டியலில் அடங்கும் நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். இம்முறையின் படி சிவப்பு நிறப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு அத்தியவசிய தேவையின்றி பயணிக்கக் கூடாது என பிரித்தானிய அரசு அறிவுறுத்துகின்றது. மேலும் இந்நாடுகளுக்கு பயணிப்பவர்கள் மீது நடைமுறை விதிகளும் கெடுபிடியாக இருப்பதுடன் இவர்கள் அரச கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் இடங்களில் இருவாரங்கள் வரை தனிமைப்படுத்தலுக்குள் வைக்கப்படுவர். பயணிகளே அதற்கான செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் சுற்றுலா மற்றும் பயணத்துறையயை பாரதூரமாகப் பாதிப்பதுடன், பயணிகளது பயணச் செலவையும் மிகவும் அதிகரித்துள்ளது. மே இறுதிப்பகுதியில் திருமண நிகழ்வுக்குப் பாரிஸ் சென்றிருந்த தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் (படம்) ஈரோ ஸ்ராருக்கு செலுத்திய £200 பவுண் பயணக் கட்டணத்துடன் கோவிட் பரிசோதணைகளுக்காக £305 பவுண்கள் செலுத்தியதாக தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரிவித்தார். பிரித்தானியாவை விட்டு நீங்குவதற்கு முன் கோவிட் இல்லை என்ற சான்றிதழைப் பெற £150 பவுண்கள் செலுத்தி உள்ளார். பின்னர் பாரிஸில் அதனைப் புதுப்பிக்க மேலும் £50 பவுண்களைச் செலுத்தி உள்ளார். ஏனெனில் முதற் சான்றிதழ் 72 மணிநேரங்களிற்கே செல்லுபடியாகும் என தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் பிரித்தானியாவிற்கு திரும்பி வந்து 10 நாட்கள் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்கும் போது கோவிட் பரிசோதணைப் பொருட்களுக்காக £105 பவுண்கள் செலுத்தி உள்ளார். மொத்தத்தில் சஞ்சீவ்ராஜ் பாரிஸ் சென்று திரும்ப £505 பவுண்களைச் செலுத்தி உள்ளார். இதில் ஐந்தில் மூன்று பங்கு கோவிட் பரிசோதணைகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.

தற்போது இலங்கையும் அபாயப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதால் போகும் போது கோவிட் பரிசோதணை, தனிமைப்படுத்தல் இலங்கையில்; திரும்பி வரும் போது கோவிட் பரிசோதணை, தனிமைப்படுத்தல் என்று ஒவ்வொருவருடைய போக்குவரத்துக் கட்டணங்களும் இரு ஆயிரங்களைத் தொட்டு நிற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானிய கொன்சவேடிவ் அரசினால் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள: கோவிட் பரிசோதணை மற்றும் தனிமைப்படுத்தல் இடங்கள்; இதன்மூலம் கொள்ளை இலாபமீட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் நிதி நேர்மையற்ற ஒருவராகக் கருதப்படுகின்றார். அவருடைய வீட்டுத் திருத்த வேலைகள் தொடர்பிலும் அவர் பொதுப்பணத்தில் கை வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைப் போராளியின் மீதான கூட்டுப் பாலியல்வல்லுறவு: புளொட் – தீப்பொறி கொட்டியவர்களை காட்டிக்கொடுங்கள்!!! : த ஜெயபாலன்

பாலியல் வல்லுறவு என்பது மன்னிக்க முடியாதவொரு கொடும் குற்றம். ஆனாலும் இந்தக் கொடும் குற்றத்திற்கு ஆளான பெண்கள் சமூகத்தின் பழிச்சொல்லுக்கும் ஏளனத்திற்கும் பயந்து மௌனமாக்கப்படுகின்றனர். இது பாலியல் வன்கொடுமை செய்த ஆணைத் தப்பிக்க வைக்கின்றது. இதனால் இந்தக் கொடுமையயைப் புரிந்த ஆண்கள் எதிர்காலத்திலும் இவ்வாறான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரானதாக முன்னெடுக்கப்பட்ட போதும் அப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட பலர்: பெண்களை, ஏனைய சமூகத்தவர்களை, ஏனைய பிரதேசத்தவர்களை, ஏனைய மதத்தவர்களை ஒடுக்குபவர்களாகவும் மற்றையவர்கள் பற்றிய கழிவிரக்கம் அற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

இவர்களை அரசியல் ரீதியில் வளம்படுத்தி மனித நேயர்களாக்குவதற்கான தேவையயை இயக்கங்கள் கொண்டிருக்கவலில்லை. அதற்கான கால அவகாசமும் அந்த இயக்கங்களுக்கு இருக்கவில்லை. சில அரசியல் வகுப்புகளினூடாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அடிப்படையில் பாரிய மாற்றங்கள் நிகழவில்லை. இது அனைத்து தமிழ் விடுதலை அமைப்புகளிலும் காணப்பட்ட ஒரு குணாம்சம். அதனால் தான் பெண்களுக்கு எதிரான அல்லது பெண்களை இரண்டாம் தரமாக எண்ணும் போக்கு, பாலியல் துன்புறுத்தல்கள், ஏனையவர்களுக்கு எதிரான வன்மம், சித்திரவதைகள், கொலைகள் சர்வ சாதாரணமாக தமிழீழ விடுதலை இயக்கங்களால் (குறிப்பாக புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், புலிகள் – தமிழீழ விடுதலைப் புலிகள், ரெலோ – தமிழீழ விடுதலை இயக்கம்) மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எந்த விடுதலை இயக்கமும் விதிவிலக்காக இருக்கவில்லை.

2020 இல் கூட பிரித்தானியாவில் 118 பெண்கள், ஆண்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு குட்டித்தீவான இலங்கையில் 100,000 பேருக்கு 8 பாலியல் வல்லுறவு நடைபெறுகின்றது. ஒப்பீட்டளவில் இந்தியாவின் பாலியல் வல்லுறவு விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் விகிதாசாரம் நான்கு மடங்கு அதிகம். இந்தியாவில் 100,000 பேருக்கு இருவரே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். பாலியல் வல்லுறவு தொடர்பான மயையான விம்பங்களுக்குள் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

1980க்களின் நடுப்பகுதி, தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சி கொண்டிருந்த காலம். அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் ‘பொடியளின்’ கைகளில் இருந்தது. புளொட், ரெலோ, புலி ஆகிய மூன்று பிரதான இயக்கங்களே ஆள் மற்றும் ஆயுத பலத்தில் முன்நின்றனர். புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை அணிசேர்த்து மிகப்பலமான ஆளணி உடைய அமைப்பாக இருந்தது.

அவ்வமைப்பின் தலைமையின் எதேச்சதிகாரப் போக்கு, இராணுவக் கட்டமைப்பிற்கும் அரசியல் கட்டமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிளவு குழுவாதப் போக்கு என்பன விடுதலைக் கனவோடு அல்லது சாகசங்கள் நிகழ்த்த வந்த பலரையும் இயக்கத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது. இயக்கத்தை விட்டு வெளியேறுபவர்களை துரோகிகளாக கருதும் மனநிலை; தலைமைக்கு விசுவாசமான சிறுபிரிவினரிடம் இருந்தாலும்; பெரும்பாலானவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவ்வாறான வெளியேற்றங்களை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முயற்சிக்கவில்லை.

அவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறாமல் இருந்ததற்கு முக்கிய காரணங்களில் தங்களை நம்பி இயக்கங்களுக்குள் வந்தவர்கள்; அல்லது தங்களால் இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களைக் கைவிட்டுவிட்டு தாங்கள் மட்டும் தப்பிச் சென்றுவிட முடியாது; என்ற எண்ணப்பாடும் முக்கியமானது. அதனை இங்கு எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. மேலும், நாம் நம்பி வந்த இயக்கத்தை அதற்குள் போராடியே திருத்தலாம் என்ற நம்பிக்கையிலும் சிலர் இருந்தனர்.

