பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது. சைதாப்பேட்டை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர், தெர்டர்ந்து பேசியதாவது:-
’’இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, வெளியுறத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கை அரசிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை. ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு சவப்பெட்டிகளை செய்து அனுப்புகிறது. அங்கே கொத்து கொத்தாக குண்டுகளை போட்டு இலங்கை தமிழர்களை கொல்கிறார்கள்.
தமிழர்களை வேகமாக கொல்லுங்கள் என்று சொல்வதற்காக தான் இந்திய மந்திரியும், அதிகாரிகளும் இலங்கைக்கு சென்றிருக்கின்றனர். ஏழைகளை ஒழித்து விட்டால் வறுமை இருக்காது என்று சொல்லும் கூட்டத்தை போல தமிழர்களை ஒழித்து விட்டால் பிரச்சினை இருக்காது என்று கருதுகிறார்கள். அமெரிக்கா கூட இன்றும், போரை நிறுத்து என்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஆனால் இனவெறி ஆட்சியை நடத்தி வரும் ராஜபக்சே யாருடைய பேச்சையும் கேட்க தயாராக இல்லை.
பிரபாகரனை பிடித்து விடுவார்கள், பிரபாகரனை கொன்று விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது போல் பல முறை சொல்லி பிரபாகரனை சாகடித்து இருக்கின்றனர். பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது.
பிரபாகரனை தீவிரவாதி என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்றும் சொல்லி வருகின்றனர். பகத்சிங்கை கூட அப்படித்தான் சொன்னார்கள். சுபாஸ் சந்திரபோசை அப்படித்தான் சொன்னார்கள். விடுதலைக்காக போராடக்கூடியவர்களை அப்படித்தான் சொல்வார்கள்’’ என்று பேசினார்.