இன்று தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் நடைபெறும் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச ஆட்டத்தில் சனத் ஜயசுரிய சதம் அடித்ததினால் உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் கூடிய வயதில் சதம் அடித்தது இவரின் இந்த சாதனையாகும். இவர் சதம் அடிக்கும் போது இவரின் வயது 39 வருடங்களும் 254 நாட்களும் ஆகும். இதற்கு முன் இச்சாதனையை ஏற்படுத்தியவர் ஜெப்ரி பொய்கொட் (இங்கிலாந்து) என்பவராவார். அவர் சதம் அடிக்கையில் அவரது வயது 39வருடங்களும் 51நாட்களும் ஆகும்.
செய்திகள்
செய்திகள்
செய்திகள்
ஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷ நேற்று தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி; ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணைகளை மூடிமறைப்பதற்கோ, இழுத்தடிப்பதற்கோ அரசாங்கம் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.
ஊடகவியலாளர்களைத் தாக்கும் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையவே கிடையாது. அப்படியானதொரு தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை.
அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது. அப்படியானதொரு நிலையில் இத்தகைய கேவலமான வேலையை செய்யவேண்டிய தேவையே இல்லை. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற போது அரசாங்கத்தின்மீது குற்றம் சுமத்துவது மிகவும் அபாண்டமானதொரு செயலாகும். லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல முக்கியஸ்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுப்போம்.
ரிவிர ஆசிரியர் காமினி விஜயக்கோனும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இது மிகவும் மோசமானது. பதவியிலுள்ள அரசாங்கம் இதற்கு வகை கூறவேண்டுமென்பது உண்மை. அதற்காக எடுத்ததற்கெல்லாம் அரசின் மீது குற்றம் சுமத்தக்கூடாது என ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். ஊடகவியலாளர்களுக்கு ஏதும் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவுடன் தொடர்புகொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்கின்றன. இது நாட்டில் பாரதூரமான குரோதத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அமைதியின்மையொன்றை தோற்றுவிக்கும்.
தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற பிரசாரங்களை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செய்திகளைப் பிரசுரிக்கின்றன. தயவுசெய்து தமிழர்கள் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிரான குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் எழுத வேண்டாமென மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கை தமிழ் மக்களுக்கெதிரானதல்ல. பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள தமிழ் மக்களை விடுவிப்பதற்கானது. வன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செயற்பட வேண்டும். அதாவது, புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதனை வலியுறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும். இத்தகைய பங்களிப்புக்களை தமிழ்ப் பத்திரிகைகள் செய்ய வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
சுதந்திர தினத்திற்கு முன் முல்லைத்தீவும் முழுமையாக மீட்கப்படும். வடக்கு உட்பட சகல நிலப் பிரதேசங்களும் உள்ளடக்கப்பட்ட இலங்கையிலேயே இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். படையினர் முல்லைத்தீவு நகரினைக் கைப்பற்றியுள்ளனர். இன்னும் சிறு பகுதியே மீட்கப்படவேண்டியுள்ளது. சுதந்திர தினத்திற்கு முன் இது மீட்கப்பட்டு விடுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறுவது உறுதியெனவும் தெரிவித்தார். மேற்படி ஐந்து மாவட்டங்களிலும் 40 பிரதேச சபைகள் உள்ளன. இச்சகல பகுதிகளிலும் அரசாங்கமே வெற்றிபெறுமெனவும் அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான செய்தியாளர் மாநாடொன்று நேற்று கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இரு மாகாண சபை பிரதேசங்களிலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்களென மூவினத்தவர்களும் செறிந்து வாழ்கின்றனர். இதற்கமைய அபேட்சகர் பட்டியலும் இன விகிதாசாரத்தை அடிப்படையாக வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாகாண சபைகளிலும் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அவர் அதனை ஆதாரத்துடன் கூறவில்லை. எவரும் இதனை ஏற்கமாட்டார்கள்.
மத்திய மாகாண அபிவிருத்தி சம்பந்தமாக எஸ்.பி. திசாநாயக்க பேசி வருகின்றார். மத்திய மாகாணத்தில் அரசாங்கம் 3,779 தமிழ் ஆசிரியர்களையும், 600 முஸ்லிம் ஆசிரியர்களையும் நியமித்துள்ளது. அவர் சமுர்த்தி அமைச்சராக இருந்த காலத்தில் எத்தனை பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கினார் எனக் கூறட்டும் பார்க்கலாம்.