அதனால் புளொட்டை விட்டு வெளியேறிய குறிப்பாக தீப்பொறிக் குழுவினர் அனைவரும் முற்போக்கானவர்கள் புரட்சியாளர்களும் அல்லர் புளொட்டை விட்டு வெளியேறாத அனைவரும் புளொட் தலைமையின் விசுவாசிகளும், துரோகத்தை சுமந்தவர்களும் அல்லர். ஆகவே புளொட்டில் இருந்து வெளியேறிய தீப்பொறிக் குழுவினரோ அல்லது வெளியேறாமலே இருந்த புளொட் அமைப்பினரோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் என்ற முடிவுக்கு யாரும் ஒரு தலைப்பட்சமாக வந்துவிடமுடியாது. இருதரப்பிலுமே அடிப்படை நேர்மையும் மனிதத்துவமும் உடையவர்களும் அற்றவர்களும் இருந்துள்ளனர். இந்தப் பின்னணியிலேயே புளொட்டின் 17 வயதேயான பெண் குழந்தைப் போராளியயை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சிலர் கூடியிருக்க வன்புணர்ந்த சம்பவத்தை நோக்க வேண்டும். இன்று அந்தப் பெண் போராளி எம்மத்தியில் இல்லை. அவருக்கு இழைக்கப்பட்ட மிகக் கொடிய குற்றத்தின் தாக்கத்தால் அவர் புலம்பெயர்ந்தும் தனது கொடிய நினைவுகளைவிட்டுப் புலன்பெயர முடியாமல் கொடூரத்திற்கு பிந்திய மனச்சிதைவுக்கு உள்ளாகி, இறுதியில் மரணம் அடைந்தார். 2011 மார்ச் 8 பெண்கள் தினத்தையொட்டி இச்சம்பத்தின் முக்கிய சாட்சியும் புளொட் அமைப்பின் மகளீர் அணியின் பொறுப்பாளராக இருந்தவருமான ஜெ ஜென்னி எழுதிய மூலக் கட்டுரையயையும் அதன் மீதான விவாதங்களையும் பார்க்க இவ்விணைப்பை அழுத்தவும்: https://www.padippakam.com/padippakam/document/EelamHistory/Janni/jnei04.pdf

இதில் உள்ள மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இக்குற்றச்செயலை இழைத்த அக்குழுவினர் இன்றும் எம்மத்தியில் கௌரவத்தோடு வாழ்கின்றனர். அரசியல் செய்கின்றனர். முதலாளித்துவ சமூகமே சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு ஏதோ யாருக்கோ நியாயம் பெற்றுக்கொடுக்க பல்லாண்டு பழமையான சம்பவங்களை தூசிதட்டி எடுத்து சம்பந்தப்பட்டவர்களை அம்பலப்படுத்த முயலும் போது; எமக்கு விடுதலை பெற்றுத் தரப்போவதாகவும், சமூகத்தின் முற்போக்கானவர்களாக தங்களைக் கட்டமைத்தவர்களும் முதலில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று வாதிட்டனர். ஆனால் அவர்களைச் சேர்ந்த ஒருவர் தனக்கும் அந்த வன்புணர்வுச் சம்பவத்திற்கும் தொடர்பே இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடமே எழுதி வாங்கி வைத்துள்ளார்.

இப்போது மீண்டும் இச்சம்பவம் எமது போராட்ட கனவான்களின் மீது பல கேள்விகளை எழுப்புகின்றது. அக்குழந்தைப் போராளியின் மீது வன்கொடுமை புரிந்தவர்கள் யாரும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த ஏலியன்கள் அல்ல. இக்கொடுமையயைப் புரிந்தவர்கள் புளொட் அமைப்பினர் அல்லது அதிலிருந்து வெளியேறிய குறிப்பாக தீப்பொறி சார்ந்தவர்கள் என்பது அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலைகளின்படி உறுதியாகின்றது. யாழ் கொக்குவில் பொற்பதியில், புளொட் செறிந்திருக்கின்ற இப்பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாற்று அமைப்புகள் எதுவுமே இச்சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்படவில்லை. அதனால் ஒரு குழந்தைப் போராளியின் மீது வன்கொடுமை புரிந்தவர்களை புளொட் அமைப்பும் தீப்பொறியினரும் இனம்கண்டு அம்பலப்படுத்த வேண்டும். இக்கொடுமை தனி ஒருவரினால் மட்டும் இழைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த உண்மைகளை தனியொருவர் மறைக்கவில்லை. ஒரு குழுவாகவே இந்த உண்மைகளை மறைக்கின்றனர்.

பாலியல் வல்லுறவு என்பது வெறுமனே பாலியல் இச்சையால் தூண்டப்பட்டு நடைபெறுகின்ற கொடுமை என்பது மிகவும் குறுகிய பார்வை. இக்குழந்தைப் போராளியின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடுமையானது, பிற்காலத்தில் யாழ் புங்குடுதீவில் மாணவி வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமையுடன் ஒப்பிடக் கூடியதே. குற்றத்தை இழைத்தவர்கள் வித்தியாவை நன்கு தெரிந்தவர்கள். வித்தியாவின் குடும்பத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் பழிவாங்கல் மற்றும் பெண் மீதான தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தும் வகையிலேயே இக்கொடுமையயைப் புரிந்தனர். இவ்விரு குழந்தைகளின் மீதும் இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு இடையே நிறைய ஒற்றுமைகளை அவதானிக்க முடியும்.

இவ்விரு பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் வன்கொடுமையாளர்களின் ஒத்த மனநிலையயை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூட்டாக இணைந்து இவ்வண்கொடுமையயைப் புரிந்துள்ளனர். வன்புணர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண் சார்ந்தவர்களினால் பாதிக்கப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையிலேயே அக்கொடுமையயைப் புரிந்துள்ளனர். மாணவி வித்தியாவின் தாயார் வன்புணர்ந்தவர்களுக்கு எதிராக ஒரு வழக்கில் சாட்சி சொன்னதும், வித்தியா ஒருவனின் காதலை நிராகரித்ததும் வித்தியாவின் இக்கொடூர நிகழ்வுக்கு அடிப்படைக்காரணங்களாக இருந்தது. அதேபோல் குழந்தைப் போராளியின் வன்புணர்விலும் அக்கொடுமையயைப் புரிந்தவர்கள் தங்களது உரையாடலை பதிவு செய்ததை கேட்டுள்ளனர் தங்களை வேவுபார்ப்பதை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துவதிலும் தங்களுடைய கொடிய செயலை நியாயப்படுத்தவும் அவர்கள் முயன்றுள்ளனர். ஒரு பெண்ணுடல் மீது ஆண் செலுத்தக் கூடிய அதிஉட்சபட்ச அதிகாரமே பாலியல் வன்புணர்வு. அவளைக் கொல்லாமல், விட்டுவைப்பது காலத்திற்கும் அவளைப் பழிதீர்க்கின்ற கட்டற்ற அதிகார வன்முறை. மாணவி வித்தியாவைக் கூட கொடியவர்கள் கொலைசெய்ய முற்பட்டதாகத் தெரியவில்லை. இழைக்கப்பட்ட கொடுமையினால் அவர் உயிரிழந்தார். குழந்தைப் போராளியின் விடயத்தில் கொடியவர்கள், அவள் தனக்கு நிகழ்ந்ததை மற்றவர்களுக்கும் சொல்லி அவர்கள் மீதும் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று எண்ணியுள்ளனர்.

இவ்விரு சம்பவங்களிலும் பாலியல் வன்புணர்வாளர்களின் மனநிலை சர்வதேச பாலியல் வன்புணர்வாளர்களின் மனநிலையோடு ஒத்ததாகவே இருந்துள்ளது. 1970க்களில் அமெரிக்காவில் 50 பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்கள் மத்தியில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் அதனை ஒத்துக்கொண்டும் இருந்தனர். இவர்கள் பல்வேறுபட்ட சமூக, பொருளாதார, கலாச்சாரப் பினினணிகளுடன் இருந்தனர். ஆகவே இவ்வாறானவர்கள் தான் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவார்கள் என்றும் மற்றையவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்ற முடிவுக்கும் வந்துவிட முடியாது. புரட்சியாளன் போர்வையில் இருப்பவனும் மற்றையவர்களும் யாரும் இக்கொடுமையயை நிகழ்த்த தயங்காதவர்கள்.

பொதுவாக பாலியல் வன்புணர்வாளர்கள் மற்றவர்கள் பற்றிய கழிவிரக்கம் அற்றவர்களாகவும், தங்களைப் பற்றிய அதீத உணர்வுடையவர்களாகவும், தங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும், பெண்களை மதிக்காதவர்களாக, அவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்துவபவர்களாக இருப்பர். பாலியல் வன்புணர்வு என்பது பாலியல் இச்சையைக் காட்டிலும் அதிகாரத்தை நிலைநிறுத்தவே அது பெரும்பாலும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. பெரும்பாலும் இளம் ஆண்களினால் மேற்கொள்ளப்படுகின்ற பாலியல் வன்புணர்வுகள் பெருமளவில் அவர்களால் அறியப்பட்ட பெண்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாலியல் வன்புணர்வாளர்கள் தெரியாத பெண்களை வன்புணர்வது அரிதாகவே நடைபெறுகின்றது. குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரினால் பெரும்பாலும் அறியப்பட்டவர்களாகவே உள்ளனர்.

குழந்தைப் போராளியின் மீதான பாலியல் வன்புணர்வைச் செய்த கொடியவர்கள் அவருக்கு நன்கு தெரிந்தவர்களாகவும் அவரினால் அல்லது அவரைச் சார்ந்தவர்களினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் மற்றவர்கள் மீது கழிவிரக்கம் காட்டாதவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். இவர்கள் பெண்களை வெறுப்பவர்களாக, ஐயப்பாடு உடையவர்களாகவும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

கொடிய அச்சம்பவம் நடந்து நான்காவது தசாப்தத்தை எட்டுகின்ற நிலையிலும் கொடியவர்களை பாதுகாத்து வருகின்றோம். நட்புக்காக, உறவுக்காக ஒரு மிகப்பெரிய கொடுமையை மூடி மறைக்கின்றோம். இதில் தற்போது வெளிப்படையாக தங்களுடைய சாட்சியங்களை பதிவு செய்ய ஜெ ஜென்னியும் இச்சம்பவம் பற்றிய கேள்வியயை எழுப்பியுள்ள அசோக் என அறியப்பட்ட யோகன் கண்ணமுத்துவும் அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் இருந்த போதும் அவ்வமைப்புப் பற்றி என்றுமே ஒரே அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தவர்கள் அல்ல. இவ்விடயத்தில் சம்பந்தமுடையதாக தொடர்புபடுத்தப்படும் தீப்பொறி மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் இது தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு முன்வரவேண்டும். அதைவிடுத்து ஜென்னி மீதும் அசோக் மீதும் காழ்ப்புணர்வுகளைக் கொட்டுவது உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு எவ்விதத்திலும் உதவாது. முதலாளித்துவ நீதித்துறையே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஆண்கள், தாங்கள் குற்றத்தை புரியவில்லை என்பதை நிரூபிக்க கோருகின்றது. அப்படியிருக்கும் போது விடுதலை வேண்டிப் போனவர்கள் அதே நோக்கத்திற்காகச் சென்ற ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமையின் உண்மையை வெளிகொணர கடந்த மூப்பதற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக என்ன செய்கின்றார்கள்?

