செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கார் – லாரி மோதல் – அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார்

neduma2.jpg இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் சென்ற கார் மீது டேங்கர் லாரி மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார்.பழ.நெடுமாறன் நேற்று மாலை மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர் பயணித்த கார் சேந்தன்குடி என்ற இடத்தில் வந்தபோது, எதிரே காஸ் நிரப்பிக் கொண்டு வந்த டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இருப்பினும் நெடுமாறன் உள்பட காரில் இருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

விரைந்து வந்த சீர்காழி போலீஸார், லாரியை ஓட்டி வந்த முசிறியைச் சேர்ந்த கணபதி என்பவரைக் கைது செய்தனர்.

கூடாரங்கள், அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அவசரமாக அனுப்புகிறது யூ.என்.எச்.சி.ஆர்.

new_welfare.png
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களின் அவசர தேவைகளுக்காக கூடாரங்கள் மற்றும் பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் அவசர பணிகளைத் தாங்கள் ஆரம்பித்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் (யு.என்.எச்.சி.ஆர்) தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளையடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்களுக்கு வந்துள்ளனர்.

வவுனியா, மன்னார், யாழ்.குடாவில் இந்த மக்கள் பாடசாலைகளிலும் பொட்டல் வெளிகளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டும் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இந்த மக்களுக்கான தங்குமிட வசதிகள் மிகவும் குறைவாயுள்ள நிலையில் யு.என்.எச்.சி. ஆர் தனது அவசர உதவிப் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் முதல்கட்டமாக கூடாரங்கள் மற்றும் பொருட்களை விமான மூலம் கொழும்புக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தேவையான. ஐயாயிரம் கூடாரங்களும் வேறுபொருட்களும் அடுத்த ஓரிரு தினங்களில் விமானங்கள் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. அந்தக் கூடாரங்கள் தற்போது வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் 38 முகாம்களிலுள்ளவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

வன்னி அகதிகளுக்கு உதவி வழங்குமாறு முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை

cvili.jpgவன்னியில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வருகின்ற தமிழ் சகோதரர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களின் ஊடாக நிவாரணப்பொருட்களை சேகரித்து அனுப்புமாறு ஜம் இயத்துல் உலமாவின் உதவிச்செயலாளர் மௌலவி தாசிம் அறிவித்துள்ளார். தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இடம்பெயரும் வன்னி மக்களுக்கு இன்று அவசியமாக சமைத்த உணவே வழங்கவேண்டியதாக சுட்டிக்காட்டி அதனை முதலில் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து ஜமா அத்தே இஸ்லாமிய குழுவை வவுனியாவுக்கு அனுப்பி அங்கு உணவை சமைத்து வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வாழுகின்ற முஸ்லிம்கள் மதியஉணவு மற்றும் உணவுப்பொருட்களை உடன் சேகரித்து வவுனியா நலன்புரிநிலையங்களில் உள்ள அகதிகளுக்கு வழங்குமாறும் மௌலவி தாசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிநீர் போத்தல், குழந்தைகளுக்கான பால்மா வகைகள், பிஸ்கற் வகைகள், பெண்களுக்கான உடுபுடவைகள் , சுகாதாரத் துணிகள், பெட்சீற், சாரம் போன்றவற்றைச் சேகரித்து வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தெமட்டகொடவில் உள்ள வை.எம்.எம்.ஏ. தலைமையகத்தில் இப்பொருட்களை ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பேர்லினில் இலங்கை தூதரகம் மீது வியாழன் இரவு கைக்குண்டு வீச்சு

germany.jpgஜேர்மனியின் பேர்லின் நகரிலுள்ள இலங்கைத்தூதரகம் மீது கடந்த வியாழக்கிழமை இரவு கைக்குண்டுத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. தூதரகப்பகுதிக்கு வந்த சிலர் இரு கைக்குண்டுகளை தூதரகத்தின் மீது வீசியுள்ளதாக பேர்லின் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு குண்டுகளில் ஒன்றே வெடித்துள்ளது. மற்றது வெடிக்கவில்லை. இக்குண்டுவெடிப்பால் கட்டிடத்திற்கு சிறிதளவு சேதமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கிருந்த எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே இந்தக் குண்டுத்தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தாங்கள் கருதுவதாக இலங்கைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேர்லின் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்தமூன்று மாதங்களுக்கு முன்னரும் இந்தத் தூதரகம் மீதுதாக்குதல் நடத்தப்பட்டதும் தெரிந்ததே.

பிரபாகரனுக்கு இன்னும் 20வருடம் போராடக்கூடிய சக்தி இருக்கிறது: ராமதாஸ்

india-election.jpg பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது. சைதாப்பேட்டை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.  அப்போது அவர், தெர்டர்ந்து பேசியதாவது:-

’’இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, வெளியுறத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கை அரசிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை.  ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு சவப்பெட்டிகளை செய்து அனுப்புகிறது. அங்கே கொத்து கொத்தாக குண்டுகளை போட்டு இலங்கை தமிழர்களை கொல்கிறார்கள்.

