பிரதமர் கிலானியுடன் ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ இலங்கை முன்வந்துள்ளது.பாகிஸ்தான் பிரதமர் யூசுவ் ரஸா கிலானியுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ மருத்துவக் குழுவையும் மருந்துவகைகளையும் அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளத்தால் உயிர், உடைமைகளை இழந்தோருக்கு தனது அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி அனுதாபமும் ஆறுதலும் தெரிவித்திருப்பதாக ஏ.பி.பி.செய்திச் சேவை தெரிவித்தது.பாகிஸ்தான் அரசுக்கும் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும்மக்களினதும் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி ராஜபக்ஷ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் மத்தியில் தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வந்துள்ளார்.
அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தேயிலையையும் இலங்கை அனுப்பவுள்ளது. இலங்கையின் நல்லெண்ண நடவடிக்கைகளுக்காகப் பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்திருக்கிறார்.