செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஜெயலலிதாவிடம் மக்கள் சக்தி உள்ளது: ராமதாஸ்

india-election.jpgதிரு வண்ணாமலை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் குருவை ஆதரித்து பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், நான் 30 ஆண்டுகள் மருத்துவராக இருந்து நோயாளிகளின் நாடி பிடித்து சிகிச்சை அளித்தவன். தற்போது அரசியலில் நாடி நரம்பை பிடித்து பார்ப்பவன். அதை வைத்துதான் சொல்கிறேன். தமிழகத்தில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

1998ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம். அப்போது எங்களை டெல்லிக்கு அழைத்து சென்று ஒரு அமைச்சர் பதவியை வாங்கி கொடுத்தார்கள். அதன் பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்து 8 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். 2001ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலில் 22 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றோம். அதன்பிறகு திமுகவுடன் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். 13 இடங்களில் குழி பறித்து விட்டார்கள்.

கூட்டணி என்றால் அதிமுகவுடன் வைப்பதுதான் இயற்கையான கூட்டணி. அதிமுகவினர் எதிர் அணியில் இருந்தாலும் நம்மை முகமலர்ச்சியோடு பார்பார்கள். திமுகவினர் நம்மோடு கூட்டணியில் இருந்தாலும் சிடு சிடு என்றுதான் பார்ப்பார்கள். அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு மக்கள் சக்தியே காரணம். இந்த மக்கள் சக்தி ஜெயலலிதாவிடமே உள்ளது என்றார்.

இலங்கை பிரச்சினை குறித்த டிவிடிக்கள் காவற்துறை தடையை மீறி விநியோகம்

dvd_.jpgதூத்துக் குடியில்  காவற்துறை தடையை மீறி பெரியார் தி.க.வினர் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு ஆதரவான டிவிடிகளை விநியோகித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள், இயக்குநர் சீமானின் பேச்சுக்கள்,  முத்துக்குமரனின் இறுதி நிமிடங்கள் மற்றும் தமிழர்களுக்கு ஆதரவான கவிதைகள் கொண்ட டிவி டியை தயாரித்து, அதனை வெளியிடப் போவதாக அறிவித்தது. இதனை வெளியிட காவல்துறை அனுமதிக்கவில்லை. இருப்பினும் அதனை மக்கள் மத்தியில் எப்படியாவது சேர்த்துவிடும் முயற்சியில் பெரியார் கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் அந்த டிவிடியின் ஒரு இலட்சத்திற்கும் மேற் பட்ட பிரதிகளை ஏற்கனவே தமிழகம் முழுவதும் வியோகித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உளவுத்துறையினர் மற்றும்  காவற்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் அந்த குறிப்பிட்ட டிவிடிகள் இரகசியமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் கூடும் பகுதிகள், மார்க்கெட், டீக்கடைகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வந்து இந்த குறிப்பிட்ட டிவிடிகளை யாரும் அறியாதவகையில் பைக்குகள் மீதும், கார்கள் மீதும், உடமைகள் மீதும் போட்டு விட்டு செல்கின்றனர். தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த டிவிடிகள் காவற்துறை தடையை மீறி விநியோகிக்கபட்டு வருவதால் தூத்துக்குடி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

dvd_.jpg

மழையின் மத்தியிலும் வன்னியில் தாக்குதல்.

army-attack.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைக்கும் மத்தியில் நேற்று படையினர் நடத்திய ஷெல் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 32 பேர் பலியாகினர் 75 பேர் படுகாய மடைந்துள்ளனர்  என்று இணையத்தளத் தகவல்கள் தெரிவித்தன.

அவை மேலும் தெரிவித்ததாவது: மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகள் மீது சனிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை படையினர் ஆட்லெறி எறிகணை, மோட்டார் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மரணமானோரை புதைக்க முடியாமலும் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமலும் உள்ளதாகக் கூறப்பட்டது.

