எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வடக்கிலுள்ள 9 நீதிமன்றங்களை புனரமைக்க ரூ. 890 மில்லியன்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 890 மில்லியன் ரூபா கடனுதவியுடன் வடக்கிலுள்ள ஒன்பது நீதிமன்றங்களை மீளமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன்படி, பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வேலணை, மாங்குளம், சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்களுக்கு புதிதாக கட்டடங்கள் அமைக்கவும் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ‘கெயா’ திட்டத்தின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட உள்ளதோடு அதன் ஒரு பகுதியாகவே இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஊர்காவற்துறையில் 150 மில்லியன் ரூபா செலவில் நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் நிர்மாணிக்கப்படும்.

சட்டவிரோதமாக இரு திருமணம் செய்தவருக்கு சிறைத் தண்டனை

நீர்கொழும்பு நிருபர்: சட்ட விரோதமாக இரண்டு திருமணங்களைச் செய்தவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடமும் 8 மாத சிறையும் 1500 ரூபா அபராதம் செலுத்துமாறும் நீர்கொழும்பு பிரதான நீதிபதி ஜயகி அல்விஸ் விதித்துள்ளார்.

தூனகஹ, கடவலயைச் சேர்ந்த ஜே.எம்.சன்ஜீவ சம்பத் என்பவருக்கே இத் தண்டவை வழங்கப்பட்டது. இவர் 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி மட்டக்குளி தேவஸ்தானத்தில் சட்டப்படி மட்டக்குளியை சேர்ந்த என்.சந்திமா நிலுகஷா என்வரே திருமணம் செய்துள்ளார்.

இவர் மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டுமொரு திருமணம் செய்துள்ளதாக முதல் முனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இவரின் வழக்கு விசாரணையின் போது இவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவே நீதிபதி தண்டனை வழங்கியுள்ளார்.

சூதாட்ட சட்டமூலத்துக்கு 81 மேலதிக வாக்குகளால் சபை அங்கீகாரம்

சபை நிருபர்கள்: சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.  பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை பிரதியமைச்சர் சரத் அமுனுகம சமர்ப்பித்து உரையாற்றி அதனை நிறைவேற்ற சபையின் அங்கீகாரத்தைக் கோரினார். இதன் பின் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

விவாத முடிவில் எதிர்க்கட்சிப் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க பெயர்கூறிய வாக்கெடுப்பைக் கோரினார். இதையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 114 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைத்தன. இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவற்றுடன் அரசதரப்பின் முன்வரிசை அமைச்சர்களில் 9 பேர் உட்பட இன்னும் சிலர் கலந்துகொள்ளவில்லை.

அத்துரலிய ரத்தின தேரர்,எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் அனுமதியின்றி கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

தென்பகுதிகளிலிருந்து வந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் நேற்று நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியேறியுள்ளனர். அக்காணியில் குடில்களை அமைக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தங்களை மீள்குடியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்திற்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனவும், தங்கள் ஊர்களிலிருந்து கொண்டுவந்த மரந்தடிகளைக் கொண்டே தாங்கள் கொட்டில்களை அமைப்பதாகவும், யார் தடுத்தாலும் இங்கேயே தாம் குடியிருக்கப் போவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களால் நேற்று மாலைக்குள் சுமார் 20 இற்கும் மேற்பட்ட கொட்டில்கள் அமைக்கபட்டு விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நேற்று கருத்துத் தெரிவித்த யாழ்.அரசஅதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் இம்மக்கள் நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியமர்ந்துள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பட்டார். அது வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணி என்பதால் அவர்கள்தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் இது குறித்து தெரிவிக்கையில் சிங்கள மக்கள் இவ்வாறு அக்காணியில் குடியேற முயற்சிப்பதை நேற்றுப் பிற்பகல் அங்கு சென்று நேரில் அவதானித்ததாகவும், தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான அக்காணியில் எவ்வித அனுமதியுமின்றி அவர்கள் கொட்டில்களை அமைத்து வருகின்றமை குறித்து வீடமைப்பு அதிகாரசபையின் கொழும்புத் தலைமையகத்திற்கு தான் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமாக 90 எக்கர் காணி உள்ளது. அதில் 30 ஏக்கர் காணி ஏற்கனவே 300 வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. ஏனைய 60 ஏக்கர் அதிகாரசபையின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

”கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை அமைக்கப்பட்டு ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.” – இ. அங்கஜன்

Angajan_Ramanathanகிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான இ.அங்கஜன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இத்தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததாகவும், வடமாகாண அபிவிருத்திப்பணிகளில் இந்த ஆடைத்தொழிற்சாலை முக்கிய இடத்தை வகிக்கும் எனவும் அங்கஜன் தெரிவித்தார். இத்தொழிற்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள புலி உறுப்பினர்களுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமையவுள்ள இந்த ஆடைத் தொழிற்சாலையை இயக்குவதற்கு ‘றை ஸ்ரார் அப்பறெல்’ நிறுவனத்தின் தலைவர் குமார் தேவபுர முன்வந்துள்ளதாகவும் அங்கஜன் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்.

