செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கிளிநொச்சி மாணவர்களுக்கு 120,000 அப்பியாசக் கொப்பிகள்

namal.jpgகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 82 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ/ மாணவியருக்கென ஒரு இலட்சத்து இருபதினாயிரம் (1,20,000) அப்பியாசக் கொப்பிகளைப் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் இவ்வேலைத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ/ மாணவியரின் கல்விக்கு உதவும் வகையில் அப்பியாசக் கொப்பிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்தை இளைஞர்களுக்கான நாளை அமைப்பு செயற்படுத் தியுள்ளது.

இவ்வேலைத் திட்டத்தின் நிமித்தம் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரான நாமல் ராஜபக்ஷ எம்.பி, ஒவ்வொரு பாடசாலைக்கும் நேரில் சென்று அப்பியாசக் கொப்பிகளை பகிர்ந்தளித்து வருகின்றார்.

ஒவ்வொரு பாடசாலையிலும் நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு மாணவ/ மாணவியர் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் மகத்தான பெருவரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது.

இவ்வேலைத் திட்டம் நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடராக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நேற்றைய தினம் பாரதி மகா வித்தியாலயம், ராமநாதபுரம் மகா வித்தியாலயம், வட்டக்கச்சி மகா வித்தியாலயம், பன்னங்கண்டி வித்தியாலயம் உட்பட 13 பாடசாலைகளுக்கு எம்.பி நாமல் ராஜபக்ஷ நேரில் விஜயம் செய்தார்.

இந்நிகழ்வுகளில் உதித்த லொக்கு பண்டார எம்.பி. வட மாகாண கல்வி அமைச்சு செயலாளர் இளங்கோபன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா, ஜெனரல் ராஜகுரு, பிரிகேடியர் விக்கிரமசூரிய உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சீனப் பிரஜை தவறி விழுந்து பலி

புத்தளம் நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அனல் மின் நிலையத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜையொருவர் இன்று காலை மின் நிலைய கட்டிடமொன்றிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.

வைப்பாளர்கள் ஒரே நேரத்தில் பணம் கேட்டதால் நாட்டை விட்டு ஓடினேன் -சக்வித்தி இரகசிய பொலிஸாரிடம் தெரிவிப்பு

sakvithi.jpgபணத்தை வைப்புச் செய்தவர்கள் ஒரே நேரத்தில் பணத்தை திருப்பிக் கேட்டதன் காரணமாக அதனை திருப்பிச் செலுத்த முடியாதிருந்ததாலேயே நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சக்வித்தி ரணசிங்க இரகசிய பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

வைப்புச் செய்யப்பட்ட பணத்துக்கு முறையாக வட்டியை கொடுத்து வந்ததாகவும் அவர்களில் ஒரு சிலருக்கு அவர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து முழுத் தொகையையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுத்ததாகவும் ஆனால் வைப்புச் செய்தவர்கள் அனைவருக்கும் கொடுப் பதற்கு தனது நிதி நிறுவனத்தில் போதிய பணம் இல்லாதிருந்ததாகவும் அவர் கூறினார்.

ஒரு சில தொழில்களில் தான் வைப்புப் பணத்தை முதலீடு செய்திருந்ததாகவும் அதில் இருந்து வைப்பாளர்களின் வட்டியை கொடுத்து வரமுடிந்ததென்றும் ஆனால் ஒரு சிலருக்கு மொத்த வைப்புத் தொகையையும் கொடுத்ததால்தான் வங்குரோத்து நிலையை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்று போலிப் பெயரில் மீண்டும் திரும்பி வந்த சக்வித்தி அவரது மனைவியின் வீட்டில் வைத்து கடந்த 6ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சக்வித்தி மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு வருவதற்கு தமிழ்ப் பெயர்களில் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியிருந்தனர். இந்த போலி கடவுச் சீட்டுகள் வத்தளை ஹேகித்தயில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை போட்ட போது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.சக்வித்தியிடம் இரகசிய பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் எனினும் அவரது சொத்து தொடர்பாக எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று குற்றப்புலனாய்வு திணைக்களம் கூறுகிறது.

