செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார்

09-thiruvalluvar.jpgபெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார். விழா மேடையில் இருந்தபடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிலையை கருணாநிதி திறந்து வைத்தார். விழாவுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா தலைமை தாங்கினார்.

முதல்வர் கருணாநிதியுடன் அவரது மனைவி தயாளு அம்மாளும் விழாவில் பங்கேற்றார். அவருக்கு விநாயகர் சிலையை முதல்வர் எதியூரப்பா பரிசளித்தார். சில கன்னட அமைப்புகள் விடுத்த பந்த் அழைப்புக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால் பெங்களூரில் இயல்பு நிலை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 45 உதவி போலீஸ் கமிஷனர்கள், 200 இன்ஸ்பெக்டர்கள், 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையி்ல் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு இருக்கும் பூங்காவை சுற்றியும், விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த விழாவையொட்டி எம்.ஜி.ரோடு, அல்சூர், சிவாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் தமிழர்கள், திமுகவினர் குவிந்தனர். இவர்களது வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ரோட்டைத் தாண்டிச் செல்ல முடியாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே சிலை திறப்பை எதிர்த்து நகரின் சில இடங்களில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் மல்லேஸ்வரம், மூடுல்பாளையா உள்ளிட்ட சில பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். மத்திகரே பகுதியில் சிலர் கைகளை பிளேடால் அறுத்து ரத்தத்தை எடுத்து சிலை திறப்புக்கு எதிராக பேப்பரில் எழுதி போராட்டம் நடத்தினர்.

முன்னதாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும் ஏற்பாடுகளையும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா நேற்றிரவு நேரில் வந்து பார்வையிட்டார். சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்த கன்னட ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெளடா, கன்னட சளுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகனை தமிழிலும் பாட வைப்பேன்- ரகுமான்

09-rahman.jpgஎன் மகன் ஆலிம் நிச்சயம் தமிழ்ப் படத்திலும் பாடுவான், என்று இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் கூறினார்.  சரிகம ஆடியோ நிறுவனம், ‘ஊலலலா’ எனும் இசை ஆல்பத்தை தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆல்பத்தின் முதல் பிரதியை வெளியிட, இயக்குநர் கவுதம் மேனன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, இந்த ஆல்பத்தில் பாடியவர்களுக்கும், இசையமைத்தவர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஒற்றுமையாக இருங்கள். சந்தோஷமாக இருங்கள், என்றார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: உங்கள் மகன் ஒரு ‘ஹாலிவுட்’ படத்தில் பாடியிருக்கிறான். அவனை தமிழ் படத்திலும் பாட வைக்கும் எண்ணம் இருக்கிறதா?

என் மகன் ஆலிம் ரஹ்மானுக்கு ஆறரை வயது ஆகிறது. இப்போதுதான் இசை கற்று வருகிறான். ஹாலிவுட் படத்தில், ஒரு பாட்டு பாடியிருப்பது உண்மைதான். அடுத்து தமிழ் படத்திலும் அவனை பாட வைக்கும் எண்ணம் இருக்கிறது. நிச்சயமாக தமிழ் படத்தில் பாடுவான், என்றார் ரஹ்மான்.

நிகழ்ச்சியில் சரிகம நிறுவனத்தின் பிஆர் விஜயலட்சுமி, கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை நிகில் முருகன் செய்திருந்தார்

சென்னையில் தமிழர் பிரகடன பேரணி

0-pazha-nedumaran.jpgஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனப் பேரணி சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்கும் பேரணி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் வருகிற 20-ந்தேதி நடத்தப்படுகிறது. எனது தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இலங்கை அரசின், வடக்கின் வசந்தம் திட்டத்தை செயல்படுத்த வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் தலைமையிலான குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதித்திருந்தது. நாங்கள் சுவாமிநாதனைச் சந்தித்து இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறியபின்னர் அவர் இலங்கை செல்வதை தவிர்த்து விட்டார்.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஒழுங்காக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பவேண்டும் என்றார் நெடுமாறன்.

மலையகத்தில் காற்றுடன் கூடிய மழை

rain-1.jpgமலை யகத்தில் கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் இரவு வேளைகளிலும் மழை பெய்து வருவதோடு காற்றும் வீசுவதால் கடும் குளிரும் காணப்படுகின்றது.

கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக மலையகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மவுசாகலை, காசல்ரீ, கெனியன், நோட்டன் பிரிட்ஜ், விமல சுரேந்திரா உட்பட விக்டோரியா, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

எனினும் இந்த ஆண்டின் ஆடி மாதத்தில் அதிக மழை பெய்து வருவதும் ஆடிக் காற்று பலமாக வீசுவதும் குறிப்பிடத்தக்கது.

கல்குவாரி வெடி விபத்தில் மூவர் பலி

ranjith-gunasekara.jpgதிவுல பிட்டிய, கோப்புவத்த பகுதியிலமைந்துள்ள கல்குவாரியொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் மற்றுமொருவர் கம்பஹா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

நேற்றுக் காலை சுமார் 10.30 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

மேற்படி கல்குவாரியில் கல் உடைப்பதற்காக வைத்த பொறி வெடி வெடித்துச் சிதறிய போது பாரிய கற்களும் வெடித்துச் சிதறி அங்கு கடமையிலீடுபட்டிருந்தவர்கள் மீது விழுந்த போதே இவர்கள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

”வடக்கின் வசந்தத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்

இலங்கை அரசின் வடக்கின் வசந்தம் திட்டத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலங்கையில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். அங்கு சகஜ நிலை திரும்பும் வரை நான் இலங்கைக்குப் போக மாட்டேன் என்று விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் கீழ் விவசாயப் பணிகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளில் உதவுவதற்காக எம்.எஸ். சுவாமிநாதனை அழைத்திருந்தார் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. இதற்காக சுவாமிநாதனும் கொழும்பு சென்று ராஜபக்ஷவுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழர்கள் அனைவரையும் முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளிச் சிறைச்சாலையில் இலங்கை அரசு அடைத்து வைத்துள்ளது. இந்த நிலையில், நிலங்களைச் சீரமைத்து அங்கு யார் விவசாயம் பார்க்கப் போகிறார்கள். சிங்களவர்களுக்கு ஆதரவான திட்டம் இது. இதற்கு சுவாமிநாதன் உதவக்கூடாது. மீறினால் சுவாமிநாதன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இயக்குநர் சீமான் கடுமையாக எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார் சுவாமிநாதன். அப்போது அவர் கூறுகையில்;

இலங்கையில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் தன்மானம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் பல இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 3 இலட்சம் பேர் வவுனியாவில் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் மீண்டும் தங்களது இடங்களுக்குச் சென்றால் தான் விவசாயம் மற்றும் மீன்பிடிப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட முடியும். இலங்கைத் தமிழர்கள் நல்ல விவசாயிகள்.

இதற்கிடையே இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு புனரமைப்பு ஏற்படுத்த இந்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. உடனடித் தேவைக்கும் மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்தவும் இந்த நிதி பயன்படும். இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கையில் வேளாண்மையையும் மீன்பிடிப்புத் தொழிலையும் மீண்டும் கொண்டு வரவும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் கண்ணியத்துடன் வாழவும் வேளாண்மையில் சிறந்து விளங்கவும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட எண்ணியுள்ளது.

இது தொடர்பாக இந்த 2 தொழில்களையும் வளப்படுத்துவதற்காக உரிய பயிற்சியும் தொழில்நுட்ப உதவியும் செய்வதற்கு இந்திய அரசு உறுதியாக உள்ளது. அந்த வகையில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்காக இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொழில்நுட்ப உதவிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் மத்திய வேளாண் அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பெங்களூர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், மதுரை டான் நிறுவனம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

அக்டோபர் மாதம் இலங்கையில் தொடங்கவிருக்கும் மகா பருவத்தில் இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் மீண்டும் வேளாண்மையில் ஈடுபடுவதற்குத் தேவையான வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை இந்தக் குழு திரட்டித் தருவதுதான் இந்தக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். தற்போது இலங்கையில் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகள் மீண்டும் துரிதமாக மலருவதற்கு அங்குள்ள அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லை. எனவே, இலங்கையில் இணக்கமான சூழ்நிலை உருவாகும் வரை இந்தக் குழுவில் நான் கலந்துகொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடந்த மாதம் சர்வதேச நீர் மேலாண்மை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகவே இலங்கைக்குச் சென்றேன். வேறு எதற்காகவும் அங்கு செல்லவில்லை. இலங்கை அரசு அறிவித்திருக்கும் வடக்கின் வசந்தம் திட்டத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை.

