செய்திகள்

செய்திகள்

செய்திகள்

திங்கள் முதல் யாழ் – முல்லைத்தீவு பஸ் சேவை

jaffna.jpgயாழ் – முல்லைத்தீவு பஸ் சேவையை மீண்டும் திங்கள் முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இருபது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான புதிய நேரடி பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் வட மாகாண பிராந்திய முகாமையாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் 1990 காலப்பகுதியில் இருந்த பஸ் டிப்போ யுத்த சுழ்நிலை காரணமாக சேதமாக்கப்பட்டது. எனினும் தற்போது புதிய பஸ் நிலைய தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை பருத்தித்துறைக்கும் – கொழும்புக்குமான நேரடி பஸ் சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பருத்தித்துறைக்கும் – கொழும்பு பஸ் சேவை அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமே அதிகமாகப் பயன்படுகின்றது. இச்சேவை பகல் வேளையில் இடம்பெறுவதால் போக்குவரத்து செய்யும் மக்களது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

பலாலி தெல்லிப்பளை போன்ற பிரதேசங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி பஸ் சேவையினை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கைக்கு பங்காளி அந்தஸ்த்து – முக்கிய உடன்படிக்கைகளில் நேற்று இலங்கை கைச்சாத்து

glpeiris.jpgநாட்டின் பாதுகாப்பு, நாணயமாற்று மற்றும் வீடமைப்பு உட்பட பல அம்சங்களை உள்ளடக்கிய முக்கிய உடன்படிக்கையொன்றில் அரசாங்கம் நேற்று கைச்சாத்திட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட இவ்வொப்பந்தக் கைச்சாத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் பங்கேற்றதாக அமைச்சர் தெரிவித்தார். சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கை பங்காளி அந்தஸ்தைப் பெற்றுள்ளதையடுத்தே இது சாத்தியமாகியுள்ளதென அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில் :- சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா பிரதான உறுப்பு நாடாகவுள்ளது. சுகாதார சீர்கேடுகளைத் தடுத்தல், கலாசார சீர்கேடுகளைத் தடுத்தல், அரச ஊழியர் வீடமைப்பு, மீனவர்கள் முன்னேற்றம், மின்சக்தித் துறை தொடர்பான அம்சங்களும் இவ்வுடன்படிக்கையில் அடங்குகின்றன.

அடுத்த வாரத்தில் நமது நாட்டுக்குச் சில பொருளாதார நன்மைகள் கிடைக்கவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெஹ்ரானில் ஜீ-15 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஈரான் உட்பட முக்கிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஷெல் – ரூ. 219, லாஃப், ரூ. 323- சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிப்பு

gas-stove.jpgசமையல் எரிவாயுக்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஷெல் காஸின் விலை 219 ரூபாவாலும், லாஃப் காஸின் விலை 323 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் இவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்றுத் தெரிவித்தார்.

இதற்கமைய ஷெல் சமையல் எரிவாயு வொன்றின் புதிய விலை 1769 ரூபாவாகவும், லாஃப் சமையல் எரிவாயு வின் புதிய விலை 1744 ரூபாவாகவும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. சமையல் எரிவாயு விலையதிகரிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாகவே ஷெல் மற்றும் லாஃப் சமையல் எரிவாயுக்களின் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டி ஏற்பட்டிருப்ப தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் மாண்புமிக்கோர் குழு விசாரணை நடத்தும்

srilanka-war.jpgயுத்த இறுதிக் கட்டங்களின் போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவிருக்கும் ஆணைக்குழு விசாரணை மேற்கொள்ளும். அத்துடன் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சூழ்நிலைகள் தொடர்பாகவும் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நபர்கள் அல்லது குழுக்களை அடையாளம் கண்டுகொள்வது குறித்தும் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தும்.

இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி விரைவில் நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. அத்துடன் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் அண்மைய வருடங்களில் தோற்றுவிக்கப்பட்ட மோதல் நிலைவரம் தொடர்பாக இலங்கைக்கு ஏற்பட்ட குழப்பமான தருணங்கள், நெருக்கடிகள் பற்றியும் இந்த ஆணைக்குழு ஆராயும். இன்றைய சூழ்நிலையானது வாய்ப்பான தருணத்தை வழங்கியிருக்கின்றதென்ற கருத்தை ஜனாதிபதி கொண்டுள்ளார்.

