செய்திகள்

செய்திகள்

செய்திகள்

‘வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேசத்தை கட்டியெழுப்பும் நிதி பயன்படுத்தப்படும்’

ranjith-shiyambalapitiya.jpgவிடு தலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அம்மக்களுடனான சகோதரத்துவத்தைப் பலப்படுத்துவதற்காகத் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி உபயோகப்படுத்தப்படுமென நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதே வேளை, தற்போதுள்ள சகல சவால்களுக்குள்ளும் இவ்வருடத்திற்கான அரச வருமானமாக 850 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று தேசத்தைக் கட்டியெழுப்பு வதற்கான வரி அறவீட்டுச் சட்டமூலத்தைச் சபையில் சமர்ப்பித்து அதன் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி நூற்றுக்கு ஒரு வீதமாக அறவிடப்படவுள்ளதுடன் ஆறரை இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட புரள்வுக்கே இவ்வரி அறவிடப்படுவதுடன் சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து இவ்வரி அறவிடப்படமாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேற்படி வரிச் சட்டமூலம் தொடர்பாக மேலும் விளக்கிய அமைச்சர்:-

இலங்கைக்கான அன்னியச் செலாவணியை அதிகரிக்கும் நோக்கில் சகல ஏற்றுமதிகளுக்கும் இவ்வரி விலக்குச் செய்யப்படவுள்ளது. அத்துடன் சகல அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்கும் இவ்வரி விலக்குச் சலுகை வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்போது விசேட வர்த்தகப் பொருட்கள் வரி முறைமை நடைமுறையிலுள்ளது.

இந்த வரிமுறைமையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சகல அத்தியாவசியப் பொருட்களுக்கும் இவ்வரி விலக்கு உரித்துடையது. இதற்கு மேலதிகமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களுக்கும் இவ்வரிவிலக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கிணங்க, விவசாயிகளுக்கான உரவகை, எரிபொருள், சமையல் எரிவாயு, சகல மருந்துப் பொருட்கள் ஆகியவற்றிற்கும் இவ்வரி விலக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அன்னிய செலாவணியைப் பெற்றுத்தரும் சேவைகளுக்கும் இவ்வரி விலக்கு வழங்கப்படும்.  நாட்டிலுள்ள வங்கிகள் நாட்டின் பொருளாதாரத்திற்குச் செய்யும் பங்களிப்பினைக் கருத்திற் கொண்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் ஆயுள் காப்புறுதித் திட்டங்களுக்கும் இவ்வரிவிலக்கு உரித்துடையதாகிறது. இலங்கையின். தேயிலைத்துறை தற்போது வீழ்ச்சி கண்டுள்ளதைக் கருத்திற்கொண்டு தேயிலை உற்பத்தி நடவடிக்கைகளிலும் இவ்வரி விலக்கு உட்படுகிறது.

பயங்கரவாதத்தினால் சீர்குலைந்து போயுள்ள வடக்கின் ரயில்சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் வடக்கிற்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் யாழ்.தேவி வடக்கிற்குச் செல்லும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியை மீண்டும் புலிகள் மீட்டெடுப்பர் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர் நம்பிக்கை

kili-05.jpgவிடு தலைப் புலிகளின் தலைநகராக கருதப்பட்ட கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.இருப்பினும், புலிகள் மீண்டும் கிளிநொச்சியை மீட்பர் என்ற நம்பிக்கை அவர்களிடையே காணப்படுகின்றது என ஏ.என்.ஐ. செய்திகள் தெரிவித்தன. இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டு போன்ற முகாம்களில் அகதிகளாகவுள்ள மக்களே இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.

அங்கு அகதியாக வாழும் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; இந்தப் போரினால் அதிகமான கஷ்டங்களை அனுபவித்தவர்கள் பொதுமக்களே. அகதிகளாக இடம்பெயர்ந்து வந்த பின்னர் கூட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே வாழ வேண்டியுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டமான நிலையே. புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையேயான இந்த சிவில் யுத்தமானது ஆசியாவிலே மிக நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாகும். இது 1983 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகின்றது.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பே. அவர்களின் முக்கிய பாதுகாப்பு அரணாகவும், பொருளாதார மத்திய நிலையமாகவும் கிளிநொச்சி காணப்பட்டது. ஆனால், தற்போது குண்டுகள் துளைத்த கட்டிடங்களுடனும் இடிபாடுகளுடனும் பாலைவனமாய் காணப்படுகின்றது. சிறுபான்மை தமிழருக்காக புலிகளால் கேட்கப்பட்ட தனிநாட்டின் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாத தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற இராணுவத்தினருக்கு பல மாதங்கள் தேவைப்பட்டன.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்க அவர்களின் படுகொலைக்கு ஜனாதிபதி வன்மையான கண்டனம்

