நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சந்தனம் அருள்சாமி வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் வெற்றிடத்திற்கே பாராளுமன்ற உறுப்பினராக சந்தனம் அருள்சாமி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி வர்த்தமானி அறிவித்தல் 08.01.2010 அன்று வெளியாகியுள்ளது.
சந்திரசேகரன் பெரியசாமி இறந்து போனதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக இல, 06- நுவரெலியா தேர்தல் மாவட்டத்திற்கான ஆறாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவராக சந்தனம் அருள்சாமி என்பவர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
2004 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு 47,630 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டது. இதில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் மறைந்த முன்னாள் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் முதலாவது இடத்தை பெற்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.