எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இலங்கை அரசின் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தம்

profrajiwawijesinha.jpgஇலங்கை அரசின் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 30 ஆந் திகதியுடன் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சமாதானச் செயலக நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜனாதிபதியின் செயலகம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நொந்த மனங்களை குணப்படுத்த வேண்டிய காலம் இப்போது உருவாகியுள்ளது.- ஜனாதிபதி

slprasident.jpgஒருவருக் கொருவர் வேற்றுமை பாராட்டும் காலம் இதுவல்ல. சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலமாகும் இனங்களுக்கிடையில் நெருக்கடி மற்றும் விரோதங்களை உண்டு பண்ணும் வேற்றுமை பற்றி ஆராய்வதைவிடுத்து,  சகலரும் நாட்டை நேசிக்கக் கூடிய குழுவாகச் செயற்படும் சுழலை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்துக்கான சர்வகட்சிக்குழு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முதல் முறையாகக் கூடியது. ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பாக இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையினால் பயங்கரவாதத்தினால் சகல உரிமைகளையும் இழந்திருந்த அப்பாவி மக்களை மீட்க முடிந்துள்ளது. அம் மக்களது நொந்த மனங்களை குணப்படுத்தும் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய காலம் இப்போது உருவாகியுள்ளது. அபிவிருத்தியில்லாமல் நல்லிணக்கமில்லை என்பதை நம்புபவன் நான். இந்த வகையில் கடந்த கால கசப்புணர்வுகளைக் களைந்து நல்லுறவு,  சமத்துவமான எதிர்காலத்தை உரிமையாக்கிக் கொள்வதற்காக சகலரும் செயற் பட வேண்டியுள்ளது.

பயங்கரவாதத்தினால் கடந்த காலங்களில் தமது அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயகத்தை இழந்த மக்கள் நம் நாட்டில் இருந்துள்ளனர் என்பதை நான்அறிவேன். மனிதாபிமான நடவடிக்கையினால் அவர்களை நாம் மீட்டுள்ளோம். உலகிலேயே பெருமளவு பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டோம். அம் மக்களின் நொந்த மனங்களை தேற்றுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். அது ஒரு அரசாங்கம் அல்லது ஒரு கட்சியின் பொறுப்பு மட்டுமல்ல. அதனால் நாம் தற்போது எம் மத்தியில் நிலவும் வேற்றுமைகளை ஆராய்வதை விடுத்து நம் மத்தியிலுள்ள சமத்துவம் எதுவென ஆராய வேண்டும். அதற்கிணங்க ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது.

வடக்கில் நலன்புரி முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் நலன் பற்றியும் அவர்களை மீளக் குடியமர்த்துவது பற்றியும் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. இவ்விடயத்தில் கட்சிகள் தத்தமது நிலைப்பாட்டைத் தெரிவித்தமைக்கு நன்றி கூறுவதோடு இந்த மாநாட்டைக் கூட்டுவதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

நான் முன்னரே தெரிவித்தது போன்று வடக்கு மக்களை மீளக் குடியமர்த்துவதும் அவர்களின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவது அவசியம். அதற்கு விரைவான அபிவிருத்தி அவசியம். நாம் தற்போது ஆரம்பித்த இந்த நடவடிக்கையை மிக ஆக்கபூர்வமாக முன்னெடுப்பது மிகவும் முக்கியமாகும். இப்போது மீள் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 651 குடும்பங்களைச் சேர்ந்த 2409 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுவிட்டனர். நாம் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். மக்களை மீளக் குடியமர்த்த முன்னர் நாம் மிதிவெடிகளற்ற பிரதேசத்தை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

எவரையும் முகாம்களில் தங்கவைக்கும் அவசியம் எமக்கில்லை. அவர்களை மிக விரைவாக அவர்களின் பிரதேசங்களில் குடியமர்த்துவதே எமது நோக்கம். மிதிவெடி அகற்றப்பட்டதும் எமது முதல் நடவடிக்கையும் அதுவே. அதேபோன்று அம்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதும் எமது பொறுப்பாகும். அதற்காக 180 நாள் வேலைத் திட்டத்தை நாம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி அதன் குறைநிறைகளை ஆராய்ந்து இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது எனது நம்பிக்கை. இனவாத அரசியல் கட்சிகள் எம்மத்தியில் இருகின்றன என நான் எண்ணவில்லை. இனவாதம் எப்போதோ கைவிடப்பட்டுவிட்டது. இந்நாட்டிலிருந்து இன வாதத்தை ஒழித்து நாட்டை நேசிக்கும் மக்களை கட்டியெழுப்ப வேண்டியதும் அனைவரதும் பொறுப்பாகும். குறிப்பாக வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய நாம் விரைவில் கூட வேண்டியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் வெற்றிகரமாக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படுவோமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வணங்காமண் நிவாரணம் 8ஆம் திகதி கொழும்பு வரும்

