செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பணம் 1200 பவுணைக் கேட்டு மிரட்டியவருக்குத் தண்டனை!

வெம்பிளியைச் சேர்ந்த ஜெகதீசன் குணராஜா (20) என்ற இளைஞர் கிங்ஸ்பறியைச் சேர்ந்த பிரேம் என அறியப்பட்ட பிரனானந் கணேஸ்நாதனை பயமுறுத்தி மிரட்டி பணம் பறிக்க முயன்றதற்காக குற்றவாளியாகக் காணப்பட்டு உள்ளார். நீதிபதி கிரகாம் அரன் தலைமையில் 12 ஜூரிகளுடன் வழக்கு நடைபெற்றது.

1200 பவுண்களை வழங்காமல் விட்டால் பிரேமின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசப்போவதாக ஆறு பேரைக் கொண்ட குழு மிரட்டியாதாக பிரேம் குற்றம்சாட்டி இருந்தார். 2009 செப்ரம்பரில் நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு ஹரோ கிறவுண் கோர்ட்டில் நடைபெற்று 2010 பெப்ரவரி 15ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திவீகன் குகநாதனுக்குச் சொந்தமான காரை பிரேம் காப்புறுதி இன்றி ஓட்டியதால் வாகனம் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டது. அதனால் ஏற்பட்ட நஸ்டத்திற்காக 1200 பவுண்களை தன்னிடம் கேட்டு மிரட்டியதாக நீதிமன்றத்தில் பிரேம் தெரிவித்து இருந்தார். தன்னை தனது விருப்பத்திற்கு மாறாக கிங்ஸ்பறியில் உள்ள தனது வீட்டுக்கு அருகாமையில் வைத்து பலவந்தமாக வானில் ஏற்றி வொன்ஸ்வேத் செயின்ஸ்பறி கார் பார்க்குக்கு கூட்டிச் சென்று தாக்கியதாக பிரேம் நீதிமன்றில் குற்றம்சாட்டி இருந்தார். இந்த கடத்தல் நாடகம் நான்கு மணிநேரம் நீடித்ததாகவும் பிரேம் தெரிவித்து இருந்தார்.

மருத்துவரினால் முகத்தில் உள்ள காயங்கள் உறுதிப்படுத்தப்பட்ட போதும் அவற்றுக்கு தாங்கள் காரணமல்ல என சந்தேகநபர்கள் வாதிட்டனர். மேலும் பணம் கேட்டதை ஒத்துக் கொண்டவர்கள் தாங்கள் கையால் தட்டியதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்கவில்லை என்றும் தெரிவித்தனர். பணத்திற்காகப் பயமுறுத்தவில்லை எனவும் தெரிவித்து இருந்தனர்.

ஜெகதீசன் குணராஜ் உடன் குற்றம்சாட்டப்பட்டு இருந்த பின்வருவோர் மீதான குற்றச்சாட்டுகள்  நிராகரிக்கப்பட்டது
சுதர்சன் சிறீதரன் (22) – மில்ரன் கீன்ஸ்
சுதாகரன் ராசலிங்கம் (21) – வெம்பிளி
வேணுசங்கர் லம்பொதரராஜா (20) – வெம்பிளி
சிவகுமார் தினேஸ்குமார் (19) – ஹரோ
தீவிகன் குகநாதன் (திவான்) – ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது.

கே. கே. எஸ். துறைமுகம் ரூ. 100 மில். புனரமைப்பு – முழுமையான பணியில் கடற்படை

போர்ச் சூழல் காரணமாக சேதமடைந்து பல வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாத காங்கேசன்துறை துறைமுகம் நூறு மில்லியன் ரூபா செலவில் மீளமைக்கப்பட்டு வருவதாக துறமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

துறைமுகத்தை மீளமைக்கும் பணிகளை கடற்படை மேற்கொண்டு வருவதாகவும் இதனூடாக வடபகுதியில் மேற்கொள்ளப்படும் பாரிய உற்பத்திகளை தெற்கிற்கு அனுப்புவதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் கூறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

காங்கேசன்துறை துறைமுகம் மீளமைக்கப்படுவதோடு வடபகுதி மேலும் அபிவிருத்தி அடையும். வடபகுதி மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு ஏற்றவாறு இந்தத் துறைமுகம் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை மற்றும் ஒலுவில் துறைமுகங்கள் உள்நாட்டு வர்த்தக்கத்துறை மற்றும் மீன்பிடித்துறை முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்யப்படுவதோடு வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். காங்கேசன்துறை துறைமுக பணிகள் ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படும்.

திருகோணமலை துறைமுகமும் முதலீட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்யப்படுகிறது.

