செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நான் தோற்றால் அது இரத்தக்களறியை ஏற்படுத்தும் – டொனால்ட் டிரம்ப்

2024 ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்றால் அது இரத்தக்களறியை ஏற்படுத்தும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார்.

 

அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட கார்களிற்கு 100 வீத வரியை விதிப்போம் என தெரிவித்துள்ள டிரம்ப் நான் தெரிவு செய்யப்பட்டால் அந்த வெளிநாட்டு கார்களை விற்கமுடியாத நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை டிரம்பின் இந்த கருத்து அவர் மற்றுமொரு ஜனவரி ஆறாம் திகதியை விரும்புகின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடனின் பிரச்சார பிரிவின் பேச்சாளர் ஜேம்ஸ் சிங்கெர் தெரிவித்துள்ளார்.

 

அமெரி;க்க மக்கள் டிரம்பின் தீவிரபோக்கினை தொடர்ந்து நிராகரித்துவருவதால் நவம்பர் தேர்தலில் அவர்கள் அவரை நிராகரிக்கப்போகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்க மக்கள் அவரின் வன்முறை மீதான விருப்பம் பழிவாங்கும் குணம் ஆகியவற்றை நிராகரிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் வீட்டுச் சின்னத்தை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு!

தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் வீட்டுச் சின்னத்தை மோசடி செய்ததாக ரோ புலிகள் என அறியப்பட்ட தியாகராஜா திபாகரன், பாலநந்தினி பாலசுப்பிரமணியம் மற்றும் சொக்நாதன் கேதீஸ்வரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானிய நடைமுறைப்படி ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேசம்நெற்க்கு தெரியவந்துள்ளது. பிரித்தானிய சட்டப்படி ஒரு அமைப்பினுடைய பெயரையோ சின்னத்தையோ அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமானது. Intelectual Property Act 2014 – அறிவுசார் உடைமைகள் சட்டம் 2014 இன் படி தக்க அனுமதியின்றி தியாகராஜா திபாகரன், பாலநந்தினி பாலசுப்பிரமணியம் மற்றும் சொக்நாதன் கேதீஸ்வரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒழுங்காற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி இந்தியாவின் நலன்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்படத் துணியாத போதும் வெளிப்படையாக தங்கள் கட்சியை இந்திய புலனாய்வுப் பிரிவான ரோவின் முகவர்கள் வழிநடத்துவதை விரும்பவில்லை. அந்த அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தில் தமிழரசுக்கட்சியின் கிளை ஆரம்பிக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த கட்சியின் செயலாளர் பா சத்தியலிங்கம் இலங்கைக்கு வெளியே தாங்கள் கிளைகள் எதனையும் ஆரம்பிப்பதற்கு அனுமதிவழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பின் தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ்வின் – லங்காசிறி மற்றும் ஐபிசி ஊடக அமைப்பின் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான திபாகரன் மற்றும் நிலா அணி தங்கள் ரோ நடவடிக்கைகளை நியாயப்படுத்த, ரோவின் தமிழ்நாட்டுப் பிரிவான க்யூ பிராஞ்சின் கட்டுப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களை தடுத்து வைக்கும் சித்திரவதை முகாம்களை; அவை சித்திரவதை முகாம்கள் அல்ல என்றும் அங்கு இலங்கைத் தமிழர்கள் யாரும் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றும் ஐபிசி குழுமத்தைச் சேர்ந்த தமிழ்வின் – லங்காசிறி ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

தோழர் பாலன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு நீண்டகாலம் கொடுமைப்படுத் தப்பட்டனர். பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்த தோழர் பாலன் என அறியப்பட்ட எஸ் பாலச்சந்திரன் சிறப்பு முகாம்கள் என்ற சித்திரவதை முகாம்கள் பற்றி தேசம் சஞ்சிகையில் தொடராக எழுதியவர். தற்போது இக்கட்டுரைகளின் தொகுப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளிவந்துள்ளது. தோழர் பாலன் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை என்ற போராட்ட அமைப்பை நிறுவி வழிநடத்தியவர்களில் ஒருவர். சிறப்புமுகாம்களில் அனுபவித்த கொடுமைகளின் அடிப்படையிலும் தான் அவருக்கு பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கிடைத்தது.

 

தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவுக்கு செவிசாய்த்தமைக்காக தமிழரசுக் கட்சியின் – தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்தனர். ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் பத்மநாபாவையும் அவருடைய தோழர்களையும் படுகொலை செய்தனர், தங்கள் அமைப்பிற்குள்ளேயே மாத்தையாவைப் படுகொலை செய்தனர். ஆனால் தற்போது இந்த அமைப்பில் ஒருசாரார் தாங்கள் தடைகளை உடைப்பதில் வல்லவர்கள் என்று சொல்லி இந்திய புலனாய்வுப் பிரிவான றோ வோடு சேர்ந்து பிரபாகரன் குடும்பத்தையே உயிர்த்தெழ வைத்துள்ளனர். இன்னொரு பிரிவு தமிழரசுக் கட்சியை புலியரசுக்கட்சியாக்குவோம் என்று பொக்ஸடித்து முற்றுகையிட்டுள்ளது. இன்னுமொரு பிரிவோ இலங்கைப் புலனாய்வுத்துறையினரோடு சேர்ந்து இயங்குகிறது. இவற்றுக்குள் தங்களை இணைத்துக்கொள்ள முடியாத பலர் பலவாக உடைந்து சிதறியுள்ளனர். இவர்கள் யாருடைய உறவும் வேண்டாம். செய்தியும் வேண்டாம் எனப் பலர் ஒதுங்கித் தனித்து வாழ்கின்றனர்.