ஈஸ்டர் திருநாளில் போர் நிறுத்தம் ஏற்படட்டும்: ஜெயலலிதா

jaya.jpgஅன்பும்,  இரக்கமும் உயிர்த்தெழட்டும் என்று, ஜெயலலிதா தனது ஈஸ்டர் திருநாள் வாழ்த்தில் கூறி இருக்கிறார். அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

அன்பின் வடிவமாம் இயேசு பெருமான், சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்த திருநாள் ஈஸ்டர் பண்டிகை என்னும் பெயரால் உலகு எங்கும் கொண்டாடப்படும் இந்த வேளையில், கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில், அன்பு உயிர்த்தெழட்டும், உயிர் இரக்கம் உயிர்த்தெழட்டும், அமைதி தவிழட்டும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படட்டும், அகிலம் முழுவதும் ஆனந்தம் தாண்டவமாடட்டும் என பிரார்த்திப்போம். எனது அன்புக்குரிய கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சிறுவர் கைகளில் புத்தக பைகளையே கொடுப்பேன்; துப்பாக்கிகளை அல்ல ‘சிறுவர் வலியை உணர்ந்தவன் நான்’ – கிழக்கு முதல்வர்

hotal-cm.jpgஒரு சிறுவர் போராளியாக நான் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்ததனால் சிறுவர்கள் படைகளில் சேர்க்கப்படுவதால் அவர்கள் எதிர்கொள்கின்ற வலிகளை நேரடியாக உணர்ந்தவன் என்ற வகையில் இனி வருகின்ற காலங்களில் எந்தவொரு சிறுவர்களையும் எந்தவொரு அமைப்பிலும் இருப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.

திருமலையிலுள்ள வெல்கம் ஹோட்டலில் இடம்பெற்ற கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறுவர் உரிமைகள் தொடர்பாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தலைமையுரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து குறிப்பிட்ட முதலமைச்சர்

நான் தற்போது கிழக்கு மாகாணத்தின் முதல்வராக இருக்கின்ற இத்தருணத்தில் சிறுவர்கள் நலன் தொடர்பாக அதிக அக்கறை கொள்வதற்குரிய அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றேன். தமிழ் மக்கள் அரசியல் கட்சியினைப் பொறுத்த வரையில் ஆரம்பத்தில் பாதுகாப்புக் காரணம் கருதி சில சிறுவர்கள் இணைந்திருந்தார்களே தவிர, நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் வலுக்காரமாக சிறுவர்களை எமது அமைப்பில் சேர்க்கவில்லை.

எம்முடன் இணைந்திருந்தவர்களில் அனைவருமே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஏனைய சில ஆயுதக் குழுக்களில் தற்போதும் சிறுவர் போராளிகள் இருப்பதாக அறிய முடிகின்றது. எனவே அந்தச் சிறுவர்களின் மறுவாழ்வு தொடர்பாக யுனிசெப்புக்கும் பொலிஸாருக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கின்றேன்.

எதிர்காலத்தில் சிறுவர்களின் கைகளிலே புத்தகப் பைகளை மாத்திரம் கொடுபேனே தவிர, மாறாக துப்பாக்கிகளை ஏந்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

இக் கருத்தரங்கிற்கு நீதி அமைச்சின் செயலாளர் சுகந்த கம்லத், கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சங்கர், திருமலை மாவட்ட பொலிஸ்மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, யுனிசெப் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டார்கள். இதே கருத்தரங்கு மட்டக்களப்பு கச்சேரியிலும் இடம்பெற்றது. இதிலும் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.

பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து தமிழ் உண்ணாவிரதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தமிழ் இளையோர் – தமிழ் மாணவர் அமைப்பினரால் நடாத்தப்படும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட உண்ணாவிரதிகள் நேற்று சனிக்கிழமை 11ம் திகதி 2009 இரவு லண்டன் பொலீசாரினால் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை வீதியோரத்தில் தொடர்வதாக தெரியவந்துள்ளது

இத் தமிழர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளதாக வெள்ளி மாலை பிபிசி-ஜரிவி என்பனவும் செய்தி வெளியிட்டிருந்தன.