அண்மைய மோதல் கட்டம் மற்றும் நாட்டின் துன்பங்கள் கடந்து சென்றுவிட்ட நிலைமையை வெளிப்படுத்துவதாகத் தற்போதைய தருணம் அமைந்துள்ளது. மற்றும் மக்களின் பொதுவான அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டும் சமாதானம், சௌஜன்யம், சுபிட்சம் என்பவற்றுக்கான சகாப்தத்தைக் கொண்டிருப்பதற்கான உறுதியளிக்கப்பட்ட அவர்களின் தீர்மானத்தை வெளிப்படுத்துவதாகத் தற்போதைய தருணம் அமைந்துள்ளது என்ற அபிப்பிராயத்தை ஜனாதிபதி கொண்டிருக்கிறார்.

மோதலான சூழ்நிலைகளின் போது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் ஏதாவது மீறப்பட்டுள்ளனவா என்பது பற்றி ஆராயப்படும். அண்மைய மோதல் கட்டத்தின் போது கற்றுக்கொண்ட பாடங்களைக் கணிப்பீடு செய்யும் போது இந்த விடயம் ஆராயப்படும். அத்துடன், இத்தகைய நிலைமைகளுக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நபர்கள் அல்லது குழுக்களை அடையாளம் கண்டுகொள்ளுதல் தொடர்பாகவும் மதிப்பீடு செய்யப்படும்.

மேலும் மோதல் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களில் தங்கியிருப்போருக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டிய தன்மை குறித்தம் இந்த ஆணைக்குழு பரிந்துரை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோதலுக்குப் பின்னரான சூழ்நிலையில் நிறுவன ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் செயற்பாட்டுத்திரனுடன் எடுக்கப்படவேண்டிய மீள்கட்டுமானம், புனர்வாழ்வு, நல்லிணக்கம் தொடர்பாகவும் இந்த ஆணைக்குழு சிபார்சுகளை முன்வைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த மாதிரியான நிலைமைகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் தேசிய ஐக்கியத்தை மேம்படுத்தவும் சகல சமூகங்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சட்ட நிர்வாக ரீதியான ஏற்பாடுகள் அவசியமானவையாக அமையும். இவையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள ஆணையின் ஓரங்கமாக அமையும்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் 7 மாண்புமிக்க இலங்கையர்கள் இடம்பெறுவர். இலங்கையிலும் மற்றும் வெளிநாடுகளிலுமுள்ள இலங்கையர்கள் இதில் அங்கம் வகிப்பார்கள். இந்த ஆணைக்குழுவின் விதிமுறைகள், பதவிக்காலம் என்பன தொடர்பாக அடுத்த சில நாட்களில் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

‘குடியேற்றப்பட்ட பகுதிகளில் தபாலகங்கள்’

post-boxes.jpgவன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறிய அனைத்து இடங்களிலும் தபால் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதென வடபிராந்திய பிரதி அஞ்சல்மா அதிபதி வீ. குமரகுரு தெரிவித்தார்.

இதுவரையில், 18 இடங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டுள்ளதெனக் குறிப்பிட்ட அவர், கடைசியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளையில் திறக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தபாலகங்கள் திறக்கப்படுவதினால் மீள்குடியேறியுள்ள அனைத்து மக்களுக்கும் எமது சேவை திருப்திகரமான முறையில் வழங்கப்படுகின்றதெனவும் பிரதி அஞ்சல் மா அதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இராணுவ சட்டங்களை பயன்படுத்துவதாக ரணில் குற்றச்சாட்டு

parliament2.jpgபாராளு மன்றத்தில் இராணுவச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்”சயனைட்’ கொடுத்து அழித்தது போல் பாராளுமன்றத்துக்கும் “சயனைட்” ஊட்ட வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி,இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;ஒரு விடயம்தொடர்பில் தீர்மானம் எடுக்கும்போது சட்டமா அதிபருடன் மட்டும் கலந்துரையாடாது சம்பந்தப்பட்ட இருதரப்பினருடனும் அது தொடர்பில் பேசப்பட வேண்டும். கருத்துகள் கேட்கப்பட வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதி அமைச்சின் கீழ் இல்லை. ஜனாதிபதியின் கீழேயே சட்டமா அதிபர் உள்ளார். பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியின் கீழேயே உள்ளது. வழக்குகளை விசாரிப்பவர்களை நீதிச்சேவை ஆணைக்குழுவே நியமிக்க வேண்டும்.

