தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் நாளையும், நாளை மறுநாளும் (13, 14) இரண்டு நாள் தற்காலிக யுத்த நிறுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இன்று (12) அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில்; தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வெளியேறும் வகையில் நாளையும், நாளை மறுநாளும் (திங்கள், செவ்வாய்) புலிகள் மீதான தாக்குதலை ராணுவம் நிறுத்திவைக்கும்.
இந்த கால கட்டத்தில் மக்கள் சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்கப்பட வேண்டும்.
செவ்வாய்க்கிழமை தமிழ்-சிங்கள புத்தாண்டு வருவதையொட்டி இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் புலிகள் படையினர் மீது தாக்குதல் மேற்கொhண்டால் தவிர பாதுகாப்பு வளையப் பகுதியில் மற்ற தாக்குதல்களை நடத்த வேண்டாம் என ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனப்படுகிறது.
இது தொடர்பாக ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன யாப்பா கூறுகையி்ல் நாளையும், செவ்வாய்க்கிழமையும் இந்தப் போர் நிறுத்தம் செய்யப்படும். பாதுகாப்பு வளையப் பகுதியில் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துள்ள மக்கள தப்பிச் செல்லும் வகையில் இந்த தாற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுகிறது என்றார்.
புலிகள் அமைதி:
ஆனால், அரசின் இந்த அறிவிப்பு குறித்து புலிகள் தரப்பில் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.