செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய ஹன்டா் பைடன் – மகனுக்கு பொதுமன்னிப்பு இல்லை என்கிறார் ஜனாதிபதி ஜோ பைடன் !

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக மகன் ஹன்டா் பைடன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளாா்.

போதைப் பொருள் பழக்கத்தை மறைத்து, கடந்த 2018-ஆம் ஆண்டில் ஹன்டா் பைடன் துப்பாக்கி வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு தாராள அனுமதி இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள், போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பவா்களால் அதை வாங்க முடியாது.

இந்த நிலையில், துப்பாக்கி வாங்குவதற்கான படிவத்தில் ‘போதைப் பொருள் பழக்கம் கிடையாது’ என்று ஹன்டா் பைடன் பொய்யாகக் கூறியதாக அவா் மீது கடந்த சில நாள்களாக வழக்கு நடைபெற்றுவருகிறது.

இது குறித்து ‘ஏபிசி’ தொலைக்காட்சிக்கு ஜோ பைடன் அளித்த பேட்டியில், ‘சட்டவிரோத துப்பாக்கி கொள்முதல் வழக்கில் அளிக்கப்படும் எந்தத் தீா்ப்பையும் ஏற்றுக்கொள்வேன். அந்த வழக்கில் ஹன்டா் பைடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் என் ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு பொதுமன்னிப்பு அளிக்கமாட்டேன்’ என்றாா்.

இந்த வழக்கு விவகாரத்தில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹன்டா் பைடனுக்கு சலுகைகள் அளிக்கப்படாது என்று வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் தாக்குதல் – ஓமன் அரசு கண்டனம் !

இஸ்ரேல் இராணுவம் ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக ஓமன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது’ ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இச் செயல் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் செயல்கள் அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. மேலும் இத்தகைய அத்துமீறல்களுக்கு ஓமன் அரசு  கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் அமெரிக்கா தொடரும் – பெத் வான் ஷாக்

நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி தொடர்ந்தும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டனில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்தபோது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த தலைமை இராஜதந்திரிகளின் அமர்வில் பங்கேற்றிருந்தார்.

இதில் பங்கேற்பதற்கச் சென்றிருந்த ஜுலி சங் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக்குடன் உரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது, தூதுவர் ஜூலி சங்குடனான சந்திப்பது அருமையாக இருந்தது – நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு அமெரிக்க தூதுவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பெத் வான் ஷாக் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி நிஷா பிஸ்வாலையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தினை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு 553 மில்லியன் டொலர்கள நிதி உதவியை செயற்படுத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும், இலங்கையில் தனியார் துறையின் முன்னணி வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்வதற்கும் மேற்குறித்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் அன்டனி பிளிங்கனையும் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூமி உதிக்கும் காட்சியை படம்பிடித்த விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் விபத்தில் பலி !

விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் தமது 90ஆவது வயதில் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரின் வடக்கே அவர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று வாவியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதனைத் தாங்கி சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 8 விண்கலத்தின் விண்வெளி வீரர்களுள் ஒருவராக செயற்பட்டிருந்த அவர் ஏர்த்ரைஸ் ((Earth Rise) ) எனப்படும் சந்திரனின் அடிவானத்திலிருந்து பூமி உதிக்கும் காட்சியை சந்திரனின் மேற்பரப்பிலிருந்து புகைப்படம் ஒன்றைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சட்டத்தை மீறி பொஸ்பரஸ் குண்டுகளை லெபனான் மீது வீசிய இஸ்ரேல் – சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு விசனம்!

தெற்கு லெபனானில்  இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேல்  படையினருக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.

இந்த மோதலின் காரணமாக லெபனானில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் அதிகமானோர் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், இஸ்ரேலின் தாக்குதல்களால் 70 இற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுத் தாக்குதல் என்பது பொதுமக்களுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் என்பதுடன் இது சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயற்பாடாகும்.

அத்துடன் இந்த தாக்குதலால், 173 பேர் வரை பாதிப்படைந்து மருத்துவ சிகிச்சை தேவைகள் ஏற்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி  பிரதமராக !

இந்தியாவில் மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி  பிரதமராக பொறுப்பேற்க பதவியேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 292 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது.இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

இந்த நிலையில் பா.ஜ.க. தலைமையில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியினர் இன்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளனர்.