ஈரான் அரசால் 15 மெற்றிக் தொன் பேரீச்சம்பழம் அன்பளிப்பு

நோன்பு காலத்தையொட்டி இலங்கை முஸ்லிம்களுக்கென 15 மெற்றிக் தொன் பேரீச்சம்பழத்தை ஈரான் இஸ்லாமிய குடியரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இலங்கையின் ஈரான் நாட்டுக்கான தூதுவர் எம். எம். ஸ¤ஹைர் அந்நாட்டு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக இந்தப் பேரீச்சம் பழம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

இமாம் கொமெய்னி நிவாரண மன்றத்தின் ஊடாக இந்த பேரீச்சம்பழம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மன்றம் இலங்கை முஸ்லிம்களுக் கென தொடராக நாளாவது வருடமாகவும் பேரீச்சம்பழத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மனோ கணேசனை தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஐ.தே.க. நியமித்தால் அரசியலை துறக்கத் தயார் – சவால் விடுக்கிறார் பிரபா கணேசன்

mano.jpgஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனை தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஐ.தே.க. நியமிக்க முன்வந்தால் தான் அரசியலை விட்டு வெளியேறுவதாக பிரபா கணேசன் எம்.பி. சவால் விடுத்துள்ளார்.

மனோ கணேசனின் சகோதரரும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கடந்த வாரம் எதிரணியிலிருந்து அரச தரப்புக்கு மாறியிருந்தார். தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியால் (மனோ கணேசனுக்கு தேசியப்பட்டியலில் எம்.பி. பதவி) இதனைச் செய்ய முடியாதென்பதை

 தாம் அறிவாரென்று இணையத்தளச் செய்திச்சேவையொன்றுக்கு பிரபா கணேசன் நேற்று கூறியுள்ளார். ஐ.தே.கட்சி ஐந்தில் நான்கு பேருடன் சிறு சிறு துண்டுகளாகி தலைமைத்துவத்திற்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவால் எதனையும் செய்ய முடியாத நிலைமையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிரேஷ்ட ஐ.தே.க. உறுப்பினர் உட்பட ஐந்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் ஏற்கனவே கலந்துரையாடியிருப்பதாகவும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளத் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பது தொடர்பான தனது தீர்மானத்தில் மாற்றமில்லையெனவும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்தோருக்கு தான் சேவை செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்திலிருந்து அவர்களுக்கு தன்னால் சேவையாற்ற முடியும் என்பது குறித்து தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் எதிரணிக்கு திரும்பிச் செல்லப்போவதாகத் தெரிவிக்கப்படும் வதந்திகளில் உண்மை கிடையாதெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளார்கள் உள்ளதாக  தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரக் கல்விப்பணியகம் வெளியிட்டுள்ள இத்தகவலில், தனிப்பட்ட முறையிலும் பாலியல் மையங்களிலும் இரகசியமாக இவர்கள் செயற்பட்டு வருவதால் துல்லியமான கணக்கெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமலுள்ளதாக சுகாதாரக்கல்விப்பணியகத்தின் ஊடக இணைப்பாளர் டொக்ரர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும், எயிட்ஸ் கட்டப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் நாடு முழுவதும் 30 ஆயிரம் தொடக்கம் 40ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘மசாஜ்’ நிலையங்கள், நடமாடும் பாலியல் மையங்கள் ஊடாகவும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயம். இருவரின் நிலை கவலைக்கிடம்!

இன்று (Aug 08 2010) மட்டக்களப்பு – கல்முனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரம்புக்கணையை சொந்த இடமாகக் கொண்ட  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  பயணம் செய்து கொண்டிருந்த இவர்களின் முச்சக்கரவண்டி எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.  படுகாயமடைந்துள்ளவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கை ஆடைத்தொழிற்சாலைகளில் யாழ்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

SriLanka_MAS_Factoryதென் இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 70 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழ். செயலகத்தில் நடைபெற்ற பயிற்சி நெறியொன்றின் மூலம தொழில்உறவுகள் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இவ்வேலைவாய்ப்ப வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27, 28, 29ம் திகதிகளில் மாவட்ட திட்டமிடல் செயலகத்தினால் 145 மாணவர்களுக்கு ஆடைத் தொழிற்சாலைத்துறை சம்பந்தமான செயலமர்வு நடத்தப்பட்டது.  இவர்களில் 70 பேருக்கே தற்போது இவ்வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான உணவு, தங்குமிடவசதிகள் என்பன குறித்த நிறுவனங்களால் வழங்கப்படும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

வன்னியில் மீள்குடியேற்றப்படும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்!

