உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“நீண்ட கால முயற்சிகளின் பின் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.” – மனோ கணேசன்

“நீண்ட கால முயற்சிகளின் பின்னணியில் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாட்டுத் தூதுவர்களுடனும், அந்தந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்துபோகும் ஐ.நா., உலக வங்கி உட்பட பன்னாட்டு நிறுவன மற்றும் அரச பிரதிநிதிகளுடனும் தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக நடத்தி வரும் கலந்துரையாடல்கள் மற்றும் அவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டுள்ள எழுத்து மூலமான ஆவணங்கள் காரணமாக இலங்கை இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பான போதிய தெளிவு தற்போது சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டு வருகின்றது. இன்னமும் பல நாட்டு தூதுவர்களுடனும், பன்னாட்டு நிறுவனங்களுடனும் நாம் எதிர்வரும் வாரங்களில் பேசவுள்ளோம்.

மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களில் வாழும் சுமார் 15 இலட்சம் மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷைகள் மற்றும் அவர்கள் மத்தியிலான பெருந்தோட்ட பிரிவினரின் மிகவும் பின்தங்கிய வாழ்வாதார நிலைமைகள் தொடர்பான எமது தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் இன்று பலனளிக்க ஆரம்பித்துள்ளன. இது மகிழ்ச்சியை தரும் ஒரு வளர்ச்சி மைல்கல்லாகும்.

நம்மை ஆளும், ஆண்ட அரசாங்கங்கள் எம்மை மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தும்போது, நாம் அயலவரை நாடி எமது நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வது மிகவும் இயல்பானதாகும்.

இதில் தவறில்லை. இருந்தால், அரசாங்கத்திடமே தவறு இருக்கிறது. இதுபற்றிய தெளிவு என்னிடம் நிறையவே இருக்கிறது. ஆகவே, எந்த இனவாதிகளும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

எந்தவொரு முயற்சியும் ஒரே இரவில் பலன் தரப்போவதில்லை. படிப்படியான இடைவிடாத முயற்சிகளின் பின்னரே பலன் கிடைக்கும் என்பது எமக்கு நன்கு தெரியும்.

எம்மை நோக்கிய இந்த சர்வதேச கவனத்தை எமது மக்களுக்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளாக மாற்ற, நாம் நன்கு திட்டமிட்டுள்ளோம். அதன் விபரங்களை அடுத்துவரும் நாட்களில் நாடு அறிந்துகொள்ளும் என கூட்டணி தலைவர் என்ற முறையில் இப்போதே கூறிவைக்கிறேன்.

நாம் சர்வதேச அரசுமுறை பிரதிநிதிகள், தூதுவர்கள் ஆகியோருடனும், யூ.எஸ்.எய்ட், உலக வங்கி உட்பட்ட இலங்கையின் அபிவிருத்தி பங்காளி நிறுவனங்களுடனும் பேசுகிறோம்.

‘இலங்கைக்கு நீங்கள் தரும் நன்கொடைகள், உதவிகள், கடன்கள் இலங்கையில் மிகவும்  பின்தங்கிய எமது மக்கள் பிரிவினருக்கும் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்’ என நாம் வலிந்து வலியுறுத்துகிறோம்.

இன்று அரசு முன்னெடுக்கவுள்ள ‘அஸ்வெசும ஆறுதல்’ என்ற நாளாந்த பிரிவினருக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலும் நாம் எடுத்த முன்நகர் நடவடிக்கை இன்று உலக வங்கியினதும், அரசாங்கத்தினதும், சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை பெற்றுள்ளது.

‘அஸ்வெசும ஆறுதல்’ திட்டம் தொடர்பாக உலக வங்கியுடனான எமது அடுத்தகட்ட காத்திரமான பேச்சுகள் அடுத்துவரும் சில நாட்களில் நடைபெறும்.

நாம் அரசில் அங்கம் வகிக்கும் போதும் கணிசமாக பணி செய்தோம். இன்று அரசில் அங்கம் வகிக்கவில்லை என்பதற்காக நாம் அங்கம் வகிக்கும் எமது அரசு மீண்டும் உருவாகும் வரை சும்மாவே இருக்கவும் மாட்டோம்.