ஜெமினி – தேனீ – கருத்துச் சுதந்திரம்: கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சுதந்திர வேட்கைகொண்ட மனிதன்

சரத்து 19: ஒவ்வொருவரும் சுயாதீனமான கருத்துக்களைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமையுடையவர்கள். இந்த உரிமை என்பது இடையூறற்று கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கொள்கைகளையும் தேடவும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளைக் கடந்தும் அதனை வெளிப்படுத்தவுமான உரிமையயை உள்ளடக்குகின்றது. – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பிரகடனத்தின் 19வது சரத்து.

Article 19: Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.

இந்தக் கருத்துச் சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்காகப் போராடிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஊடகங்களில் ‘தேனீ’ இணையத்தளத்தின் பாத்திரம் மிகமுக்கியமானது. அதற்குப் பின்நின்ற ஜெமினியின் – கங்காதரனின் உழைப்பு மதிப்பிட முடியாதது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழர்களை உலகெங்கும் புலம்பெயர நிர்ப்பந்தித்த போது, யுத்தத்தின் ஆரம்ப காலகட்டங்களில் வடக்கு கிழக்கை விட்டு, ஆரம்ப நாட்களில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகப் போக்கினால் பாதிக்கப்பட்ட மாற்று இயக்கத்தைச் சார்ந்தவர்களே. இலங்கையில் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை, தாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் கட்டியெழுப்ப முற்பட்டனர்.

ஆனாலும் மிகக் கூறுகிய காலத்தினுள்ளேயே கட்டமைப்பு ரீதியாக மிகப்பெரும் பலத்துடன் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம், புலம்பெயர் தேசங்களிலும் கோலோச்ச ஆரம்பித்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் வன்முறையானது; அரசியல் படுகொலைவரை சென்றது. பாரிஸ், பேர்ளின், லண்டன், ரொறொன்ரோ, சிட்னி என வன்முறைகள் தொடர்ந்து சில படுகொலைகளும் நிகழ்ந்தது.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மிகப்பெரும் பொருளாதார, அரசியல், பலம்பொருந்திய கட்டமைப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகத்திற்கு எதிராக தனியன்களாக; தங்களுடைய நாளாந்த குடும்பச் சுமைகளுடன், ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்திற்காக ஒரிரு ஆண்டுகள் அல்ல கால்நூற்றாண்டாக போராடி வருவது என்பது சாதாரணமானதல்ல.

1990க்களின் பிற்பகுதியில் இணையத் தொழில்நுட்பம் வீச்சுப்பெறத்தொடங்கியது. இலங்கைத் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத் தளத்திலும் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் பாரம்பரிய ஊடகங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி ஊடாக தங்கள் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடியவர்கள்; அதற்கான கூட்டு உழைப்பை பெறுவதிலும், அதற்கான அதீத செலவீனங்களை தாங்க முடியாத நிலையிலும் தத்தளித்தனர். தங்களுடைய உழைப்பை வழங்குகின்ற அதேசமயம், தங்களுடைய வருமானத்தையும் செலவிட்டே இந்த கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைப் போராட்டத்தை நடத்தினர். இணையத்தின் வருகை இந்தச் செலவீனங்களை மிகமிக குறைத்துக்கொண்டது. வாசகர் பரப்பை நாட்டின் எல்லைகளைக் கடந்தும் விரித்துச் சென்றது.

தங்களுடைய உழைப்பினை மட்டும் வைத்துக்கொண்டு கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராட முடியும் என்ற ஒரு நிலையயை இணையத்தொழில்நுட்பம் வழங்கியது. உலெகெங்கும் பரந்திருந்த மாற்றுக் கருத்தாளர்களை இணைக்கின்ற தளமாக ‘தேனீ’ யயை ஜெமினி என எல்லோராலும் அறியப்பட்ட கங்காதரன் உருவாக்கினார்.

தேனீ, தேசம்நெற் (தேசம், லண்டன் உதயன், லண்டன் குரல்), ரிபிசி வானொலி என விரல்விட்டு எண்ணக் கூடிய ஊடகங்களே 1990க்களின் பிற்பகுதி முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களுக்கு சவாலாக செயற்பட்டு வந்தன. இணையத் தளங்கள் 2000ம் ஆண்டிற்குப் பின் வீச்சுப்பெற்று வந்தது. வன்னி யுத்தத்தின் போது தாயகத்தின் உண்மை நிலவரங்கள் மூடிமறைக்கப்பட்டு மக்கள் ஒரு மய உலகிற்குள் தள்ளப்பட்டிருந்த போது பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தது இந்த ஊடகங்கள் மட்டுமே.

இந்தப் பின்னணியிலேயே ஜெமினி – கங்காதரனின் வரலாற்றுப் பாத்திரத்தை என்னால் மதிப்பிட முடிகின்றது. ஒரு தனிமனிதனின் உழைப்பு ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்வதில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தி இருக்கும் என்பதற்கு தேனீ இணையமும் ஜெமினியின் உழைப்பும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் அது மிகையல்ல.

ஜெமினி – கெங்காதரனை ஸ்ருட்காட் ஜேர்மனியில் ஒரு சில கூட்டங்களில் சந்தித்து பேசியதைத் தவிர எனக்கு அவருடன் அவ்வளவு உறவு இருந்ததில்லை. அவருடைய அரசியல் நிலைப்பாடுகளுடனும் எனக்கு அவ்வளவு உடன்பாடும் இருந்ததில்லை. ஆனால் அவருக்கு சமூகத்தின் மீது இருந்த நேசமும் அதற்காக அவர் செய்த தன்னலமற்ற அர்ப்பணிப்பும் எனக்கு ஜெமினி மீது எப்போதும் ஒரு மரியாதையயை ஏற்படுத்தியது. இரவோடு இரவாக அரசியல் ஞானம்பெற்ற ‘கீ போர்ட் மார்க்ஸிட்டுக்கள்’ மத்தியில் தான் நம்பிய அரசியல் கருத்துக்களுக்கா இறுதிவரை போராடிய ஒரு தன்னலமற்ற போராளி ஜெமினி. அப்படிப்பட்ட ஒரு போராளியயை இக்கொடிய நோய் கொண்டு போனது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பே.

“I disapprove of what you say, but I will defend to the death your right to say it”. Voltaire
“உன்னுடைய கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அதனைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக்கொடுத்தும் போராடுவேன்”. வோல்ரயர்

த ஜெயபாலன்
ஆசிரியர் தேசம் – தேசம்நெற்.

வடக்கு – கிழக்கு எதிர்காலக் கல்விக்கு 22 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50000 வரையான நூல்கள் – லிற்றில் எய்ட்!

மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கல்வியில் வீழ்ச்சியடைந்த தமிழ் சமூகத்தை மீண்டும் மேன்நிலைப்படுத்த; லிற்றில் எய்ட் பல்வேறு கல்வி நடவடிக்கைகளிலும் மாணவர்களின் ஆளுமை விருத்தியிலும் மிகக் கவனம் எடுத்து வருகின்றது. அதன் ஒரு முக்கிய நகர்வாக இன்று அதிகாலை 11,000 கிலோ கிராம் நிறை கொண்ட 50,000 வரையான சிறுவர்களுக்கான ஆங்கில நூல்கள் லிற்றில் எய்ட் நிறுவனத்தைச் சென்றடைந்தது. இந்நூல்களின் இலங்கைச் சந்தைப் பெறுமதி 22 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடபடுகின்றது. ஸ்கொட்லாந்தில் உள்ள புக் அப்ரோட் என்ற சர்வதேச நிறுவனத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாகச் செயற்பட்டு வரும் லிற்றில் எயட், காலத்திற்குக் காலம் தமிழ் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் நூலகங்களுக்கு சிறுவர்களுக்கானபல்வேறு துறைசார்ந்த ஆங்கில நூல்களை அனுப்பி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்று கிளிநொச்சியயை வந்தடைந்த நூல்கள் தமிழ் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட பாடசாலை மற்றும் நூலகங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

எம் வி ரக்னா என்ற கப்பலில் டிசம்பர் 22இல் இலங்கை வந்தடைந்த நூல்கள் இன்று கிளிநொச்சியில் உள்ள லிற்றில் எய்ட் நிறுவனத்தில் இறக்கப்பட்டது (படங்கள்). 22 ‘பலட்களில்’ கொண்டுவரப்பட்ட நூல்கள் தறகாலிகமாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் துளசிகன் மேற்பார்வையில் இறக்கப்பட்டது, வடக்கில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்துவரும் சிறகுகள் அமைப்பினர் லிற்றில் எய்ட் நிறுவனத்தோடு கரம்கோர்த்து இந்தப் பணிகளில் ஈடுபட்டனர். நடுநிசியில் மழையயையும் பொருட்படுத்தாமல் நூல்கள் பத்திரமாக லிற்றில் எய்ட் நிறுவன மண்டபத்தில் இறக்கப்பட்டது.