_vanankaman-captionali.jpgஐரோப்பிய மக்களால் வன்னி மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் எதிர்வரும் 8ஆம் திகதி சென்னை துறைமுகத்திலிருந்து பிறிதொரு கப்பல் மூலம் கொழும்பை வந்தடையவுள்ளது. வணங்காமண் கொண்டு வந்த பொருட்களை இந்திய கப்பலில் தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இக்கப்பலிலிருந்த பொருட்களை சென்னை துறைமுகத்தில் வைத்து ஏற்றிக்கொண்டு இந்தியாவின் கொலரா எனும் கப்பல் எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது. பின்னர் 8ஆம் திகதி அக்கப்பல் கொழும்பு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதைத் தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

 sarathfonseka.jpgயுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா நேற்று முதல்முறையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார் யாழ் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மென்டகு சமரசிங்க இராணுவத்தளபதியை வரவேற்றார். பின்னர் அங்கு இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையை பொன்சேகா ஏற்றுக்கொண்டார்.

 குடாநாட்டில் பாதுகாப்பு நிலமைகள் குறித்து ஆராய்ந்த அவர் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினருக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் மனிதாபிமான செயற்பாடுகள் கண்ணிவெடி அகற்றல் பயிற்சிகள் ஆகியவற்றில் படையினரின் பங்களிப்பு குறித்து அவர் விளக்கமளித்தார எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலகம் திருகோணமலையில்

குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின அலுவலகம் ஒன்று திருகோணமலையில் திறக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர்  தென்னக்கோன் தொரிவித்துள்ளார்.

கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வலுவலகம் திறக்கப்படவுள்ளது. திருகோணமலைத் துறைமுகத்தின் குடிவரவு குடியகல்வு பணிகளை இதுவரை பொலிஸ் தினைக்களமே மேற்கொண்டு வந்;தது. எனினும் அப்பணிகளை தமது திணைக்களம் விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் மேலும்  தொரிவித்துள்ளார்

இலங்கை அரசு, வணங்கா மண் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றியமை சர்வதேச விதிகளுக்கு மாறானது: கப்டன் முஸ்தபா

_vanankaman-captionali.jpgஇலங்கை சென்ற வணங்காமண் கப்பலை சோதனை நடத்தி, ஆயுதங்கள் இல்லை என்று உறுதி செய்த பின்னரும் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றினர். இது சர்வதேச விதிகளுக்கு மாறானது என கப்பலின் கப்டன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.  பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாக சொன்னாலும், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் இல்லை. பொருட்களை இறக்கிவிட்டு, கோல்கட்டா செல்கிறோம் என்றார்.

இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு, நிவாரணப் பொருட்களுடன் நடுக்கடலில் நின்று கொண்டிருந்த, “வணங்கா மண்’ கப்பல், நேற்றிரவு சென்னைத் துறைமுகத்திற்குள் வந்தது. கப்பலில் இருந்து நிவாரணப் பொருட்கள் இறக்கப்பட்டு, சரக்கு கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.

தற்போது கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாக சொன்னாலும், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் இல்லை. பொருட்களை இறக்கிவிட்டு, கொல்கத்தா செல்கிறோம் என்றார். இதைத் தொடர்ந்து, “வணங்கா மண்’ கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டு, கன்டெய்னர்களில் ஏற்றப்படுகின்றன.

இவை, வழக்கமாக செல்லும் சரக்கு கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன. இரண்டு நாட்களில், இந்த பணிகளை முடித்து, நிவாரணப் பொருட்கள் கொண்ட சரக்கு கப்பல் இலங்கைக்கு செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது

மீள்குடியேற்ற இடங்களுக்கு அதிகாரிகள் விஜயம்

வடக்கே வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட மீள்குடியேற்ற பகுதிகளுக்கு உயர்அதிகாரிகள் புதன்கிழமை விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்துள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் குழு கனகராயன்குளத்திற்கும், வவுனியா பிரதேச செயலக அதிகாரிகள் குழு பாலமோட்டை நவ்வி போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தனர்.

அரச அதிகாரிகள் சென்று தமது கடமைகளை செய்யக்கூடிய சாதகமான நிலை உள்ளதா என்பதை அறியவே இவர்களுடைய விஜயம் அமைந்திருந்தது. புதைந்துள்ள வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வெடிபொருட்கள் இல்லை என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டவேண்டுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதைந்துள்ள வெடிபொருட்களை அகற்ற இந்திய கண்ணி வெடி அகற்றும் நிபுணர் குழுவினர் இங்கு வரவுள்ளனர்.இதற்கிடையே விடுவிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தில் பல கிராமங்களில் அரசின் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. இதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தேசிய சாகித்திய விழா பொலன்நறுவையில்

mahinda_yapa_abeywardene.jpgஇவ் வருடத்துக்கான தேசிய சாகித்திய விழாவை பொலன்நறுவை, ரோயல் கல்லூரியில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கான பிரேரணையை கலாசார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன சமர்ப்பித்திருந்தார்.