எதிரணியில் இருந்தபடி பணி செய்கிறோம். எமது இந்த கொள்கையை கவனத்தில் எடுக்க நமது மக்களையும், சமூக முன்னணியாளர்களையும் கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் வேண்டுகிறேன் என்றார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கோதுமை மாவில் பூச்சிகள், வண்டுகள் மற்றும் எலிகளின் கழிவுகள் – தொழிலாளிகள் போராட்டத்தில்!

நுவரெலியா நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை முதல் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அண்மையில் வழங்கப்பட்ட கோதுமை மாவில் பூச்சிகள், வண்டுகள் மற்றும் எலிகளின் கழிவுகள் காணப்பட்டதாகவும் அதே கோதுமை மாவினை மீண்டும் வழங்குவதற்காக மேலும் 300 கிலோ கோதுமை மாவை தேயிலை தொழிற்சாலையில் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கும் தோட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு தொடர்ச்சியாக தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்காமல் கொழுந்து பறிப்பதில் மாத்திரம் தொழிலார்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் சுகாதார வசதி மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என இம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடாமல் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் நலன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி வேண்டும் – உயர்நீதிமன்றில் மனு தாக்கல் !

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பெருந்தோட்ட சமூக குடியிருப்பாளர்களுக்கான நிரந்தர முகவரிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, மனுதாரரான மாவத்தகம, மூவன்கந்த தோட்டத்தை சேர்ந்த ஜீவரத்தினம் சுரேஸ்குமார் என்பவர் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் வாழும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், தமது குடியிருப்புகளுக்கு முகவரிகள் இல்லாத காரணத்தால் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்படாது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுதாரர், தமது மனுவில் பிரதிவாதிகளாக. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட பலரை குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவின்படி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான பதிவு செய்யப்பட்ட நிரந்தர குடியிருப்பு முகவரிகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதன் மூலமே அவர்கள் அரச சேவைகளை அணுகலாம் என்றும் நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் வசிக்கும் மூவன்கந்த தோட்டத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இந்த குடும்பங்கள் எவற்றுக்கும் சொந்த முகவரிகள் இல்லை எனவும் மனுதாரர் குறிப்பிடுகிறார்.

நிரந்தர அஞ்சல் முகவரி இல்லாமையால், அந்த தோட்டத்தில் வசிக்கும் குடிமக்கள் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மற்றும் அஞ்சல் பொருட்களைப் பெறுவதில்லை. தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் ‘மூவன்கந்த வத்த, மாவத்தகம’ என்ற முகவரியே தரப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூவன்கந்த துணை அஞ்சல் அலுவலகத்திற்கு மொத்தமாக கடிதங்கள் வந்த பின்னர், அங்குள்ள அதிகாரி, குறித்த கடிதங்களை நம்பத்தகாத முகவர் மூலமாக பெருந்தோட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதையே நடைமுறையாக கொண்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தாம் உட்பட்ட பெருந்தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பிரதிவாதிகள் மீறியுள்ளனர் என்று அறிவிக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

தமிழையும் வள்ளுவரையும் மானபங்கப்படுத்தும் யாழ் மாநகரசபை! மோடியின் கோமயம் எங்களுக்கு வேண்டாம்!!

திருவள்ளுவருக்கு பட்டையடித்து காவி போட்டு அவமானப்படுத்தும் உரிமையை யாழ் மாநகரசபைக்கு யார் கொடுத்தது? என்ற கேள்வி சுயசிந்தனையுடைய எவருக்கும் எழுவதைத் தவிர்க்க முடியாது. திருவள்ளுவர் என்றவுடன் இடதுகையில் ஓலைச்சுவடியும் வலதுகையில் எழுத்தானியுமாக முடிந்த சடையும் தாடியுடனும் வெள்ளைத்துணி போர்த்திய ஒரு மேலங்கியுடன் சப்பாணி கட்டி அமர்ந்திருக்கும் ஒரு நேரிய பார்வை கொண்ட தோற்றமே எம் கண்முன் வந்து நிற்கும். திருவள்ளுவர் என்று கூகுலில் தேடினாலும் அவ்வாறான ஒரு தோற்றத்தையே காண்பீர்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தை அந்தப்புரமாக்கிக் கொண்டிருக்கும் ஹொட்டல் உரிமையாளர்களும் மோடியின் மோமயம் பருகி மயங்கிக் கிடப்பவர்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் வள்ளுவர் சிலையைத் திறந்து வள்ளுவத்தையே சிதைத்துள்ளனர். ஆறுமுகநாவலருக்கும் வள்ளுவருக்கும் வித்தியாசம் புரியாமல் சிலையொன்றைத் திறந்து வள்ளுவனை கேவலப்படுத்தி உள்ளனர்.

