செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சப்ரகமுவ ஆளுநரின் இறுதிக் கிரியை இன்று

ellawala.jpgசப்ரகமுவ மாகாண ஆளுநர் காலஞ்சென்ற மொகான் சாலிய எல்லாவளவின் இறுதிக் கிரியைகள் இன்று (16) சனிக்கிழமை பலாங்கொடையில் நடைபெறுகின்றன.

சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்த மொகான் எல்லாவள கடந்த செவ்வாய்க்கிழமை (12) காலமானார்.

2008 ஒக்டோபர் மாதம் இரண்டாந் திகதி ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், மாகாண சபை உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதிபர்களுக்கான தரம் உயர்வு

susilpremjayanth.jpgஅரச சேவைகள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை கல்வி அமைச்சின் செயலாளருக்கு பாடசாலை அதிபர்களுக்கான தரம் உயர்வு வழங்குவதற்கான அதிகாரம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். நிலவும் வெற்றிடங்கள் அனைத்துக்கும் ஏற்ற வகையில் தரம் உயர்வு வழங்கப்படவுள்ளது.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்: மனோ

mano-2.jpg“இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்” என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சுதந்திரத்திற்கான மேடையின் அரங்கம் எனும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்த வலய பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் விபரங்களை அரசு இரகசியமாக வைத்திருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விடுதலைப்புலிகளிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதைக் காரணம் காட்டி அழைத்து வரப்படுகின்றனர். இவர்கள் கம்பஹா, கண்டி போன்ற பிரதேசங்களிலுள்ள சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களின் விலாசம் மற்றும் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். முகாம்களில் பல மக்கள் சிக்கியுள்ளதால் தமது உறவினர்கள் உயிருடன் உள்ளார்களா? இல்லையா? என இலட்சகணக்கான மக்கள் பதறுகின்றனர். அவர்களுடைய வேதனையை தொலைபேசி வாயிலாக எமக்கு கூறுகிறார்கள்.எனவே முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் உள்ள மக்களின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்” என்றார்.

வெள்ளவத்தையில் தற்கொலை அங்கிகள் மீட்பு!

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள ஏழு மாடிக் கட்டிடம் ஒன்றில் நான்கு தற்கொலை அங்கிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான  ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை இன்னும் 48 மணி நேரத்துக்குள் மீட்போம் – ஜேர்தானில் ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgமுல்லைத்தீவில் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ள புலிகளை இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழுமையாகத் தோற்கடித்து புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை படை வீரர்கள்  விடுவித்துவிடுவார்களென நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு தொழில் புரியும் இலங்கையர்கள் மத்தியில் நேற்று உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார். ஜேர்தானில் உள்ள தொழில் பேட்டையில் கெஷ வல் வெயா ஆடை உற்பத்தி நிலையத்தில் இது தொடர்பான வைபவம் நடைபெற்றது. இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது.

இலங்கையில் இப்போது என்ன நடக்கின்றது என்பதை அறிய வெளிநாட்டில் உள்ளவாகள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது எனக்குத் தெரியும்.

2005 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மகிழ்சியைக் கொண்டாட புலிகள் இடம்தரவில்லை. நிராயுதபாணிகளான படை வீரர்களை அவர்கள் படுகொலை செய்தனர். எனினும் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம் என புலிகளை நாம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். ஜெனீவாவிலும் ஒஸ்லோவிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும் இப்பேச்சுவார்த்தையை புலிகள் இடையில் முறித்துக்கொண்டனர்.

கிழக்கில் விவசாயத்தை நம்பி வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களுக்கு புலிகள் தண்ணீர் வழங்க மறுத்து மாவில் ஆறு அணைக்கட்டை மூடினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக படையினர் மனிதாபிமான நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து புலிகளை தோற்கடித்து மக்களுக்கு நீர் வழங்கினர்

மூதூர் மூஸ்லிம்களை தமது சொந்த இடங்களிலிருந்து புலிகள் விரட்டியபோது படையினர் அங்கிருந்து புலிகளை விரட்டியடித்து 40 நாட்களுக்குள் முஸ்லிம் மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தினர். அதேபோன்று கிழக்குப் பிரதேசம் முழுவதையும் மீட்டு அங்கு ஜனாநாயத்தை உருவாக்கினோம். 2001 ஆம் ஆண்டில் புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வடக்கையும் கிழக்கையும் புலிகளுக்கு சட்டரீதியாக ஒப்படைத்தார்.

இப்போதும் அவர் மேற்குலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் புலிகளுக்கு சார்பான அந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்தோம்.

