எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு

due-00000.jpgமக்களால் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு இன்று நிவாரணம் வழங்கப்படுகின்றது. இந் நிவாரணம், யுத்தத்தால் மரணமடைந்த ஒரு பிரிவினருக்கும், காயமடைந்து அங்க குறைபாடுடையவர்களுக்கு ஒரு பிரிவாகவும், யுத்தத்தால் சொத்திழப்படைந்தவர்களுக்கு இன்னொரு பிரிவினருக்காகவும் 100 பேருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக இருபத்தைந்து மில்லியன் ரூபா வழங்கப்படுவதாக அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார்.அவர் நேற்றுக்காலை யாழ்ப்பாண செயலகத்தில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவித்து வருகின்றோம். இது வரை 4860பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா பூந்தோட்ட முகாமில் 300 பேர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர்.

இவர்களுடன் தடுப்பு முகாமில் இருந்த பெண்கள் வயோதிபர்கள், சிறுவர்கள் அங்கவீனமானவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியிருப்பவர்களில் 1000 பேர் வரை சட்ட நியதிக்கமைய விசாரணைக்குட்படுத்தப்படுவர் அவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களில் நிரபராதியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அவர்களும் விடுக்கப்படுவர். தடுப்பு முகாமில் இருப்பவர்களில் 10 சதவீதத்தினர் பாடசாலை செல்லாதவர்கள், எழுபது சத விகிதத்தினர் 3, 5, 8 ம் ஆண்டு வரை கற்றவர்கள். இவர்கள் விரும்பும் தொழில் பயிற்சியையும் கல்வியையும் வழங்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. வட பகுதி மக்கள் தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அநேகமானவராவர். 80 சத வீதமான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு அமைச்சு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது என்றார்.

உடன் உணவு, பானங்கள் பாடசாலைகளில் தடை

அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தும் நிறுவனங்கள் என்பவற்றில் இருக்கும் சிற்றுண்டிச் சாலைகளில் உடன் உணவு (Fast Food)  இனிப்பு பானங்கள் ஆகியவற்றின் விற்பனை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட சுற்று நிரூபம் உடனடியாக சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன நேற்று தெரிவித்தார். பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் சட்டத்தின் கீழ் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், பதில் சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு ஏற்ப பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் உடன் உணவு (Fast Food) இனிப்பு பானங்கள் என்பவற்றின் விற்பனை உடனடியாகத் தடை செய்யப்படவிருக்கின்றது.

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களும், பானங்களும் மாத்திரமே பாடசாலைச் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்வதற்கும் அனுமதியளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள், பானங்கள் தொடர்பாகவும், அவற்றின் தரம் குறித்தும் சுகாதார அமைச்சின் பொது சுகாதார அதிகாரிகள் சோதனைகளை அவ்வப்போது மேற்கொள்ள உள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் எலும்பு பலவீனம், நீரிழிவு, கண் நோய்கள், உடல் பருமன் உட்பட பல தொற்றா நோய்கள் பெரிதும் அதி கரித்துள்ளன. இது சுகாதாரத் துறையினரின் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கிலேயே சுகாதார அமைச்சு இந்த நடவடிக்கைக்குப் பங்களிப்பு செய் யவிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

வேளாவேளைக்கு காலை உணவை உட்கொள்ளாமல் உடன் உணவு (Fast Food) வகைகளையும், இனிப்பு பானங்களையும் உட்கொள்வதற்கு பெரும்பாலான மாணவர்கள் பழக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மத்தியில் போஷாக்கின்மையும், நீரிழிவும், உடல் பருமனும் பெரிதும் அவதானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போஷாக்கு மிக்க உள்ளூர் உணவுப் பொருட்களை உண்பதற்கு எமது மாணவ சமூகத்தைப் பழக்கிக்கொள்ளும் போது நோய்கள் பலவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாத் துக்கொள்ள முடியுமென பதில் சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மத்தியில் சிந்தனை மாற்றம் வேண்டும்

president.jpgபொரு ளாதார அபிவிருத்திக்கான இலக்கை வெற்றிகொள்வதற்கு மக்களின் சேவகர்களாக அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் மாறுவதுடன் அதற்கான சிந்தனை மாற்றம் அவர்களிடம் பிறக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சமூக ரீதியான மாற்றமொன்றிற்காக சகல தரப்பினரதும் அர்ப்பணிப்பு அவசிய மெனத் தெரிவித்த ஜனாதிபதி; ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அது உறுதுணையாகும் எனவும் குறிப்பிட்டார்.

