செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம் – 4,01118 பேர் தகுதி; 57036 நிராகரிப்பு

election_box.jpgஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ தபால்மூல வாக்களிப்பு நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. 4 இலட்சத்து ஆயிரத்து 118 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 15 ஆயிரம் அரச நிறுவனங்களில் இம்முறை தபால்மூல வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு சமுகமளிக்க முடியாத 4 இலட்சத்து 58 ஆயிரத்து 154 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் பல்வேறு காரணங்கள் காரணமாக 57 ஆயிரத்து 36 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தபால்மூல வாக்களிப்பு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட தெரிவத்தாட்சி அலவலகர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது.

12 ஆம் 13 ஆம் திகதிகளில் தவிர்க்க முடியாத காரணமொன்றினால் வாக்களிக்க முடியாத போதும் தபால்மூல வாக்காளரொருவருக்கு 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணி வரை அந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இருப்பினும், அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் குறிப்பிட்ட மாவட்டத் தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கும் 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கிடைக்க வேண்டுமென்பதை கவனத்திற்கொள்ளுமாறும் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக் காட்டினார்.

அத்தாட்சிப்படுத்தும் அலுவலரொருவரின் அலுவலகத்தில் அஞ்சல் வாக்குகளை அடையாளமிடும் சந்தர்ப்பத்தில் வேட்பாளரொருவர் சார்பாக முகவரொருவரும் ஒரு கண்காணிப்பு நிறுவனம் சார்பாக கண்காணிப்பாளரொருவரும் நியமனஞ் செய்யப்படலாம். இப்பணியை கண்காணிப்பதற்கு பெப்பரல், சி.எம்.இ.வி. ஆகிய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விசேட பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தபாலகங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிறைவுபெறுமெனவும் 10 ஆம் திகதியாகிய நேற்று விசேட தபால் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தபால்மா அதிபர் எம். கே. பி. திஸாநாயக்க நேற்றுக் கூறினார்.

விமானத்தை தகர்ப்பதாக மிரட்டல்: லண்டனில் மூன்று பயணிகள் கைது

heathrow-airport.jpgலண்டனில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தை தகர்க்கப் போவதாக, அந்த விமானத்தில் பயணித்த மூவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 25ம் திகதி, அமெரிக்க விமானத்தை நைஜீரியாவைச் சேர்ந்தவர் தகர்க்க முயன்றதையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகளின் விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 331 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்தவர்களில் 58, 48 மற்றும் 36 வயது மதிக்கத்தக்க மூவர் விமானத்தை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து, விமான பணியாளர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். விமானம் மேலே எழுவதும் நிறுத்தப்பட்டது. உடன் பொலிஸார் விரைந்து வந்தனர். விமானத்தை சுற்றிலும் ஒன்பது பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. விமானத்திற்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸ் அதிகாரிகள், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மூவரையும் கைவிலங்கிட்டு, வெளியே இழுத்துச் சென்றனர். பின்னர், விமானம் முழுவதும் சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் உள்ளனவா என மோப்ப நாய்கள் மூலமும் பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகு விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமானம் புறப்படுவது மூன்று மணி நேரம் தாமதமானது.

இதேபோல, அட்லாண்டாவிலிருந்து சான்பிரான்ஸிஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில், போதையில் பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்று உள்ளே பூட்டிக் கொண்டார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் கொலராடோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. பின் அந்நாட்டு பொலிஸார் விமானத்துக்குள் புகுந்து போதை நபரைக் கைது செய்தனர்.

இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற்றம்

catak.jpgமுத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்றைய 5வது லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

இந்தியா, பங்களாதேஷ், இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் உள்ள மிர்புரில் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு சங்கக்கார (68), ரன்திவ் (56), தில்ஷான் (33), துஷாரா (28) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். இலங்கை அணி 46.1 ஓவரில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்தியா சார்பில் ஜாகீர் கான், அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் (48), கவுதம் காம்பீர் (71) ஜோடி சிறப்பாக ஆடியது. பின்னர் இணைந்த விராத் கோஹ்லி (71), யுவராஜ் சிங் (8) கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 32.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை சார்பில் துஷாரா, பெரேரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்பிடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலிடத்தில் இலங்கை அணி (12 புள்ளி) உள்ளது. எதிர்வரும் 13ம் திகதி நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கும் முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

அரசாங்க ஊழியர்களுக்கு ரூ. 2500 சம்பள உயர்வு

அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது கிடைக்கும் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் புறம்பாக 2500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். பாதுகாப்பு படையினர், பொலிஸார் மற்றும் அரசாங்கத் துறை அனைத்து ஊழியர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் இந்த சம்பள அதிகரிப்பு உள்ளடக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது எடுத்து வருகிறது.