உலகப் பொதுமறை என அழைக்கப்படக்கூடிய திருக்குறளை திருவள்ளுவர் எழுதியிருந்தார். திருக்குறள் தமிழ் மொழியின் மிக முக்கியமான ஒப்பற்ற பொக்கிஷம் ஆகும். அதில் இருக்கக்கூடிய தத்துவ கருத்துக்கள் மற்றும் மனித வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் ஆகியவற்றினால் திருவள்ளுவர் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. திருக்குறள் ஒரு தமிழ் நூல் என்பதால் திருவள்ளுவர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினதும் அடையாளமாக கருதப்படுகின்றார். “1330 பாடல்களைக் கொண்டுள்ள திருக்குறளில் எந்த ஒரு இடத்திலும் தனித்த ஒரு இனம் சார்ந்தோ – மதம் சார்ந்தோ –  ஒரு இனக் குழுமம் சார்ந்தோ –  சாதி சார்ந்தோ – எந்த குறிப்புகளும் இல்லை” என்பதே திருக்குறள் இன்று உலகப் பொதுமறை என கொண்டாடப்படுவதற்கான மிக முக்கியமான காரணமாகும்.

இப்படியாக சிறப்பு கொண்ட திருவள்ளுவரின் சிலை இன்று காவி அடிக்கப்பட்ட நிலையில்  யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று பட்டையுடன் ஒரு விதமான காவி வர்ணத்துடனான ஆடையை அணிந்து கொண்டு  காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் திருவள்ளுவர். இந்த நிலை இன்னும் தீவிரம் அடையப் போகின்றது என்பது ஆக கவலையான விடயம். இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்தியாவில் இந்துத்துவாவாதிகள் கோமியம் என மாட்டு மூத்திரத்தை குடிப்பது போல இலங்கை தமிழர்களும் தங்களை இந்துத்துவாவாதிகள் என – இந்துக்கள் என நிரூபிப்பதற்காக மாட்டு மூத்திரத்தை  குடிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

இந்தியாவில் மிகத்தீவிரத்தன்மையை எட்டியுள்ள இந்துத்துவாவாதம் தமிழ்நாட்டில் மிக வேகமாகவும் – மிக ஆழமாகவும் ஊடுருவியுள்ள நிலையில் அதனுடைய தாக்கம் இன்று இலங்கையையும் குறிப்பாக இலங்கையின் தமிழர் பகுதியையும் பற்றி பிடிக்க ஆரம்பித்துள்ளது. முக்கியமாக இலங்கையில் இந்துத்துவா கருத்துக்களை காவிச் செல்வோரில்  பெரும்பாலானோர் தமிழ் தேசியவாதிகளாக காணப்படுவது மிகப்பெரிய அபத்தமாகியும் உள்ளது. அதாவது இலங்கையில் இந்துத்துவா செல்வாக்கை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டில் பயணித்து இலங்கை தமிழர்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கப் போகிறோம் என்பது போன்றதான பாணியிலும் – தமிழர் உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்து சமயம் ஒன்றை ஒரே தீர்வு எனவும் இந்த கண்மூடித்தனமான தேசியவாதிகளும் – இந்துத்துவாவாதிகள் பகற் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் அதீத எழுச்சி எவ்வாறு தமிழ்நாட்டை பாதித்து தமிழரின் வரலாற்றை காவி மயப்படுத்திக் கொண்டிருக்கின்றதோ அதே நிலை இலங்கையிலும் குறிப்பாக தமிழர் பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. இதன்  நீட்சியாகவே அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவரான அண்ணாமலை  அவர்களின் இலங்கை வருகையை குறிப்பிட முடியும். இன்று மட்டுமல்ல பிரித்தானியர் இலங்கையை விட்டு சென்ற காலம் தொடங்கி இன்று வரை இலங்கையை பகடை காயாக பயன்படுத்தி வரும் இந்தியாவின் அரசாங்கங்கள் தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காவும் – தென்னாசியாவில் இந்தியாவின் ஏகாதிபத்திய வாத வளர்ச்சிக்காகவும் பல செயல்பாடுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றன.  அதன் ஒரு கட்டமாகவே இலங்கை தமிழர்களை தன்னுடைய ஒரு துருப்புச் சீட்டாக இந்தியாவில் பதவியேற்ற அரசாங்கங்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இது தெரிந்திருந்தும் கூட இலங்கையின் தமிழ் தேசியம் பேசிய தலைவர்கள் இந்தியா மட்டுமே இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் என்கின்ற நிலையில் மடிப்பிச்சை  கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு புதிய வடிவமே இலங்கையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்துத்துவாவாதமாகும்.