பாதாள உலகத்தாரை பாதுகாக்கும் கடப்பாடு பொலிஸாருக்கு இல்லை – ரஞ்சித் குணசேகர

ranjith-gunasekara.jpgபாதாள உலகத்தினரையும் குற்றவாளிகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்குக் கிடையாதென தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர மரணம் தான் சட்ட ரீதியான தண்டனை என்றால் அதை அவர்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டுமெனவும் கூறினார்.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே ரஞ்சித் குணசேகர இவ்வாறு கூறினார்.

“பாதாள உலகத்தினர் பொலிஸாரினால் சட்ட ரீதியாகவே கொல்லப்படுகின்றனர். அதாவது பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும் போது பொலிஸார் தற்பாதுகாப்புக் கருதி பதில் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. அதில் மாற்று வழிக்கு இடமில்லை. தற்பாதுகாப்புக் கருதி தாக்குதல் நடத்த சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கிறது.

அது மட்டுமல்லாது பாதாள உலகத்தினரையும் குற்றவாளிகளையும் பாதுகாக்கப் பொலிஸார் கட்டுப்படவில்லை. மரணம் தான் சட்ட ரீதியான தண்டனை என்றால் அதை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். பாதாள உலகத்தினரைப் பாதுகாத்து பொது மக்களை ஆபத்தில் தள்ள நாம் தயாரில்லை’ என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது – பொலிஸ் அதிகாரி தெரிவிப்பு

மஸ்கெலியா நகர் வர்த்தகர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.எஸ். பத்திரனவின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மஸ்கெலியா பீ.எம்.டி. கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

பொறுப்பதிகாரி சி.எஸ்.பத்திரன அங்கு உரையாற்றுகையில்;

பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், சிறுவர்கள் மத்தியிலும், தற்போது பான்பராக், என்சி மேலும் போதை தரக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பாடசாலை அதிபர்களினால் ஜனாதிபதிக்கு புகார் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது சம்பந்தமாக இந்நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. ஆகையால் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்றும் சிறுவர்களிடம் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களை விற்பனை செய்து எதிர்கால சந்ததியை அழித் தொழிக்க வேண்டாம் என சகல வர்த்தகர்களிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் பான்பராக், என்சி போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவ்வாறு விற்பனை செய்வோரை இனம்கண்டு உடன் தகவல் தருமாறும் கேட்டுக் கொண்டார்.

ராஜீவ் படுகொலை செய்யப்படவிருந்தமை பத்மநாதனுக்கு முன்கூட்டியே தெரியும்? – இந்திய ஊடகம் ஊகம்

pathmanathan.jpgஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படவிருந்தமை தொடர்பாக விடுதலைப்புலிகளின் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தலைவர் செல்வராஜா பத்மநாதனுக்கு முன்கூட்டியே தெரியும் எனவும் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் ஏற்படுத்திய புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இந்திய தலைமைத்துவத்தை விரைவில் இலக்கு வைப்பார்கள் என 1990 நவம்பரில் செல்வராஜா பத்மநாதன் அல்லது கே.பி. தமிழ் நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர் ஒருவருக்குத் தெரிவித்ததாகவும் ராஜீவ்காந்தியின் பெயரை அவர் குறிப்பிட்டிருக்கவில்லை எனவும் “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.

1991 மே 21 இல் சென்னைக்கருகே தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரியால் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருந்தார். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பேயே வெளிநாட்டிலிருந்து தொலைபேசியூடாக இந்தத் தகவலை கே.பி. தெரிவித்திருந்ததாக எம்.ஆர்.நாராயண் சுவாமி “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் எழுதியுள்ளார்.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கே.பி. மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன், அந்தக் கொலையில் அவர் நேரடியாக தொடர்புபட்டிருக்கவில்லை. காந்தி படுகொலை தொடர்பான பாரிய சதியை தற்போதும் விசாரணை செய்து கொண்டு வரும் பல் ஒழுங்கமைப்பு கண்காணிப்பு அதிகார சபையின் கண்களுக்கு இவர் ஒரு சந்தேக நபராக மட்டுமேயுள்ளார்.