லண்டன் தமிழரசுக்கட்சியை ‘றோ புலிகள் – திவாகரன் – நிலா’ கொம்பனி பொக்ஸடித்து முற்றுகையிட்டுள்ளது!

ஒருவர் தான் ஒரு முட்டாள் என்று உணர்வதற்குக்கூட ஒரு அடிப்படை அறிவு அவசியம். அந்தக் குறைந்தபட்ச அறிவும் இல்லாதவர்கள் தங்களைத் தாங்களே மிகச் சிறந்த சிந்தனையாளர்களாக, அறிவுஜீவிகளாக நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். இத்தகையவர்கள் அண்மைக்காலமாக புலம்பெயர் அரசியல் சூழலில் பெரும் தொந்தரவாக மாறியுள்ளனர். ‘புலிகளின் இளவரசி துவாரகா வந்துவிட்டார்’ என்றும் அவருக்குப் பின்னால் தாயார் மதிவதனியும் தந்தை பிரபாகரனும் வருகிறார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து ஒரு கூட்டம் அப்துல்லா என்பவர் தலைமையில் புறப்பட்டுள்ளது. அதே அமைப்பிலிருந்து இன்னுமொரு கூட்டம், இந்தியாவின் உளவு நிறுவனமான றோ தமிழீழம் எடுத்துத்தரும் என்று திபாகரன் – நிலா தலைமையில் சன்னதம் ஆடுகின்றது. புலிகளின் இந்தத் தரப்புகளை மக்கள் நம்புவதாகத் தெரியவில்லை. ஆனால் அத்தரப்புகள் தங்களைத் தாங்களே வெகுவாக நம்பி சிற்றின்பம் காண்கின்றனர்.

இந்த முட்டாள்தனங்களை தொந்தரவாக எண்ணிக் கடந்துசெல்ல முடியாதபடி, இவர்கள் தாங்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக வேறு கதையளந்து வருகின்றனர். இப்புலிகளின் இரு தரப்புகளையும் இந்தியாவின் உளவுத்துறையான றோ அமைப்பே பின்னணியில் இருந்து இயக்குகின்றது எனத் தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை ராஜபக்ச சகோதரர்கள் நடத்தினார்கள் என்பதிலும் பார்க்க இந்திய உளவுத்துறையான றோவே இந்த யுத்தத்தை நடத்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையின் புலனாய்வுத்துறையினருக்குப் பயிற்சி அளித்ததே இந்திய புலனாய்வுத்துறையினர் எனத் தெரிவித்த அவர், கருணாவை தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரித்ததிலும் றோவினுடைய பங்களிப்பு இருந்ததாகத் தெரிவித்தார். ஆனால் இத்தகவலை தேசம்நெற் ஆல் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் தப்புவதற்க்கு நிறைய வாய்ப்புகள் இருந்ததாக றோ அமைப்பைச் சார்ந்த இராணுவத் தளபதி மதன்குமார் ஆணித்தரமாக கருத்து வெளியிட்டு வருகின்றார். துவாரகாவின் வருகைக்கும் அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

மறுமுனையில் திபாகரன் – நிலா கொம்பனி லண்டணிலிருந்து டெல்லிக்கு காவடி எடுத்ததை தேசம்நெற் பலதடவை அம்பலப்படுத்தியதுடன், இவர்கள் தமிழரசுக் கட்சியை புலி அரசுக் கட்சியாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர் என்பதை பெப்ரவரி 25இல் வெளியிட்ட கட்டுரையில் வெளிப்படுத்தியும் இருந்தது. றோ தமிழீழம் எடுத்துத் தரப்போகின்றது என்று நம்பும் இக்குழுவின் செயற்பாடுகள் தமிழ் மக்களை கேவலப்படுத்தும் வகையிலும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சேவகம் செய்யும் பாணியிலும் அமைந்துள்ளது. அடிப்படைவாத பிஜேபி – ஆர்எஸ்எஸ் இன் கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி இன, மத உணர்வுகைளத் தூண்டிவிடும் வகையில் இவர்கள் நடந்துகொள்கின்றனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த போதும் மத அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் ஒரு கிறிஸ்தவர் என்பதால் அவருக்கு எதிரான பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர். இதேபாணியில் பா உ சுமந்திரனையும் கிறிஸ்தவர் என்பதற்காக தாக்குவதையும் பரவலாகக் காண முடிகின்றது.

இந்தியாவுக்கு சீனா எதிரி, அதனால் சீனாவை தமிழர்களின் எதிரி என்று காட்டி இந்தியாவுக்கு காக்கா பிடித்து தமிழீழம் பெற்றுவிடலாம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளுர் மதியுரைஞராக இருந்த மு திருநாவுக்கரசுவின் அதிரடித் திட்டம். வன்னி யுத்த காலத்தில் தமிழகத்தைச் சென்றடைந்த மு திருநாவுக்கரசு றோ வின் அரவணைப்பில் இருந்து வருகின்றார். அவர் வளர்த்தெடுத்த வாரிசுகள் தான் ‘திபாகரன் – நிலா’ கொம்பனி. இவர்கள் றோ தமிழீழம் வாங்கித் தரும் என்று சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செய்யும் இக்குழு, ‘இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தேசியத் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்தது மிகப்பெரும் அரசியல் தவறு’ என்று அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தற்போது இக்குழுவே தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளையையும் கைப்பற்றியுள்ளது. மார்ச் மாதம் 10ம் திகதி தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய இருந்த போதே தேசம்நெற் இவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்தி இருந்ததுடன் இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சிறிவாஸ் சின்னத்துரையிடம் இது பற்றிக் கேள்வியும் எழுப்பி இருந்தது. நேற்று மார்ச் 13இல் லண்டன் வெஸ்ற்மினிஸ்ரரில் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு வந்திருந்த சின்னத்துரை சிறிவாசிடம் மார்ச் 10இல் இடம்பெற்ற கூட்டம் தொடர்பாகக் கேட்டபோது: “நான் கூட்டத்தை கூட்டியது தமிழரசுக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கே. தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளைக்கான அலுவலர்களைத் தெரிவு செய்வதற்காக அல்ல. ஆனால் கூட்டத்தை திசை திருப்பி புதிய அலுவர்களுக்கான தெரிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டதால் தான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன்” என்றார் சின்னத்துரை சிறிவாஸ்.