இந்த இந்துத்துவவாதிகள் இலங்கை தமிழர்களுக்கு இடையே மதரீதியான சாதிய ரீதியான முரண்பாடுகளைத் தூண்டிவிடுகின்றது. இலங்கையில் இதுவரை காலமும் காணப்பட்டு வரும் இனம் சார்ந்த முரண்பாட்டை மதம் சார்ந்து மாற்ற முற்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவான உண்மை. இந்தியாவில் எவ்வாறு இந்துத்துவா கட்சிகள் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை விதைத்து தொடர்ச்சியாக மதக்கலவரங்களை மேற்கொண்டு அதனூடாக அரசியல் லாபமிட்டுக் கொண்டிருக்கின்றனரோ அதே வடிவம் இலங்கையின் தமிழர் பகுதிகளிலும் இன்று உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.  அண்மையில் திருக்கேதீஸ்வரம் பகுதியில் ஏற்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் இந்து சமயத்தவர்களுக்கும் இடையிலான முரண்பாடு கூட இதனுடைய ஒரு தொடர்ச்சியே.

இது மட்டுமல்ல இலங்கையில் தமிழர் வாழும் பல பகுதிகளிலும் இன்று இரவோடு இரவாக முளைத்து கொண்டிருக்கும் சிவலிங்கங்கள் கூட இந்த இந்துத்துவாவாதிகளினுடைய செயல்பாடுகளே. ஏற்கனவே 30 வருடங்கள் சிங்களவர்களுடனான இனப்போராக முடிவடைந்துள்ள நிலையில் இன்று தமிழர் என்கின்ற இனத்துக்குள்ளேயே மத போர் ஒன்றை இந்த இந்துத்துவாவாதிகள் உருவாக்க முற்படுகின்றனர்.

குறிப்பாக நேற்று வெளியிடப்பட்டிருந்த அறிக்கை ஒன்றில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 2000 வரையிலான கர்ப்பிணிப் பெண்கள் வறுமைக் கோட்டுக்குள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதுபோல் பிறந்த 50 நாட்களேயான ஒரு குழந்தை மந்த போசணை நிமித்தம் உயிரிழந்துள்ளது. அதுபோல அண்மைய காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாது தவிக்கின்ற பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாடசாலை கல்வியை கைவிடும் ஒரு துர்பாக்கிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவையும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற – நாளாந்த செய்திகளில் நாம் காண்கின்ற மிக முக்கியமான அவல நிலையே. இவர்களுக்கு உதவி செய்யத்தான் இவர்கள் யாருக்கும் மனதில்லை. இதை விடுத்து கடவுள்களுக்கு சிலை வைத்து மனிதர்களை காபட்பாற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள் இந்த இந்துத்துவாவாதிகள்.

ஆணையிறவில் பல கோடிகள் செலவில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நடராஜர் சிலை, சந்திக்கு சந்தி முளைத்துக் கொண்டிருக்கும் புதிய கோயில்கள், யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை இந்துத்துவாவாதிகள் இலங்கையில் தமிழ் தேசியத்தை நிலை நாட்டுகிறோம் எனக் கூறி இந்தியாவில் காணப்படும் மதவாத அரசியலை இலங்கையின் தமிழர் பகுதியில் புகுத்துவதற்கு மிக கடினமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களே ஆகப்பெரிய துணையாக இருக்கிறார்கள். இதன் உச்சகட்ட அநியாயம் இந்த இந்துத்துவாதிகளை நம்பி புலம்பெயர்  தேசங்களில் இருந்து கோயில்களை கட்டுவதற்காக கோடிக்கணக்கான பணம் கொட்டப்படுகின்றதாகும்.

