உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“வைரஸ் பேசும் இனவாதம்” – முஸ்லீம்களின் உடல் எரிப்பை கண்டித்து கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம் !

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வெள்ளை துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டமொன்று கல்முனை பிரதான வீதியில் இன்று (25.12.2020) முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் ரஸாக்கின் ஏற்பாட்டில், கல்முனை பிரதான வீதியில் கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டமானது பல்வேறு சுலோகங்களை தாங்கி மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நேர காலத்துடன் முடிவுறுத்தப்பட்டது.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.எம்.ஏ.மனாப் உள்ளிட்ட அரசியல், சமூக, பொதுநல, செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

“கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை, புதைக்கவோ எரிக்கவோ அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”  – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுரை !

“கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை, புதைக்கவோ எரிக்கவோ அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”  என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுகாதார அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரpவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால்  உயிரிழந்தவரின் உடலில் இருக்கும் வைரஸ் அழிவதில்லை. எனவே குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் அவரின் உடலை வைத்திருக்கும்போது அக்கொள்கலன் சேதமடையும் . கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பதின் ஊடாக அக்கொள்கலன்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை, புதைக்கவோ எரிக்கவோ அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்த முஸ்லீம்கள் சிலருடைய உடல்களை எரிக்காது குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைக்குமாறு காலி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமானது” – ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ !

“கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமானது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருடைய கவனமும் கொரோனாவுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாக திரும்பியுள்ளது. இந்நிலையிலே இலங்கையும் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி,

“அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த தடுப்பூசிகள் குறித்து விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவை நியமித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய மக்கள் குழுக்கள் தொடர்பாக, அவர்களது தேவை மற்றும் வாழும் சூழலின் அபாயத் தன்மை என்பவற்றின் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட நோய் பரவும் சாத்தியம் அதிகம் காணப்படும் இடங்கள் மற்றும் ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

“பல சவால்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு தேசிய கொள்கைகளுக்கான உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்” – பௌத்த ஆலோசனை சபை பாராட்டு !

“பல சவால்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு தேசிய கொள்கைகளுக்கான உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்” என பௌத்த ஆலோசனை சபை தெரிவித்துள்ளது.

நேற்று (24.12.2020) பிற்பகல் 7 வது முறையாக ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய பௌத்த ஆலோசனை சபை கூட்டத்தின் போதே தேரர்கள் இதனைத் தெரிவித்தனர்.

இதன் போது அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் பெரும் எண்ணிக்கையான மக்களின் எதிர்பார்ப்பாகவிருந்தது ஒரு தேசிய சிந்தனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் ஒரு தலைமையாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தொழில்கள் மற்றும் சலுகைகள் போன்ற குறுகிய விடயங்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்தகையவர்களின் ஆதரவை எதிர்பார்க்கவில்லை.

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வீழ்ச்சியடைந்த தேசிய பாதுகாப்பு, போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளிலிருந்து விடுபட்ட ஒழுக்கமான சமூகம், வீண்விரயம் மற்றும் ஊழலை ஒழித்தல், திறமையான அரச சேவை மற்றும் நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் வெளியுறவுக் கொள்கை என்பனவே மக்களின் அபிலாஷைகளாக இருந்தன என குறிப்பிட்டுள்ளனர்.

கோவிட் தொற்றுநோய் உட்பட பல தடைகளுக்கு மத்தியில், தேசிய கல்வி கொள்கை, தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் திட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட நாட்டின் போக்கை மாற்றும் ஒரு திட்டத்திற்கு அடித்தளம் அமைத்ததற்காக மகா சங்கத்தினர் ஜனாதிபதியை பாராட்டிய தேரர்கள்  மகாசங்கத்தினர் விரும்பிய பௌத்த தனித்துவத்திற்கு முன்னுரிமை அளித்து, ஏனைய சமய சகவாழ்வுக்கான சமூக சூழலை அமைத்தமை இக்காலப்பகுதியில் மக்கள் அடைந்த மற்றுமொரு வெற்றியாகும். இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல அனைத்து சமயத் தலைவர்களையும் கொண்ட ஒரு குழுவின் அவசியத்தையும்  சுட்டிக்காட்டினர்.

