சிறு பிள்ளைகளோடு உரையாடல் நடத்தினால் “நீங்கள் யாரைப் போல் வரப்போகின்றீர்கள்? என்னவாக வரப் போகின்றீர்கள்?” அவர்களும் தங்களுக்கு தெரிந்ததைச் சொல்வார்கள். ஊரில் கேட்டால் டொக்டர், என்ஜினியர் என்பார்கள். அன்று அப்படித்தான் இருந்தது. இன்றும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். புலம்பெயர் நாடுகளில் கேட்டால் புட்போல் ப்பிளேயராக, யூரியூப்பராக, விடியோ கேம் டிசைனராக என்று சொல்வார்கள். ஏனெனில் இத்தொழில்களில் வருமானம் அதிகம். அவர்கள் வளர்ந்து பதின்ம வயதை அடையும் போது தங்கள் உண்மைநிலையை உணர்ந்து அதற்கமைய தங்கள் தெரிவுகளை மேற்கொள்வார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய தேவை என்ன என்பதை அடையாளம் கண்டுகொண்டால் தான், அத்தேவையை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பட முடியும். இது தனிப்பட்டவர்களுக்கு மட்டுமானதல்ல.
சமூகத்திற்கும் இதே பிரச்சினை இருக்கின்றது. ‘தமிழர்களுக்கு என்ன தேவை?’ என்பதில் இதுவரை எந்தத் தெளிவும் உடன்பாடும் இல்லை. ஆனால் ஜனவரி முதலாம் திகதி நேற்று பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனின் வீட்டில் வைத்துத்தான் தமிழ் பேசும் தலைவர்களின் ஒருமித்த நிலைப்பாடு இறுதி செய்யப்பட்டதாம். அப்படி என்றால் 2021 டிசம்பர் 31 வரை இவர்களிடம் ஒருமித்த நிலைப்பாடு இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்றதும் தெரியாது. டிசம்பர் 31 கொழுத்திப் போட்ட வெடிச்சத்ததில் எழும்பி சனிக்கிழமை ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அந்த நிலைப்பாடு என்ன என்பது தமிழ் சனத்துக்கு தெரியாது.
இந்தத் தமிழ் பேசும் தலைவர்கள் யார் என்பதிலேயே தெளிவில்லை. ரிஎன்ஏ யும் முஸ்லீம் காங்கிரஸ்ம் தான் தமிழ் தலைவர்கள் என்று யார் சொன்னது? முதலில் இந்தச் சொல்லாடல்களை வைத்து ரீல் விடுகின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அதற்குத் துணை போனவர்கள் இன்று தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக தங்கள் கறள்கட்டிய சைக்கிளை எடுத்து ஓடுகின்றனர். தனிச்சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்க கொண்டு வந்தது சிங்கள மக்களின் நலனுக்காக அல்ல. அதேபோல் அதனை எதிர்த்தவர்கள் தமிழர்களுடைய நலன்களுக்காக மட்டும் அதை எதிர்க்கவில்லை.
எழுபதுக்களில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்பிரச்சினை தமிழ் மக்களுடைய பிரச்சினையாக்கப்பட்டது. உண்மையில் அது யாழ்ப்பாணத்தில் இருந்த படித்த சமூகத்தின் ஒரு பிரச்சினையே. ஏனைய தமிழ் மாவட்டங்களைப் பொறுத்தவரை இந்த மாவட்டரீதியான தரப்படுத்தல் ஏனைய தமிழ் மாவட்டங்களில் இருந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் இணைந்து தமிழிர் விடுதலைக் கூட்டணியாக ‘தமிழீழம்’ என்ற கோசத்தை தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்கும் செயற்திட்டமாக முன்வைத்தனர். அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டனர். ஆனால் ‘தமிழீழம்’ அமைப்பது கூட்டணியின் எண்ணமாக ஒருபோதும் இருக்கவில்லை.
அதனை உணர்ந்த இளைஞர்களான வே பிரபாகரன் உட்பட்டவர்கள் தாங்கள் தமிழீழத்தை பெறுகிறோம் என்று கூறிக்கொண்டு சின்னதும் பெரிதுமாக ஆளுக்கொரு ஆயத இயக்கத்தைக் கட்டினர். பாராளுமன்ற அரசியல் கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு இளைஞர்கள் முன்னுக்கு வந்தனர். உடைந்தும், சேர்ந்தும், திருப்பியும் உடைந்தும் ஐந்து இயக்கங்கள் நாற்பது இயக்கங்களாகி எதற்காகவோ சண்டை பிடித்தனர். வே பிரபாகரன் உட்பட இவர்களுக்கும் ‘தமிழீழம்’ நோக்கமாக இருக்கவில்லை. தங்களின் தலைமையின் தாகங்களை, வெறிகளை தமழர்களின் தாகமாகக் கற்பிதம் செய்துகொண்டு தங்களையும் அழித்து சுற்றியிருந்த மற்றவர்களையும் அழித்து தமிழ் மக்களையும் அழித்தனர். தமிழீழத்திற்காக அல்ல தமிழீழத்தின் பெயரால்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் சர்வதேசத்தினதும் ஆதரவோடு இலங்கை அரசு வே பிரபாகரன் கேட்ட தமிழீழத்திற்கு அவரோடு சேர்த்து சங்கூதியது. வரலாற்றை சரியாகக் கற்றுக்கொள்ளாவிட்டால் அதன் திசையை மாற்றி அமைக்காவிட்டால் வரலாறு இன்னொரு சுற்று அதே ஓட்டத்தில் ஓடும். இப்போது ஆயதம் தாங்கியவர்கள் எல்லாம் ஆயதத்தை தூக்கிப் போட்டுவிட்டு மாறு வேசத்தில் வந்து மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுக்கின்றனர். இப்போது மீண்டும் பாராளுமன்ற அரசியல்.
தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை? என்ன தேவை? என்று இவர்கள் யாரும் அன்றும் தமிழ் மக்களிடம் சென்று கேட்டறியவில்லை. இன்றும் கேட்டறிய முயற்சிக்கவும் இல்லை. அது அவர்களுக்கு தேவையானதொன்றும் அல்ல. அவர்கள் தங்களுடைய நலன்களும் அபிலாசைகளும் என்னவென்பதை சரியாக அடையாளம் கண்டு அதற்கான திட்டத்தை மிகச் செம்மையாக வகுத்துள்ளனர். தங்களுடைய நலன்களையும் அபிலாஷைகளையும் தமிழ் மக்களினதாக மாற்றி விட்டுள்ளனர். அதனால் அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கின்றனர்.
