செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அபிவிருத்தி நிதியை சமமாகப் பகிரத் தேவையில்லை – யாழில் இருந்து ஆரம்பிக்காது வன்னியில் இருந்து ஆரம்பியுங்கள் – ஆளுநர் வேதநாயகன் !

அபிவிருத்தி நிதியை சமமாகப் பகிரத் தேவையில்லை – யாழில் இருந்து ஆரம்பிக்காது வன்னியில் இருந்து ஆரம்பியுங்கள் – ஆளுநர் வேதநாயகன் !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஆளுநர், எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்ய வேண்டும். எவ்வளவு விரைவாக அந்த நிதியை செலவு செய்து முடித்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும். இது எமக்கு சவாலானதுதான். நாம் நிதியை திருப்பி அனுப்பாமலே நிதியை திருப்பி அனுப்பியதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் ஜனாதிபதி வீதி அபிவிருத்திக்காக விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கு சமமாகப் பகிரத் தேவையில்லை. தேவைப்பாடுகள் எங்கு அதிகமோ அங்கு அதிகளவு நிதியை ஒதுக்குங்கள்.

மேலும் இந்தத் திட்டத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு தெரிவுகளை முன்னெடுக்காமல் வன்னிப் பிராந்தியத்தின் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று நேரடியாகப் பார்த்து தெரிவு செய்யுங்கள். அப்போதுதான் அந்த மக்கள் அனுபவிக்கின்ற வலி உங்களுக்குத் தெரியும்” என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார்.

 

சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார், சுமந்திரன் தான் பொதுச்செயலாளர், – தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் !.

சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார், சுமந்திரன் தான் பொதுச்செயலாளர், – தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் !

 

தமிழரசுக் கட்சியில் தற்போது பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவாகியதில் இனி எந்த ஒரு மாற்றமும் இடம்பெறாது என்பதுடன் சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சீ.வி.கே சிவஞானம் மேலும் தெரிவித்தாவது, “எந்த ஒரு கட்சியும் மற்றைய தரப்பின் மீது காழ்ப்புணர்சியுடனோ அல்லது சேறுபூசல்களையோ முன்னெடுக்காது ஒரே குறிக்கோளுடன் வெற்றி இலக்கை அடையும் பொறிமுறையை உள்ளடக்கி அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான கள நிலையை உருவாக்க வேண்டும்.

அந்த வகையில் அவரவரும் தத்தமது சுயத்தோடு நின்று பேசி, ஒருமித்த கருத்தோடு வெற்றிவாய்ப்பு களச்சூழல் யாருக்கு பொருத்தமாக இருக்குமோ அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுப்பதும் அவசியமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் குழந்தை நல மருத்துவர் எங்கே ? குழந்தைகள் வவுனியா மருத்துவமனைக்கு இடமாற்றம் ! மருத்துவரை கைது செய்யக் கோரிக்கை ! 

மன்னார் குழந்தை நல மருத்துவர் எங்கே ? குழந்தைகள் வவுனியா மருத்துவமனைக்கு இடமாற்றம் ! மருத்துவரை கைது செய்யக் கோரிக்கை !

 

மன்னார் மாவட்ட குழந்தை நல மருத்துவர் கடமைக்கு வராமல் தலைமறைவானதைத் தொடர்ந்து குழந்தைகள் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த குழந்தைகள் வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எவ்வித முன்னறிவித்தலுமின்றி தலைமறைவாகியுள்ள இந்த மருத்துவர் தனது நண்பரொருவருக்கு அனுப்பிய குறும்செய்தியில் வேலையிலிருந்து விலகியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இதனை பலநாட்களாகியும் நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. தொலைபேசியையும் துண்டித்துவிட்டு தொடர்பில்லாமல் இருந்துள்ளார்.

இலவசக் கல்வியில் கற்று மருத்துவத்துறைக்கு வந்தவர்கள் சில லட்சங்களை மாத வருமானமாகப் பெறுகின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் மருத்துவத்துறைக்கு உள்ள பற்றாக்குறையால் அதிக சம்பளத்தால் ஈர்க்கப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்து வருகின்றது. இது இலங்கை போன்ற நாடுகளில் மட்;டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள போலந்து போன்ற நாடுகளிலும் பாரிய பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் புதிய சட்டவிதிமுறைகளையும் அபராதங்களையும் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.