presidentmahinda.jpgசண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்க அவர்களின் படுகொலையை நானும் எனது அரசாங்கமும் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாளரும் பலவருடங்களுக்கும் மேலாக எனக்கு மிகவும் அறிமுகமான எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான திரு.விக்கரமதுங்கவின் அகால மரணம் எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது.

இது எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான செயலாகும். எமது நாடு பயங்கரவாதத்திடமிருந்து தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளையில் இவ்வாறான மிலேச்சத்தனமான செயல் நடைபெற்றிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.

இக்காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விசாரித்து உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்துமாறு நான் பொலிஸாரை பணித்துள்ளேன்.  கவலையான இச்சந்தர்ப்பத்தில் திரு.விக்கிரமதுங்க அவர்களின் குடும்பத்தாருக்கும் சண்டே லீடர் பத்திரிகை அலுவலக ஊழியர்களுக்கும் பத்திரிகைத்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறான கோழைத்தனமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஊடக சுதந்திரத்தையும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் உறுதியாகப் பாதுகாப்பதற்கு எனது அரசாங்கம் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

ரயில் பாதை அருகில் சிறிய குண்டு வெடிப்பு

கல்கிசை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையோரத்தில் நேற்று இரவு சிறிய குண்டொன்று வெடித்துள்ளது. தெஹிவளை ரயில் நிலையத்திற்கும் கல்கிசை ரயில் நிலையத்திற்குமிடையில் கல்கிசை சென்.தோமஸ் கல்லூரிக்கு சமீபமாக ரயில் பாதை அருகில் இரவு 7.05 மணியளவில் இந்தச் சிறிய குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடித்த போது ரயில் பாதையில் ரயில் எதுவும் செல்லாத அதேநேரம், குண்டு வெடிப்பால் ரயில் பாதைக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை. குண்டு வெடித்ததையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு படையினரும் பொலிஸாரும் வந்து சேர்ந்ததுடன் கரையோரப் பகுதியூடான ரயில் போக்குவரத்தையும் நிறுத்தினர். இதையடுத்து அந்தப் பகுதியில் படையினரும் பொலிஸாரும் தேடுதல்களையும் நடத்தினர். சில மணிநேரத்தின் பின் ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது

ரோ உளவுப்படையைச் சேர்ந்த விமானம் கிளிநொச்சியை வான் வழி ஆய்வு செய்தது?

air.jpgகிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய அடுத்த நாள், இந்தியாவின் ரோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று பாக்கு நீரினைப் பகுதியில் இரகசிய வான் வழி ஆய்வை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசின் உத்தரவுப்படி இந்த இரகசிய வான் வழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  ரோ உளவுப் பிரிவின் வான்வெளி ஆய்வு மையத்திற்குச் (Air Research Centre- ஏ.ஆர்.சி.) சொந்தமான விமானம் மூலம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இந்த விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளது. இந்த இரகசிய ஆய்வை, இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளின்படி ரோ உளவுப் பிரிவு மேற்கொண்டதா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து ரோ உளவுப் பிரிவின் நெருங்கிய வட்டாரத் தகவல்கள் கூறுகையில், அதி நவீன கருவிகளுடன் கூடிய அந்த உளவு விமானம், இலங்கை கடற்கரைக்கு மிக அருகே தாழ்வாக பறந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. பின்னர் மீண்டும் சென்னை திரும்பாமல் வேறு ஒரு விமான நிலையத்திற்கு அந்த விமானம் போய் விட்டதாக தெரிவிக்கிறது

ஏ.ஆர்.சியிடம் போயிங், கல்ப்ஸ்ட்ரீம் மற்றும் எம்பிரேயர்ஸ் ரக விமானங்கள் உளளன. இந்த விமானங்களில் அதிக உயரத்தில் பறந்தபடி, மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் 40 ஆயிரம் அடி உயரம் வரைக்கும் பறக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் சாட்டிலைட் கேமராக்களுக்கு இணையான துல்லியத்துடன் செயல்படக் கூடியவை. அடர்ந்த மேகக் கூட்டமாக இருந்தாலும் கூட அதைத் துளைத்துக் கொண்டு இலக்கை சரியாக கணித்து துல்லியமாக படம் பிடித்துக் காட்டும். 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் கூட, தரையில் நடக்கும் ஒரு நபரையோ அல்லது ஒரு வாகனத்தையோ மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது இந்த வகை கேமராக்கள்.

