எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மேல் மாகாணத்தில் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி

sri-lanka-elections.jpgமேல் மாகாணத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் 2299 கட்சிக் காரியாலயங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று தெரிவித்தது.

அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்க விடுதிகள் என்பவற்றில் கட்சிக் காரியாலயங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலயங்களை அகற்ற பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

மேல் மாகாண சபைத் தேர்தலையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொழும்பு மாவட்டத்தில் 834 கட்சிக் காரியாலயங்களும் கம்பஹா மாவட்டத்தில் 942 காரியாலயங்களும் களுத்துறை மாவட்டத்தில் 523 காரியாலயங்களும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவற்றை ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு மூடிவிட வேண்டும் எனவும் பிரதான கட்சிக் காரியாலயங்களை 25ஆம் திகதி மூடிவிட வேண்டும் எனவும் சுமணசிறி தெரிவித்தார்.

இதேவேளை வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்ட பிரதேசங்களுக்கு 500 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சகல கட்சி அலுவலகங்களையும் மூடிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மீட்சி 2010ல் தான்

us-flag.jpg‘இன்னும் ஒரிரு ஆண்டுகளுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் இதே தடுமாற்றத்துடன்தான் இருக்கும். வருகிற 2010 முதல் மீட்சி நிலை ஆரம்பமாகும்’ என அமெரிக்க நிதித் துறைத் தலைவர் பென் பெர்னான்க் கூறியுள்ளார். அமெரிக்க டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கிட்டத்தட்ட உடைந்து போயுள்ளது அமெரிக்கப் பொருளாதாரம். மூன்றாண்டுகள் வரை இந்த நிலை நீடிக்கும். இதைத் தூக்கி நிறுத்த பெரிய மனோவலிமை கொண்ட, எப்படிப்பட்ட இடர்பாட்டையும் சமாளிக்கக் கூடிய அரசியல் தலைமை அவசியம். ஒருவிதத்தில் நம்மை நாமே சுயமாக சரிசெய்து கொள்ள இப்போதைய வீழ்ச்சி உதவியிருப்பதாகவே நம்புகிறேன்.

ஆனால் எல்லோரும் சொல்வதுபோல இந்த ஆண்டே பொருளாதார வீழ்ச்சி சரியாகிவிடாது. இந்த ஆண்டுதான் உச்சத்திலிருக்கும். அடுத்த ஆண்டு முதல் மீட்சி நிலை தொடங்கலாம்.

முன்பு போல மீண்டும் முழு வேலை நிலை என்ற சூழலுக்கு நாடு திரும்புவதும் கஷ்டம்தான். ஆனால் வலுவான ஒரு பொருளாதாரத்தைக் கட்டியமைக்க இந்த வீழ்ச்சி உதவும். கிடைக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் கீழை நாட்டு மனோபாவம் அமெரிக்கர்களுக்கும் வரும். அதற்கு இந்த வீழ்ச்சியும் மீட்சியும் காரணமாக அமையும்.

இந்த சூழலில் என் கவலையெல்லாம், வங்கி அமைப்பு மீது அமெரிக்க மக்களும் அரசியல் தலைவர்களும் நம்பிக்கை இழந்து போயிருப்பதுதான். வங்கித் துறை விரைவில் சீரடைவதுதான், நாட்டின் பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்தும், என்றார் பெர்னான்க்.

மாத்தறையில் தேடுதல் 99 தமிழர்கள் கைது

ranjeth-gunasekara.jpgமாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 99 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை நடத்திய குண்டுதாரி குறித்த மாவட்டத்தில் அடிக்கடி நடமாடியதாகவும் அப்பகுதியிலேயே நீண்ட நாட்களாக தங்கியிருந்துள்ளார் என்றும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

முன்தினம் நேற்று இரவு நேற்று அதிகாலை வரை நடத்தப்பட்ட இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 2ஆயிரத்து 399 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மொரவக்க பிட்டபெத்தர மற்றும் தெனியாய போன்ற பகுதிகளிலுள்ள தொட்டப்புரங்களிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது.