குடாநாட்டில் சில தினங்கள் தொடர்ந்து மழை பெய்யும்!

lighting.jpgகுடாநாட்டில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் மழை இன்னும் சில தினங்கள் நீடிக்கும் சாத்தியம் அதிகம் உண்டு என்று திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. நேற்றுக்காலை 8.30 மணி வரை 90.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், காலை முதல் பிற்பகல் 5.30 மணி வரை மொத்தம் 83.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலைய வட்டாரங் கள் மேலும் தெரிவித்தன. எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்குப் பின்னர் மழை வீழ்ச்சி குறையலாம் என்று எதிர் பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது. இடியுடன் கூடிய மழை பெய்வதனால் பொதுமக்கள் இடிமின்னல் தாக்கங்களில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடு?

tna-mp-22.jpgபேச்சு வார்த்தை நடத்த வருமாறு இந்திய அரசாங்கம் விடுத்த அழைப்பை நிராகரித்தமையால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாடுகள் வலுவடைந்து வருவதாக தெரிய வருகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் விடுத்த அழைப்பை நிராகரித்தமையால் கூட்டமைப்பு பிளவை நோக்கி இட்டுச் செல்லப்படுவதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை தமிழர்களுக்காக உண்மையான தமிழ் இன உணர்வாளர்கள் ஒருங்கிணைப்பு: விஜய டி.ராஜேந்தர்

images-t-rajendran.jpgதிமுக, அதிமுக அணியினர் இலங்கை தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதால், உண்மையான தமிழ் இன உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கப் போவதாக லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவை. இதனைத் தோலுரித்துக் காட்டுவதே எங்கள் கடமை. உண்மையான தமிழ் இன உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கிற முயற்சியில் ஈடுபடப் போகிறோம். அப்படி அமைகிற அமைப்புகளோடு சேர்ந்து குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம்.

கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, இராமநாதபுரம், சிவகங்கை, மத்திய சென்னை உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவோம்.

விஜயகாந்த் அந்தத் தொகுதியில் அவரது மைத்துனரை நிறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் பிரச்னையாகட்டும், தேர்தல் கூட்ட ணி குறித்த பிரச்னையாகட்டும் அவரைப் போல் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியவர்கள் இல்லை. பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ளயிருப்பதால் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறேன். அமையும் சூழலைப் பொறுத்து தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறினார்.

பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் பணி ஆரம்பம் – பெருந்தொகையானோரை தங்கவைக்க செட்டிக்குளத்தில் விரிவான ஏற்பாடு

_mullai_1.jpgபாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை படையினர் ஆரம்பித்துள்ளதையடுத்து பெருமளவிலான மக்கள் அங்கிருந்த வரலாம் எதிர்பார்ப்புடன் அம்மக்களை என்ற தங்க வைப்பதற்காக வவுனியா செட்டிக்குளம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிக கொட்டில்கள் (டெண்டுகள்) அமைக்கப்படுகின்றன. யூ. என். எச். சீ. ஆர் சுமார் 12,000 தற்காலிக கொட்டில்களை வழங்க முன்வந்துள்ளது. இப்போது சுமார் 9000 கொட்டில்களை அமைக்கும் ஆயத்த நிலையில் உள்ளன. என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

மேலும் இப்பிரதேச செயலகப் பிரிவிலேயே 700 ஏக்கர் பகுதியும் துப்புறவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியிலும் மக்களை தங்கவைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. கொட்டில்களில் மக்களை தங்க வைப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட மலசல கூட வசதிகளையும் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. வவுனியாவில் தங்கியுள்ள ஐ. நா. மனிதாபிமான அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் இதற்கென பெரிதும் உதவி வருவதாகவும் செயலாளர் ஹால்தீன் தெரிவித்தார்.

தற்போது வவுனியாவுக்குள் சுமார் 64,000 பேரளவில் வந்துள்ள நிலையில் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேரை உள்வாங்குவதற்கு எதுவாக வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களுள் சுமார் 400 பேர் செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமிலும், மேலும் 1200 பேர் ஒமந்தை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1000 பேர்; படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளனர். இவர்கள் இன்று அல்லது நாளை வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.