இலவசக் கல்வியில் கற்று வெளியேறுகின்ற இவர்கள் குறைந்தது 5 முதல் 8 ஆண்டுகள் அரச மருத்துவமனைகளில் மட்டும் பணி செய்ய வேண்டும் என்றும் அதற்கு முன்னரே இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக இருந்தால் ஆரம்பப் பள்ளி முதல் மருத்துவர்களை உருவாக்குவதற்கான செலவின் இரட்டிப்புத் தொகையை அபராதமாகச் செலுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்பது போன்ற விதிமுறைகள் அவசியம் என்கிறார் பிரித்தானியாவில் வாழும் இலங்கை மருத்துவ கலாநிதி ஜோசப் பெர்னான்டோ.

அவர் மேலும் குறிப்பிடுகையில். குறித்த குழந்தை நல மருத்துவர் மருத்துவ அசட்டையீனத்துக்காக கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தையின் தந்தை தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இன்றைய வட்டுவாகல் பாலம் நினைவுச் சின்னமாகும் – புதிய பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படும் ! பா உ ரவிகரன்

இன்றைய வட்டுவாகல் பாலம் நினைவுச் சின்னமாகும் – புதிய பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படும் ! பா உ ரவிகரன்

“இறுதி வன்னி யுத்தத்தின் அடையாளங்களில் ஒன்று வட்டுவாகல் பாலம் அது நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படும். புதிய பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படும்” என பா உ துரைராசா ரவிகரன் தேசம்நெற்க்கு நேற்றுத் தெரிவித்தார். வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு கொழும்பிலிருந்து தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது வேண்டுகோளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த வட்டுவாகல் பாலத்தை திருத்தவும் வடக்கின் விதிகளைத் திருத்தவும் ஆறு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தான் வரவேற்பதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலம் புனரமைக்கப்பட்டால் முல்லைத்தீவு மக்கள் மிகுந்த நன்மையடைவார்கள் எனவும் ரவிகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அரசாங்கம் இன்றைய பாலத்தை நினைவுச் சின்னமாகப் பேண அனுமதி வழங்கியுள்ளதா எனத் தேசம்நெற் கேட்ட போது எமது அதிகாரிகள் அதற்கான திட்டவரைபைக் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையிலேயே புதிய பாலம் நிர்மாணிக்கப்படும். பழைய பாலம் நினைவுச் சின்னமாகப் பேணப்படும் எனத் தெரிவித்தார்.

வழமைபோல் எமது அதிகாரிகள் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவார்களா? அல்லது நிதியை குறித்த காலத்தில் வினைத்திறனுடன் பயன்படுத்தும் திறமையையும் ஆளுமையையும் கொண்டிருக்கின்றார்களா எனக் கேட்டபோது, நிச்சயமாக அவர்கள் நிதியை திருப்பி அனுப்பாமல் குறித்த காலத்திற்குள் திட்டத்தை முடித்து மேலதிக நிதிக்கான வேண்டுகொளை வைப்பார்கள் என உறுதியளித்தார்

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டுமா ?’ ‘விகாரைக்கு அத்திவாரம் போடும் போதே தடுத்திருக்க வேண்டும் !’ பா உ ரவிகரன்

கேள்வி: ‘தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டுமா ?’ ‘விகாரைக்கு அத்திவாரம் போடும் போதே தடுத்திருக்க வேண்டும் !’ பா உ தி ரவிகரன் பதில்

 

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டுமா? எனத் தேசம்நெற் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பா உ துரைராசா ரவிகரன், “விகாரைக்கு அத்திவாரம் போடும் போதே அதனைத் தடுத்திருக்க வேண்டும்” எனத் தேசம்நெற்க்கு பதிலளித்தார். தான் யாரையும் குற்றம்சாட்டவில்லை என்றும் இதற்கு மேல் தான் ஏதும் சொல்லவிரும்பவில்லை என்றும் நேற்று தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் வன்னியில் வன இலாக்கா மற்றும் தொல்லியல் திணைக்களம் மக்களுடைய காணிகளை அபகரிக்கின்றது எனறும் 2009 இல் அவர்களிடம் இருந்த இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் தற்போது இரண்டு மடங்காக நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர்களை கொண்டுள்ளனர் எனவும் தமிழரசுக் கட்சியின் பா உ ரவிகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் தாங்கள் தொடர்ச்சியாக குருந்தூர்மலை புத்தர் விகாரை தொடர்பில் சட்டரீதியாகப் போராடியதாகவும் அதற்காக தனக்கு வன்னியில் உள்ள ஒவ்வொரு சட்டத்தரணியும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர்கள் பணத்துக்காக அல்லாமல் இலவசமாக வந்து வழக்குகளை வாதாடியதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் பா உ ரவிகரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரோ ஏனைய சட்டத்தரணிகளோ தையிட்டி விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவி;ல்லை என்ற குற்றச்சாட்டை வைக்கவில்லை. போராடாமல் எதனையும் அடைய முடியாது என்பதை பா உ ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் முன்னேற்றகரமான பாதையில் தென்னிலங்கை – போர் தின்ற வடக்கு கிழக்கில் ஆதரவற்றோராக மாற்றுத்திறனாளிகள் !

மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் முன்னேற்றகரமான பாதையில் தென்னிலங்கை – போர் தின்ற வடக்கு கிழக்கில் ஆதரவற்றோராக மாற்றுத்திறனாளிகள் !

 

நாட்டில் 16 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் காணப்படுவதாகவும் அவர்களில் 9 இலட்சம் பேர் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் என அகில இலங்கை பார்வைக் குறைபாடுடையோர் சங்கத்தின் செயலாளர் பிரசன்ன விக்கிரமசிங்க தெரிவித்தார். மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுடன் நடைபெற்ற கலந்துயைாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பின் போது மத்திய மாகாணத்திலுள்ள பார்வைக் குறைபாடுள்ளோரது பிரச்சினைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டன. இக்கலந்துரையாடலின் போது மத்திய மாகாண பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. வெகுவிரைவில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு தர முயற்சிப்பதாகவும் ஆளுநர் இங்கு தெரிவித்தார்.

தென்னிலங்கை பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அதீத கவனம் சமூகம் மற்றும் அரசியல் மட்டத்தில் அதிகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை சம காலத்தில் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அண்மையில் பொறுப்பேற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேசியப் பட்டியல் மூலம் நியமித்த பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, ஓர் மாற்றுத்திறனாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி தமிழர் அரசியலில் முழுமையாக மாற்றுத்திறனாளிகளும் அவர்கள் தொடர்பான அரசியலும் முழுமையாக நிராகரிக்கப்பட்ட நிலையே தொடர்கின்றது. முன்னாள் போராளிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்வர்கள் என ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வடக்கில் குறிப்பாக வன்னி மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் காணப்படும் நிலையில் அவர்கள் சார்ந்த அரசியல் என்பது முழுமையாக தமிழ்தேசியம் பேசும் தலைவர்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த கால முப்பது வருடங்களுக்கு மேலதிகமான போர், விடுதலைப் புலிகள், நில உரிமை மீட்புக்கான போர் என்றெல்லாம் பேசி அரசியல் செய்யும் தமிழ்தேசியம் போரால் பாதிக்கப்பட்ட அத்தனை மாற்றுத்திறனாளிகளையும் கைவிட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகளையும், அவர்களுக்கான அரசியலை முன்னெடுக்கும்படியும் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதும் கூட செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தொடர்ந்தும் தமிழ்தேசியம் கள்ள மௌனம் காத்து வருதிறது.

யாழில் ஆட்கடத்தி கப்பபம் வேண்டியவர், தப்பிச்செல்லும் போது கட்டுநாயக்காவில் கைது !

யாழில் ஆட்கடத்தி கப்பபம் வேண்டியவர், தப்பிச்செல்லும் போது கட்டுநாயக்காவில் கைது !

 

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் ஆவார். துபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது அவர் கைதாகினார். மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

தொடரும் என்.பி.பி அலை – தேர்தலை பின்னுக்கு தள்ளி கால அவகாசம் கோருகிறார் பா.உ சிறிதரன் !

தொடரும் என்.பி.பி அலை – தேர்தலை பின்னுக்கு தள்ளி கால அவகாசம் கோருகிறார் பா.உ சிறிதரன் !

 

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது என்னை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும். இதற்கான காரணம் என்னவெனில், ”சாதாரண தரப் பரீட்சை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு போன்ற சமய நிகழ்வுகள் குறித்த காலப்பகுதியில் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் அத்துடன் தேர்தல் திருத்தங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பெண்களுக்கு 25 வீதம் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலை பின்தள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, எந்த தேர்தலுக்கும் முகம்கொடுப்பதற்கு நாங்கள் பின்வாங்கியதில்லை. தேர்தல் பிரசார காலப்பகுதி யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வேட்புமனு கோருமாறு கேட்கிறோம் என தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடங்கி மாகாண சபை தேர்தல்கள் வரை அனைத்திலும் என்.பி.பி அலையே தொடரும் என அரசியல் அவதானிகள் கூறி வருகின்றனர். ஆனால் இன்னமும் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி பூசல் கூட முடிந்தபாடில்லை. பாராளுமன்றத்தேர்தல்களை போலவே உள்ளூராட்சி தேர்தல்களிலும் தமிழரசுக்கட்சியை விட என்.பி.பி ஆதிக்கம் செலுத்த வாய்புள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்தேசிய கட்சிகளை விட தேசியக்கட்சி ஒன்று தன் ஆதிக்கத்தை பெரும்பான்மை ஆசனங்கள் மூலம் உறுதி செய்திருந்தது. இதனை தொடர்ந்தும் தக்க வைக்கும் நோக்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் என அடுத்தடுத்து ஒவ்வொரு வார இடைவெளியிலும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பகுதிகளுக்கு திடீர் விஜயம் செய்து என்.பி.பி தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்திவருகிறது. இதனால் உள்ளூராட்சி தேர்தல் தமிழ்தேசிய கட்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளது.