இதன் போது 759 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் 2ஆயிரத்து 399 பேர் தீவிர விசாரணைகளுக்கு எட்படுத்தப்பட்டனர். இவர்களில் தமது பதிவை உறுதிப்படுத்தத் தவறிய 99 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய இந்த தேடுதலின் போது கைதான அனைவரும் அந்தந்த பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். உரிய விசாரணைகளை அடுத்து அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போர் குற்றம் சுமத்த ஜ.நா. சபை நடவடிக்கை – வீரவன்ச

wimal-weerawansa.jpgஇலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்தியா, பிரித்தானியா உட்பட எந்தவொரு சர்வதேச நாடோ, அமைப்புக்களோ இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இலங்கையின் இராணுவ வீரர்கள் மீதும் அரசாங்கத்தின் மீதும் பொய்க் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்தும் சுமத்திவரும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பீடத்திற்கு எதிராக, கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை இலங்கையின் தேசப்பற்றுள்ள மக்கள் முற்றுகையிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை இல்லை எனவும் அவர் கூறினார்.

தேசிய சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள 

ஐ.நா. ஊழியரை விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததாக மீண்டும் குற்றச்சாட்டு

19a8fd8bfa777b52.jpg இலங்கையின் வடக்கே சேவையாற்றிவந்த தமது உள்ளூர் பணியாளர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் இவ்வார இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அமைப்பில் பலவந்தமாக ஆட்சேர்த்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது.

வன்னியில் பணியாற்றிவந்த பணியாளர் ஒருவரையும், 16 வயதுடைய அவரது மகள் உட்பட அவரது குடும்பத்தினரையும் அரசினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து புலிகள் ஆட்சேர்த்திருக்கின்றார்கள் என்று கொழும்பிற்கான ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள ஐ.நா அமைப்பு, தாமதிக்காமல் இவர்களை புலிகள் விடுவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஐ.நாவின் இன்னொரு உள்ளூர் பணியாளர் புலிகளினால் ஆட்சேர்க்கப்பட்டதாகவும், பலமுறை தாம் கோரிக்கை விடுத்தும் அவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும் ஐ.நா மன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர்.

worldbank.jpgசர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ள கடனை வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 25ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சர்வதேச நாணயநிதியத்திடம் கோரியுள்ள கடனை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுந்திரம் நாட்டில் பாதுகாக்கப்படல் ரூபாவின் பெறுமதியைப் பேணுதல் சகல நிவாரணங்களையும் விலக்கிக்கொள்ளல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவற்றினை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

மூன்றாவது அணிக்கு பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை என்கிறார் ஜெயலலிதா

jayalalitha.jpgஇந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக உருவாகியுள்ள மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் முடிவுகள் எல்லாம் வெளியானபிறகு யோசித்துக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி இருக்கிறார்.

இப்போதே முடிவு செய்ய அவசரம் எதுவுமில்லை, அவ்வாறு செய்யாமலிருப்பதால் அணியின் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படப்போவதுமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்திரப் பிரதேச முதல்வருமான மாயாவதி ஞாயிறன்று அளித்த விருந்து பற்றி சரியான தகவல் கிடைக்காததால்தான் தன் கட்சிப் பிரதிநிதி அதில் கலந்துகொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

‘வற்’ வரி மோசடி: 200 வவுச்சர்கள் திணைக்கள உயரதிகாரிகளால் அழிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இடம்பெற்ற ‘வற்’ வரி மோசடியுடன் தொடர்புடைய 200 வவுச்சர்களை திணை க்கள உயரதிகாரிகள் சிலர் அழித்துள்ளதாக மேற்படி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

‘வற்’ வரி மோசடி தொடர்பான விசாரணை ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பரணகம முன்னிலையில் நேற்று நடைபெற்றது. ஆணைக் குழு முன்பாக சாட்சியமளித்த பிரதான சாட்சி ஒருவர் மேற்படி தகவல்களை வெளியிட்டுள்ளார். தற்பொழுது மேற்படி வவுச்சர்களில் 53 வவுச்சர்கள் மாத்திரம் எஞ்சியுள்ளதாகவும் சாட்சி கூறினார்.

‘வற்’ வரி மோசடியுடன் இறைவரித் திணைக்கள முன் னாள் ஆணையாளர் ஏ. ஏ. விஜேபால, பிரதி ஆணையாளர் இஸட். ஜயதிலக, கம்பியூட்டர் பிரிவு தலைவர் வத்தேதெனிய ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வற்’ மோசடி தொடர்பாக தன்னை கைது செய்ய பொலிஸார் தயாராவதாக தகவல் கிடைத்ததையடுத்து வத்தேதெனிய தற்கொலை செய்துகொண்டதாகவும் சாட்சி இங்கு குறிப்பிட்டார்.

