உள்ளூராட்சி மன்றங்களினால் பல செயற்திட்டங்கள் நடைபெறுகின்றது. ஆனால், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கே இருக்கின்றது என்று அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.எம்.இர்ஷாத் தெரிவித்தார்.
ஆசிய நிலையமும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் இணைந்து மாகாண உள்ளூராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு “உள்ளூராட்சியில் ஊடகங்களின் வகிபங்கு’ எனும் தலைப்பிலான செயலமர்வு அம்பாறை மொன்டி ஹோட்டலில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் லயனல் குருகே தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.எம்.இர்ஷாத் தொடர்ந்து பேசுகையில்; உள்ளூராட்சி மன்றங்கள் மக்களின் தேவைகளை இனங்கண்டு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அச் செயற்பாடுகள் ஏனைய பிரதேச மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
இன்று இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல, நாட்டிலுள்ள மக்களுக்கு இருக்கின்ற பாரியதும் முக்கியமானதுமான பிரச்சினை குப்பை அகற்றல். அந்தப் பணியை திண்மக்கழிவு முகாமைத்துவம் எனும் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றது.
அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய மகாஓயா,தெய்யத்தைகண்டி பிரதேசத்தில் 30 கிராமங்களுக்கு மிகவும் சிறந்த நீர்விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த செயற்திட்டங்கள் இந்த மாவட்ட மக்களுக்கே தெரியாத நிலையுள்ளது. எனவே, இச் செயற்திட்டங்களை மக்களின் முன் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமானால் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும்.
உள்ளூராட்சி மன்றங்களின் சகல செயற்பாடுகளும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது. ஆனால், அது கிராமிய மட்ட மக்களுக்கோ ஏனைய பிரதேச மக்களுக்கோ தெளிவுபடுத்தப்படுவதில்லை. இந்த மன்றங்கள் பலதரப்பட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஆனால், குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமாயின் அவைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கே இருக்கின்றது.
அந்த வகையில் இந்த மாவட்டத்தில் நூலகங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. நாங்கள் நூலகங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு பல முயற்சி செய்தும் அது பயனளிக்கவில்லை.
இன்று எமது நாட்டை மட்டுமல்ல, சர்வதேச ரீதியாகப் பார்த்தால் தொழில்நுட்ப அறிவும் தொடர்பாடல் நிலை மிகவும் விசாலமான முறையில் பரந்துபட்டுள்ளது. ஆனால், கிராமிய மட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே, கிராமிய மட்டத்திலுள்ள மக்களுக்குத் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கும் செய்திகளைப் பரிமாற்றம் செய்வதற்கும் ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.