IDP_Camp வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த 4ம் திகதி ஆரம்பமான இந்நடவடிக்கைகள் இம்மாதம் 30 திகதி வரை நடைபெறும் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுகள் என்ற அடிப்படையில் இம்மீள்குடியேற்ற நடவடிக்கைககள் நடைபெற்று வருகின்றன.  இறுதிக்கட்ட போரின் போது வன்னியிலிருந்து வெளியேறி வவுனியா அகதிமுகாம்களில் இருந்து பின்னர் வெளி மாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

IDP_Campவெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களுக்கான இறுதிக்கட்ட மீள்குடியேற்ற நடவடிக்கை இதுவென அறிவிக்கப்பட்டள்ளதால் பெருமளவிலான மக்கள் தற்போது கிளிநொச்சியிலுள்ள தங்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியமரும் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளநொச்சி மத்திய கல்லூரியில் அமைந்துள்ள இடைக்கால முகாமில் வைத்து கிளிநொச்சிப் பகுதி மக்களுக்கான இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை 9 மணியிலிருந்து மாலை வரை இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலில் கிராமசேவையாளரின் பதிவுகள், பின்னர் சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரின் பதிவுகள் மற்றும், அவர்களால் புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னர் இராணுவத்தினரின் பதிவுகளும் பின்னர் அவர்களாலும் புகைப்படம் பிடிக்கப்படுகின்றன. அதன் பின்னர் அவ்வப்பகுதி சிவில் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவுள்ள இராணுவத்தினர் பதவுகளுக்குற்படுத்தப்பட்ட மக்களை அவர்களின் காணிகளில் கொண்டு சென்று விடுகின்றனர். முன்னர் இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 12 கூரைத் தகரங்கள் கொடுக்கப்பட்டன. பின்னர் தறப்பாள்கள் கொடுக்கப்பட்டன. தற்போது எதுவும் கொடுக்கப்படாத நிலையில் தங்கள் வீடுகள் அழிவடைந்த, சேதமுற்ற நிலையில் மிகவும் வசதியற்ற நிலையில் மக்கள் தங்களது காணிகளில் மீள்குடியமர்ந்து வருகின்றனர்.

இதே வேளை, படைத்தரப்பின் பதிவுகள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்வுகளின் போது மக்கள் நீண்ட நேரங்கள் வரிசைகளில் காத்திருந்து பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வன்னியில் மீண்டும் குண்டுச்சத்தங்கள்!

Control_Explosionவன்னிப் பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் குண்டுச்சத்தங்களின் அதிர்வுகளை பல சந்தர்ப்பங்களில் கேட்க முடிகிறது. இன்றும் (08-08-2010) கிளிநொச்சிப் பகுதிகளில் இச்சத்தங்களை கேட்க முடிந்தது. படையினரால் மீட்கப்படும் வெடிபொருட்கள் சில சமயங்களில் வெடிக்கவைக்கும் போது இச்சத்தங்களை  மக்களால் உணரமுடிகின்றது. எனினும் கடந்தகால போரின் கொடுமைகளில் சிக்கியிருந்த மக்கள் இவ்வாறான ஒலிகளை கேட்கும் போது அச்சமடைகின்றனர். போரின் நினைவுகள் அவர்கள் மனங்களில் மீண்டும் எதிரொலிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, யாழ்.குடாநாட்டிலுள்ள மக்கள் வன்னி நிலமைகள் தொடர்பாக பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். வன்னியில் சில இடங்களில் சண்டை நடைபெறுவதாகவும், விமானக்குண்டு வீச்சுக்கள் சில பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தங்களுக்குள்  வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் வன்னிப்பகுதிகளில் சில சமயங்களில் கேட்கும் வெடிகுண்டு சத்தங்கள் படையினரால் மீட்கப்படும் அல்லது, அவர்களால் செயலிழிக்கச் செய்யப்படும் குண்டுகளின் ஒலி என்பது குறிப்பிடத்தக்கது.