15 ஆண்டுகள் கன்னிகளியாத 500 உழவு இயந்திரங்கள் – வடமாகாண அதிகாரிகளின் சோம்பேறித்தனம் !
இந்திய அரசின் நன்கொடையின் கீழ் வழங்கப்பட்ட சுமார் ஐநூறுக்கும் அதிகமான உழவு இயந்திரங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பயன்பாடுகளும் இன்றி விவசாய சேவை மையங்களில் காணப்படும் நிலையில், விவசாயிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அதனை வழங்கி வைக்குமாறு வடக்கு மாகாண விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
விவசாயிகள் இலவசமாக அல்லது தவணை அடிப்படையில் குறித்த உழவு இயந்திரங்களை கோரி வருகின்ற போதும் கூட அரசாங்க அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண சபை இயங்கிய காலத்தில் விவசாயத்துறை அமைச்சு பொன் ஐங்கரநேசனிடமே இருந்தது. அவர் இது தொடர்பில் அப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
அண்மைய தரவுகளின் படி, முறையாகப் பயன்படுத்தப்படாமலும் பராமரிக்கப்படாமலும் குறித்த உழவு இயந்திரங்களின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்து வருகின்றன. மதிப்புக் குறைப்பு மற்றும் கைவிடப்பட்ட அரசாங்க சொத்துக்களுக்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி விவசாய அமைப்புக்களால் எழுப்பப்பட்டுள்ள நிலையில், கொடுக்கப்பட்ட டிராக்டர்களின் உரிமை மாகாண சபையால் விவசாய சேவை மையங்களுக்கு மாற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி விவசாய சேவை மையங்களால் நடத்தப்பட்ட ஏலம் உரிமை முறையாக மாற்றப்படவில்லை எனவும் விவசாய சேவைக் குழுக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் விவசாயிகளுக்கு நன்கொடை அளிக்கவோ அல்லது விற்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடும் விவசாய அமைப்புகள், இப்பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க கௌரவ ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
வடக்கு மாகாணத்தில் 52 கமநல சேவை நிலையத்தில் மட்டும் எந்த பழுதும் இல்லாமல் பயன்படுத்தாமல் வருடக்கணக்காக கிடந்து உக்கும் ஐநூறு உழவு இயந்திரங்களையும் ஒன்றில் பயன்படுத்த வேண்டும் இல்லையேல் விற்பனை செய்து விட்டு பணத்தினை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். பாராமுகமாக விடுவதற்க்கான காரணம் என்ன எனவும் விவசாய அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.