எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வன்னி அகதிகளுக்கு உணவுப் பொதி நிறுத்தம் இனிமேல் அவர்களே சமைக்க வேண்டும் – வவுனியா கச்சேரிக் கூட்டத்தில் தீர்மானம்

fily-ap.jpg
வன்னியிலிருந்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளை வழங்குவதை நிறுத்தி தினமும் அவர்கள் தமக்குரிய உணவை தாமே சமைத்துக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்படவுள்ளது.

நேற்று வவுனியா கச்சேரியில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டது. தினமும் சமைத்த உணவை வழங்கும் போது சில அசௌகரியங்கள் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டினார்கள்.

அத்துடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவுப் பொதிகளை வாங்குவது, நேரம் பிந்தி வழங்கப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எத்தனை நாட்களுக்கு சமைத்த உணவை வெளியிடங்களிலிருந்து பெறுவது எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதேநேரம், உணவை சமைக்கும் போது தற்போதைய கடும் வெயில் காரணமாக தீ விபத்து ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். இவ்விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை அரசாங்க அதிபர் நியமித்துள்ளார். இக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களே தமக்குரிய உணவை சமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியாவில் 78 சடலங்கள் அரச செலவில் அடக்கம்

வன்னிப்பகுதியைச் சேர்ந்த 78 பேரின் சடலங்கள் சனிக்கிழமை இரவு அரச செலவில் வவுனியா பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

நலன்புரி நிலையத்தில் மரணமானவர்கள், நோய்களுக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மரணமானவர்கள் மற்றும் அடையாளம் காணப்படாத சடலங்கள், உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத சடலங்களே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன.

பொலித்தீன் உறைகளில் சடலங்கள் பொதிசெய்யப்பட்டு ஒரே குழியில் போடப்பட்டு இவை அடக்கம் செய்யப்பட்டன.

ஏற்கனவே இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் பூந்தோட்டம் மயானத்தில் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்ததே.

பெரியார் தி.க.வினரை விடுதலை செய்யவேண்டும்; தா.பாண்டியன்

koovai.jpgஇந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்து, ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசுதான் காரணம் என்ற கோபம் தமிழகம் முழுவதும் பெருக்கெடுத்து நிற்கிறது. இதன் வெளிப்பாடாகத்தான் கோவைக்கு அருகில் ராணுவ லாரிகளை மக்கள் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதால் எழுந்த கோபம் தான் இது என்பதை, இந்த நேரத்தில் அரசாங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்தல், கடுமையான அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டிக்கிறோம். கோவையில் பெரியார் திராவிடர் கழகத்தின் முன்னணித்தலைவரான ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த 31 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

ltte_.jpg
இராணுவத்தினரிடம் சரணடைந்த 31 இளைஞர்கள், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இவர்களில் 22 பேரை, வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும், 9 பேரை, பல்வேறு இடங்களிலும் உள்ள அவர்களது உறவினர்களிடம் கையளிக்குமாறும் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேரை அம்பேபுஸ்ஸவில் உள்ள சிறுவர் புனர்வாழ்வு நியைத்திற்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்திலும் இவ்வாறு இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்ட 58 பேர் நீதிமன்ற உத்தரவுக்கமைய அம்பேபுஸ்ஸவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

புல்மோடை பகுதியில் மேலதிக நலன்புரி மத்திய நிலையங்கள்

20090424063601srilanka4.jpgமுல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து தப்பி வரும் பொதுமக்களுக்காக திருகோணமலை புல்மோடைப் பகுதியில் நலன்புரி மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகுகள் மூலம் தப்பி வருகின்றவர்களும் செஞ்சிலுவை சர்வதேசக்குழுவினால் மீட்கப்படுகின்ற மக்களும் புல்மோடை பிரதேசத்துக்கே வருவதால் இங்கு நலன்புரி மத்திய நிலையங்களை அமைக்க கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டச்செயலகம் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டுள்ளதுடன் இதுவரை இப்பிரதேசத்துக்கு வந்துள்ள மக்கள் புல்மோடை சிங்கள வித்தியாலயம் அரபாத் நகர் வித்தியாலயம், மற்றும் புல்மோடை முஸ்லிம் வித்தியாலயம் ஆகிவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இப்பாடசாலைகளில் 1123 குடும்பங்களைச் சேர்ந்த 3945 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளை வழங்க மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதால் மேலதிக நலன்புரி மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டையும் மக்களையும் முதன்மைப்படுத்தி சேவை புரியுங்கள்!