கொத்தமல்லி என கூறி ஆலை கழிவுகள் தொகையொன்று கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி !

கொத்தமல்லி என குறிப்பிட்டு விவசாய ஆலை கழிவுத் தொகையொன்று கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

குறித்த கழிவுத் தொகை உக்ரேனிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

கோரப்பட்டிருந்த சுமார் 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கொத்தமல்லி தொகைக்கு பதிலாக குறித்த கழிவுத் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

“கொரோனாவைக் காரணம் காட்டி அரசு மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் அரசு கேலிக்கூத்தான வர்த்தமானிகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது” – மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு !

“கொரோனாவைக் காரணம் காட்டி அரசு மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் அரசு கேலிக்கூத்தான வர்த்தமானிகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது” என மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் சாடியுள்ளது.

மக்கள் விடுதலை முண்ணணியின் தலைமைகயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய பிரசார செயலாளர் விஜித ஹேரத் கூறுகையில்,

“மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கொரோனாத் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக 2020 முதலாம் காலாண்டில் உள்நாட்டு விவசாய உற்பத்தி 5.6 வீதத்தால் வீழ்ச்சி கண்டிருந்தது. தொழிற்சாலைகள் துறை 7.8 வீதத்திலும், சேவை துறை 1.6 வீதத்திலும் வீழ்ச்சி கண்டது. மார்ச் மாதம் 19ஆம் திகதிக்குப் பின்னரே நாடு முடக்கப்பட்டது. எனவே, முதலாம் காலாண்டில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குக் கொரோனாவைக் காரணம் காட்ட முடியாது.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அரசின் இயலாமையே இதன் ஊடாக வெளிப்படுகின்றது. மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எவ்வகையிலும் கொரோனா காரணம் இல்லை. தற்போதைய அரசு ஆட்சிப்பீடம் ஏறி மிகக் குறுகிய காலத்துக்குள் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை மிகவேகமாக அதிகரித்துள்ளது.

அரசால் அத்தியாவசிய பண்டங்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வரலாற்றில் முதல் தடவையாக தேங்காய்க்கு வர்த்தமானியை இந்த அரசு வெளியிட்டது. வர்த்தமானியின் விலை மட்டங்களுக்குத் தற்போது எங்குமே தேங்காய் கிடையாது. பொருளாதார மையங்கள் வர்த்தக அமைச்சரின் கீழ் இல்லை.

கொரோனாவைக் காரணம் காட்டி அரசு மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடுகின்றது. நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அரசின் இயலாமை வெயிடப்பட்டுள்ள நிலையில் கேலிக்கூத்தான வர்த்தமானிகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.

“இயேசு கிறிஸ்து போதித்த அமைதி மற்றும் அன்பின் நற்செய்தி உலகெங்கும் பரவட்டுமாக!” – நத்தார்தின வாழ்த்துச்செய்தியில் ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ !

“இயேசு கிறிஸ்து போதித்த அமைதி மற்றும் அன்பின் நற்செய்தி உலகெங்கும் பரவட்டுமாக!” என ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கிறிஸ்தவர்கள் தங்களுடைய நத்தார் ப்டிகையினை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கான வாழ்த்துச்செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும்.

இது இயேசு நாதர் போதித்த மற்றும் நடைமுறையில் வாழ்ந்துகாட்டிய அமைதி, அன்பு, இரக்கம், சகவாழ்வு, கருணை போன்ற பண்பட்ட மனித சமூகத்தின் அடித் தளத்தை வடிவமைக்கும் உன்னத பெறுமானங்களை உள்ளடக்குகிறது. சமூக ரீதியாக, நத்தார் கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்று கூடுவதற்கும், பரிசுகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், பகைமைகளை மறந்து பிணைப்பினை புதுப்பிப் பதற்குமான ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும்.

