செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சொந்த கிராமத்தில் மீள்குடியேற முடியாத நிலையில் கிளிநொச்சி சாந்தபுரம் மக்கள்!

Rehabilitation_Wanniவவுனியா செட்டிக்குளம் அகதி முகாமிலிருந்து மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்ட கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் அழைத்து வரப்பட்டு மூன்று மாதங்களாகியும் பாடசாலையொன்றிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

கிளிநொச்சியில் இரணைமடுவிற்கும் தெற்கில் ஏ-9 பாதைக்கு கிழக்காக அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் வறியமக்கள் வாழும் ஒரு கிராமமாகும். இக்கிராமத்திலுள்ள காணிகள் இராணுவத் தேவைகளுக்காக எடுக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இம்மக்கள் மீள்குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி இடைத்தங்கள் முகாமில் வைக்கப்பட்டிருந்து தற்போது சாந்தபுரம் பாடசாலைக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள். அப்பாடசாலை சிறிய கட்டடமாகையினால் வெளியில் சிறு கூடாரங்களும் அமைக்கப்பட்டு இம்மக்கள் வசதிகளற்ற நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சாந்தபுரம் பாடசாலையில் இப்போது தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் அங்குள்ள தங்கள் காணிகளைப் பார்வையிட படைத்தரப்பால் தடைசெய்யப்பட்டுள்ளது. இப்பகுதியிலுள்ள 10ஆம் ஒழுங்கைக்கு அப்பால் சென்று பார்வையிட படையினரால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதிகளிலுள்ள தங்கள் வீடுகளின் கூரைகள், மரந்தடிகள் காணாமல் போயுள்ளதாகவும், தென்னை மரங்களிலுள்ள தேங்காய்களும் களவாடப்பட்டிருப்பதாகவும் அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இலங்கையர் இப்போதும் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியும் மீளாய்வு அறிக்கையில் ஐ.நா.

இலங்கையின் பாதுகாப்பு நிலைவரம் முன்னேற்றமடைந்திருக்கின்ற நிலையிலும் இலங்கையைச் சேர்ந்த புகலிடம் கோருவோர்கள் தற்போதும் அதனைக் கோருவதற்கான தகைமையைக் கொண்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடம்கோரும் இலங்கையரின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில்லை. இடைநிறுத்தியிருந்தது. அகதிகளுக்கான ஐ.நா. முகவர் நிலையம் (யூ.என்.எச்.சி.ஆர்.) நாடுகளுக்கான தனது ஆலோசனையை புதுப்பிக்கும்போது தனது தீர்மானத்தை மீளாய்வு செய்வதாக அவுஸ்திரேலிய அரசு கூறியிருந்தது.

இதேவேளை,தனது மீளாய்வு செய்யப்பட்ட வழிகாட்டுதல்களை நேற்று இரவு ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட இலங்கைச் சமூகத்தின் சில பிரிவுகள் விசாரணைக்குட்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சல்மான்கான்களின் வருகையால் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகின்றனர் பாராளுமன்றத்தில் எம்.பி. சுனில் ஹந்துநெத்தி

இலங்கைக்கு சல்மான்கான்கள் வருவதால் கொழும்பில் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகின்றார்கள். வறுமையை ஒழிப்பதற்குப் பிச்சைக்காரர்களை ஒழித்துப் பயனில்லையென்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. யான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சட்டத்தின் ஆதிக்கத்தை அரச கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் பயன்படுத்த வேண்டும். ஆனால், அண்மைய சம்பவங்கள் வேறுமாதிரியாகவுள்ளன. கொழும்பில் பிச்சைக்காரர்கள் கொங்கிறீட் கட்டைகளால் தாக்கிக் கொல்லப்படுகின்றனர். தற்போது கொழும்பில் கொங்கிறீட் கட்டைக் கொலைக் கலாசாரம் ஆரம்பமாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து சல்மான்கான் படம் தயாரிக்க வரும் போதுதான் இந்தப் பிச்சைக்காரர் கொல்லப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பிச்சைக்காரர்கள் இன்று சுதந்திரமாக பிச்சையெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சல்மான்கான் வருவது பிரச்சினையல்ல. ஆனால், “பிச்சைக்கான்’கள் கொல்லப்படுவதுதான் பிரச்சினை.

அவசரகால சட்டம் 132 வாக்குகளால் நிறைவேற்றம் – பட்ஜட் குழுநிலை விவாதமும் நிறைவேறியது

parliament.gifஅவசரகால சட்டம் நேற்று சபையில் 132 வாக்குகளால் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 32 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளும் கட்சி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன் ஐ. தே. க., தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜ. தே. முன்னணி ஆகியன எதிராக வாக்களித்தன.

ஐக்கிய தேசியக் கட்சி கண்டி மாவட்ட எம். பி. அப்துல் காதர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான விவாதம் நேற்றுக்காலை ஆரம்பமானதுடன் விவாதத்தின் முடிவில் ஜனநாயக தேசிய முன்னணி எம். பி. விஜித ஹேரத் வாக்களிப்புக்கு கோரினார். இதனையடுத்து வாக்களிப்பு நடைபெற்றதுடன் 100 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் சபையில் நிறைவேறியது.

