செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஜனாதிபதியாக ரணிலின் பதவியேற்பும் – வெளியாகியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் திடீர் அறிவிப்பும் !

 

நீண்ட கால இழுபறிக்கு மத்தியில் இன்று ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதே நேரத்தில் சில அறிவிப்புக்கள் அடுத்தடுத்து மேற்குலக நாடுகளில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளன.

இலங்கை மக்கள் தாங்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் நிவாரணத் திட்டம் தொடர்பில் இலங்கையுடனான பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவு செய்ய முடியும் எனவும் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜிவா தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​நிவாரணப் திட்டம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த கலந்துரையாடல்களின் பெறுபேறுகளின்படி, வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்
நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவு இருந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற தமது பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில் இத்தனை நாளும் இழுத்தடிப்பு செய்து வந்த சர்வதேச நாணய நிதியம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதை ஊடகங்கள் பலவும் கொண்டாடி வருகின்றன.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்தவரை  இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க முடியாது எனவும் இது சரியாகி நாடு மீள பல வருடங்களாகும் எனவும்  இதுவரை கூறி வந்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க  இன்னும் 5 மாதங்களில் இலங்கையின் பொருளாதார சரிவை மீட்க முடியும் என திடீர் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலிலேயே மேற்கூறியது போல கதைகளிலும் கற்பனைகளிலும் வருவது போல ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதும்  திடீரென அதிசயமான பல தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

ரணிலின் ஜனாதிபதி தெரிவும் – IMFஇன் இந்த அறிவிப்பும் – மத்திய வங்கி ஆளுநரின் கருத்தும் ஒரு சேர ஒரு  விதமான சந்தேககண்ணோட்டத்தை ஏற்படுத்துவது போலவும் ஏற்கனவே இருந்த சில சந்தேகங்களை உறுதிப்படுத்துவது போலவும்  அமைந்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளன.

 

இலங்கை மக்களின் 69லட்சம் வாக்குகளை பெற்று ஆட்சி பீடமேறிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக யாரும் எதிர்பாராத வகையில் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த மாதம் 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார்.

போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிய கட்சிகளின் உந்துதலே காணப்பட்டது என ஒரு தரப்பு  அரசியல் விமர்சகர்கள் கூறிவந்த நிலையில் இன்னுமொரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் ரணிலுக்கு ஆதரவான மேற்கு உலக சக்திகளே இந்த போராட்டத்தை கொண்டு நடத்தின என அழுத்ததிருத்தமாக கூறி வந்த நிலையில் பல விடயங்களை அவர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட போது முக்கியமான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக எடுத்து வைத்து விட்டு வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டமை, ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துடன் வந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை , பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று குறுகிய காலத்திற்குள் ரஷ்யாவின் விமானம் ஒன்று இலங்கையில் தடுத்து நிறுத்தப்பட்டமை என பல விடயங்களில் சந்தேகமான தன்மையை காண முடிந்தது.

ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் இலங்கையின் போக்கு மேற்குலக நாடுகளில் இருந்து முற்றிலும் விலகி சீனாவுடன் மிக நெருங்கியதாகவே காணப்பட்டது. இந்த நிலையில் இது இலங்கையின் மீதானதம் இந்துசமுத்திர பரப்பு மீதானதும் அமெரிக்க – இந்திய அதிகாரத்துக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்துவிட்டது என்பதே உண்மை. இந்த நிலையில் ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு எதிரான அரசியல் மாற்றங்களும் – புரட்சிகளும்  அடுத்தடுத்து அரங்கேறின. அடுத்த இருபது வருடத்துக்கு ராஜபக்சக்கள் ஆட்சி தான் என்ற கருத்து உடைத்து வீசப்பட்டது.