இயேசு பிரான் போதித்த சமய நெறிகள் சமூகத்தின் நிலைத்தன்மைக்குப் பங்களிக்கும் பல போதனைகளைக் கொண்டுள்ளது.பாவத்தின் இருளகற்றி, புறக்கணிக்கப்பட்டவர்களுக்குச் சகோதர வாஞ்சையுடன் உதவுவது மற்றும் அனைத்து மனிதக்குலத்தின் மீட்பிற்கான அர்ப்பணிப்பு என்பவை இவற்றில் முதன்மையானவை என்று நான் எண்ணுகிறேன் என ஜனாதிபதி வெளியிட்ட நத்தார் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

கொவிட் – 19 தொற்றுநோயை எதிர்கொண்டு பொரு ளாதார, சமூக மற்றும் கலாச்சார ரீதியாக செயலற்றிருக்கும் உலகை மீண்டும் எழுச்சி பெறச்செய்ய இந்த நன்நெறிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வருடத்திற்கும் முன்னர் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் கடுமையான வலி களைச் சுமந்தவாறே இந்த நாட்டின் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆயினும்கூட, அந்த அச்சங்களையும் பாதுகாப்பற்ற தன்மையையும் அகற்றுவதற்கும், அச்சம், சந்தேகம் இல்லாமல் அனைவரும் சமயக் கிரியைகளில் ஈடுபடு வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் எமக்கு முடிந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் அவ்வாறே வழங்கப்படும். இயேசு கிறிஸ்து போதித்த அமைதி மற்றும் அன்பின் நற்செய்தி உலகெங்கும் பரவட்டுமாக! இலங்கை வாழ் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் மகிழ்ச்சியான எனது நத்தார் தின நல்வாழ்த்துக்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“அரசு கூறுவது போல ஜெனிவாத் தீர்மானத்திலிருந்து வெளியேறவும் முடியாது. வெளியேற நாம் இடமளிக்கப்போவதும் இல்லை ” – இரா.சம்பந்தன்

எதிர்வரும் 2021 மார்ச் மாதமளவில் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றிணை கொண்டு வருவது தொடர்பான வாதங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றது.  இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி கோட்டாபாஜ ராஜபக்ஷ “புதிய பிரேரணையினையும் வலுவிழக்கச்செய்வோம்” என குறிப்பிட்டிருந்தார். மேலும் பல ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஐ.நா பிரேரணை தொடர்பாக தங்களுடைய அதிருப்தியையும் ஐ.நா இலங்கை விடயங்களில் அதிகம் தலையீடு செய்வதாகவும் ஆதங்கம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “அரசு கூறுவது போல ஜெனிவாத் தீர்மானத்திலிருந்து வெளியேறவும் முடியாது. வெளியேற நாம் இடமளிக்கப்போவதும் இல்லை ” என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் சர்வதேச போர்ச்சட்ட விதிகளை மீறியே இறுதிப்போரை அரசும் அதன் படைகளும் நடத்தியிருந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் சித்திரவதைகளுக்கு உள்ளாகி காணாமல் ஆக்கப்பட்டனர். இது அனைவரும் அறிந்த உண்மை.

2009ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர் பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து இலங்கை அரசு விலகியது. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குப் பரிகாரம் கிடைக்கவில்லை. இறுதிப்போர் நிறைவடைந்தவுடன் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் இலங்கை அரசு உதாசீனம் செய்தது. இந்தநிலையில், இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசின் பொறுப்புக்கூறலைச் செய்ய வைப்பதற்கான கருமத்துக்காக நானும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அமெரிக்காவுக்கு முதன் முதலில் சென்றிருந்தோம்.

அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தோம். இந்தப் பின்னணியில்தான் 2012ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்து நிலைமைகளை ஆராந்து சென்று இலங்கை அரசு பொறுப்புக்கூறலைச் செய்யும் வகையிலான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றினார்கள்.

ஆகவே, பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற விடயத்தில் நாங்களே முதன்முதலாக உரிய கருமங்களை முன்னெடுத்திருந்தோம். அதன் மூலமே இலங்கை அரசின் பொறுப்புக்கூறல் சர்வதேச கவனத்துக்கு உட்பட்டது. அன்றிலிருந்து இற்றைவரையில் இலங்கை அரசு பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தாலும் அதன் பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டிய விடயம் தொடர்ச்சியாக நீடித்தே வந்திருந்தது. இந்தநிலையில், 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானத்துக்கு இலங்கை அரசே இணை அனுசரணை வழங்கியது. அதுமட்டுமன்றி வாக்குறுதிகளையும் வழங்கியது.

