செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இந்திய அரசின் 500 கோடியால்; வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தகவல்.

sri-lanka.jpgஇந்தியா வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபா மேலதிக நிதயுதவித் தொகை மூலம் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில். இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபாவை மேலதிகமாக வழங்க முன்வந்துள்ளது.

மடு – தலைமன்னார் மற்றும் ஓமந்தை – பளைக்கிடையிலான ரயில் பாதைகளை புனரமைத்தல்  ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்தல்; யாழ். துரையப்பா விளையாட்டரங்கை புனரமைத்தல் மற்றும்  கலாசார நிலையம் அமைத்தல் போன்றவற்றை இதன் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான திட்ட அறிக்கை விரைவில் இந்தியாவுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன்; இது குறித்து இரு நாடுகளுக்குமிடையில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த தமிழக எம்.பி.க்கள் குழு சர்வதேச சமூகத்திற்கு தெளிவான செய்தியொன்றை முன்வைத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து அவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தமிழக எம்.பி.க்களின் இலங்கை விஜயத்தை அடுத்தே இந்த உதவி கிடைக்கவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்ற வேண்டுமென்பதே தமிழக எம்.பி.க்களின் பிரதான கோரிக்கையாகும்.
அந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 11 அமைச்சர்கள் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளாரஎன அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் நவம்பர்; 7 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் – ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற குழு தெரிவித்திருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஆகஸ்ட் தேர்தலின்  ஆரம்ப கட்ட முடிவுகளில் ஹமீட் கர்சாய்க்கு 55 வீத வாக்குகள் கிடைத்ததாகவும்,  அவரின் பிரதான எதிர் வேட்பாளரான அப்துல்லாவுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் 210 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படக் கூடாது என்று ஐ நா அங்கீகாரம் கொண்ட தேர்தல் புகார் அமைப்பு உத்திரவிட்டதன் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கர்சாய் பெற்ற மொத்த வாக்குகளில் எண்ணிக்கை 50 வீதத்தை விட குறைவாகவே இருந்தது.  இதனால் மறு வாக்கு எண்ணிக்கைகு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கான் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றது என்பது தொடர்பாக சர்வதேச சந்தேகங்களும் அழுத்தங்களும் அதிகமான நிலையில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பொய் செய்தி வெளியிடும் இணையத்தளம் குறித்து மக்களுக்கு அறிவூட்டல்

000lakshman_yapa_abeywardena.jpgபொய்யான செய்திகளை பிரசுரித்து வரும் சில இணையதளங்கள் குறித்து மக்களை அறிவூட்ட உள்ளதாகவும், இவை குறித்த தகவல்கள் அடுத்த வாரம் முதல் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிடவுள்ள தாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா நேற்று தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இலங்கையில் நடைபெற்றதாகக் கூறி பல பொய்யான செய்திகளை சில வெப்தளங்கள் கடந்த சில தினங்களாக வெளியிட்டு வருகின்றன.

பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது

211009proelanco.jpgபுதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிப் பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது! ஒரு இலட்சம் தொகையும், சான்றிதழும் குடியரசுத்தலைவர் வழங்வுள்ளார் !

இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கியங்களில் நல்ல புலமையும் ஆராய்ச்சித் திறனும் கொண்ட இளைஞர்களுக்கு “இளம் அறிஞர் விருது”வை நேற்று அறிவித்துள்ளது. இவ்விருதுக்கு உரியவராகப் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர்மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் மு.இளங்கோவன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் சங்க இலக்கியம்,இலக்கணம் குறித்து எழுதியுள்ள நூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தன.சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைக்குறிப்புகளை விரித்துரைக்கும் ஆய்வுகளைச் செய்துள்ளார்.

 முனைவர் மு.இளங்கோவன் சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடையவர் என்பதுடன் சங்க இலக்கிய நடையில் மாணவப் பருவத்திலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.மாணவராற்றுப்படை(1990) அச்சக ஆற்றுப்படை(1992) என்னும் நூலும், அரங்கேறும் சிலம்புகள்(2004) என்ற மரபுக்கவிதை நூலும் இதற்குச் சான்றுகளாகும்.இவர் எழுதியுள்ள பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் புகழ்பெற்றனவாகும்.
 