இவற்றின் பின்னணியில் இந்தியாவினதும் அதுசார்ந்த அமெரிக்க – மேற்குலக சக்திகளினதும்  அதிதீவிர நகர்வுகளை இங்கு நடந்த பேராட்டங்களில் காண முடிந்ததாக பல அரசியல் விமர்சகர்களும்  குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இதுவரை நாளும் இலங்கைக்கான கடன் வழங்குவது தொடர்பில் காலந்தாழ்த்தி வந்த சர்வதேச நாணய நிதியம் இன்று இல்ஙகைக்கான உதவி தொடர்பில் அறிவித்துள்ளமையானது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

இயல்பாகவே மேற்குலக நாடுகளின் முகவர் என்ற தோற்றத்தை கடந்த காலத்தில் தொடர்ந்து பதிவு செய்து வந்த ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு இலங்கை மீதான சீனாவின் ஆதிக்க நிறுவுகையினையும் – சீனாவின் பொருளாதார லாப ஈட்டத்தினையும் கட்டுப்படுத்த இந்தியாவும் – அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சியாகவே இலங்கையின்  திடீர் அரசியல் மாற்றங்களை கருத முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் இலங்கை  போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை கடன் வலைக்குள் சிக்க வைப்பதையே நோக்கமாக கொண்டவை என பல தரப்பினரும் எச்சரித்து வந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்த கடன் திட்டத்துக்கான பேச்சுவார்த்தைகளை முடக்கி விட்டிருந்தார். அத்துடன் அண்மையில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பே இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார நலிவுக்கு காரணம் என அண்மையில் சாடியிருந்தது கூட ரணில் விக்கிரமசிங்க தன்னை அமெரிக்க சார்புவாதி என்பதை காட்டும் தோரணையிலேயே அமைந்திருந்தது.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் சில நாட்களில் முழுமையாக தெரிந்து விடும்; ரணில் அமெரிக்க தோலை போர்த்திய நரியா அல்லது இலங்கையை முன்னேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ள அரசியல் தலைவரா என்று…!

 

“இலங்கைக்கு இந்தியா போல வேறு யாரும் உதவவில்லை.” – இந்திய  வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

இலங்கை கடந்த பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் தமிழகத்தைக் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக கட்சிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து டெல்லியில் இன்று இலங்கை நிலைமை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ப சிதம்பரம், பரூக் அப்துல்லா, டி.ஆர்.பாலு, எம் தம்பிதுரை, வைகோ, உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட 8 மத்திய மந்திரிகள் இதில் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய  வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

இன்றைய கூட்டத்தில் இலங்கைக்கு உதவும் நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கை கண்ணோட்டத்தில் நாங்கள் விளக்கம் அளித்தோம். இலங்கையின் தற்போதைய அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் நிலைமை குறித்து விளக்கப்பட்டது.

நமது அண்டை நாட்டில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதால், அது எங்களுக்கு ஆழ்ந்த கவலை அளிக்கும் விஷயம். மீனவர் பிரச்சினை உள்பட இலங்கையுடன் நீண்ட கால பிரச்சினைகள் உள்ளன. இந்த ஆண்டு இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதி உதவி போல் வேறு எந்த நாடும் இந்த அளவு ஆதரவை வழங்கவில்லை. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர், இலங்கை பொருளாதார நெருக்கடியை இந்தியா ஒரு பாடம் போல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினர். இதையடுத்து மாநில வாரியாக, வருவாய் ஒப்பீடு, வளர்ச்சி விகிதம், கடன்கள், சொத்துக்களை அடமானம் வைத்தல் போன்றவை குறித்த மத்திய நிதி அமைச்சகம் ஒரு விளக்கத்தை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவம் – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது !

தமிழ்நாடு கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் – செல்வி தம்பதியின் மகள் ஸ்ரீ மதி ( 17 ) . இவர் , கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் , பள்ளி விடுதியில் மர்மமான முறையில் ஜூலை 13 – ம் தேதி உயிரிழந்தார்.

 

மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் , நேற்று கலவரமாக மாறியது . இதனிடையே , மதியின் பெற்றோர் ராமலிங்கம் , செல்வி ஆகியோர் நேற்று காலை நெஞ்சுவலியால் , வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . பின்னர் , பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் , கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் செல்வி கூறியது : எனது மகள் ஸ்ரீமதி உயிரிழந்து 5 நாட்களாகிறது . கடந்த 4 நாள்களாக அமைதியான முறையில் நீதிகேட்டும் எந்தவித பதிலும் இல்லை . மாணவர்கள் சங்கம் சார்பில் நீதிகேட்டு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை , பள்ளி நிர்வாகம் அடியாட்கள் மூலம் தாக்கியதுடன் , பள்ளிக் கட்டிடம் மற்றும் வாகனங்களை எரித்து , கல்வீசி கலவரத்தை ஏற்படுத்தி , தற்போது மாணவர்கள் மீது பழிசுமத்துகின்றனர் .

 

பள்ளி நிர்வாகம் மீது சின்னசேலம் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஸ்ரீமதிக்கு ஏற்பட்ட நிலை , இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என மாணவர்கள் போராட்டத்தில் பள்ளி நிர்வாகம் மீது சின்னசேலம் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஸ்ரீமதிக்கு ஏற்பட்ட நிலை , இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் . கொலையைத் தற்கொலையாக மாற்றியுள்ளனர் . திட்டமிட்டு கொலை செய்தவர்களைத் தூக்கிலிட வேண்டும் . எனது மகள் இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார் .

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் நேற்று பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதத்தில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.அந்த கடிதத்தில், கணிதம் மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் ரொம்ப பிரஷர் பண்ணறாங்க. என்னால முடியல என குறிப்பிட்டுள்ளதாக தகவல். மேலும் தான் நன்றாக படிப்பதாகவும், ஆனால் கணிதம் மற்றும் வேதியியல் துறை ஆசிரியைகள் படிக்கவில்லை என துன்புறுத்தியதாகவும் தகவல். டாடி, மம்மி மற்றும் தம்பியிடம் சாரி சொல்லி கடிதத்தை முடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதே நேரம் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்த பள்ளி தரப்பு நிர்வாகிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி தரப்பில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று அந்த பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆசிரியைகள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஐந்து பேரையும் ஆகஸ்ட் 1 தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்பொழுது ஐந்து பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் தொடர்ந்து பரவும் காட்டுத்தீ – மோசமடையும் மக்களின் நிலை !

பிரான்சின் தென்மேற்கு பகுதியில் காட்டுத்தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளான 16,000க்கும் மேற்பட்ட மக்களை பிரான்ஸ் வெளியேற்றியுள்ளது.

பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரான்ஸின் ஜிரோண்டேவில் உள்ள அதிகாரிகள், முகாம்களில் இருந்து காவலர்களை வெளியேற்றியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் முன்னதாகவே வெளியேறினர். தற்போது, டெஸ்டெ-டி-புச் மற்றும் லாண்டிராஸ் பகுதிகளில் தீ பரவியுள்ளது.

தெற்கு ஸ்பெயினில், 3,200க்கும் மேற்பட்ட மக்கள் மிஜாஸ் மலைகளில் தீயில் இருந்து வெளியேறினர். இருப்பினும் பின்னர் சிலர் திரும்பி வர முடிந்தது.

போர்த்துகலில் தீ தற்போதைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயினில் வெப்பம் காரணமாக 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஸ்பெயினில் உள்ள மிஜாஸ் தீ, பிரபலமான சுற்றுலாப் பகுதியான மலாகாவிலிருந்து வெகு தொலைவில் இல்லை. ஸ்பெயினின் பிற இடங்களில், காஸ்டிலா ஒய் லியோன், கலீசியா மற்றும் எக்ஸ்ட்ரீமதுரா மாகாணங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது.

ஸ்பெயின், குரோஷியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் தீ பரவியதால், இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.