றோ புலிகள் தமிழரசுக் கட்சியைக் கைப்பற்றுவார்கள் என்பதை தேசம்நெற் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தது. மார்ச் மாதம் 10ம் திகதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே பெப்ரவரி 17 அன்று தமிழரசுக் கட்சி போறம் லிமிடட் (Ilankai Thamil Arasu Kadchi (ITAK) Forum Ltd என்று ஒரு தனியார் நிறுவனமாக திபாகரன் – நிலா குழு பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்களாக கீத் என அறியப்பட்ட சொக்கநாதன் கேதீஸ்வரன், திபாகரன் என்று அறியப்பட்ட தியாகராஜா திபாகரன், நிலா என அறியப்பட்ட பாலநந்தினி பாலசுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர். பாலநந்தினி பாலசுப்பிரமணியம் நிறுவனத்தின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஸ்வரன், ஞானேஸ்வரன் ஆகியோர் திபாகரனின் உறவினர்கள், நண்பர்கள். கமலேஸ்வரன் லண்டன் வந்த சமயத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உறுப்பினர்களை உள்வாங்க மேற்கொண்ட நடவடிக்கையை ‘திபாகரன் – நிலா’ குழு தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது. நோர்த் ஹரோவில் ஜனவரி 28இல் நடைபெற்ற ஒன்றுகூடலில் இதற்கான திட்டமிடல் நடந்துள்ளது. ஆனால் தற்போது இந்த றோ புலிகளின் குளறுபடியை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராகத் திருப்புகின்ற முயற்சி நடைபெறுகின்றது. ஆனால் தேசம்நெற் அறிந்தவரை ‘திபாகரன் – நிலா’ குழு சுமந்திரனுக்கு முற்றாக எதிரானவர்கள். திபாகரன் – நிலா – திருநாவுக்கரசு என்ற இந்த றோ புலிகள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனுடன் நெருங்கிப் பணியாற்றியவர்கள். இவர்களுக்காக எஸ் சிறிதரன் இலங்கை அரசியல் யாப்பு என்ற திருநாவுக்கரசுவின் நூலையும் இலங்கையில் வெளியிட்டு இருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் லண்டன் வந்திருந்த போது திபாகரனும் மயூரனும் எஸ் சிறிதரனை கிழக்கு லண்டனில் உள்ள வோல்தம்ஸ்ரோவில் வைத்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் கிளையை இப்படிக் குளறுபடியாகக் கைப்பற்றும் திபாகரன் – நிலா குழுவின் எண்ணத்திற்கு உடன்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்பதவி மீது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு நிதியாதரவு வழங்கும் ஒரு தொழிலதிபரும் கண் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் தற்சமயம் லண்டனிலேயே கல்வி கற்கின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

என்னதான் கொம்பனிச் சட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழரசுக்கட்சி போறம் லிமிடட் (Ilankai Thamil Arasu Kadchi (ITAK) Forum Ltd டை பதிவு செய்த போதும் இதற்கும் தமிழரசுக் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் ஏற்படப்போவதில்லை. தமிழரசுக் கட்சியும் இந்த அமைப்பைக் கண்டுகொள்ளப் போவதில்லை. இது ‘திபாகரன் – நிலா’ குழுவின் இன்னுமொரு ஆர்வக்கோளாறு குளறுபடி மட்டுமே. புதிய உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் சந்தாவைச் செலுத்தினால் உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனால் அலுவர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்ட தலைவர் சொக்கநாதன் கேதீஸ்வரன், உப தலைவர் தியாகராஜா திபாகரன், செயலாளர் பாலநந்தினி பாலசுப்பிரமணியம் ஆகியோர் இந்த உறுப்புரிமையைத் தக்க வைக்க முடியாது. ஏற்கனவே தமிழரசுக் கட்சி மாநாடு கூட்டி தெரிவு செய்த தலைவரே தலைவராக முடியாமல் திண்டாடுகிறார். இதற்குள் ‘திபாகரன் – நிலா’ கொம்பனியின் நப்பாசைக்குக் குறைவில்லை.

 

இலங்கையின் கிராமப்புறங்களை ஆக்கிரமிக்கும் E-Cigarettes !

இலத்திரனியல் சிகரெட்கள் (E-Cigarettes) இலங்கையில், குறிப்பாக கிராமப்புறங்களில் வேகமாக பரவி வருவதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மற்றும் ஜா-எல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 500,000 ரூபா பெறுமதியான இ-சிகரெட் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ள நிலையிலேயே திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் பாணந்துறை பிரதேசங்களிலும், அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களிலும், பாடசாலை மாணவர்கள் மற்றும் 40 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், அதிகளவில் இ-சிகரெட்க்க்களை பாவனை செய்வது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக குணசிறி தெரிவித்தார்.