ஏ.ஆர்.சியின் விமானங்களை ஓட்ட தனியாக பைலட்டுகள் உள்ளனர். இந்திய விமானப்படை விமானிகள் கூட இந்த வகை விமானங்களை ஓட்டுவதற்கு அழைக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மிக ரகசியமான பணி என்பதால் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமானப்படை விமானங்களை ஏ.ஆர்.சியின் விமானங்கள் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். இதற்கென தனியாக விமான நிலையம் எதுவும் கிடையாது.

சென்னைக்கு ஏ.ஆர்.சி. விமானம் வந்தது கூட ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. எங்கிருந்து வந்தது என்பது கூட விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப் படவில்லையாம். இலங்கையின் கோரிக்கையின்படியே இந்த உளவு வான் வழி ஆய்வை ரோ உளவுப் பிரிவு மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.

இன்று மாகாண சபை முதலமைச்சர்களின் 25வது மாநாடு தொடர்பான விசேட கூட்டம்

cm.jpgமாகாண சபை முதலமைச்சர்களின் 25ஆவது மாநாட்டு ஏற்பாடுகள். தொடர்பாக கலந்துரையாடும் விசேட கூட்டமொன்று இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 25ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டினை இம்முறை மட்டக்களப்பு நகரில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாநகர சபையும், மாவட்ட செயலகமும் இணைந்து முதலமைச்சர்கள் மாநாட்டினை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஆலோசனைகளுக்கு அமைவாக மாவட்டத்தில் உள்ளூர் திணைக்களத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் மாநாட்டு ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பளையை நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேற்றம் -தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்

army.jpgமுகமாலையில் புலிகளின் முன்னரங்கு பாதுகாப்பு நிலைகளைக் கைப்பற்றியுள்ள படையினர் தொடர்ந்தும் தெற்குநோக்கி கடும் தாக்குதல்களைத் தொடுத்தவாறு முன்னேறி வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. முகமாலையில் 600 மீற்றர் தூரத்தைக் கைப்பற்றிய படையினர் பளையை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர்.

யாழ் – கண்டி ஏ – 9 வீதியில் தெற்கு நோக்கி முன்னேறும் படையினர் இந்த வீதியை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு இன்னமும் 20 கிலோமீற்றர் தூர பிரதேசத்தைக் கைப்பற்ற வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஓமந்தையிலிருந்து கிளி நொச்சி ஆனையிறவு தெற்குப் பிரதேசம் வரை ஏ-9 வீதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்நிலையில் வடமுனையிலிருந்து ஆனையிறவு நோக்கி இராணுவத்தின் 53 ஆம், 58ஆம் படைப்பிரிவினர் முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலையும், மாலையும் இடம்பெற்ற மோதல்களில் புலிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களின் மூன்று சடலங்களையும் கைப்பற்றியதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இதில் இராணுவத்திற்குச் சிறு சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.  

ஈ.பி.டி.பி.யின் பெயரை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் உடனடியாக அறிவிக்கவும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு

epdp-121208.jpgஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரால் அல்லது அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பெயரால் எவரும் கப்பம் கோரியோ, கடனுக்கு பொருட்கள் மற்றும் காசு கோரியோ அல்லது நிதி, நன்கொடைகள் கோரியோ வந்தால் அவ்விடயம் தொடர்பாக உடனடியாக தனக்கு அறிவிக்கும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ். வர்த்தகப் பிரமுகர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இதன் பிரகாரம் தனது பெயரையோ, தனது அமைச்சின் பெயரையோ அல்லது தனது கட்சியின் பெயரையோ பயன்படுத்தி கப்பம் கோருதல், பணம் பறித்தல், பொருட்களை வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வகையில் எவரும் எந்தவொரு வர்த்தக நிலையங்களுக்கும் வந்தால் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் இல்லையேல் பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும்படியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்படி வர்த்தகப் பிரமுகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தனது பெயரையும் தனது கட்சியின் பெயரையும் பயன்படுத்தி எவரேனும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டால் அல்லது அநீதி விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அவ்விடயம் தொடர்பில் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அல்லது இராணுவ முகாம்களில் அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது பொதுமக்களிடம் எந்தவொரு அறவீடுகளையும் மேற்கொள்வதில்லை என்பதையும் மனித நேயமற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதையும் இங்கு உணர்த்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகளுக்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

