செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பல்கலைக்கழகங்களில் மோதல்களை தவிர்க்க தேசிய கொள்கை தயாரிப்பு

university.jpgபல்க லைக்கழக மாணவர்கள் மத்தியில் அடிக்கடி ஏற்படும் மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தேசிய கொள்கையொன்றை தயாரித்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஹரிச்சந்திர அபேகுணவர்தன தெரிவித்தார்.

இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கண்டிக் கிளையின் 36 ஆவது பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்தத் தகவலைத் தெரிவித்த அவர் தொடர்ந்து தன துரையில்; நாட்டின் சகல பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் மத்தியில் நெருக்கமான உறவுகளைக் கட்டியெழுப்புவதனூடாக மாணவக் குழுக்கள் மத்தியில் தோன்றும் மோதல்களை கட்டுப்படுத்த முடியும். மாணவர்களிடையில் ஏற்படும் முரண்பாடுகளை சட்டங்கள் மற்றும் தண்டனைகள் மூலம் தீர்க்க முடியாது. எனவே பல்கலைக்ககழக மானியங்கள் ஆணைக்குழு தேசிய கொள்கையொன்றை உருவாக்கி வருகின்றது. இதனை சகல பல்கலைக்கழகங்களிலும் அமுல்செய்யும் போது சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்றார்.

க. பொ. த (சா/த) பரீட்சை நாடு முழுவதும் இன்று ஆரம்பம் : பரீட்சைகள் – 11ஆம் திகதி முதல் 22 வரை

anura.jpg2009ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சைகள் இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இப்பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடை பெறுகிறது. நாடு முழுவதும் 4098 பரீட்சை நிலையங்களில் 5 இலட்சத்து 56 ஆயிரத்து 714 பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சைக்கு சகல பரீட்சார்த்திகளும் காலை 8.00 மணிக்கு சமுகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார்.

பரீட்சை விதிமுறைகளை மீறும் பரீட்சார்த்திகளோ அல்லது பரீட்சை மண்டபத்தினுள் ஒழுக்கக் கேடான முறையில் நடந்துகொண்ட பரீட்சார்த்திகளோ எக்காரணம் கொண்டும் தொடர்ந்தும் பரீட்சைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார். பரீட்சைக்கான அனுமதி அட்டை ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய, பரீட்சை திணைக்களம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள ஏதேனும் ஆளடையாள அட்டையை உடன் எடுத்துவர வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

11ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும் இப்பரீட்சைக்கு இடம்பெயர்ந்தோர், நிவாரணக் கிராமங்கள் நீங்கலாக, 5 இலட்சத்து 45 ஆயிரத்து 132 பரீட்சார்த்திகள் 4040 பரீட்சை நிலையங்களில் தோற்றுகின்றனர். இவர்களில் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 875 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றனர்

2017 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கனவில் ரணில். தொலைக்காட்சி பேட்டியில் எஸ்.பி.

sb-dissanayake.jpg2017  இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் வரும் போது அதில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அனுமதி கிடைக்காது.  எனவே, 2017 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமென்று ரணில் விக்கிரமசிங்க கனவு காண்கிறார். ஆனால் அவ்வாறு நடைபெறப் போவதில்லையென ஐ. தே. க. வின் முன்னாள் தேசிய அமைப்பாளர் எஸ். பி. திஸாநாயக்க கூறினார்.

ITN தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

ஒரு கட்சியில் இருக்கும் வரை அக்கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். கட்சியில் ஒருமைப்பாடு அவசியம். இதனால் தான் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதும் அவருக்கு ஆதரவு தர நான் முன்வந்தேன்.  அவரை தோளில் சுமந்து சென்று வெற்றிபெற வைக்க தயாராக இருப்பதாகவும் கூறினேன். ஆனால் உண்மையை கூறுவதென்றால் ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா வெற்றி பெறமாட்டார். அவர் தோல்வியை தழுவியதும் ரணில் விக்ரமசிங்க கட்சியினரைப் பார்த்து நீங்கள் தேர்வு செய்த வேட்பாளர் தோற்றுவிட்டார்.  எனவே மீண்டும் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு எனக்குத்தான் உள்ளது என்று தலைவர் பதவியில் இருந்து கட்சியை தொடர்ந்து நடத்திச் செல்வார்.

