ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவர் விஜே நம்பியார் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக மோதல் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.அமைப்பு தெரிவித்துள்ளது.
“அரச அதிகாரிகளுடன் அவர் (நம்பியார்) மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பெறுபேறாக மோதல் பகுதியில் தற்போது சிக்கியுள்ள பொதுமக்களை விடுவிப்பதற்கான முயற்சிகளில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நாம் உணருகின்றோம்’ என்று பான் கீ மூனின் இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.
“ஆனால் அந்த முயற்சிகள் மேலும் தொடரவேண்டிய தேவை இருப்பதாகவும் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.
இரு வேறுபட்ட மட்டங்களில் ஐ.நா. வின் முயற்சி சம்பந்தப்பட்டது. கனரக ஆயுதங்களையும் மற்றும் ஆட்லறிகளையும் பிரயோகிக்க வேண்டாம் என்று இலங்கை அரசை மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்திக் கேட்டுவருகிறோம். அப்பாவிப் பொதுமக்கள் வெளியேறுவதற்கான முயற்சிகளில் ஓரங்கமாக இதனை நாம் மேற்கொண்டுள்ளோம்’ என்று ஹக் கூறியுள்ளார்.
“முயற்சியின் மற்றொரு பகுதியாக, பொதுமக்களை வெளியேற விடுதலைப் புலிகள் இடமளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். இரு தரப்புடனும் இது தொடர்பாக பகிரங்கமான அறிக்கைகள் மூலம் நாம் முயற்சிகளை மேற்கொண்டுளோம் என்றும் ஹக் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் நம்பியார் தொடர்பு கொண்டுள்ளாரா என்று கேட்கப்பட்ட போது, “இந்தத் தருணத்தில் என்னால் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை’ என்று ஹக் கூறியதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை தெரிவித்தது.
மோதல் வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலைமை தொடர்பாக ஐ.நா.ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவோரின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாகவும் மோதல் வலயப் பகுதிக்குள் இருப்போரின் நிலைமையைப் போன்றே கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் ஹக் கூறியுள்ளார்.