சங்க இலக்கியத்தில் ஒன்றான மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நன்னனின் கோட்டையை, நவிரமலையைக் கண்டுபிடித்துப் படத்துடன் இதழ்களிலிலும் இணையத்திலும் வெளியிட்டதால் வெளிநாட்டு அறிஞர்கள் இக்கட்டுரையை உயர்வாக மதிக்கின்றனர்.சங்க காலப் பாரியின் நண்பர் கபிலர் உயிர் துறந்த இடம் தென்பெண்ணையாற்றங்கரையில் உள்ள கபிலர் குன்று என்பதையும் வெளியுலகிற்குக் கொண்டுவந்தார்.சங்க இலக்கியத்தில் இடம்பெறும் இசையைப் பற்றி முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் ஆராய்ச்சி செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி உருவாக்கி வழங்கிய பெரும் பணியில் ஈடுப்பட்டவர்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கூத்து,இசை பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்தவர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இவற்றின் முதற் பதிப்புகளை மின்னூலாக்கி இணையத்தில் வழங்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளவர்.சங்க இலக்கியப் புலவர்கள்,சங்க இலக்கிய ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்களின் வாழ்க்கையை இணையத்தில் ஒருங்குகுறி வடிவில் வெளியிட்டு வருகிறார்.அவ்வகையில் சங்க இலக்கிய ஆய்விலும் பதிப்பிலும் ஈடுப்பட்ட உ.வே.சாமிநாத ஐயர்,பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தி.வே.கோபாலையர், வீ.ப.கா. சுந்தரம், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை இணையத்தில் வெளியிட்டவர்.

சங்க இலக்கிய ஆய்வுகளை இணையம் வழியாக அடுத்த கட்டத்திற்கு உலக அளவில் எடுத்துச் செல்பவர் மு.இளங்கோவன்.எனவே இவர் ஆய்வு முயற்சிகளை இலண்டன் கோல்ட்சுமிது பல்கலைக்கழகம்,மலேசியா பல்கலைக்கழகம்,புத்ரா பல்கலைக்கழகம்(மலேசியா), சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைகழகம்,இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்அறிஞர்கள் பாராட்டி வருகின்றனர்.

 இது தவிர உலக அளவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மு.இளங்கோவனின் இலக்கியம்,இலக்கணத்தை இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர். 

மு.இளங்கோவன் இதுவரை 18 நூல்களை வெளியிட்டுள்ளார்.இவற்றுள் இரண்டு நூல்கள் இவர் பதிப்பித்த நூல்களாகும்.உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்துள்ளார்.தேசிய அளவில் 42 கட்டுரைகளும்,இலக்கிய இதழ்களில் 79 கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழகத்தின் முன்னணி ஏடுகளான தினமணி,தமிழ் ஓசை, செந்தமிழ்ச்செல்வி, சிந்தனையாளன், கண்ணியம் உள்ளிட்ட ஏடுளிலும் திண்ணை, தட்சுதமிழ்,  தமிழ்க்காவல், மின்தமிழ், பதிவுகள்,வார்ப்பு உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுதிவருபவர்.

 சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்து உலக அளவில் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை,முதுகலை தமிழ் படித்தவர். புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தவர். முனைவர் பட்ட ஆய்வினைத் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “பாரதிதாசன் பரம்பரை” என்ற தலைப்பில் நிகழ்த்தி முனைவர்பட்டம் பெற்றவர்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தவர். இந்திய நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இப்பொழுது பணிபுரிந்து வருகிறார்.இவரின் பிறந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூர் ஆகும்.

பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் தேசம்நெற்றின் வாழ்த்துக்கள்

யூனிஸ்கானின் இராஜினாமா நிராகரிப்பு – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

141009younuskhan226.jpg2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை யூனிஸ்கான் கப்டனாக நீடிப்பார். அவரது இராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

யூனிஸ்கான் இராஜினாமா விவகாரம்

சமீபத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த சம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நடந்து இருப்பதாக பாகிஸ்தான் அணி மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது.

சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தான் சட்டசபை கமிட்டி யூனிஸ்கானிடம் விசாரணை நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த யூனிஸ்கான் கப்டன் பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் இராஜினாமா முடிவை கைவிடும்படி வற்புறுத்தினார்.

இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை யூனிஸ்கானிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், அவர் அணித் தேர்வு மற்றும் கப்டன் பதவிக் காலம் குறித்து சில நிபந்தனைகளை விதித்ததாக செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் அளித்த பேட்டியில் கூறியதாவது:- யூனிஸ்கான் இராஜினாமா ஏற்றுக் கெள்ளப்படவில்லை. அவரை கப்டன் பதவியில் இருந்து நீக்குவதில் எந்த நியாயமும் இல்லை.

அவரது எதிர்ப்பு நடவடிக்கையை நான் உணர்கிறேன். நான் அவரது நிலையில் இருந்து இருந்தால் அதனைத் தான் செய்து இருப்பேன். இந்த ஆண்டு ஜனவரி மாத்தில் யூனிஸ்கான் கப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக் காலம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் சில சமயங்களில் கப்டன் பதவிக்கு உத்தரவாதம் தேவைப்படுகிறது.

யூனிஸ்கான் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருந்தால் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை பாகிஸ்தான் அணி கப்டனாக நீடிப்பார். அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார்.

20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளார். யூனிஸ்கான் தேர்வாளர்க ளால் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர் தான் கப்டன் என்பது எங்களது முடிவாகும்.

அவர் கப்டன் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ள சம்மதித்துள்ளார்.

யாழ். குடாவைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் – பயிற்சிகளை முடித்துக் கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள்

யாழ். குடாநாட்டைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் கடமையாற்றுதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்தார். வழக்குகளை நெறிப்படுத்துதல் தொடர்பாக பயிற்சிகளை முடித்துக் கொண்ட 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் நேற்று கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில். ஏ-9 வீதியின் ஊடாக சென்று யாழ். குடா நாட்டைச் சேர்ந்தவர்களை பொலிஸில் இணைத்துக் கொள்வதற்கான தேர்வு நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

கிழக்கை போன்று வடக்கிலுள்ள மக்களும் தமது சொந்த மொழியைப் பயன்படுத்தி பொலிஸாரிடமிருந்து சேவைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ள இது வழிவகுக்கும்.  வடக்கிற்கென 12 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன் அவற்றில் 8 பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கல்லடியில் தமிழ் மொழி பயிற்சிக்கென பொலிஸ் பயிற்சி கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது போன்று வடக்கிலும் பயிற்சி கல்லூரி ஒன்று அமைக்கப்படும்;.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இளங்ககோன், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான அசோக விஜேதிலக்க, லக்கி பீரிஸ், அநுர சேனநாயக்க, பிரசன்ன நாணயக்கார உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

யாழ். பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அமைச்சர்கள் நியமனம் – மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைக் கவனிக்கவென ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் ஒவ்வொரு அமைச்சர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்குத் தலைமை தாங்குவார். யாழ். குடாநாட்டில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நேற்றுக்காலை கச்சேரியில் மாநாடொன்று நடந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில்,  கொழும்பிலிருந்து வருகைதந்த எட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன,  பிரதியமைச்சர்கள் வடிவேல் சுரேஷ், ஹஸைன் பைலா,  மஹிந்த அமரவீர,  பிரேமலால் ஜயசேகர உட்பட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும் இதில் பங்குபற்றினார். மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கவனிக்க வாரா வாரம் கூடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மேற்படி அமைச்சர்கள் அல்லைப்பிட்டி மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவர்களை அழைத்துச் சென்றிருந்தார்.

வடக்கில் 12095 குடும்பங்களைச் சேர்ந்த 41,685 பேர் நாளை மறுதினம் (22) முதல் மீள்குடியேற்றம்

260909srilanka.jpgவன்னி யிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கி இருக்கும் 12 ஆயிரத்து 95 குடும்பங்களைச் சேர்ந்த 41 ஆயிரத்து 685 பேர் அவர்களது சொந்த வாழிடங்களில் நாளை மறுதினம் மீளக் குடியமர்த்தப் படவுள்ளனர்.  வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இவர்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலுமுள்ள பத்து பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 118 கிராம சேவகர் பிரிவுகளில் இம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.