உரிமைக்கு அங்கீகாரம் தமிழரின் உரிமையை நிராகரிப்பது எப்படி? – கேள்வி எழுப்புகிறார் ஹக்கீம்

hakeem_.jpgபலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசாங்கத்தினால் எப்படி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை நிராகரிக்க முடியுமெனக் கேள்வியெழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், கிளிநொச்சி வெற்றிக்குப் பின் தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

கிளிநொச்சியில் படையினர் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இதன் போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டுமென தமிழ், முஸ்லிம் மக்கள் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டது. இதனால், சில இடங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் பலாத்காரத்துக்கு அடிபணிந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டிவந்தது. தமிழ் முஸ்லிம் மக்கள் மீது ஒரு போதும் பலாத்காரமாக நாட்டுப் பற்றை திணிக்கக் கூடாது. தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ விரும்புகிறார்கள். ஆனால், கிளிநொச்சி வெற்றிக்குப் பின் அவர்களின் சுயமரியாதைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசினால் தமிழ் மக்களின் சுய ஆட்சிக் கோரிக்கையை, உரிமையை எவ்வாறு நிராகரிக்க முடியும்?

புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதென்பது வெறும் பகல்கனவாகவே இருக்கும் – இராணுவத் தளபதி கூறுகிறார்

sarath-fonseka.jpg
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் என்பது வெறும் பகல் கனவாகவே இருக்குமென இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வெற்றி தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கிய விஷேட பேட்டியியொன்றிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு கூறியிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறுகையில்; “புலிகளிடமிருந்து கிழக்கு வீழ்ந்த போது தற்காலிக பின்னடைவு என்றார்கள். துணுக்காய், மல்லாவி படையினர் வசமானபோதும் தற்காலிக பின்னடைவு என்றனர். கிளிநொச்சியை படையினர் நெருங்கும் போது, அது “மரணத்தின் முத்தம்’ என வர்ணித்தார்கள். கிளிநொச்சியை பிடிப்பது என்பது ஜனாதிபதியன் பகல் கனவென புலிகள் கூறினர். எனினும், நாம் கிளிநொச்சியையும் பிடித்திருக்கிறோம். எனவே, இவை அனைத்தையும் தற்காலிக பின்னடைவு என்று கூற முடியாது. கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பிரதேசத்தில் 90 சதவீதமான பகுதிகள் இழக்கப்படுமானால் அதை தற்காலிக பின்னடைவென்றோ அல்லது தந்திரோபாய பின்வாங்கலென்றோ கூற முடியாது. இது 10 அல்லது 20 சதவீதமாக இருந்திருந்தால் தந்திரோபாய பின்வாங்லென கூற முடியும்.

பிரபாகரன் மீண்டும் எழுச்சி பெறுவாரென்பது சிலரது கனவாக இருக்கிறது. அது தான் பகல் கனவாக இருக்குமென நான் நம்புகிறேன். இதேநேரம், கடந்த இரண்டரை வருட கால யுத்தத்தில் 15 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கிழக்கில் 2 ஆயிரம் புலிகளும் யாழ்.குடாநாட்டில் யுத்தத்தில் 1,500 புலிகளும் வடக்கில் ஏனைய 11 ஆயிரத்து 500 புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் படையினர் உயிரிழந்திருக்கின்றனர். பெரியதொரு கெரிலா இயக்கத்துடன் யுத்தம் புரியும்போது உயிரிழப்புகளும் காயங்களும் இன்றி யுத்தம் செய்ய முடியாது. யுத்தத்தின்போது கெரில்லா ஒருவரைக் கொல்ல படையினரில் 10 பேர் உயிரிழக்க வேண்டி வரும் என்பதே உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். எனினும், எமது நடவடிக்கைகளை பொறுத்தவரையில் 5 கெரில்லாக்கள் சாகும்போது படையில் ஒருவரே உயிரிழக்கிறார் என்பது எமக்கு வெற்றியாகும் என்று கூறினார்.