இதனையடுத்து, வரும் 8ம் திகதி மாலை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை மோடி, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து தனதும் தனது அமைச்சரவையினதும் பதவி விலகலை சமர்ப்பித்தார். அப்போது அவர் பதவியேற்பு வரை பதவியில் நீடிக்குமாறு அதிபரால் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகாரித்த மற்றொரு ஐரோப்பிய நாடு !

பலஸ்தீனத்தை தனிநாடாக மற்றொரு ஐரோப்பிய நாடான சுலோவேனியா அங்கீகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின்  , நோர்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனிநாடாக சமீபத்தில் அங்கீகரித்தன.

இதனடிப்படையில், இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த பலஸ்தீனத்தை சுலோவேனியா அங்கீகத்துள்ளதுடன் பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்க சுலோவேனியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதுடன் பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க நடத்திய வாக்கெடுப்பு வெற்றி பெற்றதுடன் இது குறித்து சுலோவேனியா பிரதமர் ராபர்ட் கோலோப் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இன்றைய பலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாக அங்கீகரிப்பது மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சியான ஸ்லோவேனியன் ஜனநாயகக் கட்சி ஆட்சேபனை தெரிவித்து இருந்ததோடு சுதந்திர பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்றும் மற்றும் இந்த நடவடிக்கை ஹமாஸ் அமைப்புக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர்களில் சுவீடன், சைப்ரஸ், ஹங்கேரி, செக் குடியரசு, போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகள் பலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ள நிலையில் இதே போல் மால்டா நாடும் அதை விரைவில் பின்பற்றலாம் என்று தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி தனது அறுபதாவது வயதில் யூன் 4 பிரான்ஸில் காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவ்வாறான ஒரு போராளியின் மறைவையொட்டி ஒருசாரார் இரங்கலைத் தெரிவிக்க இன்னுமொரு சாரார் அவரின் மரணத்தை ‘துரோகத்தின் பரிசு’ என்று எள்ளி நகையாடுகின்றனர். அவர் நரகத்திற்கு செல்கின்றார் என்றும் சில பதிவுகள் வெளியாகி யுள்ளது. அரசியலற்ற தனிமனித ஆளுமைகளின் கீழ் கட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்கள், அவ்வமைப்பை சுக்குநூறாக சிதறடித்துள்ளது. தனிப்பட்ட நபர்களைத் தவிர இவ்வமைப்புகள் தங்களை ஒருங்கமைப்பதற்கான அரசியலைக் கொண்டிருக்கவில்லை. இவர்களில் சற்று அரசியல் விளக்கமுடையவர்கள் முற்றாக மே 18க்குப் பின்னான புலி அமைப்பிலிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டுள்ளனர். ஒரு போராளியின் கடைசி மூச்சுக் காற்று கரைந்து செல்வதற்கு முன்னரேயே அவதூறுகள் சமூகவலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. ஒரு போராளி துரோகியானது எப்படி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் ‘துரோகத்தின் பரிசு’ பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு ஆதாரங்கள் அவசியமில்லை. வந்திகளும், தனிப்பட்ட கோபதாபங்களும், போட்டிகளுமே போதுமானது. யுத்தம் முடிவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் கடந்தும் ‘தியாகி – துரோகி’ என்ற கருப்பு வெள்ளை பைனரி அரசியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் இன்னமும் வரமுடியவில்லை. இன்று பழிசொல்வதற்கு ஆளில்லாமல் தங்களுக்குள்ளேயே தியாகி – துரோகி முத்திரைகளைக் குத்துகின்றனர்.

வவுனியாவில் அன்றைய காலத்தில் நன்கு அறியப்பட்ட கொடுங்கோலன் மாணிக்கதாசன். மாணிக்கதாசனின் மறைவு இன்றும் நினைவுகூரப்படுகின்றது. மாணிக்கதாசன் தமிழ் மக்களுக்காகப் போராட ஆயதமேந்திய போதும் மாணிக்கன்தாசன் இழைத்த அநீதிகள் மிக மிக அதிகம். மாணிக்கன்தாசன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தார் என்பதற்காக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அவரைத் தியாகி ஆக்குவது சரியா என்ற கேள்வி மிக நியாயமானதே.
இந்த வகையில் விநாயகம் துரோகி ஆக்கப்படுவதற்கு வலுவான எந்தக் காரணமும் கிடையாது. வந்திகள், தனிநபர் போட்டி பொறாமை போன்றவையே இந்த அவதூறுகளுக்கு இட்டுச்சென்றுள்ளது. இதற்கு ஒரு நீண்ட பின்னணியும் உண்டு.