கோயிலில் பிள்ளையார் சிலை திருட்டு முதல் வடக்கு கிழக்கு இணைவு வரை ஒரு கதையைச் சொல்லி இடையில் புத்தரையும் பிக்குவையும் செருகி அவர்கள் மக்களை வேறொரு மாயைக்குள் வைத்துள்ளனர். உலக நாணய நிதியம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும், சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் அமெரிக்காவையும் உசுப்பிவிட்டு இடையால தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பம் என்றெல்லாம் தமிழ் பேப்பரிலேயே நாலு எழுத்து வாசிக்காத தமிழ் பாராளுமன்ற சீவன்கள் அறிக்கைவிடுகின்றன.
அல்வாயில் வாழ்ந்தால் என்ன அந்தாட்டிக்காவில் வாழ்ந்தால் என்ன நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு சுத்தமாக இருக்கின்றது என்பது முதல் என்ன உணவை உட்கொள்கின்றோம் என்பது உட்பட நாம் அகற்றும் கழிவுகளுக்கு என்ன நடக்கின்றது என்பது வரை அனைத்துமே அரசியல் தான். தமிழ் மக்களுக்கும் அரசியல் பிரச்சினை இருக்கின்றது. ஆனால் அது இந்த தமிழ் பேசும் தலைமைகளின் ஒருமித்த சுத்துமாத்து கதையளப்புகள் அல்ல.
இலங்கையில் வாழும் இந்த தமிழ் மற்றும் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைக்கும் தமிழ் பேசாத மக்களுடைய பிரச்சினைக்கும் இடையே பாரிய வேறுபாடுகளும் இல்லை. மேலும் தமிழ் பேசும் மக்களுக்கு இடையேயும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றது. ஆகையால் தமிழ் பேசும் மக்களும் தமிழ் பேசாத மக்களும் தங்களுடைய பொதுப் பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொண்டு அதற்கான தீர்வுக்கான செயற்திட்டங்களை இணைந்து வகுக்க வேண்டும். ஒரு தரப்பினரை இன்னொரு தரப்பினர் மீது ஏவிவிட்டு தமிழ் – சிங்கள அரசியல் தலைமைகள் நடாத்தும் கூட்டுக்கலவியை தமிழ் பேசும் தமிழ் பேசாத இலங்கை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 3ம் திகதி அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியது.
ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்த காசிம் சுலைமானி கொலைக்கு பழி தீர்ப்பதாக ஈரான் சூளுரைத்தது. அதன்படி, காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. இதனையடுத்து ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதன்பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான மோதல் மேலும் வலுத்தது.
இந்நிலையில், காசிம் சுலைமானியை படுகொலை செய்ததற்காக அமெரிக்காவிற்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபைக்கு ஈரான் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. சபைக்கு ஈரான் அதிபரின் அலுவலக சட்டத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆதரிக்காமல் இருக்கவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுதல் உட்பட அனைத்து சட்ட முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக, சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.
சுலைமானி கொல்லப்பட்டதன் 2ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், ஈரான் இந்த கடிதத்தை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் மதலா மலைப்பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 65 பயணிகள் பயணம் செய்தனர். இதில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக காணப்பட்டனர்.
பேரூந்தை சம்சுதீன் (வயது 47) என்பவர் ஓட்டிச் சென்றார். அவர் பேரூந்தை தாறுமாறாக ஓட்டினார். இதை பார்த்த பயணிகள் மெதுவாக செல்லும்படி கூறினார்கள். ஆனாலும் சாரதி அதை கேட்கவில்லை. அப்போது திடீரென அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத கால்வாய்க்குள் கவிழ்ந்து தீப்பிடித்தது.
இதனால் பயணிகள் அவசர வழியாக வெளியேற முயன்றனர். ஆனால் அந்த கதவில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டு இருந்ததால் திறக்க முடியவில்லை. இந்த விபத்தில் தீயில் கருகி 22 பயணிகள் பலியானார்கள். ஏராளமானோர் தீக்காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச மாநில கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பஸ்சை தாறுமாறாக ஓட்டிச் சென்று 22 பேர் பலி வாங்கியதால் சாரதி சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் பஸ் உரிமையாளர் ஜிதேந்திர பாண்டேவுக்கு 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணை துண்புறுத்துவது கடவுளை அவமதிப்பதற்கு சமம் என போப் பிரான்சிஸ் தனது புத்தாண்டு உரையில் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று ரோம் நகரில் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசிய அவ்,
தாய் தான் நமக்கு உயிர் கொடுக்கிறார். பெண் தான் இந்த உலகை இணைத்து வைத்திருக்கிறார். ஆகையால் நாம் அனைவரும் தாய்மார்களை மேம்படுத்தவும், பெண்களை பாதுகாக்கவும் இணைந்து செயல்படுவோம். ஒரு பெண்ணுக்கு எதிராக எவ்வளவு வன்முறையைத் தான் இந்த உலகம் கட்டவிழ்க்கும். ஒரு பெண்ணைக் காயப்படுத்துவது கடவுளை அவமதிப்பதற்கு சமம். இவ்வாறு போப் பிரான்சிஸ் கூறினார்.
கடந்த மாதம் இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய போப் பிரான்சிஸ், பெண்கள் மீது வன்முறையைக் கடத்துபவர்கள் சாத்தான் போன்றவர்கள் என்றார்.
கரோனா பெருந்தொற்று தொடங்கிய காலந்தொட்டு போப் பிரான்சிஸ் குடும்ப வன்முறை குறித்துப் பலமுறை பேசியிருக்கிறார். ஏனெனில் கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. பின்னர் உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்தது.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது.
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்டது.
இது மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. இதனால் உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து ப்ளோரோனா என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது ப்ளூ காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஏற்படுவதை குறிக்கும்.