இப்பணிகளில் லிற்றில் எய்ட் அறங்காவல் சபை உறுப்பினர்கள் குகன், தயாளன் ஆகியோரும் ஈடுபட்டு இருந்தனர். தமிழ் பகுதிகளில் நூல்களும் நூலகங்களும் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் ஈடுபாடு இல்லாமல் இல்லை. 2012இல் நூலகவியலாளர் என் செல்வராஜா லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் ஆகியோர் இஸ்கொட்லாந்திற்கு நேரடியாகச் சென்று அவ்வமைப்பினருடன் இறுக்கமான உறவை ஏற்படுத்தி இருந்தோம். அதன் பயனாகவே இவை சாத்தியமாகி வருகின்றது. இந்நூல்களை சேகரித்து கொழும்புத்துறைமுகம் வரை அனுப்பி வைப்பதற்கு ஏற்பட்ட பத்து இலட்சம் ரூபாய்கள் வரையான செலவை புக் அப்ரோட்டே பொறுப்பேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு சுங்கத் திணைக்களத்தில் ‘கிளியரன்ஸ்’ அனுமதி பெற்று லிற்றில் எய்ட் நிறுவனத்திற்கு இவ்வளவு தொகையான நூல்களைக் கொண்டு சேர்ப்பது லிற்றில் எய்ட் பொறுப்பாக இருந்தது, அதற்கான நிதியயை சேகரிப்பதில் லிற்றில் எய்ட் தலைவர் என் கதிர் செயலாளர் என் சுகேந்திரன் ஆகியோருடைய உழைப்பு குறிப்பிடத்தக்கது.

நல்ல நூல்கள், நல்ல நண்பர்கள்!
வாசிப்பதால், மனிதன் பூரணமடைகின்றான்!!
ஆகவே வாசிப்பை நேசிப்போம்!!!

லிற்றில் எய்ட்.

 

கிறிஸ்மஸ் ஸ்பெசல்: யேசுநாதர் – சிவபெருமான் – அல்லாஹ் உடன் சூம் மீற்றிங் பிரித்தானியர்கள் முட்டாள்களா அல்லது அவர்களது பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவர்களை முட்டாள்கள் எனக் கருதுகின்றாரா?

பிரித்தானியா மீண்டும் ஒரு லொக் டவுனுக்குச் சென்றுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று சனிக்கிழமை மாலை பிரித்தானியப் பிரதமரால் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக புதன்கிழமை டிசம்பர் 16 அன்று ‘மேரி லிற்றில் கிறிஸ்மஸ்’ என்ற பிரித்தானிய பிரதமர், ‘விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் வராது. லொக்டவுன் கொண்டு வருவது மனிதாபிமானமற்ற செயல்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்தார். ‘கிறிஸ்மஸ் புத்தாண்டு காலத்தையொட்டி சமூக இடைவெளியயைப் பேணும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தவறு’ என்றும் ‘கொரோனா வைரஸ் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை’ என்றெல்லாம் அரசினுடைய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எதனையும் செவிமடுக்கவில்லை.

தனது முட்டாள்தனமான நடவடிக்கைகளால் பிரிதானிய மக்களும் பிரித்தானிய பொருளாதாரமும் எதிர்கொள்ளும் கடுமையான நிலைதொடர்பில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவரது கொன்சவேடிவ் கட்சியும் எதனையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. வெறும் வெற்று வாரத்தைகளின் சோடினையாலும் ‘பஞ்ஜ் டயலக்’ பேசியும் மக்களை வசீகரிக்கலாம் என்ற எண்ணத்தோடு, தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். அவரது பேச்சுக்களில் ஒரு போதும் உள்ளடக்கம் இருப்பதில்லை. வார்த்தை ஜாலங்களை அப்புறப்படுத்தி உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்களுக்கு எதுவும் கிடைக்காது. ‘பஞ்ஜ் டயலக்’ தான் எஞ்சியிருக்கும்.

கிரீன்விச் பாடசாலை மீளத் திறப்பு – கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை:
டிசம்பர் 19ம் திகதி புதிய லொக் டவுன் அறிவிற்ப்பிற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக கிறீவிச் கவுன்சில் தனது உள்ளுராட்சிப் பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கு டிசம்பர் 14ம் திகதி விடுமுறையயை அறிவித்தது. அதாவது 17ம் 18ம் திகதிகளில் கிறிஸ்மஸ் கால தவணை விடுமுறையயை, வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக திங்கட் கிழமையே விடுமுறையயை வழங்கியது. அதற்குக் காரணம் லண்டனின் பல பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவுவதால், குறிப்பாக பாடசாலை மட்டத்தில் பல ஆசிரியர்கள் அரச விதிமுறைப்படி தனிமைப்படுத்தலுக்குச் சென்றனர். பாடசாலை வகுப்புகளை நடாத்த ஆசியர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் கிறின்விச் கவுன்சில் தனது உள்ளுராட்சிப் பிரிவில் உள்ள பாடசாலைகளை மூடுவதாக அறிவித்தது. பாடசாலைகள் பலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் பல வகுப்புகளை இடைநிறுத்தி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். உண்மையில் டிசம்பர் மாத ஆரம்பம் முதலே பாடசாலைகளில் மாணவர், ஆசிரயர் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலைகள் சீராக இயங்கவில்லை.

ஆனால் அரசு என்ன செய்தது? தொழிற்கட்சியின் அதகாரத்தில் இருந்த உள்ளுராட்சி சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி, மறுநாள் மூடிய பாடசாலைகளை மீளத் திறக்க வைத்தது. மக்களுக்கு எதிரும் புதிருமான தகவல்கள் வழங்கப்பட்டு குழப்பத்திற்குள் தள்ளப்பட்டனர். கிறின்விச் கவுன்சில் தலைவர் தனது முடிவு சரியானது தான் என்றாலும், அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் நிலையில் கிரின்விச் கவுன்சிலின் நிதியயை விரயமாக்க விரும்பவில்லை என்பதால், அரசின் வேண்டுகோளின்படி பாடசாலைகளை மீளத் திறக்குமாறு அறிவித்தார்.

டிசம்பர் 20 இன்று ‘ஜனவரியில் பாடசாலைகள் வழமைபோல் ஜனவரி 4இல் திறக்கப்படமாட்டாது’ என்றும் ‘இரு வாரங்களின் பின்னதாகவே பாடசாலைகள் திறக்கப்படும்’ எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்த அரசின் கோமாளித் தனம் தமிழ்பட நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி – செந்திலின் நகைச்சுவையளவுக்கு மலிந்துவிட்டது.

ஒரு படத்தில் வீட்டிற்கு பிச்சை எடுக்க வந்தவரை ‘பிச்சை தர முடியாது’ என்று செந்தில் விரட்டியடித்துவிட்டடார். அப்போது அங்கு வரும் கவுண்டமணி, அதே பிச்சைக்காரரை திருப்பிக் கூட்டி வந்து பிச்சை கேட்கும்படி சொல்வார். அந்தப் பிச்சைக்காரரும் அதன்படி ‘பிச்சை போடுங்க தாயே ஐயா’ என்று இரந்து நிற்பார். உடனே கவுண்ட மணி ‘பிச்சை தரமுடியாது நாயே! வெளியே போ!’ என்று திட்டி துரத்திவிடுவார். இந்த நகைச்சுவைக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் செய்யும் கோமாளி அரசியலுக்கும் ஏதும் வித்தியாசம் தெரிகின்றதா? பள்ளிக் கூடத்தை நீ பூட்டக் கூடாது நான்தான் பூட்டுவேன் என்ற மாதிரித்தான் கிரின்விச் விவகாரம் அமைந்தது.

பிரதமர் பொறிஸ் என் முகநூலையாவது படித்திருக்கலாம்:
தனக்கு கிடைத்த விஞ்ஞானபூர்வமான தகவலின் அடிப்படையில் தான், தனது முடிவை தான் மாற்றியதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது செயலை நேற்று நியாயப்படுத்தினார். ஒக்ரோபர் 31ம் திகதி எனது முகநூல் பதிவு இது: பிரித்தானியாவில் ஒரு நாளுக்கு 4 000 மரணங்கள் சம்பவிக்கலாம்!!! – கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு விடுத்த இந்த எச்சரிக்கையயை பிரதமர் எங்கு சொருகி வைத்தார்? அன்று அனைவரும் கேட்டுக்கொண்டது இடைத் தவணை விடுமுறையயை இரு வாரங்கள் மேலும் நீடித்து முழுமையான லொக் டவுணைக் கொண்டு வந்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி, ரெஸ்ற் அன் ரேஸ் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி இருந்தால், இந்த கிஸ்மஸ் கால விடுமுறையயை மக்கள் ஓரளவு சந்தோசமாக களித்திருப்பார்கள். பிரித்தானியாவின் பொருளாதாரத்தின் ஒரு முக்கியமான வாரமான இந்த வாரத்தில் பல நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை நடத்தி இருக்கும். ஏற்கனவே விளிம்புக்குத் தள்ளப்பட்ட பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்தில் வீழ்ந்துவிடாமல் தடுத்திருக்க முடியும். தேவைப்பட்டால் ஜனவரி முதல் ஒரு லொக்டவுணைக் கொண்டு வந்திருக்க முடியும். இது எவ்வித திடமிடலும் இன்றி எழுந்தமானமாக அவ்வப்போது வீட்டில் எழும் பிரச்சினைகளுக்கு கணவன் மனைவியர் எடுக்கும் கடுகதி எதிர்வினைகள் போல் தான் பிரித்தானியா பிரதமரின் ஆட்சி நகர்கிறது. விஞ்ஞானத்தை பின்பற்றுகின்றேன் பொருளாதாரத்தை காப்பாற்றுகின்றேன் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன் என்று சொல்லிச் சொல்லி அவற்றை அரசு சீரழித்து வருகின்றது.