படிப்பினைகள் மற்றும், ஜனாபதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. ஒவ்வொரு பகுதி மக்களும் இதில் கலந்து கொண்டு தங்கள் சாட்சியங்களை அளிப்பதற்காக பிரிவு பிரிவாக இதன் அமர்வுகள் இடம்பெறுகின்றன.

யாழ்.பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை குருநகர் கலாசார மண்டபத்திலும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக முற்பகல் 11.30 மணி தொடக்கம் 1 மணிவரை அரியாலை சரஸ்வதி சனசமூகநிலையத்திலும், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக பிற்பகல் 2மணி தொடக்கம் மாலை 5மணிவரை நீர்வேலி திருமுருகன் திருமண மண்டபத்திலும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த அமர்வுகளில் தங்கள் சாட்சியங்களை அளிப்பதற்கு 80 வரையானோர் பதிவு செய்துள்ளதாகவும், இவ்வாறு பதிவு செய்யாதவர்களும் தங்கள் சாட்சியங்களை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் 110 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன.

இலங்கை முழுவதும் 1000 பாடசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 110 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம் நேற்று புதன்கிழமை யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டம் 2012ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலத்திற்குட்பட்டதாக அமையும் எனவும், ஒவ்வொரு பாடசாலைக்கும் ஆகக் குறைந்த தொகையாக 5 மில்லியன் ரூபா தொடக்கம் 60 மில்லியன் ரூபா வரைக்கும் நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன கல்வி முறைகளை சகல மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்தல், கிராமப்புற மாணவர்களுக்கு சமவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல் என்பன இத்திட்டத்தின்’ நோக்கம் என நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர்கள் முதலானோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர். மற்றும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன். கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னர் வடக்கில் 90 பாடசாலைகளை இத் தரமுயர்த்தலுக்காக தெரிவு செய்வதாக அறிவிக்கபட்டிருந்தமையும் வடமாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய 110 பாடசாலைகளைத் தரமுயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிஉறுப்பினர்களின் நலன்களுக்காக குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகத்தோடு இணைந்து இயல்பு வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வதற்கென தேசிய ரீதியிலான தலைமையின் கீழ் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களில் மாவட்ட அரசாங்க அதிபர்கள், சமூகத் தலைவர்கள், சமயத் தலைவர்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான இவர்கள் சமூகத்துடன் இணைந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான சகல உதவிகளையும் இக்குழுக்கள் முன்னெடுக்கம் எனவும். இக்குழுக்களின் செயற்பாடுகளுக்கென பல கோடிரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க நேற்று வியாழக்கிழமை யாழப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த 12 ஆயிரம் முன்னாள் போராளிகளில் 5,221 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 594 பேர் சிறுவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு

parliament001.jpgகொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று புதன்கிழமை மாலை முதல் பெய்த கடும்மழை காரணமாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. புறக்கோட்டை, ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி,  கறுவாத்தோட்டம்,பொரளை மயானபிரதேசம், பாராளுமன்றம் வீதி உட்பட பல பிரதேசங்களும் வெள்ளத்தால் மூழ்கியிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.

கொழும்பு மாநகர எல்லைக்குள் பல பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியதால் இன்று பிற்பகல் வரை கொழும்பின் பல பகுதிகளிலும் பெரும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன. எவ்வாறிருப்பினும் இன்று மாலையாகும் போது பல வீதிகளிலும் வெள்ளம் வழிந்தோடியிருந்தது. வளிமண்டலவியல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஜயசேகர இன்று காலை 8.30 மணிவரையான பதிவுகளின் பிரகாரம் கொழும்பில் அதிகபட்சமாக 440.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்திற்கு பவள் கவச வாகனங்களில்

parliament002.jpgபாராளு மன்றத்திற்குச் செல்லும் பாதை இன்று பெய்த அடைமழையால் முற்றாக மூழ்கிப் போயுள்ளதன் காரணமாக இன்றைய பாராளுமன்ற அமர்வுகளுக்கு உறுப்பினர்கள் படகில் செல்ல வேண்டிய நிலையேற்பட்டது.  பாராளுமன்றத்திற்குச் செல்லும் பாதையில் மூன்றடிக்கும் உயரமான நீர் நிரம்பி அப்பிரதேசமெங்கும் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் கூட தாமதித்தே ஆரம்பமாகியிருந்தன.

பாராளுமன்றத்திற்கு தரை வழியாக செல்ல முடியாத நிலை காணப்பட்டதால் இராணுவமும், கடற்படையும் அவர்களுக்கு உதவ முன்வந்தன. அதன்படி பல பாராளுமன்ற உறுப்பினர்கள் படகு மூலம் பாராளுமன்றத்திற்குச் சென்றனர். இன்னும் சிலர் இராணுவத்தின் உயரமான பவள் கவச வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.  இவ்வாறாக பல சிரமங்களின் மத்தியில் பாராளுமன்றத்தைச் சென்றடைந்த போது மழை காரணமாக அங்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வர பெரும் ஏமாற்றமாக இருந்தது.

வேறு வழியின்றி பாராளுமன்றத்தின் அனைத்துக் கதவுகளையும் திறந்து வைத்துக் கொண்டு வீடியோ கமெராக்களின் ஒளியில் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றது. எட்டு நிமிடங்களுடன் பாராளுமன்ற அமர்வு முற்றுப் பெற்றது.

parliament000.jpg