மத்திய இஸ்ரேலில் உள்ள பெட்டாச் டிக்வாவில் உள்ள பெய்லின்சன் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு ப்ளோரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுடன் ப்ளூவென்சா தொற்று இணைவதால் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் நிமோனியா ஏற்படலாம் என்றும் சில சமயங்களில் மரணமும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வகை ப்ளூரோனா வைரஸ் தொற்று குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கூட்டு ஒப்பந்த முறைமை அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நோர்வூட் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிலரின் அரசியல் நோக்கம் காரணமாகவே பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் எனக் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மலர்ந்துள்ள இந்த 2022 புதிய ஆண்டானது அனைவருக்கும் ஆரோக்கியமான ஆண்டாகவும் – விட்டுக்கொடுப்புடனும் – சக மனிதர்களை புரிந்து கொள்ளும் மனோநிலையை இன்னும் வளர்க்க கூடிய ஆண்டாகவும் – மனிதநேயமும் – ஜீவகாருண்யமும் மேலோங்கி உங்களுடைய கனவுகள் – எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நிறைவேறக்கூடிய ஆண்டாக அமைய தேசததின் சார்பாக அனைத்து வாசகர்களுக்கும் புதிய ஆண்டு வாழ்கத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்த வருடம் எங்களுடைய தேசத்துக்கு நீங்கள் வழங்கிய அன்பும் ஆதரவும் எங்களை இன்னும் சிறப்பாக இயங்க செய்திருந்தது. இந்த வருடத்திலும் அதே ஆதரவு எதிர்பார்ப்புடன் வருடத்தை ஆரம்பிக்கிறது தேசம்.. !
பாகம் 22: தீப்பொறி வெளியேற்றம் – தோழியின் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில்
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 22 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 22:
தேசம்: நாங்கள் இப்போது 84, 85 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோழர் சந்ததியர் வெளியேறினது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடுகளை நாங்கள் பார்க்கும் போது இவர்கள் வெளியேறும்போது வைத்த காரணங்கள் முதலே அது சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியேறுகின்ற தன்மைகள், உட்கட்சிப் போராட்டம் நடக்காதது சம்பந்தமாக எல்லாம் கதைத்திருக்கிறோம். சந்ததியார் வெளியேறுவதற்கு முதல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் சில மத்திய குழு உறுப்பினர்கள் தாங்கள் வெளியேறுவதாக அறிவிக்கிறார்கள். அவர்கள் வெளியேறிய பிறகுதான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.
அசோக்: ஓம்.
தேசம்: நீங்கள் பின் தளத்திலிருந்து ஐஞ்சுபேர் தளத்துக்கு போறீங்கள்..?
அசோக்: நாலு பேர்.
தேசம்: ஓ நாலுபேர். சென்றல் கமிட்டீ 4 பேர்; ஜென்னியுமாக ஐந்து பேர் போறீங்க.
அசோக்: ஓம். நாட்டுக்கு தளம் செல்லும்போது ஜென்னியும் எங்களோடு வருகின்றார்.
தேசம்: ஜென்னிக்கும் – உங்களுக்குமான அதாவது மத்திய குழு உறுப்பினர்களுக்குமான தொடர்பு உறவு எப்படி இருந்தது? பொதுவாக சொல்லப்பட்ட விஷயம் ஜென்னி கம்யூனிகேஷன்ல இருந்தவர். பொதுவா கம்யூனிகேஷன் ல இருப்பவர்கள் உமா மகேஸ்வரனோட நெருக்கமானவர்களாக அல்லது நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுறது. அப்போ நீங்க போகும்போது அந்த உறவு நிலை எப்படி இருந்தது?
அசோக்: ஜென்னிக்கும் எனக்குமான உறவு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நல்லதாகவே இருந்தது. அவங்களோட பேமிலி பேக்ரவுண்ட் அவங்க அம்மா எல்லாரையும் தெரியும் எனக்கு. ஆனால் அரசியல் சார்ந்து எனக்கும் ஜென்னிக்கும் முரண்பாடுகள் உண்டு. விமர்சனங்களும் இருக்கிறது. மற்றது எனக்கும் ஜென்னிக்கும் இருந்த இந்த உறவு, மற்ற மூன்று தோழர்களுக்கு இருக்கவில்லை. தோழர்கள் குமரன், முரளி, ஈஸ்வரன் ஜென்னி தொடர்பில் அரசியல் விமர்சனங்களையும், கோபத்தையும் கொண்டிருந்தனர்.
தேசம்: அந்தக் கோபம் கூடுதலா அவர் உமா மகேஸ்வரன் தலைமைக்கு கீழ்…
அசோக்: ஓம். அவர் உமா மகேஸ்வரன்ற விசுவாசியாக இருக்கிறார். அவர் சொல்ற எல்லாத்தையும் நியாயப்படுத்துகிறார் என்று சொல்லி ஆரம்ப காலத்தில் இருந்தே அந்த பிரச்சனை இருந்து கொண்டிருந்தது.
தேசம்: அந்தக் கடல் போக்குவரத்து எவ்வளவு நேரம்?
அசோக்: கடல்போக்குவரத்து நோர்மலா நாற்பத்தி ஐந்து நிமிஷத்துக்கு உள்ள நாங்க போயிடுவோம். ஏனென்றால் ஸ்பீட் போட் தானே. ஆக கூடினால் கடல் கொந்தளிப்பு மழை பெய்தா ஒரு 2 மணித்தியாலம் எடுக்கும்.
அன்றைக்கு சரியான மழையும் கடல் கொந்தளிப்பும். மிகவும் கஷ்டப்பட்டுதான் நாட்டிக்கு போன நாங்கள். அது கடும் கஷ்டமான பயணம்.
தேசம்: அந்தப் பயணத்தில் ஒரு பெண். துணிஞ்சு வாரது என்றது – என்ன சொல்றது கொஸ்டைல் சிட்டிவேசன் தான் அது. ஜென்னிக்கும் இது ஒரு கொஸ்டைல் தான். தனக்கு உடன்பாடு இல்லாதவர்கள் ஓட பயணிக்கிறது. அன்டைக்கு நடந்த உரையாடல் எதையும் மீட்க கூடியதா இருக்கா உங்களால…?