இந்த துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதோடு பெருமளவானோருக்கு தொழில் வாய்ப்பும் கிடைக்க உள்ளது என்றார்.

தபால் மூல வாக்களிப்பு சுமுகம்

election_cast_ballots.jpgபொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று (25) சுமுகமாக நடைபெற்றதாக தேர்தல் திணைக்களம் கூறியது. இன்றும் (26) வாக்களிப்பு நடைபெற உள்ளது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு முப்படையினர், பொலிஸார் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள் 4 இலட்சத்து 15 ஆயிரத்து 430 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். நேற்று பெரும்பாலானவர்கள் வாக்களித்ததாக வும் எதுவித அசம்பாவிதங்களோ முறை கேடுகளோ இடம்பெறவில்லை எனவும் தேர்தல் திணைக்களம் கூறியது. வாக்களிப்பை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

நான் வெறும் வாய்ச்சொல் வீரனல்ல; சொன்னதை செய்து காட்டும் செயல் வீரன் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

president.jpgவெறும் வார்த்தைகளுக்குள் மட்டும் அடங்கிவிடும் ஜனாதிபதியாக இருக்க நான் விரும்பவில்லை. நாட்டை ஒன்றிணைப்பதாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதைப் போன்று அபிவிருத்தி அடையும் தேச மொன்றை கட்டியெழுப்பும் திட்ட த்தையும் வெற்றிகரமாக முடிக்கவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (23) கம்பஹா மாவட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்தோரையும் அலரிமாளிகையில் சந்தித்தார். சுமார் ஆறாயிரம் பேர் வரை இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். அங்கு பேசியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டின் எதிர்கால பரம்பரைக்காக அதனை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், எந்தவொரு நிபந்தனைக்கும் அடிபணியாது பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாடு முழுவதும் நடைமுறை ப்படுத்தியது இக்காரணமாகத்தான். நல்லதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவை அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் அங்கு மேலும் கூறியதாவது,

யுத்தத்தில் வெற்றிபெறுவோம் என்பதை நான் அறிந்திருந்தேன். அதற்கான அனைத்து சவால்களுக்கும் நாம் வெற்றிகரமாக முகம் கொடுத்து அவற்றை வெற்றி கண்டோம். இந்த வெற்றிகளை யடுத்து நாட்டின் மற்றொரு பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொள்ள நாம் தயாரானோம்.

மின்சார பிரச்சினைக்கு முகங்கொடுக்க நாம் பாரிய மின்சார திட்டங்களை ஆரம்பித்தோம். வாக்குகள் கிடைக்காமற் போகும் என்ற அச்சத்தால் நுரைச்சோலை மற்றும் மேல் கொத்மலை ஆகிய திட்டங்களை அன்று ஆரம்பிக்காமல் இருந்தனர். ஆனால் வாக்குகளுக்காக நாட்டின் அபிவிருத்தியை பணயம் வைப்பதா இல்லை இவை இரண்டையும் பாதுகாத்துக்கொண்டு நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாக்குகளை விட எதிர்கால பரம்பரைக்காக நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு நடைபெறாவிட்டால், நாம் வெறும் வார்த்தைகளுக்குள் அடங்கிப் போன ஜனாதிபதியாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி நான் இருக்க மாட்டேன் நான் இந்த நாட்டுக்காக செயலாற்ற வேண்டும்.

நெடுஞ்சாலைகள் இன்றி, மின்சாரம் இன்றி, நாட்டில் அபிவிருத்தி இன்றி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது. இவை இருந்தால்தான் முதலீட் டாளர்கள் வருவார்கள். இவை அனைத் தையும் சேர்த்துதான் நாட்டைக் கட்டி யெழுப்ப வேண்டும்.

எமது அடிப்படை நோக்கம் நாட்டின் அபிவிருத்தியேயாகும். அது உங்களுக்கு இல்லை. உங்கள் குழந்தைகளுக்கான உங்கள் கடமை. இந்தப் பின்னணியை என்னால் தனித்து செய்ய முடியாது. மஹிந்த சிந்தனையில் நாம் அனைத்து பிரிவுகள் பற்றியும் கூறியுள்ளோம். கலைகள், அபிவிருத்தி, சரித்திரம் இவை அனைத் தைப் பற்றியும் கூறியுள்ளோம்.

நாட்டின் சரித்திரம் தெரியாமல் நாம் எதைப்பற்றி பேசுவது? இன்று சிலருக்கு நாட்டின் சரித்திரம் பற்றிய அறிவு இல்லை. சரித்திரம் பற்றி தெரியாமல் எதிர்காலத்துக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

உலக பொருளாதாரத்துடன் கூட்டுறவை கட்டியெழுப்புவதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்க தாக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகவும் அதே நேரம் இந்த நாட்டை அடிமைப்படுத்த எவருக்கும் இடமளிக்க தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜெனரலின் பேட்டி ஊடகங்களுக்கு கசிந்து சென்றது எவ்வாறு? விசாரணையை ஆரம்பித்தது அரசு

sarath_fonseka-02.jpgஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சார்பான பேட்டிகள் எவ்வாறு ஊடகங்களுக்குக் கசிந்து சென்றன என்பது தொடர்பான முழு அளவிலான விசாரணையை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. கடற்படைத் தலைமையகத்தில் கடுமையான பாதுகாப்பில் இராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் பொன்சேகாவின் பேட்டிகள் எவ்வாறு ஊடகங்களைச் சென்றடைந்தன என்பது தொடர்பாக முழுமையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சிக்கு பொன்சேகாவின் கடிதங்கள் கடத்திச் செல்லப்பட்டதாகக் கடந்தவாரம் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இராணுவ நீதிமன்றத்தில் தான் எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என்று பொன்சேகா தெரிவித்ததாகப் பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“எந்தக் குற்றச்சாட்டுகளும் உண்மையற்றவை. அவரிலும் பார்க்க நான் அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதால் அவர் என்மீது பொறாமை கொண்டுள்ளார். அவர் மோசடி செய்தது தொடர்பாக நாம் அவருக்குச் சவால் விடுக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்’ என்று ஜெனரல் கூறியிருந்தார். நான் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக நம்புவதாகவும் தமது வாழ்வுக்கு ஆபத்து என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்தப் பேட்டிகள் தொடர்பாக டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குளுகல்ல பேட்டிகள் எவ்வாறு கசிந்து சென்றது தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்தும் என்று தெரிவித்ததுடன், விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, சனல் 4 க்கு ஜெனரலின் கடிதத்தைக் கசிய விட்டதற்கு எதிரணியே பொறுப்பு என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், ஜெனரல் பொன்சேகாவின் கடிதத்தை பிரிட்டனின் சனல்4 க்கு வழங்கியது ஜே.வி.பி.யின் வேலையென்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடந்தவாரம் சாடியிருந்தார்.

தனுனவை கைது செய்ய உதவுங்கள்; 10 இலட்சம் ரூபா சன்மானம்

danu.jpgகோட்டை மாஜிஸ்திரேட் நீதவானால் கி 60 / 2010 என்ற வழக்கின் கீழ் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்துவரும் தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கு உரிய தகவல்களை வழங்குபவருக்கு 10 இலட்ச ரூபாவை சன்மானமாக வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள சுவரொட்டியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேலே உள்ள படத்தில் காணப்படும், 2/12, மங்கள வீதி, மெனிங் டவுன் மாடி வீடு, கொழும்பு – 08 என்ற விலாசத்தில் வசிக்கும் தனுன திலகரட்ன என்ற நபரை கைதுசெய்வதற்கு உரிய தகவலை வழங்குபவருக்கு 10 இல ட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும். தகவல் வழங்க விரும்பு பவர்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் -011– 2328138, பணிப்பாளர்-011– 2447319, பொலிஸ் அதிகாரி –011– 2324994, (24 மணி நேரம்), உதவி பொலிஸ் அதிகாரி – 011 – 2440157, கட்டுப் பாட்டு அறை-011-2422176, பெக்ஸ் –011-2380381, பொது எண் –011–2320141-5 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்று அந்த சுவரொட்டியில் கூறப்பட் டுள்ளது.

வவுனியாவில் ஜென்ஷிலா மஜீத்துக்கு இன்று பாராட்டு

majeed.jpgதுணிச்சல் மிக்க பெண்ணுக்கான விருதினை அமெரிக்காவில் பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஜென்ஷிலா மஜீதை பாராட்டி கெளரவிக்கும் வைபவம் இன்று, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறும்.

குர்ஆனின் படத்துடன் விளம்பரம்; முஸ்லிம்கள் கடும் ஆட்சேபம்

தமிழ்ப் பத்திரிகையொன்றில் திருக்குர்ஆனின் பெரிய அளவிலான படத்துடன் ஒரு கிண்ணத்தையும் பிரசுரித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதை முஸ்லிம்கள் கடுமையாக ஆட்சேபிக்கின்றனரென ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

பள்ளிவாசலுக்குச் செல்லும் அனைவரும் பிரார்த்திக்குமாறும், “அல்லாஹ்வே உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள்” என்றும் ஏக வல்ல அல்லாஹ்வையும் அவனுடைய அருள்மறையாம் குர்ஆனையும் மிகவும் நிந்தனை செய்யும் வண்ணம் இவ்வரசியல் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டு ள்ளதை முஸ்லிம் இயக்கங்களும், உலமாக்களும், பொதுமக்களும் எம் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

அல்லாஹ்வையும் புனித குர்ஆனை சம்பந்தப்படுத்தி ஒரு தேர்தல் சின்னத்தைப் பிரசுரித்துள்ளமை இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். முஸ்லிம்கள் இந்நாட்டின் வந்தேறு குடிகள் என முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்திய சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரும் இவ்விளம்பரம் முஸ்லிம்களின் உள்ளங்களை ஆழ புண்படுத்தியுள்ளது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நாடு பூராவும் சுற்றித்திரிந்து முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்விடுத்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நிச்சயம் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். அடுத்து ஏகவல்ல அல்லாஹுத்த ஆலாவையும், அவனது அருள்மறையையும் மிகவும் கீழ்த்தரமான அரசியல் விளம்பரத்துக்குப் பாவித்ததையிட்டு பொன் சேகாவின் கட்சியும், அதன் பிரதான பங்காளியான ஜே.வி.பியும் முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.

புத்தபிரானின் உருவச் சிலைக்குக் கீழே நிர்வாணமான ஒரு பெண்மணியை வரைந்து பெளத்த மக்களை சீற்றமடையச் செய்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ள இத்தருணத்தில் முஸ்லிம்களையும் இவ்விதம் விசனத்துக்குள்ளாக்கும் முறையில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மதங்களை நேசிக்கும் யாவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

மதங்களையும், அவற்றைப் பின்பற்று வோரையும் இவ்விதம் அவமானப்படுத்தி களங்கம் விளைவிக்கின்ற இச்செயற் பாடுகளின் பின்னணியில் மேற்கந்திய சதிகாரக் கும்பல்கள் சியோனிஸ சக்திகள் ஒழிந்திருப்பது முஸ்லிம் உலகுக்கு ஒரு புதிய விடயமல்ல. இந்த யூத சியோ னிஸத்தின் உள்நாட்டு முகவர்களான ஐ.தே.கவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் வாக்களிக்கக் கோரிய சரத் பொன் சேகாவின் இந்த மதவிரோத செயற் பாடுகளுக்கு எதிராக அறிக்கை விடுவார்களா? என முஸ்லிம்கள் கேட்க விரும்பு கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இராணுவ உயர் அதிகாரிகள் குழு இலங்கை வருகை

bd.jpgபங்களா தேஷ் இராணுவத்தின் எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழு இலங்கை வந்துள்ளது. இந்த உயர் மட்டக் குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு இராணுவங்களுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இலங்கை இராணுவம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நிலையில் இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. பங்களாதேஷைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் முஹம்மட் இஹ்திஸாம் உல் ஹக் மற்றும் மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக் ஆகியோர் வன்னி இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் முடிவில் பங்களாதேஷ் இராணுவ குழுவினர் இலங்கை இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினர். இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரும் கலந்துகொண்டார். இராணுவத் தளபதியுடனான சந்திப்பை அடுத்து இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தியத்தலாவ இராணுவ அகடமி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவு மற்றும் வன்னி பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

மேஜர் ஜெனரல் இஹ்திஸாம் உல் ஹக், மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக், பிரிகேடி யர் ஜெனரல் ரித்வான் அல் மஹ் மூத், லெப்டினன்ட் கேர்ணல் முஹ ம்மத் அஸதுல்லாஹ் மின்ஹாசுல் அலம், லெப்டினன்ட் கேர்ணல் எம். தெளபீக்குல் ஹஸன் சித்தீக், மேஜர் ஏ. எஸ். எம். பஹவுத்தீன், மேஜர் எம். டி. நஸ்ருல் இஸ்லாம் கான் மற்றும் மேஜர் சகாவத் ஹொஸைன் செளத்ரி ஆகியோரே இலங்கை வந்துள்ளனர்.

விசாரணையின்றி சிறைகளில் இருந்தோரில் 461 பேர் விடுதலை – மேலும் 200 பேரை விடுவிக்க நடவடிக்கை

நீண்டகாலமாக வழக்குகள் விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட் டிருந்தவர்களுள் இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு முன்னாள் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார். சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணைகளை அடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை விடுவிப்பது தொடர்பில் பதினொரு சட்டத்தரணி களை விசேடமாக நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைதிகளின் கோவைகள் தனித்தனியே ஆராயப்பட்டு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 200 பேரின் கோவைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் இவர்களுள் வழக்குகள் பதிவு செய்ய அவசிய மில்லாதவர்கள் விடுவிக்கப்படுவார் களென்றும் முன்னாள் பிரதியமைச்சர் கூறினார்.