பழைய நினைப்பில் வீட்டிற்கு சென்று என்.பி.பியினர் மிரட்டுகிறார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் !

பழைய நினைப்பில் வீட்டிற்கு சென்று என்.பி.பியினர் மிரட்டுகிறார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் !

 

இலங்கை அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தையும், தாம் விரும்பும் அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது. இது இந்த நாட்டில் காணப்படும் மனித உரிமையாகும். இந்த அரசாங்கம் இதையும் மீறி நடந்து வருகின்றது என களனி பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தின் யடவத்தை பிரதேசத்தை சேர்ந்த பிரஜை ஒருவர் தனது கருத்துக்களை முகநூல் ஊடாக வெளிப்படுத்திய போது அரசாங்கத்தையும், மக்கள் விடுதலை முன்னணியையும் சேர்ந்த ஒருவர், வீடு சென்று அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கிறார். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத வேளையில், பேச்சு சுதந்திரத்தை மறுக்கும் வகையில் வீடு வீடாகச் செல்லும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் எவருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை அவர்களுக்கு காணப்படுகின்றன. குடி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்நிற்கும். பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் என்பது தனிமனித உரிமைகளாகும். அதில் யாரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க ஆயிரம்மில்லினன் நிதி ஒதுக்கீடு ! பாலத்தை அமைக்காமல் நிதியை திருப்பி அனுப்பும் விளையாட்டு இருக்கக் கூடாது அரசு எச்சரிக்கை !

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க ஆயிரம்மில்லினன் நிதி ஒதுக்கீடு ! பாலத்தை அமைக்காமல் நிதியை திருப்பி அனுப்பும் விளையாட்டு இருக்கக் கூடாது அரசு எச்சரிக்கை !

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பாலத்தை அமைக்காமல் கடந்த காலங்கள் போல் நிதியை திருப்பி அனுப்பும் விளையாட்டுக்கள் இருக்கக்கூடாது என அரசு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இந் நிலையில் தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்துக்கான நிதியை இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கியதற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க, கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோருக்கு முல்லைத்தீவு மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வட்டுவாகல் புனரமைக்கப்படுவது எத்தனை முக்கியமோ அதனை விட முக்கியமானது அந்த பாலம் கூறும் வரலாற்றை பாதுகாப்பது எனவும் குறைந்த பட்சம் புதிய பாலத்தை அமைக்கும் போது பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பெயர்தெடுத்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் முன்வைத்துள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ள ஊடகவியலாளர் குமணன், சேதமடைந்த வட்டுவாகல் பாலத்தை புதிதாக அமைக்க அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது, வட்டுவாகல் பாலத்தை மீள அமைக்க வேண்டியது என்பது மிகவும் தேவையான ஒன்று, ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம், எமது வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை அழிக்கும் அபாயமும் உள்ளது என்ற கவலை தோன்றியுள்ளது . பழைய வட்டுவாகல் பாலம் தமிழ் மக்களின் மீள்தன்மை மற்றும் துயரத்தின் கதையைச் சொல்கிறது ( resilience and misery ) – இது தமிழர் போராட்டத்தின் சின்னம் மற்றும் நாம் தாங்கிய துயரத்தின் சாட்சி .

ஜெர்மனியின் பெர்லின் சுவரின் எச்சங்கள் ஜெர்மனியின் கடந்த காலத்தையும் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சக்திவாய்ந்த நினைவூட்டலாகச் செயல்படுவது போல, வட்டுவாகல் பாலம் தமிழர்களின் கூட்டுப் பயணத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது.

குறைந்தபட்சம் புதிய பாலத்தை அமைக்கும் போது பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பெயர்தெடுத்து பாதுகாக்கலாம். இது தொடர்பில் எமது மக்கள் பிரதிநிதிகள் கவனம் எடுத்து அரசோடு பேச வேண்டும்.முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .

போரின் நினைவு எச்சமாகவும் மிச்சமாகவும் ( War memorial ) போர் சார்ந்த சுற்றுலாவில் எமது முக்கிய அடையாளமாகிய (War tourism ) இந்த வரலாற்று அடையாளத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/share/p/1HG2BPgCWR/