அசோக்: ஞாபகம் இல்ல, ஆனா நாங்கள் எந்த அரசியல் உரையாடலும் செய்திருக்க மாட்டம் என்றுதான் நினைக்கிறேன். ஜென்னி தொடர்பான ஒரு பயம் ஒண்டு இருந்தது. அப்ப நாங்கள் போய் மாதகல்லில் தான் இறங்கினது. ஜென்னி உடனே போயிட்டாங்க. அவங்க எங்களோட தங்கல. அடுத்த நாள் காலையில நாங்க வெளிக்கிட்டு கொக்குவில் போகின்றோம்.
தேசம்: ஜென்னி அப்ப மகளிர் அமைப்புக்கு, பொறுப்பா இருந்தா வா..? என்ன..?
அசோக்: அப்ப மகளிர் அமைப்புக்கு அவங்க பொறுப்பில்ல. அப்ப வந்து மகளிர் அமைப்புக்கு பொறுப்பாய் இருந்தது செல்வி, நந்தா போன்றவங்கதான். சரியா ஞாபகம் இல்ல. ஜென்னி அப்ப தான் தளத்திற்கு வாராங்களோ தெரியல்ல. இது பற்றி எனக்கு ஞாபகம் இல்லை. அதுக்குப் பிறகுதான் ஜென்னி பொறுப்பெடுக்கிறார் என நினைக்கிறேன்.
அசோக்: நிம்மதி எண்டு சொல்ல முடியாது. ஒரே குழப்பமான மனநிலைதான் எங்களுக்கு இருந்தது. காலையில் கொக்குவிலுக்குப் போறோம். அங்க போன பின்புதான் கேள்விப்படுகிறோம், நேசன், ஜீவன், பாண்டி ஆக்கள் எல்லாம் வெளியேறிட்டாங்கள் என்று சொல்லி.
தேசம்: அங்க அவர்கள் வெளியேறுற அதே காலகட்டத்தில் இங்க,
அசோக்: நான் நினைக்கிறேன் அவங்களுக்கு பின் தளத்தில் காந்தன், கேசவன், கண்ணாடிச் சந்திரன் வெளியேறினது தெரிய வந்தவுடன் இவங்கள் வெளியேறி இருக்கலாம்.
தேசம்: ஓம் நீங்க ஒன்றரை மாதத்திற்கு பிறகு தானே தளத்திற்கு வந்தீங்கள்.
அசோக்: ஓம். ஓம். நாங்க இங்க வந்து பார்த்தால் நிறையக் குழப்பம். சிக்கல்கள். எங்களை சந்திக்கின்ற தோழர்கள் எல்லாருமே எங்களை சந்தேகமாக தான் பார்க்கிறார்கள். இங்க வதந்தி பரப்பபட்டு விட்டது , என்ன என்றால், நாங்க புளொட் அமைப்போட முரண்பட்டு தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் ஆட்களோடு சேர்ந்து புளொட்டை உடைச்சிட்டு வெளியேறி வாறம் என்று. இவங்கள் இங்க வந்து பிரச்சினை கொடுக்க போறாங்க, புளொட்டை உடைக்கப்போறாங்க என்று சொல்லி ஒரே பிரச்சினை. எங்கள் மீது சந்தேகம். வந்து ரெண்டு மூணு நாளால பெண்கள் அமைப்பினர் சொல்கின்றனர் எங்களை சந்திக்க வேண்டும் என்று. அப்ப நான், ஈஸ்வரன், குமரன், முரளி எங்க நாலு பேரையும் பெண்கள் அமைப்பு சந்திக்குது. எங்க மேல குற்றச்சாட்டு. நாங்கள் புளொட்ட உடைச்சுட்டு வந்துட்டம் என்று.
அதுவரைக்கும் நாங்கள் எதுவும் கதைக்காம இருந்தனாங்கள். அப்ப தான் மௌனம் கலைக்குறம். அங்க நடந்த பிரச்சனைகளை சொல்லுறம். இதுதான் பிரச்சினை, இதுதான் நடந்தது, அங்க ஒரு ஜனநாயக சூழல் இல்லை. தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் வெளியேற்றம், மத்திய குழுவில் நடந்த பிரச்சனை எல்லாவற்றையும் சொல்கிறோம்.
பிறகு நாங்கள் முடிவெடுக்குறோம். இவங்களுட்ட மட்டும் கதைக்க கூடாது. எல்லா அணிகளையும் கூப்பிட்டு கதைக்கலாம் என்று. அதன் பின் மாணவர் அமைப்பு, தொழிற்சங்கம், மக்கள் அமைப்பு எல்லாரோடையும் நாங்கள் உரையாடல் செய்கிறோம், இதுதான் பிரச்சினை என்று சொல்லி விளங்கப்படுத்துகிறோம்.
பிறகு யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் இல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும், பிரச்சனைகளை விளங்கப்படுத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்கிறோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு எல்லாத்துக்கும் நான் போறேன். ஈஸ்வரன் கிழக்கு மாகாணம் போறார். முரளி வந்து வவுனியா போறாங்க. இப்படி எல்லா இடமும் போய் எங்கட நிலைப்பாட்டை சொல்கிறோம்.
தேசம்: இந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கேலையா உங்களுக்கு தளத்துல?
அசோக்: அந்த நேரத்தில் தளத்தில் இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஷ் தான் இருந்தவர். சின்ன மென்டிஸ் உமாமகேஸ்வரனின் விசுவாசிதான். ஆனால் அவரிடம் பின்தளத்தில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அதிருப்தி இருந்தது. கொஞ்சம் நேர்மையான ஆள். வித்தியாசமான ஆள். அவரோட உரையாடலாம். பிரச்சனைகளை புரிந்து கொள்ளக்கூடியவர். குமரன் பின்தளத்தில் நடந்த பிரச்சனைகள் பற்றி விளங்கப்படுத்தி விட்டார்.
தேசம்: சின்ன மென்டிஸ் தான் தள பொறுப்பு…?
அசோக்: ஓம். தள இராணுவ பொறுப்பு.
தேசம்: அவர மீறி எந்த படுகொலைகளும் …?
அசோக்: நடக்காது. நடக்க வாய்ப்பில்லை. பின் தளத்தில் இருந்து வந்து செய்யலாமே தவிர இங்க செய்ய வாய்ப்பில்லை. நாங்கள் தோழர்களை சந்தித்து பிரச்சனைகளை கதைக்கும் போதெல்லாம் மென்டிஸ் எதுவும் கதைக்கல மௌனமா இருந்துட்டார். பிறகு நாங்கள் எல்லா இடங்களுக்கும் போய் கதைத்த பின் ஒரு முடிவுக்கு வருகின்றோம். நாங்கள் நினைக்கிறோம் , ஜனநாயக பூர்வமான முறையில் ஒரு தள மாநாட்டை நடத்தி அந்த மாநாட்டுக்கூடாக சில தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்று.
