செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மழைபெய்தாலும் அனுரா தான் குற்றவாளி – தென்னம் பாளை விடாவிட்டாலும் அனுர தான் குற்றவாளி

“மழைபெய்தாலும் அனுரா தான் குற்றவாளி – தென்னம் பாளை விடாவிட்டாலும் அனுர தான் குற்றவாளி” விசித்திரமான டிசைனில் இலங்கை அரசியல்!

அரிசி மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பை மேற்கோள் காட்டி ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் அனுர குமார அரசின் மீது தமது காழ்ப்புணர்ச்சியை கொட்டித்தீர்க்க ஆரம்பித்துள்ளனர்.

 

இதுவேளை, நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உரிய பருவத்தில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாகவும் அதன் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இது தொடர்பான மாற்று திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்வதற்கான அறிவுறுத்தல்களை அரசு தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதேவேளை அரசி தொடர்பான விலை அதிகரித்தமையாலும் மக்கள் பாதிக்கப்படுவதாக பல ஊடகங்கள் மேற்கோள் காட்டிய நிலையில், வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அவசர சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு விலைகளின் உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஒரு கிலோ நாட்டு அரிசியை ரூ. 225 மொத்த விலைக்கும் ரூ. 230 சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த பத்து நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

 

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார தட்டுப்பாடு கடந்த கால அரசுகளின் பொருளாதார திட்டமிடல் இல்லாத சூழலின் விளைவுகளேயாகும். தேர்தலில் தோல்வியடைந்த குழுவினர் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது இந்த பொருளாதார நெருக்கடியை போட்டுவிட்டு கடந்து விடப்பார்க்கிறார்கள் என தேசம் நெட் நேர்காணலில் சட்டத்தரணி நிஸ்தார் மொகம்மட் தெரிவித்தார். குறித்த நேர்காணலில் கலந்து கொண்ட இன்னுமொரு அரசியல் ஆய்வாளரான மாவடி சிறீதரன் எதற்கெடுத்தாலும் அனுர அரசை குறை சொல்வதில் தான் பலருடைய கவனமும் இருக்கிறது. இவர்களுக்கு மழை பெய்தாலும் அனுரதான் காரணம். வெள்ளம் வந்தாலும் அனுர குமார தான் காரணம். நீண்ட கால திட்டமிடல்களுடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேலை செய்வதற்கு போதுமான கால அவகாசத்தை வழங்காமல் கடந்த கால அரசுகளின் தவறுகளுக்கும் தேசிய மக்கள் சக்தி மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது ஆரோக்கியமான விடயம் இல்லை என மாவடி சிறீதரன் குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

தற்சார்பு பொருளாதாரத்தை வளப்படுத்தாமல் சாராயக் கடைகளை நம்பி நாட்டை நடத்தினாரா ரணில் விக்கிரமசிங்க..? 

தற்சார்பு பொருளாதாரத்தை வளப்படுத்தாமல் சாராயக் கடைகளை நம்பி நாட்டை நடத்தினாரா ரணில் விக்கிரமசிங்க..?

கடந்த வாரம் முழுமையாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய மதுபான சாலைகளுக்கான அனுமதி தொடர்பான வாத பிரதிவாதங்கள் இலங்கையின் ஊடகங்கள் அனைத்திலும் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில் கடந்த அரசு தேர்தல் காலத்தை இலக்கு வைத்து வழங்கிய மதுபான சாலை அனுமதிகளால் வடக்கு – கிழக்கின் பல பகுதிகளிலும் மதுபான சாலைகள் நிறைந்து காணப்படுவதாகவும் கிளிநொச்சிக்கு 16 புதிய மதுபான சாலைகளுக்கான அனுமதி வழங்கியதன் மூலம் 5000 பேருக்கு ஒரு மதுபான கடை என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் விசனம் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமானவை அல்ல எனவும், அடுத்த ஆண்டு இன்னும் 300 உரிமங்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னால் வழங்கப்பட்ட மதுபான அனுமதி பத்திரங்கள் தொடர்பில் மேலும் பேசிய ரணில் விக்கிரமசிங்க, ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்திற்கும் அரசாங்கம் கட்டணத்தை அறவிட்டுள்ளது. அவை சட்டவிரோதமாக வழங்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ இலஞ்சமாக மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொன்றும் 10, 15, 20 மில்லியனுக்கு விற்கப்பட்டது. நேரடி வரிகள் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் இவை. இந்த அனுமதிப்பத்திரங்களில் அரசாங்கத்தின் வருமானத்தில் நான்கிலிருந்து ஐந்து பில்லியன் வரை சேர்த்திருக்கலாம். நான் ஏன் யாருக்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டும்? இவை எதுவும் இலவசமாக வழங்கப்படவில்லை. ” என தெரிவித்துள்ளார்.

நாட்டினை முன்னேற்றவும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும் – திறைசேரியை நிறைக்கவும் முறையாக செயற்படுத்தவும் கூடியதான நீண்டகால திட்டங்களை கொண்டு வராமல் மூத்த அரசியல்தலைவரான  ரணில் விக்கிரமசிங்க சாராயக்டைகளை நம்பி செயற்பட்டுள்ளார் என பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர். தற்சார்பு பொருளாதார வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட ஓர் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான எந்த திட்டங்களையும் செயற்படுத்தாமல் வெளிநாட்டு கடன்களை பெற்று தமது ஆடம்பரத்தை அரசியல் தலைவர்கள் மேம்படுத்தியதும் – தேவையற்ற பொருளாதார திட்டங்களை முன்னைய அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தியதுமே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டி வருகின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் மதுபான சாலைகளை நம்பிய ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்ற கொள்கை தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலிந்து சர்வதேசத்தை அழைக்கின்றனர்! ஆனால் சர்வதேசம் காஸாவில் இனப்படுகொலை செய்வதில் படு பிஸியாக இருக்கின்றது!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலிந்து சர்வதேசத்தை அழைக்கின்றனர்! ஆனால் சர்வதேசம் காஸாவில் இனப்படுகொலை செய்வதில் படு பிஸியாக இருக்கின்றது!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாவட்டத் தலைவிகள் ஒருவர் மாறி ஒவ்வொருவராக வந்து “எங்களுக்கு உள்ளகப் பொறிமுறை வேண்டாம் சர்வதேசம் தான் வேணும் ஆனால் சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்க்கவில்லை” என்று ஒப்புவித்தனர்.

இவர்கள் அழைக்கின்ற சர்வதேசம் அமெரிக்கா உட்பட்ட நட்பு நாடுகளின் பூரண சம்மதத்துடனேயே 2009 பேரழிவுக்கு இட்டுச்சென்ற ‘ஒப்பிரேசன் பீக்கன்’ என்று பெயரிடப்பட்ட இறுதியுத்தம் 2006 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் களத்தில் இலங்கை இராணுவம் நின்றபோதும் பின்னணியில் யுத்தத்தை இயக்கியது இந்தியாவும் அமெரிக்கா உட்பட்ட இணைத் தலைமை நாடுகளுமே.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் இம்மாவட்டத் தலைவிகள் வலிந்து அழைக்கும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேசம் இலங்கையில் நடந்தது யுத்தக் குற்றம் என்றும் இனப்படுகொலை என்ற வரையறைக்குள் அதனை உட்படுத்த முடியாது என்றும் கூறிவிட்டனர். ஆனால் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளில் 300 பேர்வரை கிணற்றுத் தவளைகளாக குரல் எழுப்பியே மரணித்துவிட்டார்கள் என்கிறார் இவ்வமைப்புகளிலிருந்து வெளியேறிய ஒரு பெண்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்புகள் எங்களுடைய தேர்தல் கட்சிகள் போல் சிதறுண்டுபோய் சின்னாபின்னமாகிவிட்டதாகவும் இந்த அபலைகளான அப்பாவிகளை பலரும் தத்தம் அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் முன்னணி அரசியல் செயற்பாட்hளரும் வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் மனைவியுமான ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார. அவர் மேலும் குறிப்பிடுகையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய வாக்கு வங்கிக்காகவும் வெளிநாடுகள் தங்களுடைய நலனுக்காகவும் இந்த அபலைப் பெண்களைப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