மத்திய மாகாணத்தில் அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை மும்முரமாக முன்னெடுக்கிறது. நாட்டின் சகல பகுதியும் அரசாங்கத்தின் கீழ் இருக்கும். அனைத்துப் பிரதேசங்களும் அபிவிருத்திக்குள்ளாக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசின் அழைப்பை யேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். இவர், நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினாரென வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொது மக்களை புலிகளின் பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வெற்றியளித்துக் கொண்டு இருக்கும் இவ் வேளையில் அமைச்சர் முகர்ஜியின் வருகை இடம் பெறுகின்றது.
இவ்வருகையானது பாரம்பரியமாக இந்தியா மற்றும் இலங்கையின் அதி உயர்மட்ட அரசியல் தலைவர்களிடையே நடைபெறும் பரஸ்பர – நன்மை பயக்கும் முக்கிய விடயங்கள் சம்பந்தமாக வெளிப்படையானதும் ஆக்கபூர்வமானதுமான கலந்துரையாடலாக அமைந்திருந்ததெனவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.
வட பகுதியில் பல இடங்களை புலிகளிடமிருந்து மீட்டு அவர்களை தோற்கடித்துள்ளதாக கூறும் அரசாங்கம், அதனை வைத்துக்கொண்டு நாட்டின் தெற்குப் பகுதியின் சகல இடங்களிலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளதாக புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலிதரங்க பண்டார குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்;புலிகளைத் தோற்கடித்து வடபகுதியின் பெருமளவான பிரதேசங்களை மீட்டுள்ளதாக அரசு கூறி தம்பட்டம் அடித்துக்கொண்டு அந்த வெற்றிகளை வைத்துக்கொண்டு நாட்டின் தெற்குப் பகுதியிலும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன் உச்சக்கட்டமாகவே புத்தளம் மாவட்டத்தில் பத்துதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனது வாகனசாரதியும் கூட தாக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் ஆயுதங்களை பறித்த காடையர் குழுவொன்று அதனை பயன்படுத்திய சம்பவங்களும் உள்ளன.
எனினும், சம்பந்தப்பட்டவர்களை பொலிஸார் கைது செய்த போது உயர்மட்ட அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நாட்டின் தென்பகுதியில் நாலாபுறங்களிலும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட அரசிடம் நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். இது இவ்வாறிருக்க, அரசாங்கம் தனது தேர்தல் வெற்றிக்காக அரச சொத்துகள் உட்பட அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றது. தேர்தல் வெற்றி என்றால் ஏன் இவ்வாறு செயற்பட வேண்டும். உண்மையில் மக்கள் எம்முடன் இருப்பதே காரணமாகும்.
இதேவேளை, தேர்தல் வன்முறை தொடர்பில் எனக்கோ அல்லது எனது கட்சிக்கோ எதிராக எதுவித முறைப்பாடும் பொலிஸில் செய்யப்படாத நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அரசுக்கு எதிராக நான் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார். இவரை நான் பொலிஸ் சேவையில் இருக்கும் போதே நன்கறிவேன். இவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அணிதிரண்டிருப்பதால் மாகாண சபை தேர்தலில் எமக்கு வெற்றி என்றார
இலங்கை இந்திய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ரன்கிரி தம்புள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிறது. இலங்கைக்கு எதிரான தொடரில் ஹர்பஜன்சிங் இல்லாவிட்டாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்றுமுன் தினம் பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு வந்து சேர்ந்தது. இங்கு இலங்கை கிரிக்கெட்சபை நிர்வாகிகள், இந்திய அணியினரை வரவேற்றனர்.