அதன் பிரகாரம் நிறைவேற்றப்பட்ட 30.1 தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை முழுமையாகச் செய்யாது விட்டாலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால், அவர்களால் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது போனமை துரதிஷ்டவசமாகும். அந்த அரசு பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காவும் தீர்மானம் ஐ.நா.அரங்கிலிருந்து நீங்கிவிடாமலிருப்பதற்காகவும் இரண்டு தடவைகள் தலா இரண்டு ஆண்டுகள் சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தோம். தற்போது இரண்டாவது சந்தர்ப்பம் எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவுக்கு வருகின்றது.

இந்தநிலையில், நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசின் பொறுப்புக்கூறல் தொடர்ந்தும் இருக்கும் வகையிலும், அதேநேரம், இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும் வகையிலும் வலுவான காரணங்களைக் குறிப்பிட்டு பரிந்துரைகளைச் செய்யவுள்ளோம். அவ்விடயம் சம்பந்தமாக பல விடயங்களை நாம் முன்னெடுத்து வந்துகொண்டிருக்கின்றோம். அவை அனைத்தையும் பட்டியலிட்டுக் கூற வேண்டியதில்லை.

ஜெனிவா தொடர்பில் தற்போதைய அரசின் அணுகுமுறை மாறுபட்டதாக உள்ளது. அரசு கூறுவதன் பிரகாரம் ஜெனிவாத் தீர்மானத்திலிருந்து வெளியேற முடியாது. அவ்வாறு வெளியேறுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதும் இல்லை.

ஜெனிவா விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புக்களுடனும் நாம் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தி வருவதோடு முன்னெடுக்கப்பட வேண்டிய கருமங்கள் தொடர்பிலும் ஆழ்ந்த கரிசனையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இதில் யாரும் சந்தேகம்கொள்ள வேண்டியதில்லை.

புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள பல அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இலங்கை அரசின் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக அந்தந்த நாடுகளில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இங்குள்ள தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.

இது விடயம் சம்பந்தமாக தமது நிலைப்பாடுகளை மையப்படுத்திய எழுத்து மூலமான ஆவணங்களையும் அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த ஆவணங்கள் மற்றும் அவர்களுடனான ஊடாட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கையாண்டு வருகின்றார்.

இந்தநிலையிலேயே அவர் தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணமொன்றை ஏனையவர்களுக்கு அனுப்பிவைத்திருக்கின்றார். அவர் ஏனையவர்களையும் ஒருங்கிணைத்து ஜெனிவாக் கருமங்களை முன்னெடுக்கலாம் என்ற எண்ணப்பாட்டில் அனுப்பினாரோ தெரியவில்லை. அவ்விதமாக அவர் முயன்றது தவறென்றும் கூறுவதற்கு இல்லை. அவர் அனுப்பிய ஆவணம் தொடர்பில் ஏனையவர்கள் தத்தமது விமர்சனக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்கள்.

எவ்வாறாயினும், புதிய ஜெனிவாப் பிரேரணை நடைமுறைச் சாத்தியமான வகையிலும், வலுவானதாகவும் அமையவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதற்குரியவாறான பரிந்துரைகளைச் செய்வோம். பலதரப்பட்ட தளங்களில் கருமங்களை முன்னெடுப்போம். சாத்தியமாகின்ற பட்சத்தில் ஏனைய தரப்புக்களையும் ஒருங்கிணைத்து எமது மக்களுக்கான நீதியைப் பெறும் பயணத்தைத் தொடரவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

“எடுத்ததுக்கெல்லாம் ஐ.நாவை எதிரியாகப் பார்க்கும் நிலையிலிருந்து இந்த அரசு மாற வேண்டும். ஐ.நாவை உதாசீனம் செய்தால் பெரும் விபரீதங்கள் நிகழும்” – சஜித் பிரமேதாஸ எச்சரிக்கை !