சில பெண்களுக்கு வெளிநாட்டுப் பயணம் என்ற ஆசiவார்த்தைகளைச் சொல்லியும் இவர்கள் தூண்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது. இவர்களது போராட்டத்தை தக்க வைக்க நிதி வழங்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த நிதி இவர்களை அமைப்பாக உருவாக்கி வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவதாக அக்குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மாவட்டத் தலைவியர் காணாமலாக்கப்பட்டோரைப் பற்றிக் கதைத்ததிலும் பார்க்க அவர்களிடம் ஒரு அரசியல் நோக்கம் இருந்ததைத் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. ஒருவர் பின் ஒருவராக எழுதிக்கொடுத்ததை ஒப்புவித்தனர். அத்தோடு மிக வலிந்து தற்போதுள்ள அரசு முன்னைய அரசுகளைக் காட்டிலும் மோசமானது என்றும் தற்போது புலனாய்வுப் பிரிவினரின் அட்டகாசங்கள் கூடிவிட்டதாகவும் மாவீரர் தினத்தைக் கொண்டாடியவர்களை கைது செய்யுமாறு ஆளும்கட்சி அமைச்சர்களே கூறுவதாகவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என்றும் தெரிவித்து வருவதாகவும் உண்மைக்குப் புறம்பான பொய்களை ஊடக மையத்தில் தெரிவித்தனர். அத்தோடு இனிமேல் புலனாய்வுப் பிரிவினர் தங்கள் வீடுகளுக்கு வந்தால் அவர்களோடு கைகலப்பு ஏற்படும் என்று பொதுத்தளத்தில் வந்து சொல்லுமளவுக்கு நாட்டில் ஜனநாயகம் வந்துவிட்டதையும் அவர்கள் அங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது – டமாஸ்கஸை கைப்பற்றியது கிளர்ச்சி படை !

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நகரை சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் படை வீரர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியதால் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கசை விட்டு வெளியேறினார். இதனைத்தொடர்ந்து தலைநகர் டமாஸ்கஸ் எல்லைப் பகுதியில் பஷார் அல்-அசாத்தின் தந்தை சிலையை கிளர்ச்சியாளர்கள் உடைத்தனர். மேலும் டமாஸ்கசில் முக்கிய சிறையிலிருந்து கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர்.

இது தொடர்பாக கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் மூத்த தளபதி ஹசன் அப்துல் கானி தனது வட்ஸ்அப் பதிவில், “டமாஸ்கஸ் நகரத்தை பஷர் அல்-ஆசாத்திடமிருந்து விடுவித்ததாக நாங்கள் அறிவிக்கிறோம். உலகம் முழுவதும் இடம்பெயர்ந்த மக்களே, சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் தப்பிச் சென்ற விமானம் மாயமாகி உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பதற்ற நிலை உருவாகி உள்ளது.

பௌத்த பிக்குவின் பூதவுடலை சுமந்து சென்ற முஸ்லீம்கள் – சிலாகித்து பேசும் சிங்கள ஊடகங்கள்! 

பௌத்த பிக்குவின் பூதவுடலை சுமந்து சென்ற முஸ்லீம்கள் – சிலாகித்து பேசும் சிங்கள ஊடகங்கள்!

கேகாலையில் முஸ்லிம் மக்கள் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

காலஞ்சென்ற கனேகந்த ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் பரதெனியே சந்தரதன தேரரின் இறுதி சடங்கு முஸ்லிம் மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கன்னத்தோட்டையில் வாழும் முஸ்லிம் மக்களுடன் மிகவும் கண்ணியமான முறையில் வாழ்ந்த தேரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள தமது வர்த்தக நிலையங்களை மூடி, தேரருக்கு அஞ்சலி செலுத்தினர்.

சுலைமானியா மைதானத்தில் இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்ற நிலையில், தேரரின் சடலத்தை முஸ்லிம் மக்கள் சுமந்து சென்றுள்ளனர். சமூகங்களுக்கிடையில் பிணைப்பைக் கட்டியெழுப்பும் வகையில் அறநெறியில் ஈடுபட்ட தேரர் தனது 69ஆவது வயதில் கடந்த நான்காம் திகதி காலமானார்.

சிங்கள இனத்தை சேர்ந்த தேரருக்கு முஸ்ஸிம் மக்களால் வழங்கப்பட்ட நல்லிணக்கம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகம் சிலாகித்து பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் தொடரும் மருத்துவசாலை ஊழியர்களின் அதிகார துஷ்பிரயோகம் !

வடக்கில் தொடரும் மருத்துவசாலை ஊழியர்களின் அதிகார துஷ்பிரயோகம் – கவனத்தில் கொள்வார்களா வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள வைத்தியர்கள்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கடமை நேரத்தில் மருந்து வழங்கும் ஊழியர்கள் இல்லாததால் மருத்தை பெறுவதற்கு நீண்டநேரமாக நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலை தோன்றியுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு தினமும் வெளிநோயார்கள் பலர் வந்து செல்கின்றனர். அந்தவகையில் தூர தேச பிரதேசங்களில் இருந்தும் மக்கள் சிகிற்சை பெறுவதற்காக அங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் 07.12.2024 அதிகாலையில் வந்து காத்திருந்த நோயாளிகள் மருத்துவரிடம் மருந்து சீட்டை பெற்று மருந்து வாங்க மருத்துவமனை மருந்தகத்தில் அதிக நேரமாக தாம் காத்திருப்பதாகவும், எனினும் மருந்து வழங்கும் ஊழியர்கள் இதுவரை வரவில்லை எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.  இதனை சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவேற்றியும் உள்ளார்.