எண்பதுக்களின் பிற்பகுதியில் மேற்குநாடுகளுக்கு தமிழர்கள் புலம்பெயர்ந்த ஆரம்பகாலங்களில், விடுதலைப் புலிகள் தங்களுக்கான அமைப்புகளை மேற்குலகில் நிறுவினர். நிதி வசூலிப்புகளையும் மேற்கொண்டனர். மேற்குலகில் தங்களோடு பணியாற்ற விடுதலைப் புலிகளில் இருந்து, மரண தண்டனையில் இருந்து தப்பி வெளிநாடு சென்ற பாரிஸில் உள்ள சுக்லா போன்றவர்கள் உட்பட பலர் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டனர். மாற்று இயக்கங்களைச் சார்ந்தவர்களும் இக்கட்டமைப்புகளுக்குள் உள்வாங்கப்பட்டனர். இவர்கள் புலிகளுக்கான நிதி சேகரிப்பு மற்றும் நிதி சேகரிப்பு நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது என்று ஆரம்பித்து, மாவீரர் தின நிகழ்வு, பொங்கு தமிழ் ஆகியவற்றை மேற்கொண்டு வந்தனர். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் ஏற்பாடு செய்யும் ஒன்றுகூடல்களைக் குழப்புவது, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றையும் செய்து வந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்புப் பற்றி கருத்து வெளியிட்ட இந்திய இராஜதந்திரி ஒருவர் இந்திய நிதி அமைச்சுக்கு தெரியாது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிள் வருமானம் பற்றி. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் வருமானத்தை தெரிந்து வைத்திருந்ததுடன் அவர்களிடம் கணக்குப் பார்த்து வரியையும் அறவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இரண்டாயிரத்தின் நடுப்பகுதியில் ஒஸ்லோ உடன்படிக்கையில் கிடைத்த யுத்த இடைவேளையின் போது சர்வதேச கட்டமைப்புகள் கேபி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாபனின் பொறுப்பிலிருந்து கஸ்ரோவுக்கு கை மாறியது. கேபி இன் செயற்பாடுகள் முடக்கப்பட்டது. பிற்காலத்தில் கேபி யிடம் இருந்து ஆயுத கொள்முதல், விநியோகம் ஆகியவையும் பறிக்கப்பட்டது. ஆயுத கொள்முதல் விநியோகத்தில் நீண்ட கால அனுபவம் மிக்க கேபி யிடம் இருந்து அது பறிக்கப்பட்டது முதல் ஆயதக் கொள்வனவில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மேற்கு நாடுகளின் உளவுத்துறையினரிடமே ஆயுத பேரம் பேசி மாட்டிக்கொண்டனர். இறுதி யுத்தத்தில் புலிகளுக்கான ஆயுதங்கள் வந்தடையாததற்கு இதுவும் முக்கிய காரணம். அடுத்து இந்தியா செய்மதிகளுடாக சர்வதேச எல்லையையும் கண்காணித்ததால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு சேர்க்கவும் முடியவில்லை. 1993 இல் சர்வதேச எல்லைக்குள் வைத்து கிட்டு பயணித்த கப்பலை இந்திய கடற்படையினர் கைப்பற்றியதும், கிட்டுவை கைது செய்ய முற்பட்டதும், கிட்டு கப்பலோடு எரிந்தது உயிர் மாய்த்ததும் வரலாறு.

கஸ்ரோ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்புகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதும், தாயகத்தில் இருந்து சில போராளிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பபட்டு அக்கட்டமைப்புகள் நேரடியாக கஸ்ரோவின் கண்காணிப்புக்குள் கொண்டுவந்தனர். அனைத்துலகச் செயலகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்று இயங்கிய அமைப்புக்களுக்குள் புதிதாக வந்தவர்கள் தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நிதி சேகரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டனர். பல முதலீடுகளையும் மேற்கொண்டனர். நிதி சேகரிப்பவர்களுக்கு அவர்கள் சேகரிக்கும் நிதித் திரட்சியைப் பொறுத்து சம்பளமும் போனஸ்சும் வழங்கப்பட்டது. இதுவரை தமது நேரத்தை ஒதுக்கி தங்களது கடமை சேவை என்ற அடிப்படையில் பணியாற்றிய சிலர் இவ்வமைப்புகளில் இருந்து தங்களை விலத்திக்கொண்டனர்.

இறுதி யுத்தம் உச்சத்தைத் தொட்டிருந்த 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏ மதிப்பிட்டிருந்தது. 300 மில்லியன் டொலர் ஆண்டு வருமானத்தை ஈட்ட தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 300 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்கள் சர்வதேசம் எங்கும் இருந்திருக்க வேண்டும் என்றும் அந்த மதிப்பீடு தெரிவிக்கின்னறது.