அரசின் பொய்யும் புரட்டும்:
அரசின் விஞ்ஞான மருத்துவக்குழுவின் ஆலோசணைகளை அரசு உதாசீனப் படுத்தியது மட்டுமல்ல அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; இதுவெல்லாம் கற்பனைக் கதைகள் என்றெல்லாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரச தரப்பு கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். பிரித்தானிய பிரதமரும் கொன்சவேடிவ் கட்சியும் அவர்களது பிரச்சாரப் பீரங்கிகளான சன் மற்றும் டெய்லி மெயில் ஊடகங்களும்; 1980களில் தைப்பொங்கலுக்கு தமிழீழம் என்று தமிழ் இயக்கங்கள் ரீல் விட்டது போல கிறிஸ்மஸ் இற்குள் வைரஸ்யை வென்றுவிடுவோம் என்றெல்லாம் ரீல் விட்டன. புதிய வக்சினுக்கு விழுந்துகட்டி அனுமதியயை வழங்கிவிட்டு தாங்கள் தான் உலகத்திலேயே முதல் முதல் வக்சீன் போடுவதாக பீலாவிட்டனர். சினா, கொரியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள் வைரஸ்யை முழுமையாக கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தை கட்டி எழுப்பி வரும் நிலையில் பிரித்தானிய அரசு இன்றும் ‘வாய்ச் சொல் வீரன்’ என்ற நிலையில் தப்பட்டம் அடிப்பவர்களாகவே உள்ளனர்.

சீனா, ரஸ்யா போன்ற நாடுகளும் புதிய வக்சீனை அறிமுகப்படுத்தி வருகின்ற நிலையில் அவர்கள் வக்சீன் தவிர்ந்த ஏனைய கட்டுப்பாடுகளாலும் நோயயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். மேலும் ரஸ்யாவின் ஸ்புட்னிக்-5 வக்சீனை பரீட்சித்துப் பார்க்க அஸ்ராசெனிக்கா என்ற பெரும் பார்மஸிட்டிகல் நிறுவனமும் முன்வந்துள்ளது. ஸ்புட்னிக் – 5 வக்சீனுக்கு பயன்படுத்திய கூறுகள் வைரஸ்ற்கு எதிராக கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் அதன் கூறுகள் இயற்கையான வைரஸ் கூறுகளில் இருந்து தயாரிக்கப்பட்டதால் அந்த வக்சீன் நீண்ட கால பாதுகாப்பை வழங்கும் என்றும் கருதப்படுகின்றது. இவை பற்றியெல்லாம் பிரித்தானிய ஊடகங்கள் மூச்சுவிடுவதில்லை. நினைப்பு பிழைப்பை கெடுத்த கதையாக பிரித்தானியாவின் கோவிட்-19 மரணங்கள் இந்த ஆண்டு முடிவதற்குள் 70,000 தை தாண்டிவிடும் நிலைக்கு வந்துவிட்டது.

பிரித்தானிய அரசின் ஊழல் மோசடி:
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலைமையை கையாள பிரித்தானிய அரசு 200 பில்லியன் பவுண்களை கடன் வாங்கியது. அதில் 10 வீதமான நிதி 20 பில்லியன் பவுண்கள் பாதுகாப்பு அங்கிகளை வாங்குவதற்கு செலவிடப்பட்டது. இந்தப் பாதுகாப்பு அங்கிகளை வாங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பலவும் அது தொடர்பான எவ்வித முன் அனுபவங்களும் அற்ற நிறுவனங்கள் மட்டுமல்ல, அவைகளில் பெரும்பாலானவை கொன்சவேடிவ் கட்சியுடன் nநெருக்கமானவர்களின் நிறுவனங்களாகவும் இருக்கின்றது. மேலும் இந்நிறுவனங்கள் பாதுகாப்பு அங்கிகளை உற்பத்தி செய்வதனிலும் அதனை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளன. ஒரு சில பெனிகளுக்கு சீனாவிடம் இருந்து பொருட்களைத் தருவித்து, அதனை ஐம்பது முதல் ஆயிரம் மடங்கு வரை விலைகளை உயர்த்தி பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு விற்றுள்ளனர். 20 பில்லியனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அங்கிகளின் உண்மையான பெறுமதி 10 பில்லியன் பவுண்களே என மதிப்பிடப்படுகின்றது. உயிர்களைப் பணயம் வைத்து கொள்ளை இலாபம் ஈட்டிக்கொள்வதில் பிரித்தானிய ஆளும் கட்சி – கொன்சவேடிவ் கட்சி ஈடுபட்டு இருந்தமை நியுயோர்க் ரைம்ஸ் புலனாய்வுக் கட்டுரையில் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் ‘ரெஸ்ற் அன் ரேஸ்’ போன்ற கோவிட்-19 பரிசோதணை செயற்பாடுகள் கூடி அனுபவமிக்க பல்கலைக்கழகங்கள், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு வழங்கப்படாமல் எவ்வித அனுபவமுமற்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, அவர்களுக்கு மில்லியன் கணக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறைகாலத்தில் மாணவர்களின் பட்டினியயைப் போக்க நான்கு மில்லியன் பவுண்களை ஒதுக்க மனமிரங்காத பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது நெருங்கிய வட்டங்கள் 10 பில்லியனை சூறையாடுவதற்கு அனுமதித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக யுனிசெவ் பிரித்தானியச் சிறார்கள் பட்டினியயை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து விசேட் திட்டத்தை பிரித்தானியாவில் நடைமுறைப்படுத்த உள்ளனர். இவ்வாறாக பிரித்தானியச் சிறார்களை பட்டினியில் இருந்து காக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை கடந்த பத்து ஆண்டு கொன்சவேடிவ் ஆட்சிக்காலத்தில் தான் ஏற்பட்டு உள்ளது.

பில்லியனெயர்களின் வருமானம் அதிகரிப்பு:
2020ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்டத்தின் தலைமை அதிகாரியான டேவிட் பெய்ஸ்லிக்கு வழங்கப்பட்டது. அவருடைய கணிப்பின் படி கோவிட்ட-19 இன் பாதிப்பினால் உலகெங்கும் 270 மில்லின் மக்கள் ஒரு நேர உணவுக்கு வழியில்லாமல் பட்டினியயை நோக்கித் தளளப்பட்டு உள்ளனர். இவர்களை பட்டினியில் இருந்து மீட்க 15 முதல் 20 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுக்கொள்வது மிகக் கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் 2020 ஏப்ரல் முதல் யூலை வரையான நான்கு மாதங்களில் உலகில் உள்ள 2200 பில்லியனெயர்கள் – செல்வந்தர்கள் 2.7 ரில்லியன் டொலர்களைச் சம்பாதித்து உள்ளனர். அதாவது 1000 பில்லியன் ஒரு ரில்லியன். 2.7 ரில்லியன் சம்பாதித்தவர்களுக்கு ஒரு 20 பில்லியன் வழங்கி 270 மில்லியன் மக்களை காப்பாற்ற முடியாத ஒரு விலங்கினக் கூட்டத்தில் தான் நாங்கள் வாழ்கின்றோம்.

அதிஸ்ரவசமாக உழைத்த உழைக்காத அசையும் அசையாத சொத்துக்கள் எதையும் பரலோகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாததால் இன்னும் மனித இனம் இப்பூமியில் வாழ முடிகின்றது. தசம் ஒரு வீத சொத்தை பரலோகம் கொண்டு செல்ல முடியும் என்றொரு நிலை இருந்திருந்தால் இந்த 2200 செல்வந்தப் பிசாசுகளும் ஒட்டுமொத்த மனித இனத்தையே அழித்து, சொத்துக்களை பரலோகம் கொண்டு போயிருக்கும். இந்தப் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாக்கள் சிவபெருமான், யேசுநாதர், அல்லா என்று இப்படி இன்னோரன்னவர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் பதிவிடுங்கள் ஒரு சூம் மிற்றிங் போட்டு இதற்கான தீர்வு பற்றி டிஸ்கஸ் பண்ணலாம்!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி: ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில்!!!