தேசம்: தளமாநாடு – மத்திய குழுக் கூட்டம் முடிந்து வரும்போது உங்களுட்ட இந்த நோக்கம் இருந்ததா?
அசோக்: இல்ல அப்படியான ஒரு நோக்கம் இருக்கல. ஆனால் பின்தளப் பிரச்சனைகளை பற்றி தோழர்களோடு கதைத்து ஏதாவது முடிவுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
தேசம்: தளத்துக்கு வந்த பிறகு…
அசோக்: ஓம். தளத்துக்கு வந்த பிறகு குழப்ப நிலையைப் பார்த்த பிறகு இப்பிரச்சனைகளுக்கு, குழப்ப நிலைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாய நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. தனிப்பட்ட வகையில் நம்பிக்கையான தோழர்களோடு உட்கட்சிப்போராட்டம் பற்றி கதைக்கின்றோம். தள மாநாடு நடத்தி ஜனநாயக பூர்வமான முறையில் முடிவுகள் எடுக்கவேண்டும், உட்கட்சிப் போராட்டத்தை ஆரோக்கியமான முறையில் கொண்டு நடத்தவேண்டும் என நினைக்கிறோம். இதற்கெல்லாம் வழிகாட்டியாக மிக்க துணையாக இருந்தவர் தோழர் கௌரிகாந்தன். கோட்பாட்டு ரீதியாக உட்கட்சிப் போராட்டத்தையும், தள மாநாட்டையும் நடாத்திமுடிக்க துணை நின்றவர் அவர்தான். அவர் இல்லாவிட்டால் சாத்தியப்பட்டு இருக்காது.
தேசம்: அவர் அந்த பின்னாட்கள்ல தீப்பொறியோட போய் இருந்ததோ…?
அசோக்: இல்ல. அவர் போகல்ல. கடைசி வரைக்கும் எங்களோடு இருந்தவர்.
தேசம்: அவருக்கும் தீப்பொறி வெளியேறினாக்களுக்கும் பெரிய தொடர்பில்லை…
அசோக்: எந்த தொடர்பும் இல்லை. அவர் கடைசி வரைக்கும் எங்களுடன் தான் இருந்தார். உட்கட்சி போராட்டத்துல மிகத் தீவிரமாக புளொட்ட திரும்பவும் சரியான திசைவழி கொண்டு வரலாம், ஒரு முற்போக்கு அணியா திரும்ப சீரமைக்கலாம் என்றதுதுல உறுதியாக இருந்தவர். இந்த உட்கட்சிப் போராட்டம் பலமா நடக்கிறதுல பெரும்பங்கு அவருக்குறியது தான். அந்த நேரத்தில் தோழர் கௌரி காந்தனின் இயக்கப் பெயர் தோழர் சுப்பையா என்பது.
தேசம்: அதுக்கு முதல் இந்த புதியதொரு உலகம் புத்தகம் எந்த காலகட்டத்தில வந்தது?
அசோக்: பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறிய பின் அவர்களால் எழுதப்பட்டு… அந்த காலகட்டத்தில வெளிவந்தது. அது வந்து 86 நடுப்பகுதி என நினைக்கிறேன்.
தேசம்: வெளியேறினா பிறகு தான் அவை எழுதத் தொடங்கினம்.
அசோக்: பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான், கேசவன் வெளியேறி பின் சில மாதங்களில் தோழர் கேசவன் கோவிந்தன் என்ற பெயரில் இந்த புதியதொரு உலகம் நாவலை எழுதுகிறார். உண்மையில் இது ஒரு கூட்டு முயற்சி. தோழர் ரகுமான் ஜான் பங்கும் அதில் நிறைய உண்டு. அவங்க வெளியேறின பிறகு 86 முற்பகுதியில் தீப்பொறி என்ற பத்திரிகையை வெளியிட்டாங்கள். பெப்ரவரி மார்ச்சில தீப்பொறி வந்திட்டுது என நினைக்கிறேன்.
தேசம்: அதுல என்ன குற்றச்சாட்டுகள் வருது. ஏதாவது?
அசோக்: அது வந்து பின்தளப் பிரச்சனைகள், கொலைகள் தொடர்பாக கடும் விமர்சனங்களோட அரசியல் சார்ந்துதான் அது வந்தது.
தேசம்: அதுல ஆதாரங்கள் வழங்கப்பட்டதா? யார் கொல்லப்பட்டது? என்ன நடந்தது…? எப்ப கொல்லப்பட்டது.
அசோக்: பெருசா ஆதாரங்கள் ஒன்றுமில்லை. புளொட்டினது அராஜகங்கள். முகுந்தனுடைய தனிநபர் பயங்கரவாத போக்குகள் பற்றி இருந்தது.
தேசம்: தாங்கள் பற்றிய சுய விமர்சனம்…?
அசோக்: ஒன்றுமே இல்லை. சுய விமர்சனம் ஒன்றுமில்லை.
தேசம்: பார்க்குறமாதிரி ஏட்டிக்கு போட்டியான,
அசோக்: ஏட்டிக்கு போட்டியானது என்று சொல்ல முடியாது. புளாட்டில் நடந்த பிரச்சனைகளை முன்வைத்தாங்க. ஆனால் எல்லாவற்றிக்கும் முகுந்தனே பொறுப்பு என்றே குற்றம் சுமத்தினார்கள். தங்களைப் பற்றிய விமர்சனம், சுயவிமர்சனம் எதையுமே முன் வைக்கவில்லை. வெளியேறுவதற்கான சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கு தானே. கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான பூரணமான பட்டியல்கள் யாரிடமும் இல்ல தானே.
தேசம்: இல்ல பூரணமான பட்டியல் தேவையில்ல. அட்லிஸ்ட் யார் யார் கொல்லப்பட்டார்கள்…? என்னத்துக்காக கொல்லப்பட்டார்கள்…? ஏனென்றால் இன்றைக்கு வரைக்கும் அது பெருசா வெளியில் வராத விஷயம் அதான்.