தமிழர்களை வேகமாக கொல்லுங்கள் என்று சொல்வதற்காக தான் இந்திய மந்திரியும், அதிகாரிகளும் இலங்கைக்கு சென்றிருக்கின்றனர். ஏழைகளை ஒழித்து விட்டால் வறுமை இருக்காது என்று சொல்லும் கூட்டத்தை போல தமிழர்களை ஒழித்து விட்டால் பிரச்சினை இருக்காது என்று கருதுகிறார்கள். அமெரிக்கா கூட இன்றும், போரை நிறுத்து என்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஆனால் இனவெறி ஆட்சியை நடத்தி வரும் ராஜபக்சே யாருடைய பேச்சையும் கேட்க தயாராக இல்லை.

பிரபாகரனை பிடித்து விடுவார்கள், பிரபாகரனை கொன்று விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது போல் பல முறை சொல்லி பிரபாகரனை சாகடித்து இருக்கின்றனர். பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது.

பிரபாகரனை தீவிரவாதி என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்றும் சொல்லி வருகின்றனர். பகத்சிங்கை கூட அப்படித்தான் சொன்னார்கள். சுபாஸ் சந்திரபோசை அப்படித்தான் சொன்னார்கள். விடுதலைக்காக போராடக்கூடியவர்களை அப்படித்தான் சொல்வார்கள்’’ என்று பேசினார்.

விடுதலைப்புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது

puthumathalan.jpg
விடுதலைப்புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டது என பி.பி.ஸி. அறிவித்துள்ளது

இலங்கை மோதல்கள் காரணமாக பெரும் மனித நேய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேச நாடுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நாவின் உயர் அதிகாரியான ஜோண் ஹோல்ம்ஸ் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் – முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானம்

nimalsiripaladasilva.jpg தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் மாணவர்களோ பெற்றோரோ ருபெல்லா தடுப்பூசி ஏற்றப்படுவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

தேசிய நோய்த் தடுப்பு வேலைத் திட்டத்திற்கமைய ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாடு முழுவதுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் 350 பேர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

380 மெ. தொ. உணவு பொருட்கள் விமானம் மூலம் விநியோகம்

mi-27.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுக் கொண் டிருக்கும் மக்களுக்கு விநி யோகிக்கவென விமானம் மூலம் மாத்திரம் 21 திகதி முதல் நேற்று வரை 350 மெற்றிக் தொன் சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக தரைவழியாக பொருட்கள் மற்றும் உலர் உணவுகளை விமானப் படையினர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

பொது மக்களுக்கு தேவை யான சமைத்த உணவுப் பொதிகள் மற்றும் பொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்ல விமானப்படையின் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறிகள் மூலமும் கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இதற்கென சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சமைத்த உணவுப் பொதிகள், பேக்கரி உற்பத்திப் உணவுப் பொருட்கள், பால், தண்ணீர் போத்தல்கள், குடிபான வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 350 மெற்றித் தொன் பொருட்களையே விமானப் படையினர் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் விமானப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

வன்னியில் அகதிகள் வருகை அதிகரிப்பு புல்மோட்டையிலும் முகாம் அமைகிறது

Wanni_War_Welfare_Campவன்னியில் இருந்து புல்மோட்டைக்கு வருகின்ற அகதிகள் தொகை தினமும் அதிகரித்து வருவதால் புல்மோட்டையில் இடைத்தங்கல் முகாம் ஒன்றை அவசர அவசரமாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புல்மோட்டை அநுராதபுரம் வீதியில் 13 ஆவது மைல் கல்லில் உள்ள 100 ஏக்கர் காணியில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட அர சாங்க அதிபர் ரஞ்சித் டீ சில்வா மற்றும் திருகோணமலை கடற்படை கட்டளைத்தளபதி ஆகியோர் நேற்று சனிக்கிழமை மாலை இங்கு விஜயம் செய்து வேலைகளைப் பார்வையிட்டனர்.

5000 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் இந்த இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

இந்த வேலைகள் குச்சவெளி பிரதேச செயலர், கிண்ணியா பிரதேச செயலர், பதவிசிறிபுர பிரதேச செயலர் மற்றும் குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் ஆகியோரின் மேற்பார்வையில் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் சில தினங்களில் இந்தவேலைகள் முடிவுறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வலைஞர்மடம் இராணுவத்தினரால் விடுவிப்பு

இராணு வத்தின் 58 ஆம் படையணியினர் வலைஞர்மடம் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அப்பகுதியில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களையும் பாதுகாப்பு படையினர் விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் இருந்து 6கிலோமீற்றர் தொலைவில் வலைஞர்மடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது