செய்திகள்

செய்திகள்

செய்திகள்

“சர்வதேச நாணய நிதியத்தை சமாளிக்க இலங்கைக்கு உதவிய ஒரே நாடு இந்தியா“ – நினைவுபடுத்துகிறார் எஸ் ஜெய்சங்கர் !

பிராந்தியம் முக்கியத்துவம் பெறுவதால், பல நாடுகள் இந்திய பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட சீன ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தியப் பெருங்கடல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மற்றொரு விசேட அம்சமாக மாறாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா தனது தேசிய நலன்களை கவனித்துக்கொள்ள வேண்டும், ஆனால் பிராந்தியத்தில் தனித்துவத்தை கோர முடியாது. இந்தியாவின் அண்டை நாடுகள் கலாசார ரீதியாக ஒன்றுப்பட்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் பிணைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை சமாளிப்பதற்கு முன்வருவதற்கு உதவிய ஒரே அண்டை நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் 17 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு !

தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தாய்லாந்து காவல்துறையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தாய்லாந்தின் தென் பகுதியில் பட்டணி, நாராதிவத், யால ஆகிய நகரங்களில் உள்ள 17 இடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்புகள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் பெரும்பாலும் சிறிய கடைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இடம்பெறுள்ளன. நேற்று (16) இரவு சந்தேக நபர் ஒருவர் யால, யஹா மாவட்டங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து கறுப்பு பை ஒன்றை அங்கு வைத்து விட்டு சென்றுள்ளார்.

அத்துடன், மரணிக்க விரும்பவில்லை என்றால், அங்கிருந்து வெளியேறுமாறு ஊழியர்களுக்கு எச்சரித்துள்ளதாக தாய்லாந்து காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறிய 10 விநாடிகளுக்குப் பின்னர் குண்டு வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு !

500 மில்லியன் டொலர் முதலீட்டிற்கு இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூனேரியில் 234 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி பசுமை சக்திக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர், இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மின்சார சபை சட்டத் திருத்தங்கள் காரணமாக தாமதமான 46 திட்டங்களில் 21 திட்டங்களுக்கு அடுத்த வாரம் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் 26 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்மொழிவுகளுக்கு தற்காலிக அனுமதி அளிக்கப்பட்ட ஆர்வங்களின் வெளிப்பாட்டில் இருந்து அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய திட்டங்களும் 30 நாட்களுக்குள் மதிப்பீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சீனாவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் 5 அமெரிக்க எம்பி.க்கள் குழு தாய்வான் பயணம் !

தாய்வானுக்கு உரிமை கொண்டாடி வரும் சீனாவின் கடும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி தாய்வான் சென்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, தாய்வானை அச்சுறுத்தும் வகையில், அந்நாட்டின் எல்லையில் போர் விமானங்கள், போர் கப்பல்களை அனுப்பி தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதனால், போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்த பதற்றம் தணிவதற்குள், பெலோசியை தொடர்ந்து 5 அமெரிக்க எம்பி.க்கள் குழு நேற்று தாய்வானுக்கு சென்றது. தைபே நகரில் உள்ள சோங்சான் விமான நிலையத்தில், அமெரிக்க அரசு விமானம் நேற்றிரவு தரையிறங்கும் வீடியோ காட்சி ஒளிபரப்பானது. அமெரிக்க எம்பி.க்கள் குழுவின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, தாய்வான் நீரிணை பகுதியில் நேற்று 10 போர் விமானங்கள் உட்பட சீன இராணுவத்தின் 22 விமானங்கள், 6 கடற்படை கப்பல்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

நான்சி பெலோசியின் அண்மைய பயணத்தால் கடும் கோபமடைந்த சீனா,தாய்வானைச் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு ஏவுகணைகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அனுப்பி, வான்வழியாகவும் கடல் வழியாகவும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை !

மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி பதவி நீக்கம் செய்யப்பட்டு  ஏற்கனவே கைதாகியிருந்த நிலையில் அவரை விடுவிக்குமாறு கோரி போராடுவோர் மீது கடுமையான இராணுவபலம் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சர்வதேசம் இந்த பிரச்சினைகள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளாது இருக்கும் நிலையில் இராணுவ ஆதிக்கம் இன்னும் அங்கு உறுதிசெய்யப்பட்டு வருகின்றது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மரின் தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தண்டனை விதித்துள்ளது.

அவர் ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி, அவர் ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் இனங்காணப்பட்டுள்ளார். 77 வயதான ஆங் சான் சூகி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதுடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

உரிமைகளை கேட்டு போராடிய பெண்களை அடித்து விரட்டிய தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றி நாளையுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது.

இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வேலை, அரசியலில் பங்கேற்கும் உரிமை கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களை தலிபான்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பெண்கள் முன்னேறி செல்ல முயன்றதால் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலைந்து ஓடிய பெண்களை விரட்டி சென்று துப்பாக்கியால் தாக்கினர். மேலும் போராட்டத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தலிபான்கள் அடித்து விரட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பட்டினி அபாயம் நிறைந்த ஆபிரிக்கா நோக்கி பயணமானது உக்ரைனின் தானியக்கப்பல் !

பட்டினி அபாயம் அதிகம் நிறைந்த ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கு உக்ரைன் தானியங்களை எடுத்துச் செல்வதற்காக, அந்த நாட்டை நோக்கி முதல் சரக்குக் கப்பல் புறப்பட்டுள்ளது.