இந்திய அணி வீரர்கள் கொழும்புக்கு புறப்படும் முன்பு நேற்று முன்தினம் காலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்தும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள சுழற்பந்து வீசக்கூடிய புதுமுக சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜாவிடம், இலங்கை பயணத்துக்கான இந்திய அணியில் காயம் காரண மாக ஹர்பஜன்சிங் இடம்பெறாதது பின்னடைவா? என்று கேட்டதற்கு பதில் அளித்து கூறியதாவது:-
சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் அணியில் இடம்பெறாததால் அணிக்கு பின்னடைவு என்று சொல்ல முடியாது. நாங்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடுவோம். வீரர்கள் எல்லோரும் தங்களது துறையில் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்திய அணி வருமாறு:-
டோனி (கப்டன்), ஷெவாக் (துணை கப்டன்), டெண்டுல்கர், யுவராஜ்சிங், கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, யூசுப் பதான், சகீர்கான், இஷாந்த் ஷர்மா, பிரக்யான் ஒஜா, முனாப் பட்டேல், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிரவீன்குமார்.
இலங்கை அணி வருமாறு:-
ஜயவர்த்தன (கப்டன்), சங்கக்கார, ஜயசூரிய, தரங்க, கப்புகெதர, முபாரக், தில்ஷான், கன்டம்பி, முரளிதரன், மெண்டிஸ், மஹ்ரூப், பெர்னாண்டோ, குலசேகர, துஷார, மெத்தியு.
இந்திய – இலங்கை இடையேயான போட்டி அட்டவணை விவரம் வருமாறு:-
போட்டி அட்டவணை
ஜன 28: முதல் ஒரு நாள் போட்டி தம்புள்ள
ஜன 31 2 வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் -இரவு)
பெப். 3 3வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் – இரவு)
பெப். 5 4 வது ஒரு நாள் போட்டி கொழும்பு (பகல் – இரவு)
பெப். 8 5 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு
பெப். 10 20 ஓவர் போட்டி, கொழும்பு (பகல் – இரவு)
நேபாளில் சீதனக் கொடுமையை இல்லாதொழிக்கப் போவதாக கூறியுள்ள பிரதமர் பிரசண்டா பாரபட்சமற்ற நேபாளைக் கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் பிரசண்டா அமைதியான முறையில் அரசியல் முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் நேபாளத்தைக் கட்டியெழுப்ப முன்வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் சீதனக் கொடுமைகள் அதிகரித்துள்ளமைக்கு கவலை வெளியிட்ட பிரதமர் சீதனம் நேபாளத்தில் தடை செய்யப்படுவதுடன் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடுவோரும். சீதனம் வாங்குவோரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்தார்.
தேர்தலின் போது தன்னால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் இவ் வேளையில் அரசுக்கெதிரான செயற்பாடுகளையும், பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளையும் தனது அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லையென்றும், பெண்கள் அடக்கியாளப்படுவது நேபாளத்துக்குப் பெரும் அவமானம் எனவும் பிரதமர் தனதுரையில் தெரிவித்தார். நேபாளத்திலுள்ள 27 மில்லியன் சனத்தொகையில் 14 வீதமானோர் தீண்டத்தகாத தலித் இனத்தவராவர்.
இவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். நேபாளின் பிரபல இந்து ஆலயங்களில் தலித்கள் வழிபடவும் பொது வைபவங்களில் பங்கேற்கவும் தடுக்கப்பட்டுள்ளனர். இது மாபெரும் பாராபட்சமும் சமூகக் குற்றமும் எனச் சுட்டிக்காட்டிய சமூகத் தலைவர்கள் இம் முறைகள் மாற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள நிலையில் பிரதமர் பிரசண்டா தொலைக் காட்சியில் உரையாற்றியுள்ளார். சரிந்து செல்லும் தனது அரசின் செல்வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு அடிமட்டத்திலும் கிராமப் புறங்களிலும் ஆதரவைத் தேடும் முயற்சியே இதுவென எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
நேபாள அரசில் பல வகைக் கொள்கையுடைய கட்சிகள் உள்ளதால் அரசைக் கொண்டு செல்வதற்கான அனுபவம் குறைவாக உள்ளதென்பதை ஏற்றுக் கொண்ட பிரதமர் பிரசண்டா கட்சிகளின் கருத்துக்கள், தெரிவுகள் என்பவற்றை வரையறுத்துள்ளதாகக் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஐயாயிரம் முஸ்லிம்கள் எதிர்வரும் 31ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்களே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து சந்திக்கவுள்ளனர்.