ஆனால் வத்தேதெனிய மாரடைப்பினால் இறந்ததாகவே தனக்கு தகவல் கிடைத்ததாக ஆணைக் குழு தலைவர் கூறினார். சாட்சியின் விசாரணையை சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி பீ. தொடவத்த நெறிப்படுத்தினார்.

திருகோணமலை சிறுமி வர்ஷா படுகொலை சந்தேக நபரின் சடலத்தைப் பொறுப்பேற்க தாயார் மறுப்பு

varsa.jpg
திருகோணமலையில் 6 வயது சிறுமி படுகொலை தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரதான சந்தேக நபரின் சடலத்தை அவரது தாயார் அடையாளம் காட்டிய போதிலும் அதனைப் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்.

நித்தியபுரத்தைச் சேர்ந்த ஒப்ரின் மேர்வின் ரினோசன் (வயது 26) என்ற இந்நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைத்திய பரிசோதனைக்காகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வேளை, பொலிஸ் அதிகாரி ஒருவரின் கழுத்தை நெரித்துத் தப்பியோட முயன்றபோது, குறித்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்ற போது சாட்சியமளித்த சந்தேக நபரின்தாயார் “கடந்த 3 வருடங்களாக இவருக்கும் குடும்பத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கணவரை விட்டு பிரிந்து நான் வாழ்ந்து வருகின்றேன்.இவரது சடலத்தை பொறுப்பேற்பதற்கும் நான் விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டார்.

சடலத்தைப் பொறுப்பேற்கத் தாயார் மறுத்ததையடுத்து அரச செலவில் அடக்கம் செய்யுமாறு பொலிஸாருக்கு மரண விசாரணையின் பின்பு மஜிஸ்திரேட் ரி.எல்.ஏ.மனாப் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து அவரது சடலம் இன்று அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது.

இச் சிறுமியின் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருகோணமலை பொலிஸ் தகவல்களின்படி சந்தேகத்தின் பேரில் கைதானவர்களில் ஒருவர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மகன் என்றும் மற்றுமொருவர் தமிழ் அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடையவர் என்றும், மேலும் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக சிறுமிக்குக் கணினி கற்பிப்பதற்காக வீட்டுக்கு சென்று வந்தவர் என்றும் தெரிய வருகின்றது. கணனி கற்பித்தவர் சிகரம் என்னும் இணைய வானொலி சேவையொன்றை நடத்தி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இச்சிறுமி உவர் மலையிலுள்ள தமிழ் அரசியல் கட்சியொன்றின் காரியாலயத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, மற்றும் இரண்டு சந்தேக நபர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை போன்ற தகவல்களும் தமது விசாரணைகளின் இருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவற்றைத் தவிர, இந்தச் சந்தேக நபர்கள் திருகோணமலை பிரதேசத்தில் இடம்பெற்ற சில கடத்தல் மற்றும் கப்பம் கோரும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அதே வேளை படுகொலை செய்யப்பட்ட சென்.மேரிஸ் மகளிர் பாடசாலையின் முதலாம் வகுப்பு மாணவியான ஜூட் ரெஜி வர்ஷாவின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள் உட்பட பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர்

மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு கண்ட அறிக்கையும் கண்ணீர் அஞ்சலியும் : சிறீ-ரெலோ

கடந்த புதன்கிழமை (மார். 12) திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தரம் ஒன்றில் கல்வி பயிலும் 6 வயதான யூட் றெஜி வர்சா என்ற சிறுமியின் கொலை குறித்து சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ஊடகப்பிரிவு) திருகோணமலையில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு தமது வன்மை மிகுந்த கண்டனத்தை உறுதியுடன் வெளிப்படுத்தும் அதேவேளை அச்சிறுமியின் மறைவுக்கு தமது கண்ணீர் அஞ்சலியும் செலுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது. சிறீ-ரெலோ வெளியிட்ட துண்டுப்பிரசுரம் முழுமையாக; 