150 வருடங்கள் அடிமைப்படுத்திவிட்டு இன்று ஆபத்தில் உள்ள இலங்கைக்கு பிரித்தானியா உதவாமல் உள்ளது – இராஜதந்திரி பீட்டர் ஹீப் விசனம்!

இலங்கைக்கு சர்வதேசசமூகம் உதவி வழங்கும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்கவேண்டும் என பிரிட்டனின் ஓய்வுபெற்ற இராஜதந்திரி பீட்டர் ஹீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Thinakkural.lk

கார்டியனில் வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை நெருக்கடிக்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தில் பதில் நடவடிக்கை வெட்கக்கேடானது. மக்கள் பட்டினியால் அவதியுறுகின்றனர். மருந்துகள் இன்மையால் உயிரிழக்கின்றனர்.

போதியளவு பெற்றோல் இல்லாததால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மின்சார தட்டுப்பாடு காணப்படுகின்றது.

அவர்கள் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதற்கு அப்பால் ( ராஜபக்சாக்களின் மோசமான ஆட்சி,30 வருட கிளர்ச்சியால் நாடு சிதைவடைந்ததன் பாரம்பரியம்) நெருக்கடி நிலையில் உள்ள இன்னொரு பொதுநலவாய நாட்டிற்கு உதவும் விடயத்திற்கு பிரிட்டன் தலைமை வகிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். (நாங்கள் அவர்களின் விருப்பமின்றி அவர்களை 150 வருடங்களிற்கு மேல் ஆட்சி செய்தோம் என்பதை கருத்தில்கொள்ளவில்லை, அதற்காக நாங்கள் ஏதாவது கைமாறு செய்யவேண்டும்)

நாங்கள் மிக வேகமாக சர்வதேச நிவாரணமுயற்சியொன்றிற்கு தலைமை தாங்கவேண்டும், பொதுநலவாயத்தின் ஊடாக அதனை செய்யலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வருகிறார் கோட்டாபாய – வெளியாகியுள்ள அறிவிப்பு !

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியா செல்லவுள்ளார்.

இம்மாத இறுதி வரை அங்கு தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ , அதன் பின்னர் நாட்டுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இருப்பினும் மகனின் பாதுகாப்பிற்காக. அமெரிக்கா செல்லும் திட்டத்தையும் கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தெரிவித்தார்.

பிறந்த தாய்நாட்டிற்கு தனது சிறந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.

“28 வருட ஜனநாயக அரசியல் அனுபவத்திலிருந்து சொல்கிறேன் ரணில் தான் நாட்டை மீட்பார்.”- டக்ளஸ் தேவானந்தா

இடைக்கால ஜனதிபதி பதவிக்கு, தற்போதைய பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும்  ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என தாம் நம்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்வுக்கான போட்டியில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரையே தாம் ஆதரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அதிபர் தேர்வுக்கான விடயம் தொடர்பில் சஜித் பிரேமதாசா என்னுடன் பேசியிருந்தார். அதன்போது அவர் என்னை தனது தந்தையின் நண்பர் என்றும் தனக்கு குறித்த அதிபர் போட்டியின்போது ஆதரவு தருமாறும் கோரியிருந்தார்.

ஆனால் நான் கருத்தில் எடுப்பதாக தெரிவித்திருந்தபோதிலும் குறித்த போட்டியில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரையே ஆதரிக்கவுள்ளேன்.

மேலும் போராட்டக்காரர்கள் தங்களது நிலைமையை உணர்ந்து அமைதிவழியில் இந்த பிரச்சினையை சமாளிக்க எண்ணுகின்றனர். இது குறித்து பதில் அதிபருடன் கலந்துரையாடி எனது கருத்தையும் அவரிடம் முன்வைத்திருந்தேன். குறிப்பாக குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தில் முன்வைக்கும் நியாயத் தன்மைக்கு ஏற்ப தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு அவர் அதைத்தான் தானும் எண்ணியிருப்பதாகவும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் தான் எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியாக நியமனமானால் அவர்களை அழைத்து பேசவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல மஹிந்த தரப்பினரை பாதுகாப்பதற்கான தேவைப்பாடு ரணில் விக்ரமசிங்க இருக்கப்போவதில்லை.ஆனால் தற்போதுள்ள அரசு ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற அரசியல் தேவை அவருக்கு இருக்கலாம். அவரும் இந்நாட்டின் ஒரு சிறந்த அரசியல்வாதிதான்.