பொருளாதார அபிவிருத்தியுடன் உயர் பண்புள்ள சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே சிறந்த மனப்பான்மையை விருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தியுடன் சமூக அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :- பிரதமர் டி. எம். ஜயரட்ன பிரதமர் செயலகத்தினூடாக ஆரம்பித்துள்ள சிந்தனை மாற்றத்திற்கான இவ்வேலைத் திட்டத்தை பாராட்டுவதுடன் நாடளாவிய ரீதியில் இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான தலைமைத்துவத்தையும் அவரே வழங்குவதும் சிறப்பம்சமாகும்.

கொழும்பு நகரில் குப்பை கூளங்களை அழிக்க முடியுமா என்ற பிரச்சினைக்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்ற சிந்தனை மாற்றத்தின் காரணமாக மக்கள் தற்போது வீதிகளில் குப்பை கூளங்களை போடுவதில்லை. அவர்கள் தற்போது பழக்கப்பட்டு விட்டனர். நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டங்களை மதிக்காது செயற்பட இடமளிக்க முடியாது. சட்டம் சகலருக்கும் சமமானது. அதற்கான மதிப்பினை சகலரும் வழங்க வேண்டும்.

சமூக சிந்தனை மாற்றமொன்றை எம்மால் மேற்கொள்ள முடியும். முன்னர் அரச அதிகாரிகள் மக்களுக்கு அனுப்பும் கடிதத்தில் தம்மை மக்கள் சேவகராகவே இனங்காட்டி வந்தனர். இன்று அமைச்சர்களிடையோ அதிகாரிகளிடையோ அப்பழக்கம் இல்லாது அருகிவிட்டது. 12 இலட்சம் அரச ஊழியர்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட்டால் நாடு முன்னேறும். தற்போது முழு நாட்டிலும் அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தனிநபர் வருமானத்தை இரண்டு மடங்காக்க எம்மால் முடிந்துள்ளது.

அதனை மேலும் இரண்டு மடங்குகளாக் குவதே எமது இலக்கு. சமூக ரீதியான மாற்றம் தேவை. அதற்கு சகலரதும் அர்ப்பணிப்பு மிகவும் அவசியம். குடும்பம், பாடசாலை மட்டத்திலிருந்து இது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு

வெளி நாடுகளில் தொழில் புரியும் பல்வேறு துறைசார்ந்தவர்களையும் இணையத்தினூடாக தொடர்பினை ஏற்படுத்தி புலம்பெயர்ந்து தொழில் புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை வரலாற்றில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த தாம் தயாராகிவருவதாக தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில்தொழில் புரியும் இலங்கையர்களை இணையத்தினூடாக ஒன்றிணைத்துப் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலுள்ள தொழில் முகவர்கள் இலங்கைத் தூதரகங்கள், இலங்கையிலுள்ள வேலைவாய்ப்பு முகவர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன இந்தத் திட்டத்தின் மூலம் இணைய வலையமைப்புக்குள் உள்ளடக்கப்படவுள்ளன.

இந்த வலையமைப்பானது மேலும் விரிவாக்கப்பட்டு பொறுப்புக் கூறவேண்டிய சகல நிறுவனங்களுக்கும் இடையே தகவல் பரிமாற்ற முறை ஊடாக தகவல் வழங்கவும் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளிலுள்ள தொழில் வழங்குநர் தமக்குத் தேவையான தொழிலாளி பற்றி அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவரகம் இணைய வலையமைப்பினூடாக அந்நாட்டு இலங்கை தூதரகத்திற்கு அதுபற்றி அறிவிக்கும்.