இந்த இ-சிகரெட்டுகள் படிப்படியாக தொலைதூரப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இ-சிகரெட்கள் ஒன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும், அவை பெரும்பாலும் ஸ்மார்ட் வாட்ச்கள், பென் டிரைவ்கள், பவர் பேங்க்கள் மற்றும் நறுமணப் போத்தல்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் குணசிறி மேலும் தெரிவித்தார்.

சாதாரண சிகரெட்டின் கூறுகளைக் கொண்டிருக்காமல், மாம்பழம், ஆரஞ்சு, செர்ரி போன்ற பல்வேறு பழங்களின் வாசனையுடன் இருப்பதால், மின் சிகரெட்களை அடையாளம் காண்பதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு இ-சிகரெட்டிலும் 50,000 முதல் 60,000 பஃப்கள் உள்ளன, அது காய்ந்து போகும் வரை எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம், அதே நேரத்தில் அது மின்னணு முறையில் ரீசார்ஜ் செய்யப்படுவதன் மூலம் இயக்கப்படுகிறது, என்றார்.

இந்த இ-சிகரெட்கள் செயற்கையாக புகையை உருவாக்குவதால், அதிக நச்சுத்தன்மை கொண்டவை, அதிக போதைப்பொருள் மற்றும் அதிக புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்பதால், அவை உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்காவால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையம், கொழும்பு துறைமுகம் மற்றும் ஏனைய கடல் வழிகள் ஊடாக இலத்திரனியல் சிகரெட்கள் இலங்கைக்குள் கொண்டு வரப்படுவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கல்வி, பொலிஸ் மற்றும் கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் இ-சிகரெட்டுகளின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகின் மனநல மட்டத்தில் இலங்கைக்கு மிக உயர்ந்த தரவரிசை!

Sapien Labs இன் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மன நிலை அறிக்கையின்படி, உலகின் மிகக் குறைவான துன்பகரமான நாடுகளில் இலங்கையும் உள்ளது.

89 மதிப்பெண்களுடன் மனநல மட்டத்தில் (MHQ) இலங்கை உலகின் 2வது மிக உயர்ந்த தரவரிசையில் உள்ளது.

 

டொமினிகன் குடியரசு பட்டியலில் முன்னணியில் உள்ளது, டான்சானியா, பனாமா மற்றும் மலேசியா ஆகியவை முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளன.

 

இலங்கையின் சனத்தொகையில் 14% பேர் மட்டுமே உலகளவில் மிகக் குறைவான மன உளைச்சலுக்கு ஆளாவதாக அல்லது போராடுவதாக தெரிவிக்கப்படுகின்றது .

 

அறிக்கையின்படி, இது பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டது, அங்கு 35% வரை மனநல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

காசாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுகிறார்கள் !

காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுகிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திய எட்டு தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன், காசாவுக்குள் கூடுதல் உதவிகளை அனுமதிக்க வேண்டும், அப்பாவிகளின் உயிர்களைப் பாதுகாப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம், மகளிர் தினத்தன்று காசாவில் பாலஸ்தீனப் பெண்களின் அவலநிலை குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வரை 9,000 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கின்றனர்.

காசாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. காசாவில் பலி எண்ணிக்கை 30,878 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 72,402 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்கா வீசிய உணவு பொதிகள் தாக்கியதில் காசாவில் 5 பேர் பலி !

காசா மக்களுக்கு அமெரிக்கா வீசிய உணவு பொதிகள் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் தொடரும் போர் காரணமாக பட்டினிச் சாவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து நல்லெண்ண அடிப்படையில் காசா மக்களுக்கு அண்மையில் அமெரிக்கா உணவு விநியோகம் செய்தது.

விமானம் மூலமாக காசா பகுதியில் உணவுப் பொதிகள் அடங்கிய பெரிய பார்சல்கள் பாராசூட் கட்டி வீசப்பட்டன.

இதில் சில பார்சல்களின் பாராசூட்கள் சரியாக திறக்காததால் முழு வேகத்தில் சென்று நிலத்தில் விழுந்தன. இந்த பார்சல்கள் தாக்கியதில் 5 பேர் நசுங்கி பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டே காசா மக்களுக்கு உணவு வழங்கும் அமெரிக்காவின் நல்லெண்ணத்தை பலரும் விமர்சித்துள்ளனர்.

காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் – ஜோ பைடன்

மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரவித்துள்ளார்.

 

அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை (07) நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார்.

 

இத்தற்காலிக துறைமுகமானது, பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

காஸாவுக்கு மேலும் அதிகளவு விநியோங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பைடன் கூறினார்.

 

அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார்.

 

கஸாவிலுள்ள மக்களில் கால்வாசிப் பேர் பஞ்சத்தை எதிர்கொள்வதாக ஐநா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீஷெல்ஸ் துறைமுகத்தில் இலங்கை மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் 9 ஆவது நாளாகவும் தொடர்கிறது!

ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டு சீஷெல்ஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் 9 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

 

தங்களை நாட்டுக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தி, இந்த மாதம் முதலாம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்திருந்தனர்.

 

லோரன்சோ புதா 4 என்ற மீன்பிடி படகில் கடற்றொழிலுக்கு சென்ற 6 மீனவர்களே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

குறித்த படகு கடந்த ஜனவரி 12 ஆம் திகதி டிக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. சிலாபம் – மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 6 மீனவர்களே படகில் பயணித்திருந்தனர்.

 

இந்த நிலையில், மீனவர்கள் ஆயுதக் குழுவினரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டனர். மீனவர்கள் தற்போது சீஷெல்ஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் 6 பேர் படுகொலை : இலங்கையை சேர்ந்த சந்தேகநபர் கனடா நீதிமன்றில் !