நாடு குழப்ப நிலையில் இருந்தபோது யாரும் பிரதமர் பொறுப்பை ஏற்க முன்வராதிருந்தபோது ரணில் விக்ரமசிங்கவே முன்வந்து அந்த பொறுப்பை ஏற்றிருந்தார். அதன்பின்னர் தற்போது அவருக்கு இந்த சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது. அதற்கு அவர் சரியானவராகவே இருப்பதாக நான் கருதுகின்றேன். ஏனெனில் எனக்கும் இந்த நாடாளுமன்றில் 28 வருட ஜனநாயக அரசியல் அனுபவம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கருக்கலைப்புக்கு அனுமதி – அமெரிக்காவில் இரு மசோதாக்கள் நிறைவேற்றம் !

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை ரத்து செய்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கருகலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்த நிலையில், சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்ட் சபையில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

பேரம்பேசுவதற்கு மீண்டும் ஓர் சந்தர்ப்பம் – பயன்படுத்திக்கொள்வார்களா தமிழ் தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபாய ராஜபக்ச தன்னுடைய ஜனாதிபதி பதவியை விட்டு விலகுவதாக உத்தியோகபூர்வமாக இன்று காலை உத்தியோகபூர்வமாக செய்தி வெளியான நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதாக எண்ணி இன்று கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் பாற்சோறு செய்தும் பட்டாசு வெடித்தும்  தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்தப் போராட்டம் உண்மையிலேயே புரட்சி என கூற கூடிய அளவிற்கு இருந்ததா..?  என கேட்டால் இல்லை என்றே கூற வேண்டும். போராட்டக்காரர்கள் பெரிதாக எந்த ஒரு அரசியல் விடயங்களும் – புதிய இலங்கைக்கான தெளிவான திட்டங்களும் முன்வைக்கப்பட்டதாக தெரியவில்லை. மாறாக ராஜபக்சக்கள் மீதான வெறுப்பு மட்டுமே மேலோங்கி இருந்தது.