2009 மே 18க்கு மறுநாளே இச்சொத்துக்களில் பெருமளவு காணாமலாக்கப்பட்டது. இறுதி யுத்தத்தில் தப்பிய தளபதிகள், போராளிகள் இந்த சர்வதேச வலைப்பின்னல் தொடர்பைக் கொண்டிருந்தால் அவர்கள் அத்தொடர்பைப் பயன்படுத்தி இராணுவ, மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வெளிநாட்டுக்கு வந்தனர். இது பெரும்பாலும் இங்கு வலைப்பின்னலில் நிதிக்குப் பொறுப்பாக இருந்தவர்களின் நெருங்கிய உறவுகள், தளபதிகளின் குடும்பத்தினரை அழைக்கப் பயன்படுத்தப்பட்டது. இங்கும் யாழ் மையவாதம் மிகத் கச்சிதமாக காரியத்தை நகர்த்தியது. மற்றும் சாதராண போராளிகள், போராட்டத்தில் ஊனமுற்றவர்கள் வெளிநாடுகளில் உள்ள சொந்தபந்தங்களின் உதவியோடு வெளிநாடு வந்து சேர்ந்தனர். ஏனையவர்கள் கைவிடப்பட்டவர்களாக இன்னமும் இலங்கையிலும் இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் நாளாந்த வாழ்வுக்காகப் போராடிக்கொண்டுள்ளனர். கிழக்குப் போராளிகள், வன்னிப் போராளிகள், மலையகப் போராளிகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்த வந்த போராளிகள் பெரும்பாலும் கைவிடப்பட்டனர். சர்வதேச தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகளும் அவர்களை கூலிப்படைகளாகவே கணித்தனர். கைவிட்டனர். தற்போது பதுக்கப்பட்ட நிதியில் தங்களை விடுதலைப் புலிகளாக அறிவித்து இயங்கியவர்கள் அவர்களின் குடும்பங்களின் சாமத்திய வீட்டுக்கு ஹெலிக்கொப்டரில் வந்து இறங்குகின்றனர். பூத்தூவுகின்றனர்.

உள்ளக புலனாய்வுக்குப் பொறுப்பாக இருந்த விநாயகமும் சிலரும் இறுதி யுத்தத்தில் கடைசிநேரத்தில் மே14ம் திகதி நந்திக் கடல் பிரதேசத்திலிருந்து தப்பித்து சென்றதாக சொல்லப்படுகின்றது. அவ்வாறு தப்பித்த அவர் குறுகிய காலம் சில மாதங்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றார். அதன் பின் விநாயகம் பாரிஸ் வந்தடைந்தார். 2009க்குப் பின்னான காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைத்தளத்திலிருந்த நிதியை பயன்படுத்த தங்களுக்கும் உரிமையுண்டு. அதற்கு அனுமதி வேண்டும் என இறுதி யுத்தத்தின் போது வெளியேறிய விநாயகம் போன்றவர்கள் கோரிக்கை வைத்தனர். இவர்கள் ஏற்கனவே அனைத்துலக வலைப்பின்னலிலிருந்து வெளியேறியவர்களையும் இணைத்துக்கொண்டு தலைமைச் செயலகம் என்ற அமைப்பை நிறுவினர். இரு மாவீரர் நிகழ்;வுகள் நடைபெற்றதன் பின்னணி இதுவே. இந்த விடயங்களுக்காக விநாயகம் லண்டனுக்கும் வந்திருந்தார். பிரித்தானியாவில் வரலாற்று மையம் அமைக்கப்பட்டதன் பின்னணியிலும் விநாயகம் செயற்பட்டிருந்தார்.