படுகொலை தொடர்பாக முன்கூட்டியே கே.பி. அறிந்திருந்தமை குறித்து இந்திய பாதுகாப்பு முகவரமைப்புகள் கவனம் செலுத்தியிருந்தன. காந்தியின் படுகொலை தொடர்பாக ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு கே.பி.க்குத் தெரியவந்தது என்பது பற்றிய கேள்விகள் எழுந்திருந்தன.

விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவின் முக்கியஸ்தராக கே.பி.யிருந்ததால் அவரில் புலிகள் முழுமையாக தங்கியிருக்க வேண்டியதாக இருந்தது என்று ஒரு தர்க்க ரீதியான விளக்கம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த மேயில் மரணமடைந்ததையடுத்து புலிகளின் தலைவராக பத்மநாதன் அறிவிக்கப்பட்டிருந்தார். ராஜீவ்காந்தியின் கொலையால் சர்வதேச ரீதயிலான ஆயுதக் கொள்வனவு மற்றும் சர்வதேச வலைப்பின்னல் அமைப்பிற்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதி முன்கூட்டியே கே.பி. அந்த விடயம் குறித்து அறிந்திருக்கக் கூடிய தேவையிருப்பதாக புலிகள் கருதியிருக்கக் கூடும்.

ராஜீவ்காந்தியின் படுகொலை தொடர்பாக முன் கூட்டியே அறிந்திருந்த புலிகளின் மற்றொரு சிரேஷ்ட உறுப்பினர் திருச்சி சாந்தனாகும். அவர் 1990 1991 காலப்பகுதியில் தமிழ் நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்.

படுகொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள், சிங்கப்பூர் கிரனேற் என்பவை தொடர்பாக கே.பி.யை விசாரணை செய்வதன் மூலம் இந்தியாவிற்கு அதிகளவு பயனுள்ள தகவல்கள் கிடைக்கக் கூடும். எவ்வாறாயினும் கே.பி.யை விசாரணை செய்வது தொடர்பாக தனது பாதுகாப்பு முகவர் அமைப்புகளிடம் கேட்பதற்கு இந்தியா முடிவு செய்யுமானால் அந்த இலக்கிற்குத் தேர்ந்தெடுப்பவர்கள் விடுதலைப் புலிகளின் விவகாரம் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் தாழ்ந்த மட்டத்திலான அதிகாரிகள் குழுவொன்று உள்ளது. அக்குழு சேவையாற்றிக் கொண்டும் இருக்கிறது. ஓய்வு பெற்றும் உள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகள் தொடர்பாக பல தசாப்த காலம் தொடர்பாக பல விடயங்களை அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், கடந்த காலத்தில் தகுதிவாய்ந்த பலர் அடிக்கடி ஓரங்கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. 1983 இலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டியெழுப்புவதற்கு கே.பி. ஆற்றிய பங்களிப்பின் சிறிய பகுதியாகவே காந்தி கொலை தொடர்பாக அவரின் தொடர்பு காணப்படுகின்றது.

பிரபாகரன் இல்லாமல் விடுதலைப் புலிகள் இல்லை. கே.பி. ஒருபோதும் இராணுவ பயிற்சி பெற்றவர் அல்ல. அவர் இந்தியாவிலிருந்த போது 1984 இல் புலிகள் மட்டத்தில் யுத்த உபகரணங்களை உலகளாவிய ரீதியில் பெற்று அவற்றைக் கொண்டு செல்வதற்கு இரகசியக் குழுவொன்றை உருவாக்க பிரபாகரன் தீர்மானித்திருந்தார். அந்த வேலைக்கு கே.பி. தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அந்தத் தருணத்தில் கே.பி. வளர்ச்சியடைந்தார். மோசடி மற்றும் மறைவாகச் செயற்படுதல் என்பனவற்றில் இயல்பாகவே ஆற்றலுள்ளவராக இருந்த இந்த மனிதர் விரைவில் பல்தரப்பு அடையாளத்துவங்கள் கொண்டவராக தன்னை ஏற்படுத்திக் கொண்டார். கடவுச் சீட்டுகளையும் (இந்தியா உட்பட) பெற்றுக் கொண்டிருந்தார். பின்னர் படிப்படியாக புலிகளின் ஆயுதக் கொள்வனவு பிரிவைக் கட்டியெழுப்பினார். பல கம்பனிகளை உருவாக்கினார். (எஜமானன் அவரே) பல நாடுகளில் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