உக்ரைன் போரால் ஆபிரிக்கப் பிராந்தியத்தில் கோடிக்கணக்கானவர்கள் பட்டினியால் அவதியுறும் அபாயம் இருப்பதாக அஞ்சப்பட்ட நிலையில், ரஷ்யா – உக்ரைன் தானிய ஒப்பந்தத்தின் கீழ் ஆபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த எத்தியோப்பாவுக்கு உக்ரைனிலிருந்து கோதுமை எடுத்துச் செல்வதற்காக சரக்குக் கப்பல் ஒன்று முதல்முறையாக அந்த நாட்டை நோக்கி நேற்று (வெள்ளிக்கிழமை) புறப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் பசிப் பிணியைப் போக்குவதற்காக ஐ.நா.வின் உலக உணவு திட்டத்தின் கீழ் அந்தக் கப்பல் உக்ரைனை நோக்கி புறப்பட்டதாக ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மிஷெல் தெரிவித்தார்.

உக்ரைன் போரால் உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்தது. அதையடுத்து, உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் கண்ணாடி ஒப்பந்தம், ரஷ்யா, உக்ரைன் இடையே ஐ.நா. மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையொப்பமானமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு சீனாவில் விலங்குகளிடமிருந்து பரவும் புதிய வகை வைரஸ் !

கிழக்கு சீனாவில் பரவிவரும் புதிய வகை வைரஸ் தொற்றால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Novel zoonotic Langya virus identified in China

கிழக்கு சீனாவில் பரவிவரும் LayV (The novel Langya henipavirus) என்ற புதிய வகை வைரஸ் விலங்குகளில் இருந்து பரவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

LayV வைரஸ் சீனாவின் Shandong மற்றும் Henan மாகாணங்களில் பரவியுள்ளது

காய்ச்சல், சோர்வு, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளன. சீனா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

LayV தொற்று ஆபத்தானது அல்லவென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தொற்று தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி – உதவிக்கரம் நீட்டுகிறது அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி !

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 டொலர்களை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நன்கொடையாக வழங்கியுள்ளது.

சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ‘யுனிசெப்’ ஊடாக இந்தப் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்ரேலியா, இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது.

இந்த போட்டிகளின்போது பெற்றுக்கொண்ட பரிசுத்தொகையினையே அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

முடிவுக்கு வந்ததது காலிமுகத்திடல் போராட்டம் – ரணிலை ஜனாதிபதியாக்கியதை தவிர எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத சிறுபிள்ளை வேளாண்மை !

தொடர்ச்சியாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்சக்களின் ஆட்சியே என குற்றஞ்சாட்டப்பட்டு காலி முகத்திடலில் ஆரம்பித்த போராட்டத்தால் ராஸபக்சக்களின் ஆட்சி கவிழ்க்கப்படவும்  இன்று கோட்டாபய சிங்கப்பூரில் அடைக்கலம் கோருவதற்கும் இலங்கை ஜனாதிபதியாக  ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கும் காரணமானது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் நோ டீல் கம என ரணிலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்ட இயக்கம் மௌனித்துப்போனதுடன் – அடுத்தடுத்து கோட்டா கோ கம போராட்டத்தின் முக்கியமான  போராட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டனர். ஒரு பக்கத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான இடதுசாரிகளின் போராட்டம் தான் கோட்டாகோகம என பேசப்பட்ட நிலையில் போராட்டத்துக்கு முன்னணியில் நின்ற செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்து கிடைத்த அதிகப்படியான நிதியுதவி, ரணில் பதவியேற்றதும் தொடர்ந்து பேணப்பட்ட  போராட்டக்காரர்களின் மௌனம் என பல விடயங்கள் போராட்டம் ரணிலுக்கு சார்பான மேற்குலக நாடுகளால் நகர்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்கப்பட்டது.

 

இந்த நிலையில், காலிமுகத்திடல் பகுதியில் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் நேற்றையதினம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக  09.08.2022 காலி முகத்திடல் போராட்டத்திற்கு மக்கள் வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட களத்தில் தங்கியிருந்த வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் தெரிவித்திருந்தார்.

அரசுக்கெதிரான இன்றைய போராட்டத்தில் மக்களை சுனாமியாக கொழும்புக்கு வருமாறு கோரப்பட்ட போதிலும் இன்று காலி முகத்திடலில் மக்கள் எவரும் ஒன்றுதிரளவில்லை.இதனால் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

இந்த நிலையிலேயே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

 

போராட்டத்தில் எந்தவொரு வலுவான கோரிக்கைகளையும் இந்த போராட்டக்காரரர்கள் முன்வைக்கவில்லை. பாரிய மக்கள் போராட்டம் என கூறப்பட்டதே தவிர ஆக்கபூர்வமான வெற்றிகள் எவையுமே கிடைக்கவில்லை. பொருளாதார மீட்பையே வலியுறுத்தியதாக இந்த போராட்டக்காரர்கள் கூறியிருந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நிலை இன்னமும் அதளபாதாளத்திலேயே வீழ்ந்து போயுள்ளது. சுருக்கமாக சொல்வதாயின் சமூக வலைத்தளங்களில் இயங்குநிலையில் உள்ள ஒரு இளைஞர் கூட்டமும் – அரசியல் லாபமீட்ட முனைந்த சில பெரியவர்களுமாக சேர்ந்து செய்த இந்த போராட்டம் சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது போல எந்த வெற்றியும் தராது முடிந்து போயுள்ளது.

 

இந்த போராட்டங்களின் ஒரே விளைவு மக்களின் ஆணையால் வழங்கப்படாத ரணிலின் நீண்ட கால ஜனாதிபதி இருக்கையை அவர் பிடித்துக்கொண்டது மட்டுமே. வேறு எந்த மாற்றத்தையுமோ – சிங்களவர்களின் ஆதிக்க மனோநிலை சார்ந்த எந்த மாற்றத்தையுமோ இந்த போராட்டங்கள் வழங்கவில்லை என்பதே உண்மை.