இத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுகளில் இருக்கும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் 2453 குடும்பங்களைச் சேர்ந்த 10017 பேர் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், கிளிநொச்சி மாவட்ட பதில் செயலாளருமான இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டி சுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 30 கிராம சேவகர் பிரிவுகளில் 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16394 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தி லுள்ள வவுனியா, வெங்கலசெட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 2583 குடும்பங்களைச் சேர்ந்த 8643 பேரும், மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னார் மேற்கு, மன்னார் நகர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 2644 குடும்பங்களைச் சேர்ந்த 6631 பேரும் மீளக்குடியமர்த்தப்படவிருக்கின்றனர்.

இம் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட விருக்கும் 118 கிராம சேவகர் பிரிவுகளிலும் கண்ணி வெடிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இக் கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் துரிதமாகப் புனரமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இடம் பெயர்ந்துள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவ்வதிகாரி கூறினார்.

சொந்த வாழிடங்களில் மீளக் குடியமர்த்தப்படும் இம் மக்களுக்கு ஒரு வாரத்திற்கு சமைத்த உணவு நிவாரணமும், அதனைத் தொடர்ந்துவரும் ஆறு மாத காலத்திற்கு உலர் உணவு நிவாரணமும், வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படும் என்று அரசாங்க அதிபர்கள் கூறினர்.

‘புதினம்’ இணையத்தளம் மூடல்.

191009puthinam_com.jpgவிடுதலைப் புலிகள் ஆதரவு முக்கிய இணையத்தளமான ‘புதினம்’ திடீரென மூடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் இவ்விணையத்தளம் இயங்காது என்ற செய்தியை (This is to advise due to personal reasons this website will not be functioning anymore)  புதினம் வெளியிட்டுள்ளது.

புதினம் இணையத்தளத்தின் திடீர் மூடல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. விடுதலை புலிகள் சார்பான புதினம் இணையத்தளம் முல்லைத்தீவில் இறுதிக்கட்ட மோதல்களில் போது போர்க்கள நிலவரத்தை உடனுக்குடன் தரவேற்றம் செய்தது.

வெளிநாட்டு புலிகளுக்குள் தொடரும் சொத்து பிரச்சினைகளின் எதிரொலியாகவே இந்த இணையத்தளம் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

புலிகளுடனான தொடர்பைக் கண்டறிய கைதான அமெரிக்க செல்வந்தரிடம் விசாரணை!

3333raj-rajaratnam.jpgஅமெரிக் காவில் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட பாரிய நிதி நிறுவன உரிமையாளர் ராஜ்ராஜரத்னம் என்பவருக்கு புலிகளுடன் தொடர்பு உண்டா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கெலியோன் கு×ப் எனப்படும் நிதி நிறுவன ஸ்தாபகரான ராஜ் ராஜரத்னம்  மேரிலாந்திலிருந்து இயங்கும் தரும நிறுவனம் ஒன்றுக்கு அமெரிக்காவிலுள்ள செல்வந்தர்களான இலங்கையர்கள் பலர் அன்பளிப்பு செய்யும் பணம்; புலிகளுக்கு போய் சேர்வதற்கு ஆதாரமான பல ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னொரு போதும் இல்லாத அளவிலான இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக 52 வயதான ராஜரத்னம் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய புலன் விசாரணை பணியகம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.. ராஜரத்னமும் அவரது சகாக்களும் தகாத வழியில் 20 மில்லியன் டொலரை சம்பாதித்தனர் என்று வழக்குத் தொடுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜரத்தினத்தின் நியூயோர்க் கேலியொன் நிதி நிறுவனம் 37 பில்லியன் டொலர் முதலீட்டை கொண்டுள்ளது. ராஜரத்னத்தின் சட்டத்தரணி ஜிம் வோல்டன் தமது கட்சிக்காரர் நிரபராதி என்றும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்த்து வாதாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.