president_wp.jpgதேர்தல் வாக்குறுதிகளுக்காக மக்கள் வாக்களிக்கும் காலம் போய்விட்டது. மக்கள் இன்று அவர்களது வயிற்றை மாத்திரம் கருத்திற்கொண்டு வாக்களிப்பதில்லை. அவர்கள் நாட்டையே முதன்மைப்படுத்தியிருக்கிறார்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் நாட்டையும் அதேபோன்று மக்களையும் முதலில் நினைக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணசபையின் புதிய அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

எமது அரசாங்கத்தின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதோடு நாடு சரியானதொரு பாதையில் சென்றுகொண்டிருப்பதாக அவர்கள் நம்புவதையே தேர்தல்களில் அடுத்தடுத்து கிடைத்துவரும் வெற்றிகள் காட்டுகின்றன.

கொழும்பு மாவட்டம் சிங்களவர்கள்,  தமிழர்கள்,  முஸ்லிம்கள் என பல்வேறு இனங்கள் வாழும் ஒரு பிரதேசமாகும். எனவே மேல் மாகாணசபையில் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் கொழும்புக் கண்ணோட்டத்தில் மாத்திரம் பார்க்காமல் பரந்துபட்ட
எல்லா மக்களினதும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அவ்வாறானதொரு மனப்பாங்கே இந்த வெற்றியில் மிகப்பெரும் சந்தோசத்தைக் கொண்டுவந்து தரும்.

தேர்தல் வெற்றிகள் என்பது பொறுப்புணர்வைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வெற்றியோடு ஒருவன் ஏற்றுக்கொள்வது பொறுப்புணர்வையாகும். எனவே இந்தப் புதிய மாகாணசபை முன்னைய சபைகளை விடவும் கூடுதல் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்.

நான் ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால் நாங்கள் இந்தத் தேர்தலில் எந்தவாக்குறுதிகளையும் ஒரு விஞ்ஞாபனமாக முன்வைக்க வில்லை. இருந்தும் மேல் மாகாண மக்கள் முன்னெப்போதுமில்லாதவகையில் எமக்கு வாக்களித்துள்ளனர்.

நாட்டுக்கான தேவையோடு ஒப்பிடுகின்றபோது ஏனைய எல்லாத்தேவைகளும் இராண்டாம் பட்சமானவையே. நாட்டை முதன்மைப்படுத்திய மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் என்றவகையில் உங்கள் மீது ஒரு மிகப் பெரும் பொறுப்பு உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் நாட்டையும் அதேபோன்று மக்களையும் முதலில் நினைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க பன்றி இறைச்சி இறக்குமதிக்கு தடை!

mexican.jpgபன்றிக் காய்ச்சல் இலங்கைக்குள் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு மட்டங்களிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை அடிப்படையாகக் கொண்ட தகரத்தில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் என்பவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சி. பி. ரட்நாயக்க் தெரிவித்தார்.

உலகின் பல நாடுகளில் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பன்றி இறைச்சியும், பன்றி இறைச்சியை அடிப்படையாகக் கொண்ட தகரத்திலடைக்கப்பட்ட உணவு வகைகளின் இறக்குமதியும் கடந்த திங்கட்கிழமை முதல் முழுமையாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது.

தாய்லாந்து,  சீனா போன்ற நாடுகளிலிருந்து பன்றி இறைச்சியும்,  பன்றி இறைச்சியை அடிப்ப டையாகக் கொண்ட தகரத்தில் அமைக்கப்பட்ட உணவுகளும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. பன்றி இறைச்சி மாத்திரம் மாதாந்தம்  சுமார் 1700 கிலோ கிராம் இறக்குமதி செய்யப்படுகின்றது.