கனடாவின் ஒடாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த இளைஞன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

அங்கு, சந்தேக நபர் மிகக் குறைவாகவே பேசியுள்ளதாகவும், நீதிமன்றத்தில் மீண்டும் அமர்வதற்கு முன்பு தனது பெயரையும் பிறந்த இடத்தையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், எதிர்வரும் 14ம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சந்தேகநபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

எவ்வாறாயினும், இந்த சந்தேக நபர் விக்கிரமசிங்க குடும்பத்தை ஏன் கொலை செய்தார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை. 5 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களிடம் பேச வேண்டாம் என நீதிமன்றம் சந்தேகநபருக்கு உத்தரவிட்டுள்ளது.

 

அவர்களில் ஒருவரான தனுஷ்க விக்கிரமசிங்க படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கனடாவில் கல்வி கற்கும் ஃபேப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞரே இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த படுகொலையில் பயங்கரவாதி கூரிய ஆயுதத்தை பயன்படுத்தியதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

புதன்கிழமை இரவு 10:52 மணியளவில் 911 என்ற எண்ணுக்கு இரண்டு அழைப்புகள் வந்ததாகக் ஒட்டாவா பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

 

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.

 

கொலைச் சம்பவத்திற்கு முன்னர் இந்த இலங்கைக் குடும்பத்திடமிருந்து பொலிஸாருக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என ஒட்டாவா பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வருமாறு:

 

தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க – 35 வயது

இனுக விக்கிரமசிங்க – 07 வயது

அஸ்வினி விக்கிரமசிங்க – 04 வயது

றின்யானா விக்கிரமசிங்க – 02 வயது

கெலீ விக்கிரமசிங்க – 02 மாதங்கள்

 

காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபரே கொல்லப்பட்ட மற்றைய நபராவார்.

 

குழந்தைகளின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்க படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டவர்கள் சமீபத்தில் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், இரண்டு மாத வயதுடைய இளைய மகள் மட்டுமே கனடாவில் பிறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

சுமார் ஒரு மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒட்டாவாவில் இதுபோன்ற படுகொலைகள் ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கடந்த மூன்று தசாப்தங்களில் தலைநகரில் நடந்த மிகக் கொடூரமான படுகொலை இது என்று கனேடிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உயிரிழந்த இலங்கை குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

ஒரே நாளில் ஒரே காணிக்கு மூன்று உறுதிகள் முடித்த யாழ் சட்டத்தரணி! உறுதி முடிக்கும் சட்டத்தரணிகள் ஜனாதிபதியிடம் மண்டியிட்டனர்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன், செலஸ்ரியன் ஆகியோர் அடங்கிய குழு இரு வாரங்களுக்கு முன்பாக 13 பெப்ரவரி 2024 அன்று ஜனாதிபதியைச் சந்தித்தனர். ஆனால் அவர்கள் சந்தித்துப் பேசிய விடயம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அண்மைக்காலமாக உறுதி மோசடிகள் தொடர்பான வழக்குகள் தொடர்பில் யாழ் சட்டத்தரணிகளை பொலிஸார் கைது செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனை தடுக்குமாறு கேட்பதற்காகவே மேற்குறிப்பிட்ட யாழ் சட்டத்தரணிகள் ஜனாதிபதியைச் சந்தித்து அவரிடம் மண்டியிட்டுள்ளனர். அதாவது கள்ள உறுதி முடித்த வழக்குகள் தொடர்பில் பொலிஸார் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது என்று ஜனாதிபதியிடம் அவர்கள் கோரியுள்ளனர். பொலிஸார் கள்ள உறுதி முடித்த வழக்குகளில் தங்கள் மீது கடுமையாக நடந்துகொண்டால், பொலிஸார் கொண்டுவரும் குற்றவியல் வழக்குகள் (கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், கொலை போன்ற குற்றவியல் வழக்குகள்) நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும்போது தாம் கடுமையாக பொலிசாரினை குறுக்கு விசாரணை செய்வோம் என அச்சட்டத்தரணிகள் ஜனாதிபதி ரணிலை மறைமுகமாக மிரட்டியதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது.

இது பற்றி மேலும் தேசம்நெற்க்கு தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு சட்டத்திரணிகள் ஏற்கனவே பொலிசாரினால் உறுதி மோசடி வழக்கிற்காக கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு, தற்சமயம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று சட்டத்தரணிகளை இவ்வாறான விசாரணைகளுக்காக பொலிசார் கைது செய்யத் தயாராகிய நிலையில், அவர்களுக்கான முன் பிணை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. அவர்களினது கோரிக்கையினை செவிமடுத்த ஜனாதிபதி ரணில், “கள்ள உறுதி முடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பொலிசாருக்கு அறிவுறுத்துவது சட்டத்திற்கு முரணானது” என்றும் “அவ்வாறான அறிவுறுத்தல்களை தன்னால் வழங்க முடியாது” எனவும் பக்குவமாக தன்னைச் சந்திக்க வந்த யாழ் சட்டத்தரணிகள்: குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன், செலஸ்ரியன் ஆகியோருக்குத் தெரிவித்ததாக அறியவருகின்றது.

ஆனால் அதற்கு மாற்றாக ஜனாதிபதி ரணில் சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணத்தைச் சந்திப்பதற்கு ஒழுங்குபடுத்தித் தருவதாகவும் அவரின் ஆலோசனையை பெறுமாறும், உறுதி முடிக்கும் அந்த சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அமைவாக பெப்ரவரி 13 மாலையே சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணத்தைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டு வழக்கு உள்ள யாரும் அச்சந்திப்பில் கலந்துகொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் சட்டமா அதிபர் அறிவுறுத்தி இருந்தார். அதனால் செலஸ்ரியனைத் தவிர ஏனைய நான்கு சட்டத்தரணிகளும்: குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன் ஆகியோர் சட்டமா அதிபரை சந்தித்துள்ளனர்.

