ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கும் வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டார். இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அவர் நிலைமைகளைப் பார்வையிட்டார்.
மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களோடு தமிழில் உரையாடி குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அவர், “ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் நீங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு விடுவீர்கள்” என்று கூறினார்.
புதுக்குடியிருப்பில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையி னரைச் சந்தித்த ஜனாதிபதி, யுத்தம் முடிவுற்றதை நினைவு கூரும் வகை யில் நினைவுத் தூபியொன்றையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இத் திடீர் விஜயம் நேற்றுக் காலை இடம்பெற்றதுடன் ஜனாதிபதியுடன் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைத்தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறையின் முக்கிய உயரதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினரைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மீட்கப்பட்டுள்ள தாய் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற் பாடுகளில் படையினரின் முழுமையான ஒத்துழைப்புத் தமக்குக் கிட்டுமென நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக படையினரினதும் நாட்டு மக்களினதும் மன உறுதியைக் கட்டியெழுப்புவதே எமது பணியாகியது.
இதற்கிணங்க படையினர் சுதந்திர மனப்பாங்குடனும் துணிவுடனும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்தால் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.
படையினரின் பிள்ளைகளுக்காக பாடசாலைகளை நிர்மாணிப்பது படையினருக்கான வீடமைப்புத் திட்டம் உட்பட படையினரின் எதிர்காலம், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து முழு நாட்டையும் வெற்றியின் பாதையில் இட்டுச் செல்லும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டது என்றார்.
பயங்கரவாத நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள அனைத்து மக்களும் எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் அவர்களது சொந்த இடங்களில் வசிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன் அவ்வாறு மீள் குடியமர்த்தப்படுவோருக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா நிதியுதவி 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மனிக்பாமிற்கு விஜயம் செய்த அவர் தமிழில் உரையாற்றினார். ஜனாதிபதி அங்கு பேசியபோது மேலும் கூறியதாவது :-
இந்த நாட்டில் வாழும் அனைவரையும் பாதுகாப்பது எனது பொறுப்பு. அது எனது கடமையுமாகும். அதை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன். இந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் பயமின்றி, சந்தேகமின்றி சுதந்திரமாக வசிக்கமுடியும். அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலை தூக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல வருடங்களாக மேற் கொள்ளப்படாதிருந்த அபிவிருத்தி செயற் பாடுகள் வடக்கு வசந்தத்தின் மூலம் இப் போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன. உங்கள் அனைவருக்கும் வீட்டு வசதி உட்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளே உங்கள் சொத்து. அவர்கள் நன்றாக படிக்க வேண்டும். எதிர் காலத்தில் இந்த நாட்டில் அவர்கள் முக்கிய பதவிகளை வகிக்க வேண்டும் என்றார்.
நிவாரண கிராமத்தில் உள்ள மாண வர்களுக்காக 23 ஆயிரம் தொகுதி பாடசாலை உபகரணங்களை ஜனாதிபதி பகிர்ந்தளித்ததுடன் நிவாரண கிராமத்தில் இருந்தவர்களுடன் சுமுகமாக உரையாடினார்.