பின்னர் இலங்கைத் தூதரகம் அதுதொடர்பாக ஆராய்ந்து தொழில் அனுமதியினைப் பெற்றுக்கொடுப்பதுடன், இது பற்றிய தகவலினை இணையத்தினூடாக இலங்கையிலுள்ள வேலைவாய்ப்பு முகவருக்கும், இலங்கை பணியகத்திற்கும் அனுப்பி வைக்கும்.

அத்துடன் குறித்த சேவை வழங்குநரின் வருமானம், அடையாள அட்டை இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் வேலை செய்யும் வீட்டிலுள்ள குடும்பத்தின் தகவல்களையும் இணையமயப்படுத்தல் வேண்டும். இந்த முறைமூலம் தற்போது இடைத்தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் தவிர்க்க முடியுமெனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சேவையை தனி அலைவரிசையாக மாற்ற நடவடிக்கை – அஸ்வர் எம்.பி. தெரிவிப்பு

aswar.jpgவானொலிக்கு வருமானத்தை அதிக மாக ஈட்டிக்கொடுக்கும் “முஸ்லிம் சேவை”யை தனி அலைவரிசையாக மாற்ற ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க விருப்பம் தெரிவித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற கவுன்சில் உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் முஸ்லிம் இல்லங்கள் தோறும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை பிரபல்யம் பெற்றுள்ளது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இந்த சேவையை விரும்பிக் கேட்கி ன்றனர். எனவே, முஸ்லிம்களுக்கென தனி அலைவரிசை உருவாக்கப்படுவது உண்மையில் வரவேற்கத்தக்கதென்றும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

இந்த யோசனை பற்றிய மகஜர் ஒன்றும் தலைவர் ஹட்சனிடம் கையளிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் பிரதிநிதிகள் செட்டிகுளம் விஜயம்

பொதுநலவாய சங்கத்தின் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்று வியாழன் பகல் செட்டிகுளத்திற்கு விஜயம் செய்தனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நிவாரண கிராமத்திற்கு விஜயம் செய்து அவர்களுடைய வாழ்க்கை நிலைகுறித்து கேட்டறிந்தனர்.

மாவட்ட சிவில் நிர்வாக சிரேஷ்ட அதிகாரிகளும் பாதுகாப்பு படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து பிரதிநிதிகள் குழுவினருக்கு விளக்கினார்கள். மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் இவர்களை செட்டிகுளம் கதிர்காமர் நிவாரண கிராமத்தில் சந்தித்து உரையாடினாரென தெரிவிக்கப்படுகின்றது.

மகாவலி பிரதேச மக்களின் பிரச்சினை: ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

nimal.jpgமகாவலி பிரதேசத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கியுள்ள காணி உறுதிப்பத்திர பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் இற்றை வரையும் 40 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:- மகாவலி பிரதேசங்களில் குடியிருக்கும் மக்கள் காணி உறுதிப் பத்திரங்கள் தொடர்பாகப் பெரும் பிரச்சினைக்கு நீண்ட காலமாக முகம் கொடுத்து வந்தார்கள். இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் மகாவலி பிரதேசத்தில் வாழ்பவர்களுக்காக ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன் இத்திட்டத்தின் கீழ் இற்றைவரையும் 40 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. காணி அமைச்சின் ‘பிம்சவிய’ திட்டத்தின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றேன்.

