செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கண்டி, திருமலைகளுக்கான மீள் வாக்குப்பதிவு. கொழும்பிலிருந்து விசேட கண்காணிப்பு குழுவை அனுப்ப ஏற்பாடு

n2.jpgகண்டி, திருகோணமலை மாவட்டங்களி லுள்ள 38 வாக்களிப்பு நிலையங்களில் மோசடி இடம்பெற்றதனால் அப்பகுதிகளு க்கான மீள் வாக்களிப்பு எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளது. மீள் வாக்குப் பதிவை கண்காணிப்பதற்காக கொழும்பிலிருந்து விசேட குழுவொன்றை அனுப்புவதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை மீள்வாக்குப் பதிவுக்கென வாக்காளர்களுக்கு புதிதாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 19ம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு விடும் எனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 37 வாக்க ளிப்பு நிலையங்களுக்கும் திருமலை மாவ ட்டத்தின் கும்புறுபிட்டியிலுள்ள வாக்களிப்பு நிலையத்துக்குமே எதிர்வரும் 20 ம் திகதி மீள்வாக்குப் பதிவு நடத்தப்படவுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேற்படி வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவை நடத்த தேர்தல்கள் திணைக்களம், திட்டமிட்டுள்ளதுடன் எதிர்வரும் 20ம் திகதி தேர்தல் கடமையில் ஈடுபடுவதற்காக 380 உத்தியோகத்தர்களை நியமித்திருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

ஐ.ம.சு.முவின் மே தினக் கூட்டம்

alavi.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் இம்முறை கொழும்பு மாநகர சபைத் திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதென மேல் மாகாண ஆளுநர் அலவி மெள லானா தெரிவித்தார்.

இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள துடன் இது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 19ம் திகதி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தி னருக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதும் நாட்டைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் அவர்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிப்பது தொடர்பிலும் இம் மே தினத்தில் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றம் 22ம் திகதி கூடியதும் சபாநாயகர் தெரிவு – அதனையடுத்து அமைச்சரவை நியமனம்

புதிய அமைச்சரவை எதிர்வரும் 22ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும். அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையில் திட்டமிட்டபடி 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் மற்றும் கண்டி, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் அடங்கலாக ஐ. ம. சு. முன்னணிக்கு 143 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு (11) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அவர் மேலும் கூறியதாவது, நாவலப்பிட்டியிலும் திருகோணமலையிலும் 20ஆம் திகதி மீளத் தேர்தல் நடைபெறுவதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரமடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தாமதமடைகிறது. தேசியப் பட்டியல் எம். பிக்களின் நியமிப்பும் தாமதமாகியுள்ளது- 21ஆம் திகதி இரு மாவட்ட முழு முடிவுகளும் வெளியிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் தேர்தல் ஆணையாளரினால் அன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அமைச்சரவை நியமிப்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார். அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையிலே புதிய பாராளுமன்றம் கூடும்.

தேசியப் பட்டியலின் மூலம் எமக்கு 17 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். சபாநாயகராக யாரை நியமிப்பது என ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூடி முடிவு செய்வர் என்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேன கூறியதாவது, பிரதமராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஜனாதிபதி முடிவு செய்வார். கட்சியில் இதற்குத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர்.  அவர்களில் மிகவும் தகுதியானவரை ஜனாதிபதி நியமிப்பார்.

அமைச்சரவையை 35 ஆக மட்டுப்படுத்தவே திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு சுமையற்றவாறு அமைச்சர் தொகை முடிவு செய்யப்படும். இம்முறை அமைச்சரவையில் புது முகங்களுக்கும் இடமளிக்கப்படும் என்றார்.

டலஸ் அலஹப்பெரும கூறியதாவது:

வரலாற்றில் முதற் தடவையாக ஐ.தே.க. வின் வாக்குப்பலம் 29 வீதமாக குறைந்துள்ளது. 1977 தேர்தலில் சு.க.வுக்கு 8 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் சு.க. 30 வீத வாக்குகளைப் பெற்றது என்றார்.

நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : செல்வம் அடைக்கலநாதன்

ஏழாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது. அந்த வகையில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் பேரம் பேசுவதற்கான சக்தியாகவும் மக்கள் மாற்றியமைத்து ஆணை வழங்கியுள்ளனர் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான நிரந்தரமானதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசில் தீர்வு எனும் விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடு இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சொன்னார். கூட்டமைப்பின் எதிர்கால நோக்கு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அதன் குரல் தமிழ் மக்களுக்காகவே ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. இதனை ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எந்தவொரு அரசாங்கத்தினாலும் நிறைவேற்றப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்ற நிலையில் தொடர்ந்தும் அதே போக்கு கடைப்பிடிக்கப்படுமானால் அது நாட்டின் ஆரோக்கியமான தன்மைக்கு ஏற்றதாக அமையாது.

தற்போது வடக்கின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். மீள்குடியேற்றம் என்பதும் அபிவிருத்தி என்பதும் உண்மைத் தன்மையானதாக அமைய வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கின்றது.

அடுத்ததாக போரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஊனமுற்றவர்களின்பால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தல், போரினால் கணவரை இழந்து தவிக்கும் விதவைகள் மற்றும் அநாதரவாக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையுணர்ந்து ஏற்ற வகையிலான தீர்வுகளை எட்டுதல் மற்றும் தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி இளைஞர் யுவதிகள், அரசியல் கைதிகள் ஆகியோரின் விடுதலை உள்ளிட்ட முதற் கட்டத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம்..

இதற்காக நாம் அரசாங்கத்தை வற்புறுத்தவிருக்கின்றோம். இதற்கு அடுத்த கட்டமாக இருப்பதுதான் எமது உரிமையான அரசியல் தீர்வாகும். தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் அது தொடர்பிலான தமது நிலைப்பாடுகளை தேர்தல்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நிரந்தர அரசியல் தீர்வொன்று அவசியம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் வலியுறுத்தி வந்துள்ளது. அது மட்டுமல்லாது எமது சமூகத்தின் தேவை குறித்து சர்வதேசத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இதனை சர்வதேசமும் உணர்ந்துள்ளது.

எனவே, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் பங்கு முக்கியமானதாகும். வடக்கு கிழக்கு மக்களின் தீர்ப்பின் பிரகாரம் அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது. அதற்காகவே மக்களும் ஆணை வழங்கியுள்ளனர். அது மட்டுமல்லாது நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் நாம் இருக்கின்றோம்.

எனவே அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் தமது பொறுப்பினை தட்டிக் கழிக்க முடியாது.

பிளவுகளே காரணம்

அதேவேளை, கடந்த பாராளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை ஆசனங்கள் குறைவடைந்துள்ளன. இதற்கு எம்மிடையே ஏற்பட்ட பிளவுகளே காரணமாக அமைத்துள்ளன. இது மட்டுமல்லாது மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதமும் குறைவடைந்து விட்டது. எது எப்படி இருப்பினும் வடக்கு கிழக்கின் தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைவடைந்தமைக்கு கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களே காரணமாகி விட்டனர்.

இனிவரும் காலங்களில் தவறுகள் உணரப்பட்டு ஓரணியாக ஒரே தலைமைத்துவத்தின்கீழ் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்” என்றார்.

வீரகேசரி நாளேடு 4/12/2010

இந்திய கடற்படை கப்பல் திருமலை துறைமுகத்தில்

boat1.jpgஇந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘மாகர்’ என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும், இரு கடற் படைகளுக்கும் இடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடனேயே இந்தக் கப்பல் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இங்கு வந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

மாகர் கப்பலின் கெப்டனான கொமாண்டர் சிமோன் மத்தாயிஸ் தலைமையில் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலை, இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

கடற்படையின் கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கொழம்பகே இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

மாகர் என்ற இந்தக் கப்பல் யுத்தத் தாங்கியும் ஹெலிகொப்டர்களும் நிறுத்தக் கூடிய வசதிகளைக் கொண்டது. 125 மீற்றர் நீலமான இந்தக் கப்பலில் 5 ஆயிரத்து 700 தொன் பொருட்களை ஏற்றலாம். 20 அதிகாரிகளும், 235 பணியாளர்களும் இந்தக் கப்பலில் சேவையாற்றி வருகின்றனர்.

இந்தக் கப்பல் இங்கு சில நாட்களுக்கு நங்கூறமிட்டிருக்கும். இக்கப்பலில் இலங்கை கடற்படை அதிகாரிகள் நூறு பேர் பயிற்சி பெறவுள்ளனர். கப்பல் ஓட்டுதல், தொலைத் தொடர்பு, கப்பல் ஓட்டும் முறை, கப்பல் திருத்தும் முறை மற்றும் தீ அணைக்கும் முறை போன்ற பயிற்சிகள் வழங்கப்படவு ள்ளன.

தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியலில் இடமில்லை – டலஸ் அலஹப்பெரும

தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்களோ எம்.பி.களோ எக்காரணம் கொண்டும் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் டலஸ் அலஹப்பெரும நேற்றுத் தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக அறிவித்துள்ளார். தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களே எம்.பிக்களாக நியமிக்கப்படுவர். ஐ. ம. சு. முன்னணிக்கு எத்தனை தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் என்பது 21ம் திகதி தெரியவரும்.  அதன் பின்னர் ஐ. ம. சு. முன்னணி சார்பாக நியமிக்கப்படுபவர்களின் விபரம் ஆணையாளருக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிவாரண கிராமங்களில் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என பொய்யான தகவல் – வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ்

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியு ள்ள செட்டிகுளம் நிவாரண கிராமங்களில் குடிநீர் விநியோகம் சரியான முறையில் நடைபெறுகின்றது.

அதில் எந்தவித குறைபாடுகளும் இல்லை என வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். தனது அதிகாரிகளை அனுப்பி நிவாரண கிராமங்களுடைய தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஆராய்ந்தபோது குடிநீருக்குத் தட்டுப்பாடு இல்லை என அறிக்கை வந்துள்ளது என கூறினார்.

பொதுத் தேர்தலின் பின்னர் இங்கு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என வெளியான தகவல்கள் முற்றுமுழுதாக பொய்யானது என குறிப்பிட்ட அரச அதிபர், செட்டிகுளம் நிவாரண கிராம ங்களில் இன்னமும் சுமார் 70 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப் பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களிலும் மேலும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய பழைய இடங்களுக்கு திரும்புவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

நிலாவெளி முதல் முசல்பிட்டி வரை சூரியன் இன்று உச்சம்

ஏப்ரல் மாத உஷ்ணம் நிலவுகின்ற இக்காலப்பகுதியில் இன்று (12ம் திகதி) இலங்கையின் முசல்பிட்டி, கெப்பித்திகொல்லாவ, கோமரங்கடவல, நிலாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வானிலை அவதான நிலைய அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

புவிச் சுழற்சியின் அடிப்படையில் இக்காலப் பகுதியில் இலங்கைக்கு நேர் உச்சத்தில் சூரியன் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றது எனவும் அவ்வதிகாரி கூறினார். ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் இன்று முசல்பிட்டி, கெபத்திகொல்லாவ, கோமரங்கடவல, நிலாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சஞ்சரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடி, மின்னல் குறித்து எச்சரிக்கை

lightning.jpgஇடைப் பருவப் பெயர்ச்சி மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளதால் இடி, மின்னல் தாக்கம் குறித்து முன்னெடுச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையமும், வானிலை அவதான நிலையமும் நாட்டு மக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

இடி, மின்னல் தாக்கம் காரணமாக இம் மாதத்தின் முதல் பத்து தினங்களிலும் சுமார் ஐவர் உயிரிழந்துள்ளனர்.  இது தொடர்பாக வானிலை அவதான நிலைய த்தின் வானிலையாளர் சமிந்த பெரேரா, குறிப்பிடுகையில், தற்போது இடைப் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலம் ஆரம்பமாகியுள்ளதால் தான் இடி, மின்னல் மோசமாக காணப்படுகின்றது.

இதன் காரணத்தினால் இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது திறந்த வெளியில் நடமாடுவது, விளையாடுவது, நீர் நிலைகளுக்கு அருகில் இருப்பது, வீட்டில் மின்சார பொருட்களைப் பாவிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது, உயரமான பச்சை மரங்களுக்கு கீழ் நிற்பது என்பவற்றைத் தவிர்த்துக்கொள்ளுவது மிக, மிக அவசியம் என்றும் அவர் கூறினார்.

24வது வயதில் நாமல்

namal.jpgஅம்பாந் தோட்டை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ நேற்று 24வது வயதில் காலடி பதித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ 1,47,568 வாக்குகளைப் பெறும் போது அவருக்கு வயது 23 ஆகும். நேற்று அவர் தனது 24வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார்.

தந்தையின் வழியில் அரசியலுக்குள் கால்பதித்துள்ள இவர், அவரைப் போலவே 24வது வயதில் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறார்.