தங்கம், போதைவஸ்து, கடத்தல் நடவடிக்கைகளுக்காக இந்தக் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன. அந்தப் பணத்தைக் கொண்டு யுத்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு அவர் பயன்படுத்தினார். 1980 களில் இந்தியாவில் தமிழ் நாட்டில் பாற்பண்ணை ஒன்றை இரகசியமான முறையில் நடத்தி வந்தார். அத்துடன், விடுதலைப் புலிகளுக்காக இரகசிய கப்பல் போக்குவரத்துக் கட்டமைப்பையும் அவர் உருவாக்கியிருந்தார்.

அதன் மூலம் ஆயுதம் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. முற்றிலும் இரகசியமான முறையில் அவர் இயங்கி வந்தார். பிரபாகரனுக்கு மட்டுமே விடயங்களைத் தெரிவித்து வந்தார். கே.பி.யின் மூலம் விடுதலைப் புலிகள் ஆயிரணக்கணக்கான தொன்கள் ஆயுதங்களைப் பெற்றது, நவீன பாதுகாப்பு நிலைமைகள், தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், சினைப்பர் துப்பாக்கிகள், மோட்டார்கள், ஆர்.பி.ஜி.க்கள், இரவில் பார்ப்பதற்கான உபகரணங்கள், கண்டு பிடிப்புக் கருவிகள், கண்ணாடி விலைப் படகுகள், நவீன வானொலி, கம்பியில்லா தொலைத் தொடர்புகள் போன்ற பல முன்னேற்றகரமான பாதுகாப்பு முறைமைகளும் இவற்றில் உள்ளடங்கும்.

கடந்த சில வருடங்களாக மலேசியாவிலே இவர் அறியப்பட்டவராக இருந்தார். 19801990 களில் இவர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். பல்வேறு அடையாளங்களுடன் இவர் லெபனான், தாய்லாந்து கம்போடியா கம்போடியா எல்லை, பிரான்ஸ், பிரிட்டன், சுவீடன், கிறீஸ், சைப்பிரஸ், கொங்கொங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், மியன்மார், மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

2006 இல் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பிரிட்டனில் மரணமடைந்த போது, கே.பி. அங்கிருந்தார். விடுதலைப்புலிகள் தமது முதலாவது சிறிய ரக விமானத்தைப் பெற்றுக் கொண்டமை கே.பி.யின் மூலமேயாகும். எவ்வாறாயினும் கே.பி.யின் படிப்படியான வளர்ச்சி புலிகளுக்குள் பொறாமையை ஏற்படுத்தியது.

2003 தொடக்கம் பிரபாகரன் அவரை ஓரங்கட்டியிருந்தார். அவரின் இடத்திற்கு தனது மற்றொரு விசுவாசியான காஸ்ட்ரோவை கொண்டு வந்தார். ஆனால், கே.பி.க்குள்ள இயற்கையான ஆற்றல்களுக்கு அவர் பொருத்தமற்றவராக இருக்கவில்லை. ஆயினும் புலிகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்ததையடுத்து பிரபாகரன் நிலைமையை உணர்ந்து கே.பி.யை மீள பணிகளில் ஈடுபடுத்தினார். காலம் மிகவும் கடந்து விட்டதாக அமைந்தது.

கே.பி.யின் சிறகுகள் 6 வருடங்களுக்கு முன்னர் வெட்டப்படாதிருந்திருக்குமானால் பிரபாகரன் இப்போதும் இருந்திருக்கக் கூடும் என்று புலிகளின் அவதானிகள் பலர் நம்புகின்றனர்.

கனடிய அமைச்சர் இலங்கை வருகை

கனடாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பிவேர்லே ஜே.ஒடா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

கனடாவின் அபிவிருத்தித் திட்ட பங்காளிகளை சந்திப்பதற்காகவும் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்யவுமே அவர் வருகைதந்திருப்பதாகக் கனடிய ஊடகங்கள் தெரிவித்தன.

கனடிய ஊடகவியலாளர்களையும் ஒடா நேற்று வெள்ளிக்கிழமை சந்திக்கவிருந்தார்