சட்டமா அதிபரைச் சந்திக்கச் சென்ற நான்கு சட்டத்தரணிகளுக்கும் அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அச்சந்திப்பிற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரும் அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றது. இவர்களினது கோரிக்கையினை கேட்டு அறிந்து கொண்ட சட்டமா அதிபர், பொலிஸ் உயர் அதிகாரியிடம் இது தொடர்பான விளக்கத்தைக் கோரிய போது, பொலிஸ் அதிகாரியினால் பின்வரும் விடயங்கள் கூறப்பட்டதாக தெரிய வருகின்றது: “சட்டத்தரணி கௌதமன் ஒரே நாளில் ஒரே காணிக்கு 03 உறுதிகள் எழுதியுள்ளார், இதற்கு நாங்கள் எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது?” என்று அப்பொலிஸ் உயர் அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். அதே போன்று பல சட்டத்தரணிகளால் பதிவு செய்யப்பட்ட மோசடி உறுதிகள் தொடர்பான விபரங்களையும் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். இதனைக் கேட்டுக் கொண்ட சட்டமா அதிபர் “பொலிசாரின் நடவடிக்கைகளை தன்னால் தடுக்க முடியாது” என்ற கருத்தைக் கூறியதுடன் அவ்வாறு சட்டத்தரணிகளை கைது செய்வதாயின் அதற்கு முன் தன்னையும் கலந்தாலோசிகும் வண்ணம் பொலிஸ் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதாக அறியவருகின்றது.

அரசியல் சட்டம்பிகள் வளைத்துப்போட்ட காணிகள்:

“கள்ள உறுதி முடிப்பதில் எங்கட சட்டம்பிகளை ஒருத்தரும் மிஞ்சேலாது” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சட்டத்தரணி கௌதமனின் ஊரவரான ஒருவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் “இன்றைக்கு இந்த இளம்தலைமுறை சட்டத்தரணிகளுக்கு இந்தக் கள்ள உறுதி எழுதுவதை சொல்லிக் கொடுத்ததே இவர்களின் அப்பன்களான சட்டத்தரணிகள் தான். இன்றைக்கு அரசியல் செய்கிறவையும் இவர்களின் பரம்பரையும் கள்ள உறுதியில் சொத்துச் சம்பாதித்தவர்கள் தான்” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“வடக்கு கிழக்கில் காணிகளைக் கணணிப்படுத்துவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முரண்டுபிடித்து தடுத்ததற்கு முக்கிய காரணம், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் எவ்வளவு சொத்துக்கள், காணிகள் இருக்கின்றது என்ற உண்மை ஒரு ‘பட்டனை’ அழுத்தியதும் தெரியவந்துவிடும். அதனாலேயே அவர்கள் இதனைத் தடுத்தனர்” என்கிறார் சமத்துவக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மு சந்திரகுமார். அன்று காணிகளைக் கணணிப்படுத்தியிருந்தால் தற்போது நிலமற்ற பல்லாயிரக்கணக்கானோருக்கு காணி கிடைத்திருக்கும். காணியும் முகவரியும் உள்ளவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான நிலமற்ற தமிழ் குடும்பங்கள் மிகுந்த பயன்பெற்றிருக்கும்” என மு சந்திரகுமார் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.

தமிழரசுக் கட்சியின் சட்டத்தரணியான இரா சம்பந்தன் குடும்பத்துக்கும் கணக்கற்ற சொத்துக்கள் இருந்தது. திருகோணமலை லிங்கநகர் குடியிருப்பும் இரா சம்பந்தனின் சொத்துக்களுக்குள் அடக்கம். 1987இல் அக்காணிகளில் பலாத்காரமாகக் குடியிருந்த சிங்களவர்களை துரத்திவிட்டு அங்கு தமிழர்களைக் குடியேற்றியவர்களில் மு சந்திரகுமாரும் ஒருவர். 2009 இறுதி யுத்தத்திற்குப்பின் அக்காணியில் குடியேறியவர்களிடம் இரா சம்பந்தன் லட்சக் கணக்கில் பணம் கேட்டிருந்தார். இதுபற்றி லண்டன் வந்த இரா சம்பந்தரிடம் தேசம்நெற் வினவிய போது அவர் அக்காணிகள் தன்னுடையதல்ல என்றார். “அக்காணிகள் உங்களுடைய மனைவி மற்றும் வெளிநாடுகளில் உள்ள உங்களுடைய சகோதரர்களின் பெயர்களிலும் தானே உள்ளது” என்பதை தேசம்நெற் அன்று சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும், கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சட்டத்தரணி ஆனந்தசங்கரிக்கும் இன்றும் நிறைய சொத்துக்கள் உள்ளது. அதைவிடவும் அதிகமாக கிளிநொச்சி மண்ணே தெரியாத தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் அப்பன், பாட்டன் வளைத்துப்போட்ட சொத்துக்கள் ஏராளம் உள்ளது. இப்படி பெரும்பாலான சட்டத்தரணிகளுக்கு சொத்துக்களுக்கு எவ்வித குறையும் இருப்பதில்லை. அவர்களுடைய பரம்பரைக்கும் சொத்துக்களுக்கும் நிலத்துக்கும் குறைவில்லை.