ஜி.எஸ்.பி.+ பெற வேண்டுமானால் முதலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கு “சயனைட்” கொடுத்து அழித்துவிட்டீர்கள். பாராளுமன்றத்துக்கும் “சயனைட்” ஊட்ட முயற்சிக்கின்றீர்கள். தற்போது பாராளுமன்றத்தில் இராணுவச் சட்டங்களே பயன்படுத்தப்படுகின்றன. நகர அபிவிருத்தி தற்போது பொருளாதார அபிவிருத்தியாக மாறிவிட்டது. நகர அபிவிருத்தி ஒரு சகோதரரிடம் பொருளாதார அபிவிருத்தி இன்னொரு சகோதரரிடம். ஏற்றுமதி,இறக்குமதி தொடர்பான 3 புதிய விதிகள் வர்த்தமானி மூலம் கடந்த நவம்பரிலேயே சமர்ப்பிக்கப்பட்டன. அது பழைய பாராளுமன்றம். தற்போது கூடியுள்ளது புதிய பாராளுமன்றம். எனவே, வர்த்தமானி மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சிறப்புரிமை மீறப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை செய்தியாளர் மாநாட்டில் பொன்சேகா

sarath_.jpgபாராளுமன்ற உறுப்பினரான தன்னை இராணுவ நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு வரவிடாமல் தடுத்ததன் மூலம் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகத் தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகத் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா, அதற்கெதிராகச் சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்தார்.

சபாநாயகரின் உத்தரவைக்கூட இராணுவ நீதிமன்றம் உதாசீனம் செய்ததன் மூலம் அரசாங்கம் ஜனநாயகத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் சவால் விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக் குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் பொன்சேகா இதுதொடர்பாக மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

நேற்று முன்தினம் புதன்கிழமை நான் பாராளுமன்றத்துக்கு வருவதற்குத் தயாரானபோது இராணுவ அதிகாரிகள் பாராளுமன்றத்துக்கு அழைத்துச் செல்ல முடியாதெனவும் அதற்கான அனுமதி தமக்குக் கிடைக்கவில்லையெனவும் தெரிவித்ததோடு, இன்றைய தினம் புதன்கிழமை இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியுள்ளதாகக் கூறி பாராளுமன்றம் செல்வதைத் தடுத்தனர். என்னை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்குமாறு சபாநாயகர் இராணுவ நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்த நிலையிலும் கூட அந்த உத்தரவைப் புறக்கணித்ததன் மூலம் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக இராணுவம் செயற்பட்டுள்ளது. இந்தத் தவறான முன்னுதாரணம் பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு எதிர்காலத்தில் பாதகமான நிலைமைகளைத் தோற்றுவிக்கலாம்.

எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்கள் கூட்டம் புதன்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் கூடி இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்துள்ளது. இதனடிப்படையில் இந்த சிறப்புரிமை மீறல் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டைச் சமர்ப்பிக்கவிருக்கின்றோம்.

இந்த பாராளுமன்றச் சிறப்புரிமை மீறல் தொடர்பாக புதன்கிழமை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகரைச் சந்தித்து தமது கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர். இராணுவம் சட்டவிரோதமானதொரு நடைமுறையைக் கையாண்டுள்ளது. சிறப்புரிமை மீறல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் புதன்கிழமை பாராளுமன்றத்தில் கிளப்பியபோது சபாநாயகர் ஆசனத்திலிருந்தவர் அதனைச் செவிமடுக்கத் தவறியுள்ளார்.

அரசாங்கம் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. சட்ட மா அதிபர் கூட பாராளுமன்றத்துக்கே கட்டுப்படவேண்டும். அவ்வாறான நிலையில் பாராளுமன்றம் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெறுவது சட்டவிரோதமானதாகும். பாராளுமன்றம் தொடர்பான அரசியலமைப்பு விதிகளுக்கமையவே இந்த சிறப்புரிமை மீறல் தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்தரப்பு இந்த முடிவைத் தெரியாமல் மேற்கொள்ளவில்லை. நன்கு தெரிந்த நிலையிலேயே என்னை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. தெரியாதது போல் இப்போது நடந்துகொள்ள முயற்சிக்கின்றது  எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

போர் முடிவுற்று ஒரு வருடமாகின்ற போதும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வு வழமைக்குத் திரும்பவில்லை!