இலங்கையின் இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் ஆகிய இரண்டு துறைகளுமே முறையாக செயற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. அவற்றின் இயங்குநிலை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது. எனினும் மருத்துவசாலைகள் தொடங்கி பாடசாலைகள் வரை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கவனக்குறைவான ஊழியர்கள் நடவடிக்கைகள் என பல குறைபாடுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மருத்துவமாபியாக்களை கைநீட்டி  பாராளுமன்றம் சென்ற வைத்தியர் ஊசி அர்ச்சுனா, தேசிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றம் சென்ற சிறீபவானந்தராஜா என இரண்டு மருத்துவர்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இந்த நிலையில் மருத்துவசாலைகள் முறையாக செயற்படவும் – அதிகாரிகள் ஊழியர்கள் ஊழல் இல்லாமல், வேலை மற்றும் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாமல் செயற்படவும் என்ன வகையான நடவடிக்கைகள் எடுக்க போகிறார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.facebook.com/share/v/s2hTYjDkECG7i9uc/

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிரான தடை – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் கோரிக்கை!

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அனுப்பி வைத்திருக்கின்றது.

ஜொஹனஸ்பேர்க்கை தளமாகக் கொண்டு யஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கி வரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டமானது, இலங்கையின் அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிரான தடைகள் மற்றும் விஸா அனுமதி தடைகள் தொடர்பான 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருப்பதுடன் உலகளாவிய சட்ட வரம்பெல்லையின் பிரகாரம் வழக்குப் பதிவுகளையும் கோரியிருக்கின்றது.

மனித உரிமைகள் தினத்தையொட்டி (எதிர்வரும் 10 ஆம் திகதி) தயாரிக்கப்பட்டிருக்கும் இக்கோரிக்கைகள் மற்றும் ஆவணங்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவை இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நீதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடன் தொடர்புடைய கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க ஊழல், மோசடிகள் என்பன பற்றியவையாக இருக்கின்றன.

அமைச்சரவையில் முஸ்லீம் பிரதிநிதித்துவமின்மை இனவாதமா?

அமைச்சரவையில் முஸ்லீம் பிரதிநிதித்துவமின்மை இனவாதமா? மாவடிப்பால மரணங்களுக்கு யார் பொறுப்பு?

சட்டத்தரணி, மனித உரிமைவாதி மற்றும் அரசியல் ஆய்வாளர் செய்ட் பசீர்

 

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீட்க அனுர அரசுடன் கைகோர்க்கும் அமெரிக்கா!

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீட்க அனுர அரசுடன் கைகோர்க்கும் அமெரிக்கா!

 

இலங்கையில் இருந்து வௌிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை மீளக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கத் தயார் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் டொனால்ட் லூவுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் தற்போதைய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டத்திற்கு தேவையான போதெல்லாம் ஆதரவளிக்க தயார் எனவும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் கூடாரம் மீது திட்டமிட்டு தாக்கிய இஸ்ரேல் – இருபதுக்கும் அதிகமானோர் பலி !

தெற்கு காசாவின் கான் யூனிஸின் இடம்பெயர்ந்த மக்கள் கூடாரங்களில் அடைக்கலம் பெற்றிருக்கும் அல் மவாசி பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகி இருக்கும் டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்கும் முன் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியாக தனது மத்திய கிழக்கு தூதுக் குழுவை கட்டார் மற்றும் இஸ்ரேலுக்கு அனுப்பி இருக்கும் நிலையிலேயே இந்த பயங்கர தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலினால் மனிதாபிமான வலயமாக அறிவிக்கப்பட்ட மவாசியில் நேற்று முன்தினம் இரவு போர் விமானங்கள் இந்த பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் இலக்கு வைத்ததாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘மவாசி பகுதியில் பொதுமக்கள் மாத்திரமே இருப்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று காசாவின் சிவில் பாதுகாப்பு பேச்சாளர் மஹ்மூத் பசல் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.