ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சார்பான பேட்டிகள் எவ்வாறு ஊடகங்களுக்குக் கசிந்து சென்றன என்பது தொடர்பான முழு அளவிலான விசாரணையை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. கடற்படைத் தலைமையகத்தில் கடுமையான பாதுகாப்பில் இராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் பொன்சேகாவின் பேட்டிகள் எவ்வாறு ஊடகங்களைச் சென்றடைந்தன என்பது தொடர்பாக முழுமையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சிக்கு பொன்சேகாவின் கடிதங்கள் கடத்திச் செல்லப்பட்டதாகக் கடந்தவாரம் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இராணுவ நீதிமன்றத்தில் தான் எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என்று பொன்சேகா தெரிவித்ததாகப் பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“எந்தக் குற்றச்சாட்டுகளும் உண்மையற்றவை. அவரிலும் பார்க்க நான் அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதால் அவர் என்மீது பொறாமை கொண்டுள்ளார். அவர் மோசடி செய்தது தொடர்பாக நாம் அவருக்குச் சவால் விடுக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்’ என்று ஜெனரல் கூறியிருந்தார். நான் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக நம்புவதாகவும் தமது வாழ்வுக்கு ஆபத்து என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்தப் பேட்டிகள் தொடர்பாக டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குளுகல்ல பேட்டிகள் எவ்வாறு கசிந்து சென்றது தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்தும் என்று தெரிவித்ததுடன், விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை, சனல் 4 க்கு ஜெனரலின் கடிதத்தைக் கசிய விட்டதற்கு எதிரணியே பொறுப்பு என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், ஜெனரல் பொன்சேகாவின் கடிதத்தை பிரிட்டனின் சனல்4 க்கு வழங்கியது ஜே.வி.பி.யின் வேலையென்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடந்தவாரம் சாடியிருந்தார்.