இந்த விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம் திகதி முடிவடையவுள்ளது. இந்த விழாவுடன் தொடர்புள்ள சகல அமைச்சுக்களின் ஒத்துழைப்புக்களும் இதற்குப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இருவருட பயிற்சிக்காக சென்றுள்ள ஆசிரியர்கள் தமது பயிற்சியைத் தொடர அனுமதிக்கப்படுவர்

இருவருட உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றுள்ள மலையக ஆசிரியர்கள் தொடர்ந்து தமது பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவரெனவும் இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாகவும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளில் நியமனம் பெற்று உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் கல்லூரிக்குச் சென்ற மலையக ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களது பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.

சப்ரகமுவ மாகாண தோட்டப் பாடசாலைகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு சப்ரகமுவ மாகாணசபை இருவருட உள்ளகப் பயிற்சிக்குச் செல்ல அனுமதி வழங்கவில்லை. வழங்கப்பட்ட நியமனத்தில் மோசடிகள் காணப்படுகின்றன. இதனால் இவ்வாசிரியர்களுக்கு மீள் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவில்லையெனவும் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பயற்சிகளுக்கு செல்லமுடியும் எனவும் மாகாணசபை அறிவித்து வருகின்றது.

இந்நிலையில், ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பித்த சிலருக்கு இருவருட உள்ளகப் பயிற்சிகளை தொடர சில கல்லூரி நிர்வாகங்கள் அனுமதியளித்துள்ளன. இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் தமது பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெறுபவர்களும் உடனடியாக தாம் கடமை செய்த பாடசாலைக்குத் திரும்பவேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிலருக்கு வலயக்கல்விப் பணிமனையூடாக இது குறித்து அறிவித்து வருகின்றது.

இது தொடர்பாக ஆசிரியர்கள் என்னிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் முறையிட்டனர். உடனடியாக இது குறித்து மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி இதற்கான உறுதிமொழியை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

2008-2009: வெட்டுப்புள்ளிகள் வெளியாகின: 20,270 மாணவர் பல்கலைக்கழக அனுமதி

visvawarnapala.jpg2008 – 2009ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கென 20,270 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான வெட்டுப் புள்ளிக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 620 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2008 – 2009 ஆம் கல்வி ஆண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில் :-

பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்தபட்ச தகமைகளை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 236 (1,30,236) பேர் பெற்றிருந்தனர். இவர்களில் 46 ஆயிரத்து 010 (46,010) பேர் விண்ணப்பித் திருந்தனர். இவற்றில் 20 ஆயிரத்து 270 பேர் அனுமதி க்கப்படவுள்ளனர்.

19,340 பேர் வழமையான அனுமதி நடைமுறைக்கமையவும், மிகுதியுள்ள 930 மாணவர்கள் விசேட நடைமுறைக்கமையவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவம், கலை, பொறியி யல் உட்பட 86 வகையான பாடநெறிகளுக்கே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 3724 மாணவர்கள் கலைத் துறைக்கும், 3139 மாணவர்கள் முகாமைத்துவ துறைக்கும், 1718 மாணவர்கள் பெளதீக விஞ்ஞான துறைக்கும், 1196 மாணவர்கள் பொறியியல் துறைக்கும், 1140 மாணவர்கள் மருத்துவ துறைக்கும் மற்றும் 1110 மாணவர்கள் உயிரியல் விஞ்ஞானத் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு 86 பாடநெறிகளுக்கு 19,340 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, 2008 – 2009 கல்வி ஆண்டிற்கென ஐந்து புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருக விஞ்ஞானம் மற்றும் மீன்பிடி (Animal Science & Fisheries), ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் நீரியல் வள தொழில் நுட்பம் (Aquatic Resources Technology and Value Addition), தெங்கு மற்றும் அதனுடைய லேடெக் தொழில் நுட்பம் (Palm and Latex Technology and Value Addition), உபசரிப்பு, சுற்றுலா மற்றும் நிகழ்ச்சி முகாமைத்துவம் (Hospitality, Tourism and Events Management) வயம்ப பல்கலைக்கழகத்தில் உணவு தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப முகாமைத்துவம் (Food Production and Technology Management) ஆகிய பாடநெறிகளே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாடநெறிகள் ஒவ்வொன்றுக்கும் ஆரம்ப கட்டமாக 50 மாணவர்கள் வீதம் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனரென்றும் அமைச்சர் விஸ்வவர்ணபால மேலும் தெரிவித்தார்.