அவரால் நியமிக்கப்பட்ட செயற்குழுவும் அதனை ஆமோதிக்கும். இதன் பின் 2017 இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வரும்போது அதில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அமைப்பின் பிரகாரம் அனுமதி கிடையாது. எனவே 2017 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க கனவு காண்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த திறமைசாலி, முக்கியஸ்தர்கள் பலர் தலைமைத்துவத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே கட்சியில் இருந்து வெளியேறினர். ரணில் விக்கிரமசிங்கவை கட்சியில் தலைமைப் பதவிக்கு கொண்டு வந்தவர் சிரிசேன குரே, ஆனால் அவர் தான் கட்சியில் இருந்து முதலில் வெளியேற்றப்பட்டார். சரத் அமுனுகம, நந்தா மத்தியூ, விஜேபால மெண்டிஸ் போன்ற அனுபவசாலிகளும் வெளியேற்றப்பட்டனர். விஜேபால மெண்டிஸ் கட்சியில் இரண்டாம் இடத்தில் இருந்தவர். ஆனால் அவரும் கூட கட்சியில் நிலைத்திருக்க முடியவில்லை.

அதன் பிறகு நான் கட்சியில் இருந்த போது கரு ஜயசூரிய தலைமையில் 17 பேர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சியில் சேர்ந்து கொண்டனர். ஆனால் நான் அப்போதும் கட்சியிலேயே தொடர்ந்தேன். கட்சியை சரியான வழியில் கொண்டு செல்லலாம் என்ற நோக்கத்திலேயே நான் தொடர்ந்து கட்சியில் இருந்தேன். ஆனால் அவ்வாறு முடியாது என்று நிச்சயமாக தெரிந்ததை அடுத்தே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நான் வெளியேறினேன்.

ஐக்கிய தேசிய கட்சி இந்நாட்டின் மிகப் பெரிய கட்சி. 63 வருட பாரம்பரியத்தை கொண்டது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என மூவின மக்களினதும் பிரதிநிதிகளாகக் கொண்ட கட்சி. அக் கட்சியின் ஸ்தாபகர் முதல் இருந்து வந்த தலைவர்கள் திறமைசாலிகள்.

ஆனால் இப்போது அக்கட்சி அதன் பலத்தை இழந்து வருகிறது. இதற்கு கட்சியின் தலை மைத்துவமே காரணம். அக் கட்சிக்குள் இப்போது ஜனநாயகம் இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகர் டி. எஸ். சேனநாயக்க முதல் விஜேதுங்க வரை கட்சியின் தலைவர் கட்சியின் வரு டாந்த மாநாட்டில் கட்சி உறுப்பினர்களின் தேர்தல் மூலமே தெரிவாவார். ஆனால் இப்போது அந்த நடைமுறை இல்லை. கட்சியில் தீர்மானங்களை எடுப்பது கட்சியின் செயற் குழுவாகும். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டவர்களே உள்ளனர். கட்சி யின் செயற் குழுவுக்கு ரணில் விக்கிரமசிங்க எப்போதுமே திறமையற்ற அனுபவமற்ற, தனது பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவர்களையே நியமிக்கிறார். இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க கட்சியில் தனியொரு சர்வாதிகாரி போல் செயற்பட முடிகிறது.

இம்முறை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் போது கட்சியில் இருந்த முக்கியஸ்தர்கள் பலர் தலைவர் விக்கிரமசிங் கவை வெற்றி பெறும் வகையில் சந்தைப் படுத்த முடியாது என்று கூறிவந்தனர். ரணிலும் அதனை ஏற்றுக் கொண்டார். அதனால் இம்முறை கட்சியில் இருந்து போட்டியிடும் ஆற்றல் மிகுந்த ஒருவரை செயற்குழு தேர்வு செய்திருக்க வேண்டும்.

ஆனால் செயற்குழு அதற்கு மா¡றாகவே முடிவெடுத்தது. ஏனெனில் செயற்குழு ரணிலினால் நியமிக்கப்பட் டது. அவர் சொற்படி தான் நடக்கும். எனவே கட்சியில் ஜனநாயகம் அற்ற வகையிலேயே முடிவுகள் எடுக்கப்படுவது தெளிவாகிறது.

