தென்பகுதிகளிலிருந்து வந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் நேற்று நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியேறியுள்ளனர். அக்காணியில் குடில்களை அமைக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தங்களை மீள்குடியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்திற்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனவும், தங்கள் ஊர்களிலிருந்து கொண்டுவந்த மரந்தடிகளைக் கொண்டே தாங்கள் கொட்டில்களை அமைப்பதாகவும், யார் தடுத்தாலும் இங்கேயே தாம் குடியிருக்கப் போவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களால் நேற்று மாலைக்குள் சுமார் 20 இற்கும் மேற்பட்ட கொட்டில்கள் அமைக்கபட்டு விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நேற்று கருத்துத் தெரிவித்த யாழ்.அரசஅதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் இம்மக்கள் நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியமர்ந்துள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பட்டார். அது வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணி என்பதால் அவர்கள்தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் இது குறித்து தெரிவிக்கையில் சிங்கள மக்கள் இவ்வாறு அக்காணியில் குடியேற முயற்சிப்பதை நேற்றுப் பிற்பகல் அங்கு சென்று நேரில் அவதானித்ததாகவும், தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான அக்காணியில் எவ்வித அனுமதியுமின்றி அவர்கள் கொட்டில்களை அமைத்து வருகின்றமை குறித்து வீடமைப்பு அதிகாரசபையின் கொழும்புத் தலைமையகத்திற்கு தான் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமாக 90 எக்கர் காணி உள்ளது. அதில் 30 ஏக்கர் காணி ஏற்கனவே 300 வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. ஏனைய 60 ஏக்கர் அதிகாரசபையின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Thalaphathy
வடபகுதி மக்கள் தற்போது நலிந்திருக்கும் வேளையில், சட்டதிட்டங்களையும் சனநாயக விழுமியங்களையும்மீறி செயற்படுபவர்கள் – ஒருக்கா வடபகுதி மக்களுடன் உரசிப் பார்க்கலாமென்று நினைத்தே தங்களின் ஆயுத அதிகாரத்தைக் காட்டி, வடபகுதி மக்களை பயமுறுத்துவதுபோல் இப்படியான விடயங்களில் ஈடுபட்டிருக்கலாமென எண்ணத் தோன்றுகிறது. இது அப்படியாயின், அடாவடித்தனமாக குடியேறவந்தவர்கள், காலம்பூராவும் அரச நிவாரணத்திலேயோ அல்லது இராணுவமுகாம்களுக்கு வேலை செய்துதான் இவர்கள் தங்களது வாழ்க்கையை கொண்டுபோக முடியும். ஏனைய வடபகுதிமக்களுடன் கலந்து வாழ்வதோ அல்லது இவர்களின் சிறுபிள்ளைகள் மற்றவர்களுடன் பாடசாலைகளில் சேர்ந்து படிப்பதோ முடியாத காரியம், ஏனனில் ஒட்டுமொத்த சமூகமுமே இவர்களை ஏற்காதபோது, குடியேறவந்தவர்களுக்கு உளவியல் ரீதியான பல பாதிப்புக்களை உருவாக்கும். இந்தக்கருத்தின் அடிப்படையில் இவர்கள், நெடுங்காலம் அங்கு இருக்கமுடியாமல் வந்த இடத்திற்கே திரும்ப போகவேண்டிய நிலை வெகு சீக்கிரத்தில் உருவாகும்.