இது மட்டும் இல்லாது போராட்டக்காரர்கள் தங்களுடைய போராட்டத்துக்கான கொள்கைகளையும் கோஷங்களையும் முறையாக வெளிப்படுத்தவில்லை என்பதே கண்கூடு. குறிப்பாக ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டமையாக இருக்கலாம் அல்லது அலரி மாளிகை மற்றும் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கான முயற்சியாக இருக்கலாம் அனைத்தும் இலங்கையில் ஜனநாயகம் என்ற விடயத்தை கேள்விக்கு உள்ளாக்கி கேலிக்கூத்தாக்கி உள்ளது என்பதே உண்மை. போராட்டம் இடம்பெற்றது ஏன்..? எதற்கு..? என்ற வினாக்களுக்கு இன்று வரை விடை தெரியவில்லை. ஜூலை 9  போராட்டத்தினுடைய முடிவில் போராட்டக்காரர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கை மிக்க கனதியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  மாறாக போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சாதாரணமாக கடந்து விடக் கூடியவையாக காணப்பட்டன. உண்மையிலேயே இந்த போராட்டம் எரிபொருள் தட்டுப்பாடு, பெட்ரோல் தட்டுப்பாடு என ஆக சில விடயங்களோடு மட்டுமே முற்றுப் பெற்றுள்ளது என்பதே கவலையான உண்மை. போராட்டக்காரர்கள் ராஜபக்சக்களை எதிர்ப்பது போன்றதான ஒரு தோரணையில் மட்டுமே போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி  தமிழின் கள அனுபவம் - BBC News தமிழ்
இந்தப் போராட்டத்தின் அறிக்கைகளில் முன் வைக்கப்பட்டிருந்த கருத்துக்கள் கூட தனித்து மீண்டும் தனிப் பெரும்பான்மை என்ற கருத்தியலையே முன்னிறுத்துவதாகவே காணப்பட்டது. முக்கியமாக கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்ட எந்த சந்தர்ப்பத்திலும் அவருடைய போர் குற்றங்கள் தொடர்பிலும் , காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வு தொடர்பிலோ பெரிதாக அலட்டிக்கொள்ளப்படவில்லை.  இது இன்னமும் இலங்கையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு  ஏற்படவில்லை என்பதையே மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 30 வருட போர் வெற்றியை கொடுக்க மனதில்லாது சரத் பொன்சேகாவிற்கு அந்த 30 வருட போர் வெற்றியை சூட்டுவதற்கு முயற்சித்ததையும் காண முடிந்தது. இது தவிர போராட்டத்தில் ஈடுபட்ட  ஏனைய மத குருமார்களை காட்டிலும் பௌத்தசங்கத்துக்கும் – அதன் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதன் பின்னணியில் இன்னமும் சிங்கள-பௌத்த மனோநிலையில் இருந்து இந்த நாடோ – சிங்கள இளைஞர்களோ மீளவில்லை என்பதையே காண முடிகின்றது.
இவற்றுக்கு அப்பால் ,
ராஜபக்சக்களுக்கு எதிரான இந்த போராட்டத்தை தமிழர் தரப்பு முறையாக பயன்படுத்தியதா..? எனக் கேட்டால் முற்றிலும் இல்லை என்றே கூற வேண்டும். ஆக குறைந்தது தங்களுடைய அபிலாஷைகளையும் – தேவைகளையும் – தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீத்யையும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் சரி போராட்ட களத்தில் ஏதாவது கோஷங்கள் முன்வைக்கப்பட்டதா என்று கேட்டால் அதுவும் இல்லை. வடகிழக்கு தமிழர்கள் தங்களுடைய தேவைகளையும் – தங்களுடைய அபிலாசைகளையும் – தங்களுடைய பிரச்சனைகளையும் தென்னிலங்கைக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பை இன்று தவற விட்டுவிட்டார்கள் என்பதை உண்மை.
இந்தப் போராட்டத்துக்காக பெருமளவு கலந்து கொண்ட இளைஞர்களில் அதிகம் பேர் சிங்கள இளைஞர்களாகவே காணப்பட்டனர். தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்த போதும் சொற்பமானவர்களாகவே கலந்து கொண்டனர்.            வட- கிழக்கில் இருந்து கலந்து கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை காட்டிலும் தென் இலங்கையிலும் – மத்திய இலங்கை பிராந்தியங்களிலும் பிறந்து வளர்ந்த – வேலைக்காக குடியேறியுள்ள  தமிழ் இளைஞர்களே இந்த போராட்டங்களில் கலந்து கொண்டு இருந்தனர். இதனாலையோ என்னமோ ராஜபக்சக்களிடமும் – தென்னிலங்கை சமூகத்திடமும்  கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள் – தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்களும்  கேட்கப்படாமலும் – தெரிவிக்கப்படாமலுமே  விடப்பட்டு விட்டன.