அசோக்: ஆனால் சில தோழர்கள் மத்தியில் குறிப்பிட்ட விவரங்கள் இருக்கு. ஆனா அவை ஆவணப்படுத்தப்படவில்லை. உண்மையில் என்ன பிரச்சனை என்றால் இதுவரை யாரும் வெளிப்படையாக யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விபரங்களை வெளியிடவில்லை. ஒருசில பெயர்களை சொல்லுகின்றனர்.
தேசம்: அப்ப தோழர் ரீட்டா பிரச்சனை எப்போது நடந்தது… ?
அசோக்: நேசன், ஜீவன், பாண்டி வெளியேறிய பின் இந்த சம்பவம் நடக்கிறது. அதிருப்தி ஆகி இவங்க வெளியேறிட்டாங்க. வேறு சில தோழர்களும் வெளியேறிட்டாங்க. தீப்பொறி பத்திரிகை வந்தபிறகுதான் தங்களை தீப்பொறி குழுவினர் என ஐடின்டி பண்ணுறாங்க. வெளியேறியவர்கள் தொடர்பா தளத்தில் எந்த ஒரு சிக்கலும் இருக்கவில்லை. எங்களுக்கும் வெளியேறியவர்கள் தொடர்பில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்க வில்லை. புளொட் மிக மோசமான அமைப்பாக இருந்ததால தானே அவர்கள் வெளியேறினார்கள். அதால எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. வெளியேறுவதற்கான ஜனநாயகமும், சுதந்திரமும் அவங்களுக்கு இருக்குத்தானே. அதை எப்படி மறுக்கமுடியும் ?
ஆனால் வெளியேறிய நேசன், ஜீவன், கண்ணாடிச் சந்திரன் தொடர்பாக எங்களுக்கு விமர்சனம் இருந்தது. பின் தளத்தில் நடந்த அதிகார துஸ்பிரயோசங்கள், கொலைகள், தன்னிச்சையான போக்குகளை போன்று , தளத்தில் இவர்களும் செயற்பட்டவங்கதானே. இவை தொடர்பாக முன்னர் கதைத்திருக்கிறேன். சில தோழர்கள் எங்களிடம் ஒதுங்கி இருக்கப் போவதாக சொல்லி இருக்காங்க. அவங்களுக்கு சுதந்திரம் இருக்குத்தானே. ஆனால் நாங்க உட்கட்சிப் போராட்டம் பற்றி தள மகாநாடு நடத்துவது பற்றி நம்பிக்கை ஊட்டிய பின் தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொண்டாங்க.
இந்த காலகட்டத்தில்தான் திடீரென்று ஒரு நாள் பிரச்சனை வருகின்றது, ரீட்டா என்ற தோழரைக் காணவில்லை என்று சொல்லி. பிறகு உதவி ராணுவ பொறுப்பாளர் காண்டீபன் வந்து எங்களிட்ட சொல்றார் ரீட்டா என்ற தோழர் மீது பாலியல் பலாத்காரம் நடந்திருக்கிறது என்று சொல்லி. எங்களால முதல் இத நம்ப முடியல, அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் என்று. பிறகு பெண்கள் அமைப்பு தோழர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இச்சம்பவம் உண்மை என. நாங்க நினைக்கிறோம் வேறு யாராவது இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லி.
தேசம்: வேற அமைப்புக்கள்…?
அசோக்: வேற அமைப்புகள் அல்லது வேற நபர்கள் யாராவது செய்திருக்கலாம் என்ற எண்ணம்தான் எங்களுட்ட இருந்தது.
தேசம்: நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல அந்த கொக்குவில் பகுதி அந்தக் காலம் புளொட் கோட்டையாக இருந்த பகுதி.
அசோக்: ஓம். கோட்டையாக இருந்த இடம். எந்தப் பகுதியில் நடந்தது என்று ஞாபகமில்லை எனக்கு.
தேசம்: அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று சொல்லி தீப்பொறி தரப்பில இருந்து சொல்லப்பட்டிருக்கு இல்லையா…?
அசோக்: ஆரம்பத்தில் மறுத்தாங்க. பிறகு உண்மை என நிருபிக்கப்பட்டதும் வேறு யாரோ தங்களை மாட்ட இப்படி செய்ததாக சொன்னார்கள். காலப்போக்கில தங்கள் மீது பழி சுமத்த வேறு யாராவது செய்து இருக்கலாம் எண்டு ஒரு கதையைக் கொண்டு வந்தாங்கள். இப்போது இவங்க ஃபேஸ்புக்லகில் எழுதுறாங்க அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. கட்டுக் கதை என்று.
தோழர் ரீட்டாவை கண்ணை கட்டித்தான் கடத்தி இருக்கிறார்கள். பிறகு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கு. பெரிய டோச்சர் எல்லாம் நடந்திருக்கிறது. கதைத்த குரல்களை வைத்து ஒருவர் பாண்டி என்பதை அந்த தோழி அடையாளம் கண்டு விட்டா. அடையாளப்படுத்தின பிறகுதான் ஆகப்பெரிய பிரச்சினை தொடங்கினது. பெண்கள் அமைப்பில பெரிய கொந்தளிப்பு. பாண்டி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள்.
அதன் பின்தான் பாண்டியை இராணுவப்பிரிவு தேடத் தொடங்கியது. இந்த நேரத்தில் பாண்டியோடு, நேசன், ஜீவன் ஆட்களும் தலைமறைவாக ஒன்றாக இருந்தாங்க. இதனால் இவங்களையும் புளாட் இராணுவப் பிரிவு தேடத் தொடங்கினாங்க.
பாண்டி, ஜீவனோடயும் நேசனோடையும் தான் எங்கேயோ ஒளிந்து இருக்கிறதா தகவல் வருது. ஒரு தடவை போய் ரவுண்டப் பண்ணி இருக்காங்க, அதுல தப்பிவிட்டாங்கள். தொடர்ந்து பாண்டிய தேடும்போது, இவங்க மூணு பேரும் ஒன்றாக த்தான் இருக்காங்க. பிறகு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தது. அதுல அவங்கள் பிடிபடல.