ஆனால் வெகுவிரைவிலேயே விநாயகம் துரோகி ஆக்கப்பட்டார். நந்திக் கடலில் இருந்து துவாரகா, மதிவதனி, பிரபாகரன் மூவரும் தப்பிவந்தார்கள் என்பதை நம்புபவர்கள் அவர்களுக்கு நான்கு நாளுக்கு முன் மே 14இல் விநாயகம் தப்பி வந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பல களமுனைகளைக் கண்ட விநாயகத்திற்கு அங்கிருந்து தப்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என யாரும் முற்றுமுழுதாக மறுக்க முடியாது. அவ்வாறு தப்பி வந்தபடியால் அவர் இலங்கைப் புலனாய்வுத்துறையின் உதவியுடனேயே தப்பி வந்துவிட்டார், அதனால் அவர் துரோகி என ஒரு சாரார் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இறுதி யுத்தத்தில் விநாயகத்தின் மனைவி பிள்ளைகளும் சரணடைந்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். விநாயகம் இலங்கைப் புலனாய்வுத்துறைக்கு உதவியதால் தான் அவருடைய மனைவி பிள்ளைகள் விடுவிக்கப்பட்டதாக இன்னொரு தரப்பு விநாயகத்தை துரோகி என்கிறது. இதனால் விநாயகம் தலைமைச் செயலகத்திலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த வந்திகளின் அவதூறுகளின் உண்மைத் தன்மை யாருக்கும் தெரியாது. ஆனால் விநாயகம் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதற்காக இலங்கைப் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்டிருந்தால் கூட அதில் எவ்வித தவறும் இல்லை. அதற்காக அவரைத் துரோகியாக்க முடியாது. விநாயகத்தை துரோகி என்பவர்கள் தங்களை தாங்களே மதிப்பீடு செய்வது மிக முக்கியம்.

இவை இவ்வாறிருக்க இலங்கை அரசு விநாயகம் மீது வழக்கைப் பதிவு செய்து அவருக்கு பிடிவிறாந்தை அனுப்பியது. இன்ரபோலில் விநாயகம் தேடுதலுக்குரிய நபரானார். பிரான்ஸ் உள்துறை அமைச்சு அவருக்கு வழங்கிய விசாவை மீளப்பெற்றது. விநாயகம் குறுகிய காலத்திலேயே ஓரம்கட்டப்பட்டார். துரோகியாக்கப்பட்டார். மௌனிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாகவே புற்றுநோய்க் கொடுமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு யூன் 4இல் மரணத்தை தழுவினார். அவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாயகத்தில் வறணியில் வாழ்ந்த அவருடைய மனைவி பிள்ளைகளைக் காணவில்லை. மூத்த மகன் கனடா வந்தடைந்துள்ளார். அவருடைய மனைவியும் மற்றைய பிள்ளைகளும் விசிற்றேர்ஸ் விசாவில் அண்மையில் கனடா வந்துள்ளனர். விநாகயத்தின் பூதவுடலை கனடாவில் உள்ள அவருடைய மனைவி பிள்ளைகளிடம் அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை. விமர்சனங்களோடும் மனிதாபிமானத்தோடும் அப்போராளியின் வாழ்வை மதிப்பீடு செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்காக தன்னை தியாகம் செய்ய முன்வந்த போராளியாக அவருக்கு எனது அஞ்சலிகள்.

 

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதியிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி !

இந்தியாவின் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி முடிவுகள் வெளியாகி வருகிறது.

தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 290க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 230க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளன.

தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் இந்தியா கூட்டணி மெகா அணியாக களம் கண்டது.

எதிர்க்கட்சியான அதிமுகவோ, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து களம் கண்டது.

பாஜகவோ, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தனி அணி அமைத்து களம் கண்டது.

இதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதியிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் தருமபுரி மற்றும் விருதுநகர் தொகுதிகளில் மட்டும் முறையே பாமக மற்றும் தேமுதிக கடும் போட்டி கொடுத்தது. இருப்பினும் இறுதியில் திமுக கூட்டணியே 40 தொகுதியிலும் வெற்றி பெற்று ஸ்வீப் செய்துள்ளது.

கடந்த 2019 தேர்தலில் தேனியை தவிர 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், இம்முறை விட்ட ஒரு தொகுதியையும் தன்வசம் ஆக்கியுள்ளது.

2004ஆம் ஆண்டில் இதே திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்ற நிலையில், 20 ஆண்டுகள் கழித்து அதே வகையிலான பெரும் வெற்றியை தற்போது பெற்றுள்ளது.

3ஆவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் – மோடி

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 160க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.

இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார். 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.

 

நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தேர்தல் வெற்றி கொடுத்துள்ளது.

 

இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் பயிற்சியை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

 

இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் முறையின் நம்பகத்தன்மை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள்.

 

இந்தப் புனித நாளில் தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. மக்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்திய வாக்காளர்களுக்கு நான் பெரும் கடன்பட்டுள்ளேன்.

 

ஒடிசா, அருணாசலப் பிரதேசத்தில் பாஜக வென்றுள்ளது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது. கேரளாவில் பா.ஜ..க காலூன்றி உள்ளது என தெரிவித்தார்.