இது போக ராஜபக்சகளுக்கு எதிராக தென்னிலங்கை முழுமையிலும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க அதனை ஏதோ விளையாட்டுப் போட்டி பார்ப்பது போல தமிழர் தரப்பு யார் வெற்றி பெறுவார்கள்..? என்பது போலவும் ஏதோ நடத்தி முடிக்கட்டும் நாம் வெறும் பார்வையாளர்களே என்ற கோணத்தில் கையாண்டு இருந்தது. மேலும் Karma is boomerang என்ற மனோ நிலையில் நின்று கொண்டு ராஜபக்சக்களை கர்மா தண்டிக்கிறது என பேசிக்கொண்டு இருந்தனர். மேலும் தென்னிலங்கை முழுமையுமே போராட்டத்தால் எரிந்து கொண்டிருக்க வட-கிழக்கு திருவிழா கொண்டாட்டங்களாலும் – பெட்ரோலுக்கான காத்திருப்புகளாலும்  நிறைந்து வழிந்தது.
மேலும் தமிழ் அரசியல்வாதிகள் சரி இந்த போராட்டங்களை  ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் –  காலதிகாலமாக பேசி வரும் தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு களமாக பயன்படுத்தினரா..?  என கேட்டால் அதுவும் இல்லை. ஜூலை 9 ராஜபக்ச அரசுக்கு எதிராக நடந்து முடிந்திருந்த  இறுதிப் போராட்டத்தினை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் தமிழ் தலைமைகள் சார்பில் சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கு பற்றி இருந்தனர். தமிழர் தரப்பினுடைய பிரச்சனைகள் தொர்பில் பலமாக  அவர்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்த்து இருந்த போதும் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி அவர்கள் எதையுமே அங்கு கதைத்து இருக்கவில்லை. குறிப்பாக இன்னமும் அமுலில் இருக்கக்கூடிய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டியதன் தேவை குறித்தோ, காணாமல் ஆக்கப்பட்டு ஒருபிரச்சினைக்காக ஆயிரம் நாட்களை தாண்டியும் போராடும் தமிழ் மக்களினுடைய பிரச்சனைகள் குறித்தோ , வடகிழக்கு சுவிகரிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பிலும் எந்த ஒரு விடயங்களையும் அவர்கள் பேசி இருக்க வில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு நாள் ஜனாதிபதி பதவியை ஏற்கும் வாய்ப்பையோ –  அதிகாரத்தையோ  கூட வழங்காதீர்கள் என மிக வினயமாக  அவர்கள் வேண்டி இருந்தனர். (இதே ரணில் விக்கிரமசிங்க வெற்றிக்காக ஓட்டு போடுங்கள் என வட-கிழக்கின் தெருக்களில் இறங்கி கூவி கூவி திரிந்ததும் இதே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தான் என்பதையும் நினைவு படுத்திக் கொள்வோம்.) ஏனைய தமிழ்  அரசியல் தலைவர்களின் அடையாளமே இந்த போராட்ட காலங்களில் இல்லாது போய்விட்டது.
முழுமையாக தமிழ் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் –  தமிழ் மக்களும் – தமிழ் இளைஞர்களும்
இந்தப் போராட்டத்தில் இருந்து முழுமையாக  விலகியே இருந்தனர்.
பயன்படுத்த வேண்டிய – பயன்படுத்தி இருக்க வேண்டிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இன்று தமிழ் சமூகம் தவற விட்டுவிட்டது என்பதை உண்மை. ஆக குறைந்தது இந்த ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தினை பயன்படுத்தி தென்னிலங்கை சமூகத்தின் கவனத்தை  தமிழர் பக்கம் திருப்புவதற்கு இம்மியளவு முயற்சி கூட மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மை. இன்னும் இந்த சர்வதேசம் தமிழர்கள் விடயத்தில் தீர்வை தரும் என அதே பழைய பொய்களை தான் இந்த அரசியல்வாதிகள் தமிழ்ர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள். தமிழர்களும் அதனைத் தான் உண்மை என்றும் – சரியானது என்றும் நம்பிக் கொண்டு அதே போலி தமிழ் தேசியத்தில் திளைத்திருக்கப் போகிறார்கள் என்பதை கடந்த மூன்று மாதங்களில் இருந்த தமிழர்களின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது.
சரி நடந்து முடிந்த விடயங்களை கைவிடுவோம். இன்னும் மீதமாக ஒரு வாய்ப்பு எஞ்சியுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் தலைமைகளை நம்பி தமிழ் மக்கள் வழங்கிய அந்த ஓட்டுக்களையும் பயன்படுத்தக்கூடிய இறுதி சந்தர்ப்பம் ஒன்று எஞ்சியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளவுள்ள  சவால்கள்? – Maatram