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கின்ற நிகழ்வில் உரையாற்றிய திரு. ஆறுதிருமுருகன் இதனை அவர் வாயினாலே ஒத்துக் கொண்டிருந்தார். அங்கு பேசிய அவர் கடவுளின் அருளால் புலம்பெயர் தேசங்களில் வாழக்கூடிய தமிழர்களின் இடத்தில் ஒரு சக்தி பிறந்திருக்கிறது. அந்த சக்தியின் ஊடாக இங்கு கோடானு கோடியை கொடுத்து பல கோயில்களை கட்டுகிறார்கள்,” என பெருமையாக கூறியிருந்தார்.

இந்த இந்துத்துவாவாதிகள் தொடர்பில் தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தருணம் உருவாகியுள்ளது. இந்தியாவில் இந்துத்துவாவாதம் தமிழ் மொழியின் இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகி உள்ள நிலையில் இலங்கையிலும் இந்த நிலை நீடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகரித்துள்ளன. ஏற்கனவே பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து உரிமைகளை பாதுகாப்பதற்காக தமிழினம் ஏதோ ஒரு விதமாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இந்துத்துவவாதிகளின் வருகை  வடக்கு – கிழக்கில்  இருக்கக்கூடிய தமிழர்களிடம் புதிய பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் ஊடாகவும் அரசியல் லாபமீட்ட முனையும் இந்தியாவிற்கு துணை போகுமே தவிர தமிழர் பகுதிகளில் எந்த ஒரு ஆரோக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை.

 

“இலங்கைக்கே நெல் வழங்கும் நிலமாக வடக்கை மாற்றுவேன் என கூறிய ஜனாதிபதி ரணில்” – நெல் உலர வைக்க கூட தளம் இல்லாமல் திணறும் கிளிநொச்சி விவசாயிகள்!

இலங்கையின் நெல் விவசாய உற்பத்தியை பொருத்தவரையில் கனிசமானளவான உற்பத்தியை வழங்குகின்ற பகுதியாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது. இரணைமடு குளமும் அதனோடு இணைந்த மண்வளமும் இப்பகுதியில் அதிகப்படியான நெல் உற்பத்திக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

முப்பது வருட போர்க்காலத்தில் கூட விவசாயம் நல்ல நிலையில் நடைபெற்ற நிலமாக கிளிநொச்சி காணப்படுகின்றது.

அண்மைய நாட்களில் நெல் அறுவடை முடிவடைந்துள்ளதால் கிளிநொச்சி மாவட்டத்தின் தெருக்களிலும் – புதிய பேருந்து நிலையத்திலும் (இயங்காது உள்ளது) நெல் காயப்போடுவதை அவதானிக்க முடிகின்றது.

இது இலங்கையின் பல பகுதிகளிலும் தொடர்கின்ற அவஸ்தை தான்.

உற்பத்தி செலவு , உரம் தொடர்பான செலவு, அறுவடை நேரம் பெய்த மழை அழித்த செலவு என விவசாயிகள் வாழ்க்கை மிக நட்டமான சூழலில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இவை போக நெல் உலர வைப்பதற்கான தளம் இல்லாமல் தமது அறுவடை நெல்லை மூட்டைகளாக்கி கட்டிக்கொண்டு பல கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள பிரதான பாதைகளுக்கு கொண்டு செல்வதற்குள் விவசாயிகளுக்கு இன்னும் பெரிதான செலவுகள் ஏற்படுகின்றன.

கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பாதை தளத்தில் நெல்லை காயவைத்து விட்டு அமர்ந்திருக்கும் விவசாயிகள் சிலரிடம் நிலையை விசாரித்தால் அழாத குறையாக சுமையை இறக்கி வைக்கிறார்கள். ” உள்ளதே நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்குள் இயற்கையும் வாட்டி விடுகிறது. அறுவடை செய்த நெல்லை எனது கிராமத்தில் காய வைக்க நெல் தளம் வசதியாக – பெரிதாக இல்லை. ஊரில் இருக்கிற தளத்திலும் ஒருவர் காயவைக்கவே போதுமானது. வேறு வழியில்லாமல் இங்கு வரவேண்டியுள்ளது. இதற்கு பிரிதான செலவு. டிரக்டருக்கு தனியான காசு – உதவிக்கு வர்ர கூலிக்கு தனியான காசு – ஒரு நாள் முழுசா உழைப்பு இல்லாம இங்க காத்துக்கிடக்கனும். இப்படி நிறைய பிரச்சனைகள். மரத்தால விழுந்தவன மாடு மிதிச்சது போலத்தான் நம்ம நிலமை. இவ்வளவு கஷ்டத்துக்குள்ள நெல்லை விதைச்சு அறுவடை செய்து முடிஞ்சா காய வைக்குறதுக்காக படும் பாடு பெரும்பாடா இருக்குது. காய வைக்க கொண்டு வர்ர நெல் குறிப்பிட்டளவு சேதமாகிடுது. ரோட்டில காயப்போடுறதால நிறைய நெல் வீணாகுது. வேகமா ஒரு தளம் எல்லாருக்குமானதா அமைச்சு தந்தா நல்லம்”  என கூறி முடித்தார் அங்குள்ள பெரியவர்.

அண்மையில் கிளிநொச்சி வந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவசாயிகளை சந்தித்து விட்டு இலங்கைக்கே நெல் வழங்கும் நிலமாக கிளிநொச்சியை மீண்டும் மாற்றுவேன் என கூறிவிட்டு சென்றுள்ள நிலையில் கிளிநொச்சி விவசாயிகள் படும் அவஸ்தை மிக மோசமானதாக மாறியுள்ளது.

முக்கியமாக கிளிநொச்சி; யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துடன் இணைந்துள்ளதால் பெரும்பாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்தே பாராளுமன்றம் செல்வோர் தொகை அதிகம் என்பதால் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் பிரச்சினைகளை பேச யாருமே இல்லை. கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என பெயர் குறிப்பிடப்படும் சிலரும் புலி அரசியல் பேசவே நேரம் சரியாக உள்ளது. பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினைகளை கொண்டு செல்வதாக தெரியவில்லை.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரோ – விவசாய திணைக்களமோ இது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரிவதில்லை.

இலங்கை வரலாற்று காலத்தில் கீழைத்தேய தானியகளஞ்சியம் என குறிப்பிடப்பட்டதாக பாடப்புத்தகங்களில் தடித்த எழுத்துக்களில் மேற்கோள் காட்டுவதால் இலங்கையின் விவசாயம் வளரப்போவதில்லை.

ஒரு காலத்தில் அயல் நாடுகளுக்கு எல்லாம் நெல் வழங்கிய நாம் இன்று சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் நெல் கடன் வாங்கி கொண்டிருக்கின்றோம். இந்த நிலையை மாற்ற ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனித்தனியான கவனிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும்.

வடக்கின் பல இடங்களிலும் இதே பிரச்சினை நீடிக்கின்றது. விரைந்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படுத்தப்படுகின்ற தன்னிறைவே நாட்டின் பொருளாதார அடித்தளம் என்பதை உணர்ந்து இலங்கையின் அரசாங்கமும் – மாவட்ட செயலகங்களும் செயற்பட வேண்டும்.

இன்று முதல் மின்வெட்டு இல்லை !

நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நிறைவடையும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையில் நாட்டில் மின்வெட்டு முன்னெடுக்கப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எந்தக்கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு இடமில்லை – விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு !

விளையாட்டுச் சட்டத்தில் பல புதிய விதிமுறைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாத வகையில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டுக் கழகங்களின் எந்தவொரு அதிகாரி அல்லது குழு உறுப்பினரின் அதிகபட்ச வயதை 70 ஆக மாற்றவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விளையாட்டுச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அவர் இந்த திருத்தங்களை கொண்டுவந்துள்ளார்.

 

5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை !

தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளார்.

அவுஸ்ரேலிய பெண் மீது பாலியல் வன்கொடுமை – உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க கைது !

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் நாளை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 29 வயதுடைய பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில், 31 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் டேட்டிங் செயலி மூலம் குறித்த பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண தொடர் தோல்வி – ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி ராஜினாமா !

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடருக்கான அணி தயார் நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அணி நிர்வாகத்துடனான சில கருத்து வேறுபாடுகளும் அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.