மட்டக்களப்பில் பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதல் நோயாளி மரணம்

swine-flu-2.jpgமட்டக் களப்பு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் புதன்கிழமை மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானைச் சேர்ந்த பாக்கியராசா (45 வயது) என்பவர் கடந்த 27 ஆம் திகதி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இவருடைய இரத்தம் களுத்துறையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இரத்த பரிசோதனை அறிக்கை மூலம் இவர் ஏ எச்1 என்1 என்ற வைரஸினால் பன்றிக்காய்ச்சல் பீடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்துள்ளார். இறந்தவரின் உடல் பாதுகாப்பான முறையில் தனிமைப்

படுத்தப்பட்டது.இந்த உடல் பன்றிக்காய்ச்சலினால் இறந்தவரின் உடல்அடக்கம் செய்யப்படும் விதிமுறைக்கு அமைய உறவினர்களிடம் கையளிக்காது நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதேவேளை,மட்டக்களப்பில் பன்றிக்காய்ச்சலால் ஒரு நோயாளி இறந்த நிலையில் மேலும் இந்த நோயாளர்கள் இருக்கலாமென அஞ்சப்படுகிறது.இந்நோயிலிருந்து மக்களை பாதுகாக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இதற்காக கருத்தரங்குகள், துண்டுப்பிரசுரங்களை வெளியிடல், பதாகைகளை அமைத்து மக்களை தெளிவுபடுத்த வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பெருமழை; வெள்ளம்; மக்கள் இடம்பெயர்வு – பரீட்சை நிலையங்களும் நீரில்

rain2.jpgஅம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் இடை விடாத அடைமழை காரணமாக கரையோரப் பிரதேச தாழ் நிலங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக 41800 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களினால் அம்பாறை அரச அதிபர் காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 6300 குடும்பங்களும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5150 குடும்பங்களும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 4500 குடும்பங்களும், கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் 4505 குடும்பங்களும, காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 3200 குடும்பங்களும், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4500 குடும்பங்களும், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 6100 குடும்பங்களும், பதியதலாவ பிரதேச செயலாளர் பிரிவில் 2700 குடும்பங்களும் வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் பிரிவில் 4750 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய வெள்ள நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு சமைத்த உணவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அம்பாறை மேலதிக அரச அதிபர் அசங்க அபயவர்த்தன தெரிவித்தார். தொடர்ந்து இம் மாவட்டத்தில் மழை பெய்து வருவதனால் இடம்பெயரும் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மழை வெள்ளம் காரணமாக பாடசாலைகள் வெள்ள நீரினால் நிரம்பியுள்ளன. பிரபல பாடசாலைகளான கல்முனை ஸாகிறாக் கல்லூரி, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, பொத்துவில் மத்திய கல்லூரி, சம்மாந்துறை, வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகள் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளன.

இதன் காரணமாக க. பொ. த. (சா/த) பரீட்சைக்கு மேற்படி பரீட்சை மண்டபங்களாக பாடசாலைகளை பயன்படுத்துவதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அதிபர்களும், மேற்பார்வையாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலின் பின் உடனடியாக அரசியல் தீர்வு டில்லியில பசில்

basil-rajapaksa.jpgதமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றதும் உடனடியாக ஆரம்பிக்கப்படுமென இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் வியாழக்கிழமை உறுதியளித்திருக்கிறது. அத்துடன் அரசியல் தீர்வுக்கு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களுக்குரிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுமென டில்லிக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரடங்கிய உயர் மட்டக்குழுவே இந்திய அரசுக்கு இந்த உறுதி மொழிகளை வழங்கியிருப்பதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று வியாழக்கிழமை மாலை தெரிவித்தது.

அதேசமயம், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள சகல தமிழரும் ஜனவரி 10இல் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் இலங்கைத் தூதுக்குழு உறுதியளித்திருக்கிறது. இலங்கைத் தூதுக் குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தை சிறப்பாகவும் சுமுகமாகவும் இடம்பெற்றதாக இச்சந்திப்பின் பின்னர் நிருபர்களிடம் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

முகாம்களிலுள்ள தமிழர்கள் சகல ஜனநாயக உரிமைகளையும் கொண்டிருப்பதாகவும் அவர்கள் வாக்களிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தொடர்பாக கேட்கப்பட்டபோது பதிலளித்த பசில் ராஜபக்ஷ, “நாம் மிகவும் உறுதியான புரிந்துணர்வுடன் உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இந்த இலக்கு குறித்து கவனத்தில் எடுப்பதாக உறுதியளிக்கிறோம். அரசியல் தீர்வுக்குத் தேவையான சகல அரசியலமைப்பு ரீதியான திருத்தங்களும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இந்திய அரசின் நலன் சார்ந்த சகல விடயங்களிலும் இலங்கை இந்தியாவுடனேயே நிற்கும். இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளிலும் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே இலங்கை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, அதேசமயம் இச்சந்திப்பின்போது, தனது பாதுகாப்பு தொடர்பான கவலைகள், அக்கறைகள் தொடர்பான விடயங்கள் எதனையும் இந்திய அரசாங்கம் எழுப்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என த.தே.கூ. முடிவு