இந்தப் போராட்டம் இலங்கையில் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டியதற்கான புதிய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அடிப்படையில் புதிய ஜனாதிபதி தெரிவு ஜூலை 20ஆம் தேதி பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் நீ நான் என்ன முண்டியடித்துக் கொண்டு தங்களை ஜனாதிபதி வேட்பாளர்களாக பிரகடனப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த தேர்தலில் வாக்களிக்கப் போகிறவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான். தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும் வட-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 13 பேர் உள்ளனர். இவர்கள் தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகளாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய முக்கியமான ஒரு தருணம் ஏற்பட்டுள்ளது.  நீ நான் என்ன போட்டி போட ஆரம்பித்துள்ள தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தங்களுடைய சரியான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய அதே நேரம் இந்த பந்தயத்தில் வெற்றிபெறக்கூடிய  வேட்பாளர் ஒருவரை தமிழ் தலைமைகள் தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் மிக நீண்ட காலமாக இருந்து வரக்கூடிய பல பிரச்சனைகளும் வட- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால்  கோரிக்கையாக முன் வைக்கப்படுதல் வேண்டும்.   குறிப்பாக தமிழர் பகுதிகளில் இன்னமும் எரிந்து கொண்டிருக்கக்கூடிய பிரச்சனைகளான ; வட-கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பான விடயங்களும், போர் முடிந்த பின்னும் இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் தமிழர்களின் நிலங்கள் தொடர்பிலும், ஆயிரக்கணக்கான நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு வேண்டி போராடிக் கொண்டிருக்கும் உறவுகளுக்கான தீர்வுகள் தொடர்பிலும் , பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தேவை தொடர்பிலும் , இயங்காது இருக்கக்கூடிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் தொடர்பிலும் அழுத்த திருத்தமாக குறித்த கோரிக்கைகள் ஊடாக வலியுறுத்தப்படுதல் வேண்டும்.
இந்த கோரிக்கைகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்த வகையில்  ஒரு வேட்பாளரை தெரிவு செய்து குறித்த கோரிக்கைகள் தொடர்பில் வலியுறுத்தி தங்களுடைய ஆதரவை குறித்த வேட்பாளருக்கு  வழங்க  முன்வர வேண்டும்.
தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல் - GTN
பரபரப்பான அரசியல் நிலவரம் ஒன்று இலங்கையில் தோன்றியுள்ள நிலையில் , இன்னமும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்ததாகவோ  அல்லது இது தொடர்பான ஒரு கூட்டத்தை நடத்தி ஒரு பொதுவான முடிவுக்கு வந்ததாகவும் எந்த ஒரு அசைவுகளையும் காண கிடைக்கவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம் கடந்த காலங்களைப் போலவே பேரம் பேச வேண்டிய இன்னும் ஒரு அற்புதமான தருணத்தை இந்த ஒற்றுமை இல்லாத தமிழ் தேசிய தலைவர்கள் தவறவிடப்போகிறார்களா..? அல்லது பயன்படுத்தப்போகிறார்களா..? என்று..!

இலங்கை நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் -உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி சொல்லும் விளக்கம் !

உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை அனுபவிக்கும் பல நாடுகள் ரஷியாவின் நிகழ்ச்சி நிரலை அனுபவித்துள்ளனர் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் அண்மையில் உரையாற்றியபோது, ​​இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துரைத்த அவர், “அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஒரு சமூக பிளவுக்கு வழிவகுத்தது. அது எப்படி முடிவடையும் என்பது இப்போது யாருக்கும் தெரியாது” என்றார்.