எதிர்வரும் 2021 மார்ச் மாதமளவில் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றிணை கொண்டு வருவது தொடர்பான வாதங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றது.  இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி கோட்டாபாஜ ராஜபக்ஷ “புதிய பிரேரணையினையும் வலுவிழக்கச்செய்வோம்” என குறிப்பிட்டிருந்தார். மேலும் பல ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஐ.நா பிரேரணை தொடர்பாக தங்களுடைய அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “எடுத்ததுக்கெல்லாம் ஐ.நாவை எதிரியாகப் பார்க்கும் நிலையிலிருந்து இந்த அரசு மாற வேண்டும். ஐ.நாவை உதாசீனம் செய்தால் பெரும் விபரீதங்கள் நிகழும்”  என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐக்கிய நாடுகள் சபை மிகவும் பலம் வாய்ந்த அமைப்பு. உலகெங்கும் நடக்கும் மனித உரிமை மீறல்களில் தொடர்பில் அந்தச் சபைதான் முக்கிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும். எனவே, ஐ.நாவுடன் இணைந்து பயணிக்க வேண்டிய கடப்பாடு அதன் உறுப்பு நாடான இலங்கைக்கு உள்ளது. இதை அரசு உதாசீனம் செய்தால் பெரும் விபரீதங்களைச் சந்தித்தே தீரும்.

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றாவிட்டால் இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்தே செல்லும். இந்த விடயத்தில் நாட்டின் நலன் கருதி அரசு மிகவும் பக்குவமாகச் செயற்பட வேண்டும்.

கடந்த நல்லாட்சி அரசில் நாம் சர்வதேசத்தை மதித்து நடந்தோம். எமது இராஜதந்திர நகர்வுகளை உலகெங்கும் விஸ்தரித்தோம். அதனால்தான் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இல்லாமல் இருந்தன.

கொரோனா ஒரு கொடிய நோய். அது உலகெங்கும் உயிராபத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தநிலையில், அதனுடன் ஜெனிவா விவகாரத்தையும் ஜனாதிபதி ஒப்பிட்டுப் பேசுவது கீழ்த்தரமான அரசியலாகும்.

இலங்கையிலிருந்து கொரோனாவை ஒழிக்கும் செயற்பாட்டு நாம் அனைவரும் முழுமையான பங்களிப்பை அரசுக்கு வழங்கி வருகின்றோம்.

இதேவேளை, வெளிநாடுகளிருந்து இலங்கைக்குக் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுத் தர ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது. ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின்போது இதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளார். இதை நாம் வரவேற்கின்றோம். எடுத்ததுக்கெல்லாம் ஐ.நாவை எதிரியாகப் பார்க்கும் நிலையிலிருந்து இந்த அரசு மாற வேண்டும்.

இலங்கை மீது புதிதாக ஐ.நா. பிரேரணை வந்தால் அதற்கு இந்த அரசே முழுப்பொறுப்பு. புதிய பிரேரணை வருவதற்கு இந்த அரசே வழிவகுத்தது என தெரிவித்துள்ளார்.

“உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்காக முஸ்லீம் அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது ? ” – பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கேள்வி !

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு வழங்குவதற்கு என முஸ்லீம்வேர்ல்ட் லீக் என்ற அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கேள்வியை எழுப்பியுள்ள விஜயதாச ராஜபக்ச இதுதொடர்பில் விளக்கமளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நலன்களிற்காக வழங்கப்பட்ட நிதி என்பதால் அதற்கு என்ன நடந்தது என அறிவது கட்டாயமான விடயமாகும்.

2019 ஜூலை மாதம் இடம்பெற்ற தேசிய சமாதான மாநாட்டில் முஸ்லீம்வேர்ல்ட் லீக்கும் கலந்துகொண்டது .  அந்த அமைப்பின் தலைவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஐந்து பில்லியன் டொலர்களை வழங்கினார் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன என்பதை கூறியுள்ள விஜயதாச ராஜபக்ச அந்த நிகழ்வில்  மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் கலந்துகொண்டிருந்ததையும்  சுட்டிக்காட்டியுள்ளார்.