பன்றிக் காய்ச்சலின் எதிரொலியாக இவற்றின் இறக்கு மதி முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுங்கப் பிரிவினருக்கும், விமான நிலைய மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

நேபாள பிரதமர் பிரச்சண்டா ராஜிநாமா

prachanda.jpgநேபாளப் பிரதமர் பதவியில் இருந்து பிரச்சண்டா இன்று ராஜிநாமா செய்தார். நேபாளத்தின் தலைமை இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஜெனரல் ருக்மாங்கத கடாவல் (வயது 61) நீக்கப்படுவதாக பிரச்சண்டா நேற்று அறிவித்தார். புதிய தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் குல்பகதூர் கட்கா நியமிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

ஆனால், தன்னைப் பதவி நீக்கம் செய்யப் பிரதமருக்கு அதிகாரம் கிடையாது என்று கூறிய கடாவல், பிரதமரின் முடிவுக்கு எதிராக என்ன செய்வது என்பது குறித்து துணைத்தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரச்சண்டாவின் இந்த முடிவை ஏற்க முடியாது என்று அறிவித்த கூட்டணிக் கட்சிகள், அரசுக்கு வந்த ஆதரவை வாபஸ் பெற்றன. இதனால், அரசு கவிழ்வதுடன், இராணுவப் புரட்சியும் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரதமர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக பிரச்சண்டா அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்திய ஆயுதம் சென்றால் தடுப்போம் : வைகோ

 vaiko00001.jpg“இந்தி யாவில் இருந்து தமிழினத்தை அழிக்க இலங்கைக்கு ஆயுதம் கொண்டு சென்றால் அதனை மதிமுக தடுத்து நிறுத்தும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தஞ்சை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை பாலகிருஷ்ணனை ஆதரித்து வல்லம் அண்ணா சிலை அருகே வைகோ பேசுகையில்,

“ஜெயலலிதா பிரதமராவதற்கு முழுமையான தகுதி பெற்றவர். அந்தப் பதவி மீது அவர் ஆசைப்படாமல் இருக்கலாம். ஈரோட்டில் பேசிய ஜெயலலிதா, இலங்கையில் தனித் தமிழீழம் அமைக்கப் பாடுபடுவேன் என்றார். பின்னர் இந்திய இராணுவத்தை அனுப்பி தனித் தமிழீழத்தை நிர்மாணிப்பேன் என்றார். அவர் இப்படிப் பேசியதால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று நான் கூறவில்லை. அதற்கு 10 நாட்களுக்கு முன்பே நான் ஜெயலலிதா தான் பிரதமராகத் தகுதியானவர் என்று கூறினேன்.

உலகத் தமிழர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் பிரகடனம் இருளின் மத்தியில் வெளிச்சம் ஏற்பட்டதைப்போல் உள்ளது. இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக செய்தி வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுப்பதன் மூலம், இலங்கை அரசுடன் இணைந்து காங்கிரசும் படுகொலையை நடத்துகிறது என நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

பிரபாகரனை அழிப்பதற்காக ஆயுதம் ஏற்றிச்சென்ற வாகனங்கள் கோவையில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதை பெரியார் தி.கவினரும் மதிமுகவினரும் தான் செய்தனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

இலங்கை படுகொலைத் துயரங்களைக் குறுந்தகடாக வெளியிடக்கூடாது என்றும், துண்டு பிரசுரங்களாக கொடுக்கக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இது என்ன ஹிட்லர் நாடா?

குறுந்தகடு, துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதைப் பொலிஸார் தடுக்கலாம். அதனால் அதனை வீடு, வீடாக காலை 5.00 மணிக்குள் கொடுங்கள். பொலிஸாரும் அந்த குறுந்தகடை வாங்கிப் போட்டு பார்க்கட்டும். அப்போதுதான் இலங்கைத் தமிழர்களின் நிலை புரியும். இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்காக இந்தியாவில் இருந்து ஆயுதம் கொண்டு சென்றால் அது தடுத்து நிறுத்தப்படும். அதற்கு என் முழு ஆதரவு உண்டு” என அவர் தெரிவித்தார்.

கண்ணி வெடிகளை அகற்றும் விசேட இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை

nilakannikal.jpgநிலக் கண்ணி வெடிகளை அகற்றும் விசேட இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மக்களை தங்களது சொந்தக் கிராமங்களில் மீள் குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப் படுத்தும் நோக்கில் குறித்த குழுவினர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். துரித கதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.