அதுக்கிடையில, அங்க திருநெல்வேலி கிராமத்தில விபுல் என்றொரு தோழர் இருந்தவர். அந்த தோழர் இவங்களோடு மிக நெருக்கமானவர். புளொட் இராணுவம் அவரை அரெஸ்ட் பண்றார்கள். அரெஸ்ட் பண்ணி அவரை அடித்து துன்புறுத்தினார்கள்… இவர்கள் ஒழிந்திருக்கும் இடத்தை காட்டும் படி. பிறகு அந்த கிராம மக்கள் அந்த தோழருக்கு ஆதரவாக போராட்டம் செய்ததால அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்தத் தோழர் இப்ப கனடாவில இருக்கிறார். அவர் நல்ல தோழர். அவர் இதுல சம்பந்தப்பட வில்லை.
தேசம்: அவர் இதுல சம்பந்தப்படல. இவங்களை தெரியும் என்டதால…
அசோக்: ஓம். ஓம். அந்தத் தோழர் புளொட்டுக்காக நிறைய தன்னுடைய வாழ்க்கையை இழந்தவர். நிறைய வேலை செய்தவர். திருநெல்வேலி பகுதியில் நிறைய தோழர்களை தங்க வைக்கிறதுக்கும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தந்த மிக அருமையான தோழர். இவங்களோட தொடர்பு இருந்ததால் இவங்கள தெரியும் என்று கைது செய்தாங்க. ஊராக்கள் சப்போட் அவருக்கு. ஆர்ப்பாட்டம் ஊர்வலம் எல்லாம் நடத்த, உடனே அவர விட்டுட்டாங்கள்.
தேசம்: இந்த மூன்று பேரும் தப்பி இப்ப இவை …
அசோக்: ஓம் கனடாவுல மூன்று பேரும் பாண்டியோட நெருக்கமாக தான் இருக்குறாங்க. பாண்டி மீது எந்த விமர்சனமும் இவர்களுக்கு இல்லை. கொஞ்சம் கூட இவங்களுக்கு மன உறுத்தல் இல்லை.
தேசம் : தோழர் ரீட்டாவின் பிற்கால வாழ்க்கையில்…
அசோக்: அவங்க இங்கதான் பிரான்சிலதான் வாழ்ந்தாங்க. மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு, மனச்சிதைவுக்குள்ளாக்கப்பட்டாங்க. அவர், குடும்பத்தினராலும் – உறவினர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் ஜெகோவின் சாட்சியம் என்ற கிறிஸ்தவ நிறுவனம், அவரைப் பராமரித்து வைத்தியசாலையில் அனுமதிச்சாங்க. மனநல சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தாங்க. இறுதியில் அவர்களும் கைவிட்டுட்டாங்க…
அதன் பின்னான காலங்களில் அவருக்குத் தெரிந்த பெண்கள் உதவினாங்க. காப்பாற்ற முடியல்ல. இளம் வயதிலேயே இறந்துட்டா…
தேசம்: ஏற்பட்ட அந்த அகோரமான சம்பவங்களால அவாவோட குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு…
அசோக்: ஓம். குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகமிக துன்பப்பட்டு தான் அவங்க இறந்தாங்க. உண்மையில் நான் உட்பட எல்லாப் பேர்களும் குற்றவாளிகள், தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள். இதைப்பற்றி கதைப்பதென்பது வேதனையானது.
தேசம்: அது மிக துரதிர்ஷ்டம் என. 85ம் ஆண்டு தான் முதல் பெண் போராளி ஷோபாட மரணமும் நிகழுது. இப்பிடி ஒரு பெண் போராளிகளாலேயே துன்புறுத்தப்படுறா.
அசோக்: பெரிய வேதனை. அந்த அவலத்தை, துன்பத்தை, கொடுரத்தை உணர்கின்ற சூழல் இன்று இல்ல.
தேசம்: இதற்கு பிற்பட்ட காலத்தில இதுல சம்பந்தப்பட்ட ஒருவர் தான் அதுல ஈடுபடல என்டு கடிதத்தில கையெழுத்து வாங்கினதாக;
அசோக்: ஓம். அந்தப் பாண்டி என்றவர் இதில சம்பந்தம் இல்லை என்று ரீட்டா தங்களுக்கு கடிதம் எழுதித் தந்ததாக. ஃபேஸ்புக்ல ஜீவன் நந்தா கந்தசாமி, நேசன் தான் எழுதியிருந்தவங்க. இச்சம்பவம் தொடர்பாக ஜீவனும், நேசனும் மிக மோசமான பொய்களையும், புனைவுகளையும் எழுதினாங்க. இவர்களின் இந்த செயலை என்னோடு அரசியல் முரண்பாடு கொண்ட பலர் ஆதரித்தாங்க. ஜீவன், நேசன், பாண்டி ஆட்களை விட இவர்கள் மிக ஆயோக்கியர்கள். இவரகளின் பெயர்களை சொல்லமுடியும். வேண்டாம்.
தேசம் : அதே மிக மோசமானது.
அசோக்: ஓ. மோசமானது தான். ஒருபெண் இப்படி கொடுப்பாங்களா. இப்படி எழுதுவது எவ்வளவு மோசமான சிந்தனையும் ஆணாதிக்கதனமும் பாருங்க. அப்படி குடுப்பாங்களா ஒரு கடிதம்…
சீசெல்ஸில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சீசெல்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீசெல்ஸின் லாடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 47 வயதுடைய இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் இம்மாதம் 10 ஆம் திகதி அவர் தங்கியிருந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
பல நாட்களாக பணிக்கு வராததால் குறித்த நபர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், அவர் வீட்டின் அறையில் விழுந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பின்னர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் உயிரிழந்திருந்தமையும், பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்திருந்தமையும் தெரியவந்தது.
அதன்படி, இலங்கையரின் கொலை தொடர்பில் அந்நாட்டு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடகத்துறையில் அண்மைக் காலமாக வளர்ந்து வருகின்ற ஒரு கலைஞர் மாவடி சிறி என்று அறியப்பட்ட ஏ ஆர் சிறிதரன். யாழ் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அவர் நான் கற்ற யாழ் வட்டு இந்துக் கல்லூரியிலேயே கற்றவர் எனப்தும் எனக்கு சில ஆண்டுகள் சீனியர் என்பதாலும் எனக்கு அவர் மீது எப்போதும் ஒரு ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்துள்ளது.