கண்டன அறிக்கையும் கண்ணீர் அஞ்சலியும்

செல்வி ஜுட் றெஜி வர்ஷா
( St.Mary’s College முதலாம் ஆண்டு மாணவி)
பிறப்பு 30.10.2003 இறப்பு 11.03.2009

எங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான இழப்புகளும், அழிவுகளும் போதாதா, சொந்த மண்ணில் மக்கள் படும் துயரம் தீராதா, என்று எந்நாளும் எதிர்பார்ப்பில் வாழும் மக்கள் சகல பிரச்சனைகளையும் தீர்த்து வாழுதல் வேண்டாமா? இந்த நிலையில் இங்கு நடப்பது என்ன? பள்ளிப் பிள்ளைகள் பணத்துக்காக கடத்தப்பட்டு கொல்லப்படுவது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாரும் இதை அனுமதிக்க முடியாது.

எமது மக்களின் வாழ்வுக்கான தியாகத்தில் எமது இழப்புகளும் சாதாரணமானதல்ல. ஜனநாயக வழியில் எமது மக்களின் இருப்பையும் வாழ்வையும் நிர்ணயிக்கும் பாரிய மக்கள் கடமையில் எம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வந்திருக்கும் நாம் இந்தக் கொடுமைகளையும், அராஜகத்தையும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான மக்கள் விரோத செயலுக்கு எதிராக நாம் எப்போதும் விழிப்புடனும் எதனையும் முன்னெடுக்கவும் தயக்கம் காட்ட முடியாது. மக்களே இவ்வாறான மக்கள் விரோத செயலில் ஈடுபடுபவர்களுக்க்கெதிராக எம்முடன் சேர்ந்து ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.

இன்று இப்பள்ளிப் பிள்ளையின் இழப்பு நாம் அனைவரும் வேதனை சுமப்பது மட்டுமல்ல, வெட்கித் தலைகுனியும் செயலுமாகும். இப்பிள்ளையின் இழப்பு கல்விச் சமூகத்துக்கும் மட்டும் அல்ல முழு தமிழ்ச் சமூகத்துக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும்.இக்குழந்தையின் குடும்பத்தினர் தாங்கும் துன்பத்தில் நாமும் சேர்ந்த போதும் அது முழுமையான ஆறுதலாகுமா?

ஆயினும் எமது அனுதாபம், ஆறுதல் அவர்களுக்கு எப்போதும் பிணைவாகும்.

மீண்டும் அனைத்து சமூக சக்திகளுக்கு சிறீ ரெலோ அமைப்பினரான நாம் வேண்டுதலாக முன்வைப்பது, இவ்வாறான கொடூர செயலில் ஈடுபடுவோரை இனங்கண்டு பாதுகாப்பு தரப்புக்கும் ஊடகங்களுக்கும் ஏனையவர்களுக்கும் அறியத் தருவதை தவற விடாதீகள்.

மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு எமது வன்மை மிகுந்த கண்டனத்தை உறுதியுடன் வெளிப்படுத்தும் அதேவேளை அச்சிறுமியின் மறைவுக்கு எமது கண்ணீர் அஞ்சலியும் செலுத்திக் கொள்கிறோம்.

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ஊடகப்பிரிவு)

நிர்வாண ராகிங் செய்த நான்கு மாணவிகள் கைது

ஆந்திராவில் முதலாம் ஆண்டு மாணவியை நிர்வாண நடனம் ஆடச் சொல்லி அவரை தற்கொலைக்கு தூண்டியதற்காக நான்கு மாணவிகள் மற்றும் விடுதி வார்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மை பொறியியல் கல்லூரியில் திரிவேணி என்ற 20 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை அந்த கல்லூரியை சேர்ந்த ஸ்ரீவந்தி, சவுஜன்யா, நஷ்மா, வனிதா, சாகிதி ஆகிய ஐந்து சீனியர்  ராகிங் செய்து துன்புறுத்தியுள்ளனர்.

அவரை நிர்வாணமாக நடனமாட சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த திரிவேணி தலைசாயபொடி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது.

இப்பிரச்சினையில் வழக்கு பதிவு செய்து வரும் ஆந்திர போலீசார் ராகிங் செய்த மாணவிகளில் நான்கு பேரையும், விடுதி வார்டனையும் கைது செய்தனர். மற்றொரு மாணவி விடுதியிலிருந்து வெளியேறிவிட்டதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.