tna.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று முன்தினம் மீண்டும் கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டன. தேர்தலை பகிஷ்கரித்தல், தனி வேட்பாளர் நிறுத்துதல், வாக்கு சீட்டை செல்லுபடியற்றதாக்குதல், யாராவது ஒரு வேட்பாளரை ஆதரித்தல், தீர்மானம் எடுக்கும் முடிவை மக்களிடமே விட்டு விடுவது உட்பட பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் தேர்தல் பகிஷகரிப்பு, தனி வேட்பாளர் நிறுத்துதல்,வாக்கைச் செல்லுபடியற்றதாக்குதல் ஆகிய யோசனைகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி கைவிடப்பட்டுள்ளன எனத் தெரிய வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்பு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுடன் பேச்சுவார்ததைகளை நடத்துவது என்றும் அதன் பின்னர் இத்தேர்தல் தொடர்பாக மீண்டும் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் முடிவெடுத்துள்ளனர்.

கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் யாழில் ஹொட்டல் கட்ட ஒப்பந்தம்

Tilko_Property_Servicesகிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் என்று அறியப்பட்ட திலகராஜா தவராஜா யாழ் நகரின் மையப்பகுதியில் 340 பேர்ச் நிலத்தில் ஹொட்டல் அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார். Board of Investment – BOI of Sri lanka  திலகராஜா தவராஜா முகாமைத்துவ இயக்குனராக உள்ள Tilko Jaffna City Hotels (Private) Limitedக்கு அந்த அனுமதியை வழங்கி உள்ளது.BOI யின் சார்பில் அதன் தலைவர் தமிக்க பெரேரா கையொப்பமிட்டு அதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கி உள்ளார். திலகராஜா தவராஜா கிழக்கு லண்டனில் உள்ள ரில்கோ புரப்பட்டி சேர்வீஸ், பிரியா உணவகம் ஆகியவற்றின் உரைமையாளர். 

திலகராஜா தவராஜா கிழக்கு லண்டனில் எஸ்டேட் ஏஜென்ட்களை நிறுவி தனது வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் வட மாகாணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வேளையிலேயே முதலீடுகளை ஆரம்பித்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு குறிப்பிடத்தக்க நிதிப் பங்களிப்பை வழங்குபவர்கள் அவர்களுடைய நிதிப் பங்களிப்பிற்கு ஏற்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்து அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில் திலகராஜா தவராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டவர். ‘அப்படத்தை தனது பொக்கற்றினுள் வைத்து சுற்றத்தவர்களுக்குக் காட்டுவதில் பெருமைப்பட்டுக் கொண்டவர்’ என அப்படத்தை பார்த்த அவருடைய நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

யாழ் நகரத்தின் மையத்தில் அமையவிருக்கும் இந்த உல்லாசவிடுதி 33 அறைகளையும் இரு கொட்டேஜ்களையும் கொண்டிருக்கும் என்றும் உல்லாசப் பயணிகளுக்கு சொகுசான தங்குமிடத்தை வழங்கும் என்றும் திலகராஜா தவராஜா தெரிவித்துள்ளார். இந்த உல்லாச விடுதியில் உணவகம், உடற்பயிற்சிக்கான இடம், மாநாடுகளை மேற்கொள்வதற்கான இடம் என்பனவும் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சொகுசான தங்குமிடங்களுக்கு பற்றாக்குறையுள்ள நிலையில் இந்த உல்லாச விடுதி பெரும்பாலும் வர்த்தக சமூகத்தையும் உல்லாசப் பயணிகளையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் கருத்தில் வைத்து அமைக்கப்படுவதாக திலகராஜா தவராஜா தெரிவித்துள்ளார்.