காணி உறுதி வழங்கும் நடவடிக்கை தாமதமடைவதற்கு நில அளவையாளர்கள் பற்றாக்குறையே பிரதான காரணமாகும். இப்பிரச்சினையை துரித கதியில் தீர்த்து வைக்கவே நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதேநேரம், மகாவலி பிரதேசங்களில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளவர்களை வெளியேற்றவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

மொரகஹகந்த நீரப்பாசனத் திட்டத்தின் கீழ் 88 ஆயிரம் ஹெக்டேயர் நிலம் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. இது பராக்கிரம சமுத்திரத்தை விடவும் நான்கு மடங்கு பெரிய அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டம் காரணமாக இருப்பிடங்களை இழந்துள்ள 1581 குடும்பங்களை மீளக்குடியமர்த்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்திட்டம் காரணமாக இருப்பிடத்தையும், விவசாய நிலத்தையும் இழப்பவர்களுக்கு மாற்று இடத்தில் இருப்பிடமும், விவசாய நிலமும் வழங்கப்படும்.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் மக்களுக்கும், வனஜீவராசிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு குவைத் நிதியமும், ஜய்க்கா நிறுவனமும் நிதியுதவி வழங்குகின்றன.என்றார்.

யாழ்.குடாநாட்டில் மீண்டும் சுங்க அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.

யாழ்.குடாநாட்டில் 30 வருடங்களுக்கு முன்னர் இயங்கிய சுங்க அலுவலகங்களை மீண்டும், இயங்கச்செய்ய சுங்கத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னர் யாழ்ப்பாணத்தில் ஐந்து இடங்களில் சுங்க அலுவலகங்கள் இயங்கியதாகவும், அவற்றையே மீண்டும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சுங்கத்துறைப் பணிப்பாளர் நாயகம் திருமதி சுதர்மா கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை ஆகிய இடங்களிலேயே முன்னர் சுங்க அலுவலகங்கள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்திற்கான சுங்க அலுவலகம் ஜனவரி மாதத்தில்
யாழ்.தபாலகக்கட்டடத்தில் திறந்து வைக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அதன் பின்னர் காங்கேசன்துறை அலுவலகம் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள சுங்கப்பணிப்பளர் நாயகம் யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்குப் பின்னர் சுங்க
அலுவலகம் திறக்கப்படுவதற்கான முதலாவது சந்தர்ப்பம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். குடாநாட்டில் மக்களது வாழ்க்கை சுமுக நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை வழங்கும் நோக்கத்துடனேயே சுங்க அலுவலகங்களை மீண்டும் நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் 2000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக தெரிவிப்பு.

வடக்குப் பிரதேசத்தில் 2000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலான பிரதேசத்தில் இன்னும் கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தில் 1800 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலான பகுதிகளில் தற்போது கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. வடக்கில் இதுவரை, 3,14,850 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதனை விட அதிகமான அளவு கண்ணி வெடிகள் எதிர்காலத்தில் அகற்றப்பட வேண்டியிருக்கும் எனவும் வன்னியின் வயல், நிலங்கள் மற்றும் காட்டுப் பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளதாகவும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்கள் பொதுமக்களின் குடியிருப்புக்களாக இருந்த பிரதேசங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ‘குவைத்சிட்டி’ வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 43 குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு.

மட்டக்களப்பு மஞ்சத்தொடுவாய் தெற்கு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘குவைத் சிட்டி’ என்ற வீட்டுத்திட்டத்தில் வசித்துவரும் 43 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு மண்முனை வடக்குப் பிரதேசச்செயலர் திருமதி கலாமதி
பத்மராஜாவால் கடிதங்கள் முலம் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடுகள் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் குவைத் நாட்டின் உதவியுடன், அமைக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டவையாகும். ஆனால், இதில் குடியிருக்கும் 27 குடும்பங்கள் தவிர்ந்த ஏனையோர் உண்மையில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களல்ல என நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்த வீடுகளில் வசிப்பவர்கள் சுனாமியினால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்தானா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றினாலும் கோரப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேசச்செயலர் அங்குள்ள 70 வீடுகளில் வசிப்பவர்களில் 27 பேர் மட்டுமே சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இதன் பின்னர் குறித்த 27 வீடுகளில் வசிப்பவர்கள் தவிர்ந்த ஏனைய 43 வீடுகளில் வசிப்பவர்களும், வீடுகளை விட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும், தாங்கள் வீடுகளை விட்டு வெளியேறப்போவதில்லை எனவும், இது தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு தாங்கள் அறிவித்துள்ளதாகவும் மேற்படி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.