ஞானா முனசிங்கவின் காணி – வெளிநாட்டவரின் திருவிளையாடல்கள்:

யாழ்ப்பாணத்துக்கு என்றொரு பண்பாடும் கலாச்சாரமும் இருக்கின்றது என்று அழுத்திச் சொல்பவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தின் தற்போதைய சமூக சீரழிவுகளை எண்ணி சற்றுத் தலைகுனிவது இயல்பாகிவிட்டது. இதற்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து செல்லும் பலரினதும் செயற்பாடுகளும், புலம்பெயர் நாடுகளிலிருந்து பாயும் பணமும் முக்கிய காரணமாக உள்ளது. புலம்பெயர்ந்தவர்களின் பணம் யாழ்ப்பாணத்தின் பண்பாடு, கலை, கலாச்சாரத்தை இரண்டாம் தரத்துக்கு பின்தள்ளிவிட்டது. ‘காசே தான் கடவுளடா…’ என்று சமூக விழுமியங்களை அப்படியே அது புரட்டிப் போட்டுள்ளது. புலம்பெயர் ஹொட்டேலியர்கள் தாயக மண்ணின் சமூகச் சீரழிவுகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளனர். புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் கள்ள உறுதி எழுதுவதில் வல்லவர்கள் தான். அது இயலாவிட்டால் வேலிப் பிரச்சினையையும் காணிப் பிரச்சினையையும் கூலிப்படைகளை வைத்துக் கையாள்கின்றனர்.

யாழ் நல்லூரடியில் காம விடுதி என்று எல்லோராலும் அறியப்பட்ட லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் குடுமி ஜெயா என்று அறியப்பட்ட ஜெயந்திரனும் ஒரு சட்டத்தரணியின் வாரிசுதான். பாரிஸ் லாகூர்னேயில் உள்ள சிவன் கோயிலின் முதலாளி இவர். இந்த ஹொட்டேலை விஸ்தரிப்பதற்கான காணியை சட்டத்துக்குப் புறம்பாக ஆனால் சட்டபூர்வமாகக் களவாடியே ஹொட்டலை விஸ்தரித்துள்ளார். இலங்கையின் நன்கு அறியப்பட்ட இடதுசாரி அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான மங்கள முனெசிங்கேயின் மனைவி ஞானா முனெசிங்கேக்குச் சேரவேண்டிய காணியையே குடுமி ஜெயா ஆட்டையைப் போட்டார். மங்கள முனெசிங்கே நவ சம சமாஜக் கட்சியில் பாராளுமன்றம் சென்றவர். 1993 இல் உருவாக்கப்பட்ட இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் உருவாக்கப்பட்ட ‘மங்கள முனெசிங்கே ஆணைக்குழுவுக்கு தலைமையேற்றவர். பின்னாட்களில் இந்தியா மற்றும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றியவர். இவருடைய மனைவி ஞானா யாழ்ப்பாணம் நல்லூரடியைச் சேர்ந்தவர்.

தனது ஹொட்டலை விஸ்தரிப்பதற்காக அயலில் உள்ள காணியில் கண் வைத்த குடுமி ஜெயா காணிச் சொந்தக்கரரரைத் தேடி வலைவிரித்தார். அப்போது அக்காணியின் உடமையாளரான ஞானாவுடைய சகோதரி மீனா ரட்ணம் இந்தியாவின் புத்தபக்தியில் உள்ள சாயி பாபாவின் ஆச்சிரமத்தில் இருப்பதை அறிந்து நேரடியாகவே அங்கு சென்றார். அவரோட ஒட்டுறவாகப் பழகி அவருடைய சகோதரிக்கு ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்டு வந்துள்ளார். அக்கடிதத்திலிருந்த கையெழுத்தைப் போடப் பழகி அக்காணிக்கான எழுத்துமூலமான உரிமத்தை, கனடாவில் உள்ள குடுமி ஜெயாவின் சகோதரி ரஞ்சினி ராகவனின் பெயரில் பெற்றுக்கொண்டுள்ளார். அதனை திருட்டுத்தனமாக அக்காணியை விற்பதற்கான ஒப்புதலாக மாற்றி அக்காணியை தனக்குத் தெரிந்த ஒருவருக்கு மாற்றி எழுதியுள்ளார். அதன் பின் காணியை தனது வட்டத்திற்குள் உள்ள மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்றி எழுதி, இறுதியில் தன்னுடைய பெயருக்கு மாற்றி பெற்றுக்கொண்டார்.

ஒரு பெயர்பெற்ற சிங்கள அரசியல்வாதியின், ராஜதந்திரியின் மனைவிக்கு சேரவேண்டிய காணியை ஒரு சதமும் செலுத்தாமல் ஆட்டையைப் போட்ட குடுமி ஜெயா, ஞானா முனெசிங்கேக்கு நாமத்தைப் போட்டார்.

இதுபற்றி மங்கள முனசிங்கேயின் குடும்ப நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில், “இதில் இருந்த வேடிக்கை என்னவென்றால் குடுமி ஜெயாவின் சகோதரி ரஞ்சினி ராகவன் கனடாவிலிருந்து இலங்கைக்கோ இந்தியாவுக்கோ வரவில்லை. இருவருடைய கையெழுத்துக்களையும் குடுமி ஜெயாவே வைத்து இந்தக் காணி மோசடியைச் செய்தார்” என்கிறார்.

