செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கொழும்பில் தனியார் மருத்துவ கல்லூரி அமைவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

புதிய தனியார் மருத்துவக் கல்லூரி ஸ்தாபிப்பதை ஆட்சேபித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

அனைத்து மருத்துவக் கல்லூரியையும் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். நேற்று நண்பகல் பொரளையிலிருந்து ஊர்வலமாக சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வார்ட் பிளேஸிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுவரும் புதிய தனியார் மருத்துவக் கல்லூரியை நிராகரித்தே இவர்கள் நேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். அமைக்கப்பட்டுவரும் புதிய பல்கலைக்கழகத்தில் 10 சதவீதமான இட ஒதுக்கீடு சமுர்த்தி குடும்பங்கள் மற்றும் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மருந்துகள், முகமூடிகள் அனுப்பிவைப்பு

mexican.jpgபன்றிக் காய்ச்சலை எதிர்கொள்ளுவதற்கு அவசியமான மருந்துப் பொருட்களும், முகமூடிகளும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் வேண்டுகோளுக்கிணங்க உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொழும்பு அலுவலகம் இவற்றை இறக்குமதி செய்துள்ளது. இதேநேரம், பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

நேற்று வரையும் சுமார் 1500 பேர் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக நோய்பரவுகைத் தடுப்பு பிரிவு பணிப்பாளர் டாக்டர் பபாபலிகவர்தன நேற்றுத் தெரிவித்தார். இதேவேளை, பன்றிக் காய்ச்சலுக்கு உள்ளாகின்றவர்களுக்கு 72 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்பட வேண்டிய ஒசெல்டமிவிர் என்ற மாத்திரைகள் 15 ஆயிரம், இந்நோய்க்குள்ளாகும் சிறுவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாணி மருந்து 240 போத்தல்கள், முகமூடிகள் இரண்டாயிரம் என்பன இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்று கூறினார்.

அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொழும்பு அலுவலகம் நேற்று முன்தினமிரவு கொழும்புக்கு கொண்டுவந்த இப்பொருட்கள் நேற்று மாலை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.

சுமார் ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துப் பொருட்கள் தற்போது இலங்கை வசம் உள்ளன. மேலும், ஒரு தொகுதி மருந்துப் பொருட்களையும், முகமூடிகளையும் இறக்குமதி செய்யவும் அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் எம்.பிக்கள் குழு நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

Wanni_War_IDPs
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்று (செவ்வாய்) பகல் 2 மணியளவில் செட்டிகுளத்திற்கு விஜயம் செய்தது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் தங்கியுள்ள மக்களை சந்தித்த இவர்கள் அங்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை அவதானித்ததுடன் மக்களிடம் கேட்டறிந்து கொண்டனரென அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்த மக்களின் பெரும்பாலானவர்கள் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இருப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டு ள்ளனர். இவர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகம் தெரிவிக்கின்றது.

வவுனியாவில் பாடசாலைகள் உட்பட 24 இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் அருவிதோட்டம், ஆனந்தகுமாரசாமி வலயம் 1, கதிர்காமர், அருணாசலம் வலயம் 3, செட்டிகுளம் மகா வித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் பாடசாலை, இராமநாதன் வலயம் 2 ஆகிய பகுதிகளில் 13 ஆயிரத்து 428 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 785 பேர் தங்கியுள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. ஏனைய 39 ஆயிரத்து 182 பேரும் வவுனியாவில் உள்ள 17 பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேல்மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராக ரோஷி சேனநாயக்க

rosi-senanayake-t.jpgமேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பிரபல நடிகையான ரோஷி சேனநாயக்கா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தீர்மானம் கட்சியின் உயர் மட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற மேல் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

புதுமாத்தளன் – பாதுகாப்பு வலயம்: போதியளவு உணவு அனுப்பிவைப்பு – தட்டுப்பாடில்லை என்கிறது உலக உணவுத்திட்டம்

taking-to-green-ocean.jpgபுதுமாத்தளன் பகுதியில் எஞ்சியுள்ள மக்கள் சீரான முறையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை யென்ற புலிகள் இயக்கத்தின் குற்றச்சாட்டை உலக உணவுத் திட்டம் நிராகரித்துள்ளது. அங்கு சீரான முறையில் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த பெப்ரவரி 19ம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 3,328 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டதாகவும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை காரியாலயம் தெரிவித்தது.

புதுமாத்தளனில் உள்ள மக்களுக்கு சீரான முறையில் உணவு அனுப்பப்படுவ தில்லையெனவும், இதனால் அங்குள்ள மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாகவும் புலிகள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள உலக உணவுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் அசேட் அஸ்ரத், புதுமாத்தளனுக்கு சீராக உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு தவறானது என்று கூறினார். அரசாங்கத்தின் உதவியுடன் புதுமாத்தளனுக்கு கப்பல் மூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் எதுவித தடங்கலும் செய்யவில்லை.

புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதில் சிக்கல் உள்ளது. அதனால் பெருமளவு உணவுப் பொருட்களை அங்கு அனுப்ப முடியாதுள்ளது. உணவுப் பொருட்கள் பெரிய கப்பலில் எடுத்துச் சென்று அவை சிறிய மீன்பிடிப் படகுகளுக்கு மாற்றப்பட்டு கரைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சிறிய படகுகளில் 30 தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இவ்வாறு அனுப்பப்படுகின்றன.

புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்கள் கிரமமாக எடுத்துச் செல்லப்பட்டு தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்கு உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை எதுவும் கிடையாது எனவும் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இது வரை 674 மெற்றிக்தொன் அரிசி, 1074 மெற்றிக் தொன் கோதுமை மா, 29 மெற்றிக்தொன் மரக்கறி மற்றும் சீனி, பருப்பு, எண்ணெய், சோயா கலன், சோளம் என்பன அனுப்பப்பட்டுள்ளன. இதேவேளை நேற்று (5) கப்பல் மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு மருந்து வகைகள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

இலங்கை அகதிகளுக்கான அவசர உதவிகளுக்காக ஐ.நா கோரிக்கை

fily-ap.jpg இலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து தப்பியோடி வரும் மக்களின் உடனடி மனித நேயத் தேவைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை 5 கோடி டாலர்கள் அவசர உதவி கோரியுள்ளது.

இலங்கை அரசும், உதவி நிறுவனங்களும் பெருமளவில் இடம்பெயர்ந்தோர்களின் தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறுவதாக கொழும்பில் உள்ள ஐ நா அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

கடந்த மாதம் ஏராளமானோர் சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து வந்ததன் காரணமாக, முகாம்களில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்து தற்போது ஒரு லட்சத்து தொண்ணூறாயிரமாக உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சோனியாகாந்திக்கு எதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தடை

india-election.jpgஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சென்னை தீவுத்திடலில் இன்று(புதன்கிழமை) நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

சோனியாகாந்திக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். சினிமா டைரக்டர் பாரதிராஜா உள்பட ஏராளமான பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி அளவில் சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் – அமைச்சர் அநுர பிரிதர்ஷன யாப்பா

20090424063601srilanka4.jpgஇடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமிழ் மக்களும் இந்நாட்டுப் பிரஜைகள். அவர்களுக்கு உதவுவது தங்கள் கடமை என்றும் இதில் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஊடக தகவல்துறை,  முதலீட்டு அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிப்பதற்காக கட்டுகம்பளை தேர்தல் தொகுதி மக்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை அப்பிரதேச மக்கள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஊடாக அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் தகவல் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

குறிப்பிட்ட பொருட்களைக் கையேற்று உரை நிகழ்த்திய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பத்து இலட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான  குடிநீர் போத்தல்கள், பிஸ்கட், பால்மா,  அரிசி, பருப்பு, சீனி மற்றும் துணிவகைகள் போன்றவை இந்நிகழ்வின் போது கையளிக்கப்பட்டன.

இடைநிறுத்தப்பட்ட வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக பூஜை வழிபாடுகளை நடத்த ஏற்பாடு

பெரும்பான்மை யினத்தவர்களின் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக, சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாபெரும் பூஜை வழிபாடு நடைபெறவுள்ளது.

கோயில் நிர்வாக சபையினர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை அவரது அமைச்சில் திங்கட்கிழமை காலை சந்தித்தபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. சித்திரா பௌர்ணமி தினமான 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு இப்பூசை நடைபெறுவதுடன், அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சௌமிய இந்து கலாசார மண்டபமும் திறந்து வைக்கப்படும்.

இவ்வைபவத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா. உபதலைவர் எம். மணிமுத்து, ஏ.எம்.டி. இராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 10 ஆம் திகதி வரை இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உற்சவத்தை வெசாக் காலப்பகுதியில் நடத்தக்கூடாது என சில பெரும்பான்மையினர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதனை மீறினால் கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இதனால், இக்கோயிலின் உற்சவம் இடைநிறுத்தப்பட்டது. இது குறித்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கோயில் நிர்வாக சபையினரை தமது அமைச்சுக்கு வரவழைத்து நிலைமையை கேட்டறிந்து கொண்டதுடன், இது குறித்து ஆலய வழிபாட்டுச் சபையினர் கலந்துரையாடினர்.

இது தொடர்பாக சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அன்றைய தினமும் அதற்கு பின்னரும் இறக்குவானை பகுதியில் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இது குறித்து அமைச்சர் பௌத்த தலைவர்கள் மற்றும் மல்வத்த பீடாதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

புதிய திட்டங்களை விரிவுபடுத்த கூடாது: நவீன் சாவ்லா

iindias-election.jpg தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா மற்றும் தேர்தல் கமிஷனர்கள் குரேஷி, சம்பத் ஆகியோர் சென்னை வந்தனர்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் நரேஷ் குப்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நவீன் சாவ்லா,

தேர்தலையொட்டி புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரவோ அல்லது விரிவுபடுத்தவோ கூடாது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் அரசியல் நோக்கத்துடன் யாரையும் கைதுசெய்ய கூடாது என்றும் வலியுறுத்தினார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்று கூறினார்.