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் அறிவிக்கப்பட உள்ளது. 270 எலக்ரோரல் கொலிஜ் வாக்குகளை வெல்லப்பட வேண்டிய சிலையில் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டு 264யையும் டொனால்ட் ட்ரம் – மைக் பென்ஸ் கூட்டு 214யையும் வென்றுள்ளனர். ஆனால் இன்னும் பென்சில்வேனியா, ஜோர்ஜியா, அரிசோநா, நோர்த் கரலினா, நவாடா ஆகிய ஐந்து மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. அதில் குறிப்பாக பென்சில்வேனியா ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்துகொண்டுள்ளது. இங்கு எண்ணப்பட்டு வரும் வாக்குகள் பெரும்பாலும் ஜோ பைடன் – கமலா ஹரிஸ் கூட்டுக்கு சாதகமாகவே அமைந்து வருகின்றது.

அமெரிக்காவில் மிக இறுக்கமான போட்டியாக அமைந்துள்ள 2020 தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவுகின்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை சில ஆயிரத்திலேயே வேறுபடுகின்றது. அதனால் மீள எண்ணப்பட வேண்டும் என்ற சட்ட நடவடிக்கைகள் இரு தரப்பிலும் முடக்கி விடப்பட்டு இருந்தது. ஆனால் இப்பொழுது தபால் மூலமான வாக்கள் சட்டப்படியானவையல்ல என்று டொனால்ட் ட்ரம் சட்ட நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டுள்ளார். ஆனால் இதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் நீதிமன்றங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன. டொனால்ட் ட்ரம் இன் குடியரசுக் கட்சி – ரிப்பப்பிளிக்கன் பார்ட்டி தேர்தல் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற டொனால்ட் ட்ரம் இன் குற்றச்சாட்டில் இருந்து தம்மை ஓரம்கட்டி உள்ளனர்.

டொனால்ட் ட்ரம் தபால் மூலமான வாக்குகளுக்கு பயப்படுவதற்கும் அவை எண்ணப்படக் கூடபது என்று கோருவதற்கும் காரணம் பெரும்பாலும் தபால் மூலமான வாக்குகள் டெமோகிரட் கட்சிக்கு சாதகமாக அமைவதே வழமை. அதனால் தபால் மூலமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டால் தான் இலகுவாக வெற்றி பெறலாம் என்பது அவரது சரியான கணிப்பே. வழமைக்கு மாறாக கோவி-19 போன்ற காரணங்களினாலும் தபால் மூலமான வாக்குகள் பத்து மடங்கிற்கும் அதிகமாக எகிறி இருந்தது. மேலும் 68 வீதமானவர்கள் தேர்தல் நாளுக்கு முன்னரே தபால் மூலமாகவும் நேரடியாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றும் வாக்களித்து இருந்தனர். அதற்கு முந்திய தேர்தலில் 2016இல் 34 வீதமானவர்களே அவ்வாறு வாக்களித்து இருந்தனர்.

ஜோ பைடன் இன்னும் சில மணி நேரங்களில் தேர்தலில் தெரிவான ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டாலும் ஜனவரி 21ம் திகதியே அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக கடமைகளையாற்ற ஆரம்பிப்பிப்பார். இந்த இடைவெளியில் டொனால்ட் ட்ரம் இன் வெள்ளை மாளிகை நாடகம் மிக சுவாரஸ்யமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொனால்ட் ட்ரம் வெற்றி பெற்றால் உலக அமைதிக்கு நல்லது! ஜோபைடன் பெற்றி பெற்றால் அமிரிக்கா மீண்டும் எழுச்சி கொள்ளும்!! அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் உசலாடுகின்றது!!!

அமெரிக்க ஜனநாயகம் உசாலாடிக் கொண்டிருக்கின்றிது. தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமான போட்டியயை காட்டிக் கொண்டிருக்கையில் அமெரிக்க ஜனநாயகம் உசாலாடிக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரேயே அமெரிக்க ஜனாதிபதி தனது வெற்றியயை அறிவித்துக் கொண்டிருக்கின்றார். தேர்தல்களில் குளறுபடிகள் நடந்ததாகவும் வாக்கு எண்ணிக்கையயை நிறுத்தவும் கோரியுள்ளார். போட்டியாளர்கள் இருவரது தரப்பிலும் ஆயிரக்கணக்கான சட்டத்தரணிகள் கடுமையான போட்டி நடைபெறும் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகக் கூறி சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகின்றனர். மேலும் சில கடுமையான போட்டி நிலவுகின்ற மாநிலங்களில் தபால் மூலமான வாக்குகள் தேர்தல் முடிவின் பின்னரே எண்ணப்படுவது வழமை. அதனாலும் சில மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம். அதனால் தேர்தல் முடிவடைந்த சில நாட்களிற்கு பின் வரையும் இறுதியான் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வழமையாக வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே தேர்தல் மோசடிகள் பற்றியும் தேர்தலைத் தொடர்ந்து ஏற்படும் கலவரங்கள் பற்றியும் அச்சமும் அசம்பாவிதங்களையும் கேள்விப்பட்டு இருந்தோம். ஆனால் இம்முறை உலக ஜனநாயகத்தின் காவலனாக சுதந்திர உலகின் பொலீஸ்காரனாக தன்னைக் காட்டி வந்த அமெரிக்காவில் ஜனநாயகம் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் சுறாவளி போன்ற அழிவுகளில் இருந்து தங்களைக் காப்பதற்காக வர்த்தக நிறுவனங்கள் பலகைகளைக்கொண்டு தங்கள் வினாபார நிறுவனங்களைச் சுற்றி மேலதிக பாதுகாப்புக்காக பொருத்தி வருகின்றனர். துப்பாக்கிகள் விற்கின்ற வியாபார நிலையங்களில் துப்பாக்கிகளும் அதற்கான சன்னங்களும் விற்றுத் தீர்ந்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக சங்கிலித் தொடர் வியாபார நிறுவனமான Walmart துப்பாக்கிகள் அதற்கான சன்னங்களின் விற்பனையயை சில நாட்களுக்கு முன்னரேயே நிறுத்திவிட்டது. தேர்தல் முடிவுகள் வருகின்ற போது கலவரம் ஏற்படும் என்பது பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி ட்ரம் தனக்கு ஆதரவான வெள்ளையின தீவிர போக்காளர்களைத் தயார் நிலையில் இருக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். ட்ரம் – பைடன் முதல் சுற்று தொலைக்காட்சி விவாதத்தின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். தன்னிடம் இருந்து வெற்றி பறிக்கப்படும் என்ற போலியான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியதன் மூலம் தான் தோற்றுப் போனால் மோசடியே காரணம் என்பதை அவர் தனது தீவிர ஆதரவாளர்களுக்கு தெரிவித்ததுடன் அதற்கு எதிராக சண்டையிடவும் ஆயத்தமாக இருக்குமாறு கூறியுள்ளார். அதன்படி டொனால்ட் ட்ரம் தோல்வியடைந்தால் அமெரிக்காவில் பாரிய குழப்பம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமையலாம்.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 1865க்களின் பின் இன்று அமெரிக்க மக்கள் மிகவும் பிளவுபட்டுள்ளனர். தீவிர வெள்ளைத்துவ வாதம் மிகவும் தளைத்து ஓங்கியுள்ளது. அதன் பிரதிபலிப்பாக சட்டம் ஒழுங்கு என்பதை டொனால்ட் ட்ரம் முன்கொண்டு செல்கின்றார். அதே சமயம் அங்குள்ள சிறுபான்மைச் சமூகங்கள்: கறுப்பினத்தவர், ஸ்பானியர், மாநிறத்தோர் அங்குள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய நிறுவனங்களால் வஞ்சிக்கப்படுகின்றனர். அடிப்படையில் சட்டம் ஒழுங்கு என்பது மிக முக்கிய அம்சமாக இருந்த போதும், அது வெவ்வேறு சமூகங்களால் முற்றிலும் முரண்பட்ட நிலையிலேயே நோக்கப்படுகின்றது.

முரண்பாடு என்பது சட்டம் ஒழுங்கு மற்றும் கொள்கைகளில் மட்டடுமல்ல மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்திலும் இந்த மிகமோசமான முரண்பாடு வெளிப்படுகின்றது. அமெரிக்க செல்வத்தில் 40 வீதத்தை ஒரு வீதமான செல்வந்தக் குடும்பங்கள் வைத்துள்ளன. கால்பங்கு செல்வத்தை 90 வீதமான கீழ்நிலையில் உள்ள குடும்பங்கள் பங்கு போடுகின்றன. அதன்படி பார்த்தால் இக்குடும்பங்களிடம் பத்தாயிரம் டொலர்களுக்குக் குறைவான செல்வமே உள்ளது. இக்குடும்பங்கள் வாழ்வதற்கு சொந்தமான கூரை கூட அற்றவர்களாகவே, பெரும்பாலும் வாடகைக் கூரையின் கீழ் வாழ்கின்றனர். ‘அமெரிக்க கனவு’ என்பது மிகப் போலியான ஒரு மாயயை. ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்கின்ற போது ஒரு வீதமான செல்வந்தக் குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்ந்தும் அதகரித்துச் செல்கின்ற போது; 90 வீதமான கீழ்நிலைக் குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

ஆனால் அமெரிக்காவின் வீடுகளில் கட்டுப்பட்டுக் கிடக்கின்ற $113 ரில்லியன் சொத்துக்களை அமெரிக்காவில் உள்ள 329 மில்லியன் மக்களுக்கு சரியாகப் பங்கிட்டால் ஒவ்வொருவரும் $ 343,000 சொத்துக்களை வைத்திருப்பார்கள். மூவரைக் கொண்ட குடும்பத்தில் அண்ணளவாக ஒரு மில்லியன் டொலர் சொத்துக்கள் இருக்கும். ஆனால் கடைக்கோடியில் வாழும் 90வீதமான குடும்பங்களிடம் உடு துணிகள், படுக்கைத் தளபாடங்கள் ஒரு சில மின் உபகரணங்களைத் தவிர, அவர்களிடம் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளே மட்டுமட்டாகவே இருந்துள்ளது.

உலக செல்வந்தர்களை மிக அதிகமாகக் கொண்டுள்ள அமெரிக்காவில் உள்ள 788 பில்லியனெயர்கள் $ 3,000,000,000,000,000 ($ 3 ரில்லியன்) செல்வத்தை தங்களிடம் குவித்து வைத்துள்ளனர். இவ்வாறான ஒரு செல்வந்தாரன டொனாலட் ட்ரம் மக்கள் பற்றிய எவ்வித கரிசனையும் உடைய மனிதரல்ல. ஒவ்வொருவரும் எப்படியும் செல்வத்தை சேர்த்துக் குவிப்பது, அவரவர் திறமை என்று கருதுகின்ற ஒரு கொழுத்த செல்வந்தன் தான் டொனால்ட் ட்ரம். அதனால் வரி செலுத்தாமல் ஏமாற்றுவது, நிறுவனங்களை திவாலடையச் செய்து கொள்ளை இலபமீட்டுவது எல்லாமே ஒரு வியாபாரத்தின் திறமை எனக் கருதுபவர். அதனை நடைமுறையிலும் செய்து காட்டியுள்ளார். டொனால்ட் ட்ரம் தனது சொத்துக்கள் மற்றும் வரி போன்ற விடயங்களை வெளியிடவில்லை. கொழுத்த செல்வந்தரான டொனால்ட் ட்ரம் செலுத்திய வருமானவரி; ஒரு சாதாரண ஆசிரியர் செலுத்திய வருமான வரியிலும் குறைவானதாக உள்ளது. மேலும் இவர் 13 தடவைகள் தன்னை திவாலடைய வைத்துள்ளது மட்டுமல்ல, அதனை தனது திறமையாகவும் பறை சாற்றுகின்றார். ஆனால் அவருக்குத் தான் வெள்ளையின அடித்தட்டு மக்களில் பலரும் ஆதரவளிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள 8 செல்வந்தர்கள் உலகின் எழைகளான 50 வீதத்தினரின் ஒட்டுமொத்தச் சொத்துக்ககுக்குச் சமனானன சொத்துக்களை வைத்துள்ளனர். இந்தப் பின்னணியில் தான் அமெரிக்க தேர்தல் நடைபெறுகின்றது.

டொனால்ட் ட்ரம்மின் நான்கு ஆண்டுகள் என்பது எப்போதும் மோசமானதாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதில்லை. உலக சமாதானத்தின் அடிப்படையில் நோக்கினால் அமெரிக்காலில் வந்த அண்மைய ஜனாதிபதிகளில் டொனால்ட் ட்ரம் மட்டுமே யுத்தத்தை உருவாக்கவில்லை என்பது மட்டுமல்ல ஏற்கனவே யுத்த பிராந்தியங்களுக்கு அனுப்பட்ட இராணுவத்தையும் திருப்பி அழைத்து வருகின்றார். நாடுகளின் பாதுகாப்பை அந்தந்த நாடுகளே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நேட்டோவிற்கான நிதிப்பங்களிப்பையும் குறைத்துள்ளார். இந்த நடவடிக்கைகள் ஒரு வகையில் உலக பொலிஸ்காரனாக அமெரிக்கா தன்னை கட்டமைத்ததை கட்டுடைக்கின்ற நடிவடிக்கையின் முதற்படியாக உள்ளது.

சர்வதேச இராணுவத் தலையீடுகளைக் குறைப்பது, ரஸ்யாவுடனான நல்லுறவு வடகோரியாவுடனா உறவு என்பன ஓரளவு உலகில் இராணுவப் பதட்டத்தை ஒப்பீட்டளவில் குறைத்தே வருகின்றது. இருந்தாலும் சவுதிய அரேபியா யேர்மன் நாட்டில் யுத்தத்தைத் தொடுத்திருந்த நிலையில் அந்நாட்டுடன் பல பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவத் தளபாடங்களை வெறும் வியாபார ரீதியில் மேற்கொண்டிருப்பதும் சுட்டிக்காட்டத் தக்கது. டொனால்ட் ட்ரம் எவ்வித உள்ளுணவும் அற்ற லாபமீட்டுவதை மட்டுமே நோக்காகக் கொண்ட வியாபாரி; என்ற வகையில் வேறுநாடுகளின் விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு பொருளாதாரச் செலவை ஏற்படுத்த விரும்பவில்லை; என்பது அவரிடம் உள்ள முக்கிய வரவேற்கத் தக்க குணாதிசயம். சீனாவோடு உள்ள வர்த்தகப் போட்டியும் கூட, ஒரு வகையில் ஒரு ஒப்பந்தத்திற்கு செல்லும் போக்கே அல்லாமல் யுத்தத்தை நோக்கி நகரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. டொனால்ட் ட்ரம் இற்கு அமெரிக்காவை உலக பொலிஸ்காரனாக உருவாக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் தன்னுடைய நேட்டோ நட்பு நாடுகளுடனேயே பகைத்துக் கொண்டு ரஸ்யாவோடு உறவாடவும் தயாராக இருப்பதால், டொனால்ட் ட்ரம்மின் காலம் உலகில் ஒப்பீட்டளவில் அமைதியேற்படும் எணக் கொள்ளலாம்.

மேலும் டொனால்ட் ட்ரம் ஒரு இறுக்கமான அரசியல் தலைவரல்ல என்பதும் அவருக்கு ஒரு இறுக்கமான அரசியல் கொள்கை இல்லாமல் இருப்பதும் அமெரிக்காவுக்கு எதிரான வல்லரசுகளான சீனா, ரஸ்யா போன்ற நாடுகளுக்கு ஒரு வரப்பிரசாதம். அதானால் டொனாலட் ட்ரம் மீண்டும் ஜனாதிபதியாவதை இந்நாடுகள் விரும்புகின்றன. ஆனால் நேட்டோ நேச நாடுகளுக்கு டொனால்ட் ட்ரம் வெற்றி பெறுவதில் எவ்வித விருப்பும் கிடையாது. சர்வதேசத்தில் அமெரிக்காவின் தலைமைக்குக் கீழ் குட்டிச் சண்டியர்களாக திரிந்தவர்களை டொனால்ட் ட்ரம் ஓரம்கட்டிவிட்டு ரஸ்யா, சீனா, வடகொரியா என புதிய உறவுகளை ட்ரம் தலைமையிலான அமெரிக்கா ஏற்படுத்தி வருவது அவர்களுக்கு அதிருப்தியயை ஏற்படுத்தி உள்ளது. மத்திய கிழக்கில் கூட அரபு நாடுகளுக்கு இஸ்ரேலுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உறவு ட்ரம்மின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மைல்கல். இவ்வெளியுறவுக் கொள்கை பலஸ்தீனியர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பலமான அடி. டொனாலட் ட்ரம் எவ்வித உள்ளுணவும் அற்ற லாபத்தை மட்டுமே நோக்காக் கொண்டவர் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம். பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியர்களிடம் தங்கள் நிலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் இழந்து வருகின்றனர். இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்குமான உறவானது, மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ஒரு நகர்வே. ஈரானை சர்வதேசத்தில் இருந்து ஓரம்கட்டவே அமெரிக்கா முயற்சிக்கின்றது. ஆனால் இந்த முரண்பாடு ஒரு யுத்தமாக அண்மைக்காலத்தில் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அவ்வளவிற்கு இல்லை.

டொனால்ட் ட்ரமின் தலைமை உலக சமாதானத்திற்கு சாதகமாக இருப்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு அது சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. அமெரிக்க மக்கள் டொனால்ட் ட்ரம் அமெரிக்காவை தலைசிறந்தது ஆக்குவார் என்பதற்காக வாக்களிக்கின்றனர். ஆனால் டொனால்ட் ட்ரம்மின் தலைமை அமெரிக்காவை பெரும்பாலும் தலைகுனியச் செய்தே வருகின்றது. டொனாலட் ட்ரம்மின்: கதையாடல்கள், வாய்கூசாமல் சொல்கின்ற பொய்கள், கொரொனாவை கட்டுப்படுத்த முடியாமை, சுற்றுச்சூழல் பற்றிய கொள்கைகள், விஞ்ஞாபூர்வமான உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள், சிறுபான்மையினங்களுக்கு எதிரான துவேசத்தை வளர்த்துவிடுவது, மக்களைக் கூறுபோடுவது என்பன அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இது அமெரிக்காவின் எதிர்காலத்தை பெரும்பாலும் பாதிக்கும்.

மேலும் நாட்டின் குடிவரவைக் கட்டுப்படுத்தவது என்ற பெயரில் சட்ட விரோதக் குடியேற்றக்கரர்களுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைகள் மனிதாபிமானத்துக்கு முரணானவை. இனக்குரோதமாகவும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்கா இதுவரை தலைமை தாங்கிய சுயாதீன கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாறாக, தற்பாதுகாப்பு பொருளாதாரக் கொள்கையயை நோக்கி நகர்த்தப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் வருவதை இப்பொருளாதாரக் கொள்கை ஊக்குவிக்கின்றது. இதுவும் அமெரிக்காவை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தவே வழிவகுக்கும். உலகமயமாதல் தற்போது வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலையின்மையயை ஏற்படுத்துவதால், உலகமயமாதலுக்கு எதிர்நிலையயை டொனால்ட் ட்ரம் எடுத்து வருகின்றார். இது அமெரிக்காவில் தொழில் வாய்ப்பை உடனடியாக உருவாக்க உதவுகின்றது. அத்துடன் சர்வதேச நாடுகளில் அமெரிக்காவின் சுரண்டலை இது தடுப்பதற்கும் உதவும். ஆனால் உடனடியாக பாதிக்கப்பட்ட நாடுகளில் வேலையின்மை ஒரு பிரச்சினையாகும். இந்நாடுகள் சுயசார்புப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி தள்ளப்படுவார்கள். ஒருவகையில் சர்வதேசத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தளர்த்துவதாகவே டொனாலட் ட்ரம்மின் பொருளாதாரக் கொள்கைகள் அமைகிறது. இது இன்று தனது பொருளாதார ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் சீனாவிற்கு மிகுந்த வரப்பிரசாதமாக அமையும்.

ஆகையால் டொனால்ட் ட்ரமின் அமெரிக்கா உலக நாடுகளின் சமாதானத்திற்கு சாதகமாகவும் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமையும். மாறாக டெமோகிரட் கட்சியின் ஜோ பைடனின் வெற்றி கட்சிபேத மற்று அமரிக்காவின் வல்லாதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநாட்டுவதாகவும் நேட்டோ நேச நாடுகளின் அணியயை வலுப்படுத்தி, உலக பொலிஸ்காரனா தன்னைக் கட்டமைப்பதுமாகவே அமையும். இது அமெரிக்காவில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலுமே அமெரிக்க அரச இயந்திரம் அவ்வாறு தான் செயற்படுத்தும். ஜோ பைடன் அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பின் படைப்பே. டொனால்ட் ட்ரம் அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பால் உருவாக்கப்படாததால், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார். அதனால் ஜோபைடன் அமெரிக்காவின் எழுச்சியயை மீளக் கட்டமைப்பதற்கான முயற்சிகளில் இறங்குவார். அமெரிக்காவை ஒற்றுமைப்படுத்துவது, அங்குள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் சற்று குறைப்பதன் மூலம் பதட்டத்தை தணிப்பது, இனங்களிடையே சுமூக உறவை ஏற்படுத்தி ‘நாங்கள் அமெரிக்கர்’ என்ற உணர்வை ஊட்டுவது, இதன் மூலம் சமூகப் பதட்டத்தை கட்டுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் இறங்குவார். மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற விடயங்களை முன்நிறுத்துவதன் மூலம், சர்வதேச சமூகத்தில் அமெரிக்காவின் தலை நிமிரச் செய்ய முயற்சிப்பார்.

இந்தப் பின்னயிலேயே எதிர்கால அமெரிக்க – சர்வதேச நிலைமைகள் அமையும்.

பிரித்தானிய அரசியல் கேலிக்கூத்து! தொழிற்கட்சியினுள் யூதர்களுக்கு எதிரான போக்கு ! ஜெரிமி கோபின் தொழிற்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்!

பிரித்தானியாவின் மிக உன்னதமான மனிதத்துவ போராளியான ஜெரிமி கோபின் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது கட்சியில் இருந்த யூதர்களுக்கு எதிராக செயற்பாடுகளை கண்டுகொள்ளவில்லை என்று சமத்துவத்திற்கும் மனித உரிமைக்குமான ஆணைக்குழு நேற்று (29/10/2020) குற்றம்சாட்டி இருந்தது. இந்த அறிக்கை வெளிவந்து சில நிமிடங்களிலேயே ஜெரிமி கோர்பின் இந்த அறிக்கையை விமர்சித்து இருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக மிகைப்படுத்தப்பட்டது என ஜெரிமி கோபின் மிகச்சரியாகவே குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனால் ஜெரிமி கோபினின் இந்த விமர்சனத்தை தற்போதைய தொழிற்கட்சித் தலைவர் ஹியஸ் ராமர் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அடுத்த சில மணிநேரங்களில் ஜெரிமி கோபின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்ககாணலில் தன்னுடைய விமர்சனத்தை மிக அழுத்தம் திருத்தமாக வெளியிட்டார். அதன்படி தனக்கு எதிரான ஒரு அரசியல் சதி என்பதை அவர் மிகத் தெளிவாக சுற்றிக்காட்டினார். இதனை தொழிற்கட்சியில் இருக்கும் பல யூதப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், ஜெரிமி கோபினுக்கு தங்களுடைய ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். ஜெரிமி கோபினின் இந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பப்பட்டு சில நிமிடங்களிலேயே ஜெரிமி கோபின் நேற்று மதியம் ஒரு மணியளவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அன்ரிசெமற்றிசம் – anti semitisam என்பது ஹிட்லருடைய காலத்தில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை மறுப்பது. இவ்வாறான எவ்வித மறுப்பையும் ஜெரிமி கோபின் செய்ததற்கு நேரடியான மறைமுகமான எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆனால் கட்சியில் இருந்த சிலர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தனர். அது சம்பந்தப்பட்ட ஒழுங்காற்று நடவடிக்கைகளை கட்சி எடுத்துவந்தது. ஆனால் தொழிற்கட்சியில் இருந்த வலதுசாரி பிரிவினர் ஜெரிமி கோபினின் தீவிர இடதுசாரியப் போக்கை நிராகரித்து வந்ததுடன்; ஜெரிமி கோபினை கட்சியின் தலைமையில் இருந்து ஓரம்கட்ட இந்த அன்ரி செமற்றிசம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து ஊதிப் பெருப்பித்து இந்நிலைக்கு இட்டுச்சென்றனர். இதுவொருவகையில் சகல விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கின்றவர்களை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயலாகவே கருதப்படுகின்றது.

பிரித்தானியாவில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர் அதனால் அவர்கள் தினம் தினம் அவமானப்படுகின்றனர் வன்முறைக்கு உள்ளாகின்றனர். சிறுபான்மைச் சமூகங்கள்நாளாந்தம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். கறுப்பினத்தவர்கள் தங்களுடைய தோற்றம் இயல்புகளுக்காக பொலிஸாரின் ஸ்ரொப் அன் சேர்ச் போன்ற கெடுபிடிகளுக்கு உள்ளாகின்றனர். ஸ்லாமியர்கள் தினம் தினம் பிரித்தானியாவில் நையப்புடைக்கப்படுகின்றனர். அகதிகள் கேவலப்படுத்தப்படுகின்றனர். இவையெல்லாம் பிரித்தானிய தெருக்களிலும் பாராளுமன்றத்திலும் அப்பட்டமாக வெளித்தெரிகின்ற சமத்துவம் மனிதஉரிமை மீறல் சம்பவங்கள். இந்த கோவிட்-19 இந்நிலையயை மேலும் மோசமாக்கி ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும் தூண்டியுள்ளது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களோடு ஒப்பிடுகின்ற போது யூதர்கள் தொழிற்கட்சிக்குள் ஒடுக்குமுறைக்கு உள்ளானார்கள் என்பது மின்னணு நூக்குக்காட்டியயைக் கொண்டு பெருப்பித்து பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம். மேலும் இந்த அன்ரிசெமற்றிசம் என்ற குற்றச்சாட்டை வைப்பவர்கள் இஸ்ரேலிய கொடுங்கோன்மை கொலைவெறி அரசை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். இஸ்ரேலிய கொடுங்கோண்மை அரசை விமர்சிப்பது எந்தவகையிலும் யூதர்களின் உரிமைகளை மறுப்பதாகாது. தொழிற்கட்சி உறுப்பினர்கள் பலர் அன்ரி ஸ்யோனிஸ்ட் anti zionists டுக்களாக உள்ளனர். அவர்கள் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதையும் இஸ்ரேலிய அரசின் நில ஆக்கிரமிப்பையும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய அரசின் கொடுங்கோண்மையயையும் வன்மையாகக் கண்டிக்கின்றனர். இந்தப் பின்னணியியேலயே ஜெரிமி கோபின் மீது இவ்வாறான ஒரு அபாண்டமான பழி போடப்பட்டு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இஸ்ரேலிய அரசு மனிதத்துவத்திற்கு எதிரானது; இஸ்ரேலிய அரசை எதிர்ப்பது; பாலஸ்தீன மக்களின் நில அபகரிப்புக்கு எதிராக குரல்கொடுப்பது; பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல்கொடுப்பது ஒருபோதும் யூதமக்களை அவமானப்படுத்துவதாகாது. ஜெரிமி கோபினை தொழிற்கட்சியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவு கட்சிக்குள் உள்ள வலதுசாரி சக்திகள் கடந்த ஆண்டுகளாக ஜெரிமி கோபின் சாதித்த மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை நிராகரிக்க முயற்சிப்பதன் வெளிப்பாடே.