இதேவேளை; வரவு செலவுத் திட்டக் குழுநிலை மீதான விவாதமும் 131 வாக்குகளால் சபையில் நிறைவேறியது. ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் ஐ. தே. க. எம். பி. அப்துல் காதர் ஆதரவாக வாக்களித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜ.தே. முன்னணி ஆகியன நடுநிலை வகித்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம். யாழ். அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல்

யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாது காப்பு வலயங்களில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட விருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம். பி. திஸாநாயக்க தெரிவித்தார். அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை, பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ¤க்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

யாழ். தெல்லிப்பளை, கோப்பாய் மற்றும் யாழ். குடாநாட்டின் மேற்குப் பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது, அங்கு அரசாங்க அதிபருடன் நடந்த கலந்துரையாடலின் போதே அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து அரச அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் செயலாளர் திஸாநாயக்க கூறினார்.

இதன்படி யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றத்தை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி அரச அதிபருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் அது தொடர்பான கலந்துரை யாடல்களை தற்போது ஆரம்பித்திருப் பதாகவும் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மதவளவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அது குறித்து விரைவில் சாதகமான பதில் கிடைக்குமென்ற நம்பிக்கையிருப் பதாகவும் கூறினார். அரச அதிபர் கே. கணேஷ் இவ்விடயம் தொடர்பில் யாழ். பாதுகாப்புக்கு பொறு ப்பான கொமாண்டர் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவுடன் கலந்துரையாடி வருகின்றார். அப்பகுதிகளில் தற்போது நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறு அறிவித்தல் வரை யாழ்.அரச அதிபராக கணேஷ்

imalda.jpgபொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்.அரச அதிபராக கே.கணேஷ் மறு அறிவித்தல் வரை கடமையாற்றுவார். இந்த அறிவுறுத்தல் நேற்றுக் கிடைத்த தாக யாழ்.செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் அரச அதிபர் கே.கணேஷ் ஓய்வுபெறுவதாக இருந்ததையடுத்து யாழ்.அரச அதிபராக முல்லைத்தீவு அரச அதிபராக பணியாற்றிய திருமதி இமெல்டா சுகுமார் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்டிருந்தார். ஜூலை முதலாம் திகதி இமெல்டா பதவியேற்க இருந்த நிலையில் முதல்நாள் இரவு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் இருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பேரில் அவர் பதவியேற்கவில்லை.

இதேசமயம் யாழ்.அரச அதிபராக கே.கணேஷ் தொடர்ந்து அந்தப் பதவியை வகித்துவருகிறார்.மறுஅறிவித்தல்வரை கடமையாற்றுவார் என்ற அறிவிப்பு நேற்று வெளிவந்துள்ளது.

முல்லைத்தீவு முஸ்லிம்கள் சொந்த இடங்களை பார்வையிட ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு முன்னதாக அவர்களை தாம் வாழ்ந்த பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று காண்பிக்க உள்ளதாக மாவட்ட செயலகம் கூறியது.

வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 67 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் இடம் பெயர்ந்துள்ளமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். இவர்களுள் 23 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் கடந்த வாரம் கரைதுறைப்பற்றில் மீள் குடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகத்தினூடாக இதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 20 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு சென்றிராததாலும் சிலர் அங்கு செல்ல தயங்குவதாலும் முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை இந்த மாதத்திற்குள் சொந்த இடங்களுக்கு நேரில் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்திற்கு விஜயம்

p.jpgஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ நேற்று மாலை பாராளு மன்றத்துக்கு விஜயம் செய்தார். வரவு செலவுத் திட்ட குழுநிலை மீதான விவாதம் மற்றும் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் ஆகியன நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.

பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்குள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் அமர்ந்து மேற்படி விவாதங்களைச் செவிமடுத்தார். ஜனாதிபதி பாராளுமன்றத் துக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்ததையடுத்து நேற்றிரவும் பெருமளவிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்

கொழும்பு நகரில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 20 தொடர்மாடிக் கட்டடங்கள்! – இலங்கைப் புலனாய்வுப் பிரிவு

கொழும்பு நகரில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 20 தொடர் மாடிக் கட்டடங்கள் உள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ‘லக்பிம நியூஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த 20 தொடர்மாடிக் கட்டடங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும், அவர் கனடாவில் வசித்து வருவதாகவும் புலனாய்வப்பிரிவு தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இக்கட்டடங்களின் உரிமையாளர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ்விடயம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய வர்த்தகருக்கே இக்கட்டடம் சொந்தமானது எனவும். நகர அபிவிருத்தி அதிகார சபை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னரே இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ‘லக்பிம’ தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தொடர் மாடிக்கட்டங்கள் கனடா வர்த்தகருடையது என்பதும், அவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்பதும் விசாரணைகளில் நிருபிக்கப்பட்டால் இக்கட்டடங்கள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இதே போன்று நாற்பதிற்கும் அதிகமான கட்டடங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அங்கீகாரமின்றி கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிவாரணம் நிறுத்தப்பட்ட மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்க ஏற்பாடு!

யாழ். மாவட்டத்தில் மீளகுடியமர்த்தப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்தும் மூன்று மாதங்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா முகாம்களிலிருந்து யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான நிவாரண உணவுப் பொருட்கள் ஆறு மாதங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டதால் குறித்த மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.

இவ்வாறு நிறுத்தப்பட்ட நிவாரண உதவிகள் சம்பந்தப்பட்ட மக்களுக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு  வழங்க யாழ்.மாவட்டச் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விரைவில் குறித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என யாழ்.செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.