இவ்வாறான செயல்களை கண்டிப்பதற்கு மாறாக இதனை ஒரு கெட்டித்தனம், புத்திசாலித்தனம் என்று எண்ணும் மனோபாவம் இன்று தமிழ் மக்கள் மத்தியில் வளர ஆரம்பித்துள்ளது. என்ன செய்தாவது பணம் புரட்டினால் அது கெட்டிக்காரத்தனம் என்று பணம் உள்ளவர்களுக்குப் பின் ஒரு கூட்டம் குவிகிறது. ஹொட்டலியர்களுக்குப் பின்னும் வெளிநாட்டு பணமுதலைகளுக்குப் பின்னும் ஒரு கூட்டம் எப்போது இருக்கும். குடுமி ஜெயா போன்றவர்கள் இவ்வாறான மோசடிகளை தனித்துச் செய்ய முடிவதில்லை. இவ்வாறானவர்களுக்கு சட்டத்தரணிகளும் துணை போகின்றனர். ஒரே நாளில் ஒரே காணிக்கு மூன்று உறுதிகளை முடித்ததாக யாழ் சட்டத்தரணி கௌதமன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவருடைய தந்தை வீரகத்தியே அதன் பின்னணியில் இருந்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவருக்கும் குடுமி ஜெயாவின் குடும்பத்துக்கும் நெருங்கிய உறவு உண்டு.

‘சட்டத்தரணி தொழில் ஒரு சுரண்டல் தொழில்’ – சட்டத்தரணி ரங்கன் தேவராஜன்

இவர்கள் மத்தியில் சமூக அக்கறையுடைய சிலரும் இல்லாமல் இல்லை. பிரித்தானியாவில் நீண்டகாலம் சட்டத்தரணியாக இருந்த ரங்கன் தேவராஜன் தற்போது யாழில் சட்டத்தரணியாக கடமையாற்றுகின்றார். இவர் பாதிக்கப்பட்ட பலருக்கு அவர்களுடைய காணிகளை சட்டப்படி பெற்றுக்கொடுப்பதில் கட்டணம் வாங்காமல் பணியாற்றி வருகின்றார். இவர் பொதுவில் சட்டத்தரணிகள் பற்றிக் குறிப்பிடுகின்ற போது “சட்டத்தரணிகள் தொழில் என்பது மோசமான ஒரு தொழிலாக்கப்பட்டுவிட்டதுஇ மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் ஒரு தொழிலாக இது மாறி இருக்கின்றது” என்று இவர் லண்டனில் இருக்கின்ற போது தன்னுடைய நண்பர்கள் மத்தியில் குறிப்பிடுவார். இவர் தன்னுடைய சேவை மனப்பான்மையால் பிழைக்கத் தெரியாதவர்’ என்று பெயரெடுத்தவர். லண்டனிலும் கட்டணம் வாங்காமலேயே குரலற்றவர்களின் குரலாக வாதாடியவர்.

அன்று தமிழ் ஹவுசிங்கின் Thamil Community Housing Association பொறுப்பதிகாரியாக இருந்த, தற்போதைய ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் மாறன் என்பவரை வேலையால் கலைக்க எடுத்த அத்தனை முயற்சிகளையும் ரங்கன் தேவராஜன் தொழில் நீதிமன்ற விசாரணை தொடங்கிய சில நிமிடங்களிலேயே உடைத்து மாறனுக்கு நிதியைப் பெற்றுக்கொடுத்தார். கணிசமான தொகை இழப்பீட்டையும் பெற்றுக் கொடுத்தார். இந்த வழக்கை ரங்கன் தேவராஜன் நண்பருக்கான உதவியாகவே வாதாடி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப் பற்றி புறம்தூற்றி அவர் 20,000 பவுண்டுகள் தனக்குத் தரவேண்டும் என லண்டனில் தவறணையில் சட்ட நிறுவனம் நடத்தும் ரரின் கொன்ஸ்ரன்ரைன் என்பவர் சண்டே லீடர் பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் எழுதியிருந்தார். இறுதியில் ரரின் கொன்ஸ்ரன்ரைன் நீதிமன்றில் மண்கவ்வியதுடன் அபராதமும் செலுத்தப் பணிக்கப்பட்டார். இது பற்றி சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் வருமாறு குறிப்பிடுகின்றார்:

 

“நான் இருபதினாயிரம் பவுண்டஸ் தரவேணுமெண்டு கொன்ஸ்ரன்ரைன் திரும்பத் திரும்பக் கதையளந்து திரியக் காரணம். கொன்ஸ்ரன்ரைன் வழக்குப்போட்டு வாங்கிக்கட்டியதால் தான். இந்த வழக்கைவிட கொன்ஸ்ரன்ரைனின் நெருங்கிய உறவினரான யோகரத்தினம் என்ற பெயருடைய இன்னொரு பிரகிருதிக்கு எதிராக நீதிமன்றில் நான் போட்ட வழக்கொன்றிலும்; அன்னார் மூக்கை நுழைத்து ஒரு இரண்டாயிரம் பவுண்டஸ் வரை இழந்ததும்இ என்னை வைத்துப் பணம் பண்ண வெளிக்கிட்டு பல்லுடைபட்டதும், கொன்ஸ்ரன்ரைனின் ஆத்திரத்திற்கான இதர காரணங்கள்” என்றார். (ரரின் கொன்ஸ்ரன்ரைன் பற்றி சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் முகநூலில் மேற்கொண்ட பதிவு அருகில்.)

(Cartoon: Morten Morland (The Times, 2010)

கொஞ்சம் சொத்துக்களை வளைத்துப் போட்டு பணமும், சட்டப்படி நாலு வசனத்தில் கடிதமும் எழுதத் தெரிந்ததும், மற்றவர்களின் உழைப்பையும் சொத்துக்களையும் பறிப்பதற்கு என்றே ஒரு சட்டம்பிக் கூட்டம் உள்ளது. சும்மா இருந்து பணம் பண்ணும் வித்தையை கோயில் ஆசாமிகள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், ஹொட்டேலியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். இவர்கள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் ஆசாமிகள் கோட்டும் சுட்டும் போட்டுத் தான் திரிகிறார்கள்.