அன்றைய காலகட்டங்களில் வடக்கில் பஷனைக் கொண்டுவருவது யாழ் வட்டுக்கோட்டையும் மானிப்பாயும். அதற்குக் காரணம் இப்பிரதேசங்களில் காணப்பட்ட கிறிஸ்தவர்களின் அளுமை. யாழ்ப்பாணக் கல்லூரி. அதுவே தமிழ் பிரதேசத்தின் முதல் பல்கலைக்கழகமாகவும் மாறியது. கலைத்துறையைப் பொறுத்தவரை சோமசுந்தரப் புலவர் குறிப்பிடத்தக்கவர்.
யாழில் சனத்தொகை செறிந்த பிரதேசங்களில் ஒன்றாகவும் வட்டுக்கோட்டை இருந்துள்ளது. அதுவொரு தனியான தேர்தல் தொகுதியுமாகும். வட்டுக்கோட்டை இல்லாமல் இலங்கைத் தமிழரின் வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. இலங்கையின் ஒரேயொரு தமிழ் எதிர்க்கட்சித் தலைவரை தந்த மண். போராட்ட காலங்களில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருந்த மண். இராணுவ மற்றும் கடற்படை முகாம்களில் இருந்து சில மைல் தூரத்தில் இருந்த படியால் பாரிய இழப்புகளை சந்திக்காத மண்.
ஆனால் விடுதலைப் போராட்ட அரசியலில் மிகவும் அரசியல் மயப்பட்ட மண். முதலாவது அரசியல் படுகொலை – சுந்தரம் படுகொலை வட்டுக்கோட்டையிலேயே நடந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் புதிய பாதை சுந்தரத்தை படுகொலை செய்தனர். வட்டுக்கொட்டையிலேயே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மிகக் காட்டுமிராண்டித்தனமாக தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பள்ளிமாணவர்களான ஆறுவரை படுகொலை செய்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இடையே நடந்த மோதலில் வட்டுக்கோட்டையில் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க போராளிகளின் உடல்கள் மக்களால் பொறுப்பேற்கப்பட்டு கௌரவமான முறையில் தகனம் செய்யப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பெயர்பெற்ற அமைப்புகள் எல்லாம் இருக்கின்ற போதும் தனியொருவனாக சாகசம் புரிந்து தாக்குதல்களை நடத்திய ரெலி என்கின்ற இயக்கத்தின் தலைவர் ஜெகனின் ஊரும் வட்டுக்கோட்டை. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதும் வட்டுக்கோட்டையில் தான்.
சாதியத்திற்கு எதிராக முதல் முதல் ஆயதம் ஏந்தியதும் வட்டுக்கோட்டையில் தான். ஆனாலும் இன்று சாதியம் மையங்கொண்டிருப்பதும் வட்டுக்கோட்டையில் தான்.
ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய வட்டுக்கோட்டையில் இன்றும் மலாயன் பென்சனியர்களை அதிகம் காணலாம். வட்டுக்கோட்டைக்கும் மலேசியாவுக்கும் இன்றும் நெருங்கிய உறவு உள்ளது.
இது வட்டுக்கோட்டை பற்றிய என் மனப்பதிவுகளில் இருந்து குறிப்பிட்ட சில. அப்பேற்பட்ட பிரதேசத்தில் இருந்து வருகின்ற ஒரு எழுத்தாளனோ படைப்பாளியோ அரசியலற்ற ஒருவராக இருப்பது முடியாத காரியம். அந்த வகையில் மாவடி சிறி ஒரு அரசியல், சமூக படைப்பாளியே. அதனாலோ என்னவோ அவருடைய படைப்புகளில் கலையையும் கடந்து அரசியல் வெளிப்பட்டுவிடுகின்றது. அதனால் படைப்பின் கலையம்சத்திற்கும் அதன் அரசியல், சமூக கருத்தியலுக்கும் இடையேயான சமநிலை மாறிப்போய்விடுகின்றது.
2014 முதல் இதுவரை 5 நாடகங்களை மாவடி சிறி மேடையேற்றி உள்ளார். கனவுகள் மெய்ப்பட வேண்டும், நல்லதோர் வீணை செய்து, உன் பார்வை ஒருவரம், கும்மியடி பெண்ணே கும்மியடி, அக்கினிக்குஞ்சு ஆகியவற்றோடு அண்மையில் கொரோனாவுடன் தொடர்புபடுத்தி ஒரு மணிநேர படத்தையும் தந்திருந்தார். மாவடி சிறி கலையை கலைக்காக படைப்பவரல்ல. கலையை மக்களுக்காக படைப்பவர். அவருடைய படைப்புகள் மக்களின் வாழ்நிலையை பிரதிபலிக்கும் விதத்தில் அமைக்கப்படுகின்றது.
ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவருடைய அரசியல் சமூக கருத்தியல் அவருடைய கலையுணர்வுச் சமநிலையை மீறி பிரச்சாரச் சாயலை ஏற்படுத்திவிடுகின்றது. அதற்கு அவர் ஒரு சமூக செயற்பாட்டாளராக இருப்பதும் காரணம் எனலாம். பன்முக ஆளுமை மிக்க மாவடி சிறி திங் ருவைஸ் என்ற அமைப்பை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மோலாக நடத்தி வருபவர். ஒன்றினது தாக்கம் அவர்களை அறியாமலேயே மற்றைய அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. மாவடி சிற புலம்பெயர்ந்த வாழ்வின் பல்வேறு இன்னல்கள் தடைகள் மத்தியிலும் இவ்வாறான படைப்புகளை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருப்பதற்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவருடைய குழவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
‘சமூக செயற்பாட்டில் படைப்பாளர் பற்றிய பகிர்தல் வெளி’ என்ற தலைப்பில் செம்முகம் ஆற்றுகைக் குழு சூம் ஊடாக இணைய வெளி கலந்துரையாடல் ஒன்றை நாளை டிசம்பர் 30 2021இல் இலங்கை நேரம் மாலை 6:30 ற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் மீரா பாரதி, யதார்த்தன், செம்முகம் ஆற்றுகைக் குழு இயக்குநர் சத்தியசீலன், நாடகச் செயற்பாட்டாளர் தருமலிங்கம் புலவர் சிவநாதன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். மாவடி சிறி இறுதியில் ஏற்புரை நிகழ்த்துவார்.