சில நாடுகள் இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீதே அழுத்தங்களைக் கொடுக்க முயற்சித்துவருகின்றன. இலங்கை மக்கள் நாட்டின் கௌரவத்தையும் கீர்த்தியையும் பேணிப்பாதுகாக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

வடக்கிலே இடம்பெயர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாம் ஏற்கெனவே எடுத்துள்ளோம். இந்த விடயத்தில் இதுபோன்ற யுத்தநிலைமைகள் ஏற்பட்டுள்ள ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகின்றபோது நாம் மிகவும் விரைவாக அவற்றை மேற்கொண்டுள்ளோம்.

அடுத்த கட்டமாக நாடு துண்டாடப்படுவதைத்; தவிர்க்கின்றவகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்கப்படும். எல்லா மக்களும் கௌரவத்தோடும் தன்மானத்தோடும் வாழ்வதற்கான ஒரு சுதந்திர தேசத்தைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும். எமது மக்களுக்கு அத்தகையதொரு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தந்த எமது படைவீரர்களை நாம் பாராட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார். 

தப்பிச் செல்ல முயன்ற சூசையின் குடும்பத்தினர் கடற்படையினரால் கைது!

sri_lanka_navy_logo.pngபடகொன்றின் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, மகன்,  மகள்,  மற்றும் இரு உறவினர்கள் இன்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க தெரிவித்தார். புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகத்துக்கிடமான படகை கடற்படையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோதே சூசையின் குடும்பத்தினர் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

சூசையின் மனைவி,  அவரது மகன்,  மகள்,  மற்றும் இரு உறவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர். சூசை இன்னமும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருப்பதாக சூசையின் குடும்ப உறுப்பினர்கள் படையினரிடம் தெரிவித்துள்ளனர். எந்தவொரு புலி உறுப்பினருக்கும் கடல் மூலம் தப்பிச் செல்ல முடியாதவாறு கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க கூறினார். 

நாளை வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தயார்

india-elc.jpgமக்களவைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே ஆட்சியமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெற்று, மாநில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைப்பது குறித்த முயற்சிகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், முடிவுகள் பிற்பகலுக்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடுமுழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகளை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தேர்தல் முடிவுகளை தெரிவிக்க ஏதுவாக சுமார் ஆயிரத்து 80 பத்திரிகை தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணைய நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகளிலும், முடிவுகளைத் தெரிவிக்கும் பணிகளிலும் நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இரு மின்னணு தகவல் பலகைகள் வைக்கப்பட்டு, அவ்வப்போது வெளியாகும் முடிவுகள் வெளியிடப்படும். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒரிஸ்ஸா மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாகின்றன.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களுக்குதவ அமெரிக்க கடற்படை தயார் நிலையில்

us-navy.jpgஇலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டு மூன்று மாதங்களுக்கு தமது மதிப்பீட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அது தொடர்பான அறிக்கையை அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாக அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தெரிவுகள் குறித்து இலங்கையில் உள்ள தமது தூதுவர் ஊடாக ராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்கையினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும் நிலைப்பாட்டில் அமெரிக்க கடற்படையினர் உள்ளனர்.

இடம்பெயர் மக்களைப் பார்வையிட்டு உதவ அரசு எமக்கு அனுமதி வழங்கவில்லை: ரவூப் ஹக்கீம்

hakkem.jpg“வடக்கில் இடம்பெறும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உதவிகளை வழங்கும் ஒரு சந்தர்ப்பத்தை அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை” என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுதந்திரத்திற்கான மேடையின் அரங்கம் என்ற அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஒபாமாவின் பேச்சுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் வரவேற்பு

obama_.jpgஇலங்கையில் மனிதாபிமானப் பிரச்சனை உருவாவதைத் தவிர்க்குமாறு கோரியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் பராக் ஒபாமா, இலங்கையில் ஒரு மனிதாபிமானப் பிரச்சனை உருவாகியிருக்கிறது. இந்தப் பிரச்சனை ஒரு பேரழிவாக மாற்றமடைவதற்கு முன்பாக சிறிலங்க அரசு போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி, வெள்ளை மாளிமை முன்பாக கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒபாமாவின் பேச்சுக்கு இன்று வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு தலைமை தாங்கி போராட்டம் நடத்தி வரும் எலியாஸ் ஜெயராஜா இதுகுறித்துப் பேசுகையில், தமிழர்கள் குடியிருப்புப் பகுதியில் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும், போர் பகுதியில் சிக்கியுள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்ற அதிபர் ஒபாமாவின் கோரிக்கையை சிறிலங்க அரசாங்கம் மறுக்க முடியாது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதிபர் ஒபாமாவின் பேச்சு, இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை பார்த்துக் கொண்டு உலக நாடுகள் அமைதியாக இருக்காது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் ஜெயராஜா கூறினார்.