கண்டி மாவட்டத்திலிருந்து இம்முறை மத்திய மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துவரும் பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு முன்வந்திருக்கும் முஸ்லிம்களை ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தும் வகையிலேயே மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஸா மீதான படை நடவடிக்கை தொடர்பில் எந்தவொரு இஸ்ரேலிய படைவீரர் மீதும் போர்க்குற்றம் சுமத்தப்பட்டால் இது தொடர்பான விசாரணைகளிலிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்குமென அந்நாட்டுப் பிரதமர் எஃகுட் ஒல்மேர்ட் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டைப் பாதுகாத்த அவர்களின் நடவடிக்கைக்காக இஸ்ரேல் அவர்களைப் பாதுகாக்கும் என்பதை இராணுவத்தினர் அறிந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
22 நாட்களாக நடைபெற்ற காஸா மீதான தாக்குதல்களில் 1300 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ள நிலையில் இங்கு போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கு சுயாதீன விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென ஐ.நா. அதிகாரிகள் விரும்புகின்றனர். வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஒல்மேர்ட் நாட்டின் தேவைக்காக சாவின் விளிம்புக்கு தமது வாழ்வை அர்ப்பணித்த இராணுவ வீரர்கள் கடல்கடந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. காஸாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட படைவீரரும் தளபதிகளும் எம்மைப் பாதுகாத்துள்ளனர். இதற்காக எவ்வித விசாரணைகளிலிருந்தும் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கும் என்பதனையும் இவ்விடயம் தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களுக்கு உதவும் என்பதையும் இராணுவ வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட அதிகளவான உயிரிழப்புக்களினால் இஸ்ரேலிய இராணுவ தந்திரோபாயங்கள் கடும் கண்டனங்களுக்குள்ளாகியுள்ளன. கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பொஸ்பரஸ் குண்டுகளை வீசியமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைக் குழுக்கள் முறையிட்டுள்ளன.
வெண்ணிற பொஸ்பரஸை பயன்படுத்தியமையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டபோதும் சர்வதேச சட்டங்களை தான் மீறவில்லையெனத் தெரிவிக்கின்றது.
போராட்ட களங்களில் புகையை உருவாக்குவதற்காக வெண்ணிற பொஸ்பரஸ் பயன்படுத்துவது சட்டரீதியாக்கப்பட்டுள்ள அதேவேளை, இஸ்ரேல் இதனை மக்கள் குடியிருப்புக்கள் மீது பயன்படுத்தியதாக மனித உரிமை ஆர்வலர்களும் செய்தியாளர்களும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் எகிப்திய மத்தியஸ்தர்களுக்கு 18 மாதகால போர்நிறுத்தமொன்றை இஸ்ரேல் முன்வைத்துள்ள அதேவேளை, ஹமாஸ் ஒரு வருட போர்நிறுத்தத்தை பிரேரித்துள்ளது.நீண்டகால போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்தும் பேச்சுக்களுக்காக ஹமாஸ் தூதுக்குழு எகிப்தை சென்றடைந்துள்ளது.
கம்பளை தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கம்பளவெல முஸ்லிம் கிராமத்தில் மகாவலி கங்கை ஓரமாக இடம்பெற்ற மண்சரிவில் 44 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்றுக் காலை இடம் பெற்ற இந்த ஆற்றங்கரையோர மண்சரிவு காரணமாக 44 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அக் குடும்பங்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கம்பொலவெல சிங்கள கனிஷ்ட பாடசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற அமைச்சர் டி. எம். ஜயரத்ன ஸ்தலத்துக்கு விரைந்து தற்காலிகமாக பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு உலர் உணவுகளை வழங்க துரித நடவடிக்கை எடுத்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைவரும் கம்பொலவெல முஸ்லிம் பள்ளி வாசல் சூழலில் வசிப்பவர்களாவர். கம்பொலவெல பாதையும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் போக்குவரத்திற்காக மாற்று வழியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மகாவலி கங்கை ஓரமாக உள்ள நிலப்பரப்பில் இந்த வீடுகள் அமைந்திருப்பதால் சட்டத்தையும் மீறிய நிலையில் பலர் மணல் அகழ்வு வேலையில் ஈடுபட்டதன் எதிரொலியாகவே இந்த மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளை இழந்தவர்களுக்கு அப்பிரதேசத்தின் அருகே காணிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜயரட்ன தெரிவித்தார். இந்த அனர்த்தத்தைக் கேள்விப்பட்டதும் மின்சக்தி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேயும் அவ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.