Tilko_Property_Servicesதமிழீழ விடுதலைப் புலிகளுடனான முதலீட்டில் ஆணிவேர் படத்திற்கான முதலிட்டையும் திலகராஜா தவராஜா செய்திருந்ததாகவும் ஆனால் அதில் அவரது நிறுவனப் பெயரைப் போட தமிழீழ விடுதலைப் புவிகள் விரும்பியிருக்கவில்லை என்றும் தெரியவருகிறது. அதேசமயம் மற்றுமொரு படத்தில் தயாரிப்பாளராக இவரது நிறுவனத்தை போடுவதற்கு சம்மதித்ததாகவும் அப்படம் பூர்த்தியாக முன்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலைச் சந்தித்ததாகவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உல்லாச விடுதியின் நிர்மாண வேலைகள் 2010 பெப்ரவரியில் திறந்த வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு கிழக்கில் முதலீடுகளுக்கான தேவை மிக அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள திலகராஜா தவராஜா முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மனிக்பாம், புதுக்குடியிருப்புப் பகுதிகளுக்கு ஜனாதிபதி நேற்று திடீர் விஜயம்

manik.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கும் வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டார். இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அவர் நிலைமைகளைப் பார்வையிட்டார்.

மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களோடு தமிழில் உரையாடி குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அவர், “ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் நீங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு விடுவீர்கள்” என்று கூறினார்.

புதுக்குடியிருப்பில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையி னரைச் சந்தித்த ஜனாதிபதி, யுத்தம் முடிவுற்றதை நினைவு கூரும் வகை யில் நினைவுத் தூபியொன்றையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இத் திடீர் விஜயம் நேற்றுக் காலை இடம்பெற்றதுடன் ஜனாதிபதியுடன் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைத்தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறையின் முக்கிய உயரதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினரைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மீட்கப்பட்டுள்ள தாய் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற் பாடுகளில் படையினரின் முழுமையான ஒத்துழைப்புத் தமக்குக் கிட்டுமென நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக படையினரினதும் நாட்டு மக்களினதும் மன உறுதியைக் கட்டியெழுப்புவதே எமது பணியாகியது.

இதற்கிணங்க படையினர் சுதந்திர மனப்பாங்குடனும் துணிவுடனும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்தால் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.

படையினரின் பிள்ளைகளுக்காக பாடசாலைகளை நிர்மாணிப்பது படையினருக்கான வீடமைப்புத் திட்டம் உட்பட படையினரின் எதிர்காலம், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து முழு நாட்டையும் வெற்றியின் பாதையில் இட்டுச் செல்லும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டது என்றார்.

பயங்கரவாத நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள அனைத்து மக்களும் எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் அவர்களது சொந்த இடங்களில் வசிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன் அவ்வாறு மீள் குடியமர்த்தப்படுவோருக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா நிதியுதவி 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மனிக்பாமிற்கு விஜயம் செய்த அவர் தமிழில் உரையாற்றினார். ஜனாதிபதி அங்கு பேசியபோது மேலும் கூறியதாவது :-

இந்த நாட்டில் வாழும் அனைவரையும் பாதுகாப்பது எனது பொறுப்பு. அது எனது கடமையுமாகும். அதை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன். இந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் பயமின்றி, சந்தேகமின்றி சுதந்திரமாக வசிக்கமுடியும். அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலை தூக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல வருடங்களாக மேற் கொள்ளப்படாதிருந்த அபிவிருத்தி செயற் பாடுகள் வடக்கு வசந்தத்தின் மூலம் இப் போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன. உங்கள் அனைவருக்கும் வீட்டு வசதி உட்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளே உங்கள் சொத்து. அவர்கள் நன்றாக படிக்க வேண்டும். எதிர் காலத்தில் இந்த நாட்டில் அவர்கள் முக்கிய பதவிகளை வகிக்க வேண்டும் என்றார்.

நிவாரண கிராமத்தில் உள்ள மாண வர்களுக்காக 23 ஆயிரம் தொகுதி பாடசாலை உபகரணங்களை ஜனாதிபதி பகிர்ந்தளித்ததுடன் நிவாரண கிராமத்தில் இருந்தவர்களுடன் சுமுகமாக உரையாடினார்.

க. பொ. த. (சா. தர) பரீட்சார்த்திகளுக்கு 3 இலட்சம் அடையாள அட்டைகள் விநியோகம்

schools_stu.jpgஇவ்வருடம் நடைபெறவுள்ள க. பொ. த. (சா.தர) பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளில் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோக்கப்பட்டு விட்டதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ. பி. தர்மதாஸ தெரிவித்துள்ளார். இதன்படி நேற்று முன்தினம் (08) வரை 3,10,405 தேசிய அடையாள அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.