House_Without_Roofவிடுதலைப் புலிகள் வெற்றி கொள்ளப்பட்டு, போரை முடிவிற்குக் கொண்டு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இவ்வெற்றியை சிறிலங்கா அரசாங்கம் தற்போது கொண்டாடுகின்றது. ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலத்திட்டங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் துரித செயற்பாடுகளை மேற்கொள்ள வில்லை என போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் தெரிவிக்கின்றனர். வன்னியின் மேற்குப் பகுதிகளில் மீள் குடியேற்றப் பணிகள் இன்னமும் முழுவதுமாக நிறைவடையவில்லை. அதாவது கிளிநொச்சியின் ஏ-9 பிரதான பாதையின் மேற்குப் பக்கமாக மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும்,  அங்கு சில பகுதிகளில் இன்னமும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது கிளிநொச்சியின் கிழக்குப் பகுதிகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

திருவையாறு, வட்டக்கச்சி போன்ற பகுதிகளிலுள்ள மக்கள் தற்போது அவரவர்களின் காணிகளில் குடியமர்த்தப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு மீள் குடியமர்த்தப்படும் மக்கள் வவனியா முகாம்களிலுள்ளவர்களும், முகாம்களிலிருந்து ஏற்கனவே வெளியேறி வவுனியாவில் உறவினர், நண்பர்கள் விடுகளில் தங்கியிருந்தவர்களுமாவர். இறுதிக்கட்டப் போரின் போது, இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளைக் கழற்றித் தம்முடன் கொண்டு சென்றதுடன், வீட்டு உடமைகளையும் முடிந்தவரையில் எடுத்துச்சென்றனர். போர் தீவிரமான போது, மக்கள் அடுத்தடுத்து இடம்பெயர வேண்டியிருந்த போது, சகல உடமைகளையும் விட்டு விட்டு வெறுங்கையுடனேயே சென்றனர். சிலர்  உடமைகளை தங்கள் வீடுகளிலேயே விட்டுச்சென்றனர். தற்போது அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் தங்களின்  உடமைகள் வீட்டுக்கூரைகள் என்பன களவாடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

House_Without_Roofஇதே வேளை, இன்னமும் மீள் குடியமர்த்தப்படாதுள்ள சில இடங்களிலிருந்து மக்கள் விட்டுச்சென்ற அவர்களின் உடமைகளை எடுத்த வருவதற்கு தற்போது படையினரால் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. ஆனாலும், அப்பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் தங்கள் உடமைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கின்றனர். சிலர் எஞ்சியுள்ள பொருட்களை வாகனங்களில் ஏற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ் குடாநாட்டின் சட்டம், ஒழுங்கு குறித்த மாநாடு நீதிபதி விக்னராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.

Judge_R_T_Vignarajaயாழ்.குடாநாட்டில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களைத் தடுத்து, சட்டம், ஒழுங்கு தொடர்பில் தற்போதுள்ள நிலை பற்றி ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதவான் விக்னராஜா தலைமையில் மாநாடு ஒன்று இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ் நிதிமன்றக் கட்டடத்தொகுதயில் நடைபெற்ற இம்மாநாட்டில் குடாநாட்டில் பணியாற்றும் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வடமாகாணப் பிரதி பொலிஸ்மா அதிபர், சகல பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது. சட்டம், ஒழங்குமீறல்களுக்கெதிராக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.  பொதுமக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் சக்திகளுக்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்தும் இம்மாநாட்டில் ஆராயப்பட்டது.

கசாபுக்கு தூக்குத் தண்டனை

kasab.jpgமும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசாபுக்கு தூக்குத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இவ்வழக்கில் கசாப் குற்றவாளி என மூன்று நாட்களுக்கு முன் நீதிபதி தஹில்யானி தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். 166 பேர் பலியான இவ்வழக்கை அரிதினும் அரிதாகக் கருதி அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் தனது வாதத்தின்போது தெரிவித்தார். கசாபின் இளம்வயதைக் கருத்தில்கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கசாபின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்கும் நோக்கத்துடன் கசாப் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக நீதிபதி தஹில்யானி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கொலை, சதிசெய்தல், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட 5 குற்றங்களுக்காக அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

தீர்ப்பு விவரத்தை கேட்டவுடன் கசாப் நீதிமன்றத்தில் தேம்பி அழுதார். தீர்ப்பைப் படித்து முடித்ததும், தீர்ப்பு விவரத்தை கசாபுக்கு நீதிபதி இந்தியில் விளக்கினார். தீர்ப்பு குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா என கசாபிடம் நீதிபதி கேட்டார். எனினும் அதற்கு கசாப் பதிலேதும் கூறாமல் தலையை மட்டும் அசைத்தார். இதைத்தொடர்ந்து அவரைச் சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.