715 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ltte-rele.jpgபுலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 715 பேரை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தார். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் வலயம் 2 இல் நடைபெற்ற வைபவத்தின் போதே மேற்படி 715 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புலிகள் இயக்கத்திலிருந்து படையினரிடம் சரணடைந்தவர்களை பெற்றோர் பொறுப் பேற்றுக் கொண்டனர். சரணடைந்தவர்களுள் 15 பேரை ஜனாதிபதியே அவர்களது பெற்றோரிடம் கையளித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான மிலிந்த மொரகொட, டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்கா, வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ltte-rele.jpg

வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று

prabakaeans-father.jpgபிரபாக ரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் பூதவுடல் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

பூதவுடல் வல்வெட்டித்துறை பூச்சிவிட்டானில் உள்ள அவரது உறவினரின் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பனாகொட இராணுவ முகாமில் காலமான அவரின் சடலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் பொறுப்பேற்று வல்வெட்டித்துறைக்குக் கொண்டுவந்தார்.

இதேநேரம் பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரண விசாரணைகள் நடைபெற்று மருத்துவ அறிக்கையில் இயற்கைச் சாவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘இனப்பற்றுள்ள எந்தத் தமிழனும் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டான்’ – சிவாஜிலிங்கம்

Sivajilingam_M_Kஇனப் பற்றுள்ள எந்தத் தமிழனும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய எந்தத் திட்டமும் இராணுவத் தளபதியிடம் இல்லை. இறுதிவரை யுத்தம் நடத்திய ஓர் இராணுவத் தளபதியைத் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரிப்பது துர்ப்பாக்கியம் என்றும் தேசிய தொலைக்காட்சி யொன்றுக்கு வழங்கிய பேட்டியில் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் ஓர் இராணுவ அதிகாரி அரசாங்க அதிபராக இருந்தபோது, வடமாகாணத்துக்கு ஓர் இராணுவத் தளபதியை நியமித்த போது எதிர்ப்பு தெரிவித்த சம்பந்தன், நாட்டின் தலைவராகும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்கும் ஓர் இராணுவத் தளபதிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தமை மக்களைத் தவறாக வழிநடத்தும் முடிவாகும். தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகள் நடப்பதை மறுக்க முடியாது. இந்தத் தேர்தலில் ‘தமிழ் மக்களின் சுயத்தை வெளிப்படுத்தவே தனித்துப் போட்டியிடு கிறேன்’ என்றும் சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.

சபாநாயகர் மீது இந்தியாவில் செருப்பு வீச்சு.

பாராளுமன்ற சபாநாயகர் லொக்கு பண்டார இந்தியாவில் உள்ள வைதீஸ்வரன் ஆலயத்தை தரிசிக்க சென்றிருந்தபோது அவரது வருகையை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடத்தியுள்ளதுடன் அவர் பயணம் செய்த கார் மீது செருப்புக்களையும் வீசியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிப்பதுடன் போராட்டம் நடாத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் கூறுகின்றது.

நுவரெலியா மாவட்ட எம்.பியாக அருள்சாமி

parliament.jpgநுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சந்தனம் அருள்சாமி வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் வெற்றிடத்திற்கே பாராளுமன்ற உறுப்பினராக சந்தனம் அருள்சாமி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி வர்த்தமானி அறிவித்தல் 08.01.2010 அன்று வெளியாகியுள்ளது.

சந்திரசேகரன் பெரியசாமி இறந்து போனதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக இல, 06- நுவரெலியா தேர்தல் மாவட்டத்திற்கான ஆறாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவராக சந்தனம் அருள்சாமி என்பவர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

2004 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு 47,630 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டது. இதில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் மறைந்த முன்னாள் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் முதலாவது இடத்தை பெற்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

திருக்கேதீஸ்வரம் ஆலயப் பகுதி புனிதப் பிரதேசமாக பிரகடனம் – மன்னாரில் ஜனாதிபதி அறிவிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டு புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்படும். அத்தோடு, இந்த ஆலயத்தில் பக்தர்கள் தினமும் வழிபாடுகளில் ஈடுபடவும் வசதி செய்துகொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மன்னாரில் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் தலைமையில் மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.