எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

50 வெளிநாட்டு கண்காணிப்பாளரை வரவழைக்க அனுமதி; 8000 பேருக்கு பயிற்சி

srilanka_parliament_02.jpgபாராளு மன்றத் தேர்தலுக்கென ஆசிய நாடுகளில் இருந்து 50 தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பெப்ரல் அமைப்புக்கு அனுமதி வழங்கியிருப்பதாக அதன் பணிப்பாளர் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்னதாக எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கையில் தமது பணிகளை ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 8 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களை நாடளாய ரீதியில் பணியில் அமர்த்த பெப்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான விசேட பயிற்சிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன குறிப்பிட்டார்.

தேர்தல் கண்காணிப்பு பணிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பது தொடர்பாக பெப்ரல் அமைப்பின் முக்கிய அதிகாரிகள் தேர்தல்கள் ஆணையாளருடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வாக்கு எண்ணுவதில் கலந்து கொள்வதற்கு பெப்ரல் அமைப்பு பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தேர்தல்கள் ஆணையாளரிடம் முன்வைத்திருப்பதாகவும் பணிப்பாளர் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் அடையாள அட்டையில்லாதவர்கள் கிராம சேவகர்களை தொடர்பு கொள்ளுமாறும் பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மனோ கணேசனுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்

mano-ganesan.jpgஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மனோ கணேசனுக்கு எதிராக ஹெல உருமய நேற்று பகல் கண்டி மாநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஹெல உருமயவின் கண்டி மாவட்ட பிரதான வேட்பாளரான சுவர்ண திலக்க தலைமையில் கண்டி தலதா வீதியில் நடைபெற்ற இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் ஆதவாளரான மனோ கணேசனை கண்டியிலிருந்து விரட்டுவோம் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கிளிநொச்சி, மாங்குளம், பூநகரியில் பொலிஸ் நிலையங்கள் – பொலிஸ் மா அதிபர் இன்று அடிக்கல்

jaffna.jpgகிளிநொச்சி, மாங்குளம், பூநகரி ஆகிய பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் தலைமை அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதி அடிக்கல் நடப்படவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் தலைமையில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் அடிக்கல் நடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இதற்கமைய மாங்குளம் நகரத்தில் புதிய பொலிஸ் கட்டடத் தொகுதியும், கிளிநொச்சி நகரத்தில் கிளிநொச்சி பொலிஸ் தலைமை அலுவலகமும், மன் னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி

epdp.jpgஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை நாடாளுமன்றத் தோ்தலில் தமது கட்சி வீணைச்சின்னத்திலேயே போட்டியிடும் எனத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெற்றிலைச் சின்னத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய

gotabhaya.jpgஇராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதிபாதுகாப்புத் தேவைப்படுவோருக்கு மட்டுமே இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் தவிர்ந்த மற்றைய அரசியல் தலைவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் கோத்தபாய தெரிவித்தார்.

புலத்துத்தமிழா!! நோர்வே நக்கீரா

புலத்துத்தமிழா!!

ஊரை எண்ணி உருகினோம்
          உண்மை அறிய உயரினோம்
தாரை வார்த்து வந்த பூமி – என்றும்
         தாமரை இலைத் தண்ணீர்தானே

வேரை தேட முயல்வதனால்
         விழுதுகளில் வாழ முடிவதில்லை
ஊரை எண்ணி உளல்வதனால்
          உண்மையின் தரிசனம் தெரியதில்லை

பொக்குவாய் திறந்து என்பிள்ளை சிரிக்க
           பக்கென்று சுனாமி தெரியுதயையோ
திக்குவாய் திறந்து தீந்தமிழ் பிறக்க
          தொக்குவாய் ஒப்பாரி கேட்குதையோ

உடலிங்கு இருக்க உயிரங்கு வாழும்
          உரமிங்கு இருக்க பயிர்ரெங்கு போகும்.
கடலிங்கு இருக்க மீனெங்கு வாழும்
          கடனிங்கு இருக்க ஊரிலுடன்கட்டை ஏறும்.

சேவல் செத்த தேசத்தில்
          சேதி சொல்ல யாருமில்லை
ஏவல் செய்து வாழ்வதற்கு – காலையில்
         எகிறி அலறும் அலாரமிங்கே

பூங்காலை பிறக்கும் பூபாளம் பாடி – இங்கோ
          பனிவானம் கொட்டும் பகலள்ளி ஓடி
தேன்காலை என்று ரொட்டியைத் தின்றும்
         தேடிய பணமும் எமைத்தேடாது போகும்

வேரை அறுத்து வந்த உனக்கு
          வேற்று மண்ணில் பவுசுப்பெருக்கு
ஊரை ஊன்றிய மக்கள் தமக்கு
           உத்தமனாய் விடாதே கணக்கு

தலைவிதி தன்னை தானே தீர்க்கும்
           தலையாய கடமை தமிழர்க்குண்டு
கொலைவெறி கொண்டு ஈழம் என்று – மீண்டும்
            கொல்லநினைக்க முள்ளிவாய்காலிலுண்டு

பண்டா நினைத்ததை பிரபாகரன் முடித்தான்
            திண்டாடும் தமிழன் அரசியலைத் தொலைத்தான்
கொண்டாடும் கொடுவினம் கொடியுயர்த்தி கோலோச்ச
            மன்றாடி மகிழுதோ பின்னணியில் த.தே.முன்னணியும்

மண்ணை வேண்டிப் போராடி
           மண்ணாய் போன மன்னர்களே!
கண்ணாய் மனிதம் காட்டி
           காதலி தமிழை மனதில் ஊட்டி

தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்
          தவறிபோனால் இனத்தோடழிவான்
அமிழ் தினிய தமிழைக் காக்க
         எழுந்து வாடா இனத்தை மீட்க

பத்துப் பெத்தால் பரிசளிப்போம்
         பத்தாது போனால் பரிசகியோம்
முத்தாய் எம்மினம் முகிழ்வுறவே
         வித்தாய் விழைவோமா புலத்தினிலே

நோர்வே நக்கீரா

27.02 2010

பொதுத்தேர்தல் 2010 – 24 கட்சிகள், 312 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7625 பேர் களத்தில்

election_cast_ballots.jpgபாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 8 இல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை அரசியல் திட்டத்துக்கு அமைய 22 மாவட்டங்களில் இருந்து மக்களை பிரதிநிதிதுவம் படுத்தும் வகையில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும் 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் நேற்று நண்பகலுடன் நிறை வடைந்தன. ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பிற்பகல் 1.30 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முறையாகப் பூர்த்திசெய்யப்படாததால், கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்பு மனுக்களும் 35 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்தத் தடவையே கூடுதலான கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வன்னி மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. அந்தக் கட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வேட்பாளரின் பெயர் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் பட்டியலிலும் இடம்பெற்றிருந்ததால் அந்த இரண்டு கட்சிகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

பொதுத் தேர்தலொன்றில் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்குவது இதுவே முதற் தடவையாகும்.  அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளன. 07 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள இந்த மாவட்டத்தில் 49 சுயேச்சைக் குழுக்களில்.

கொழும்பு மாவட்டத்தில் 21 அரசியல் கட்சிகளும் 18 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 858 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 324 பேர் களம் இறங்கியுள்ளனர். வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 16 கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 270 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 17 கட்சிகளும் 14 சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. 217 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
 
மட்டக்களப்பில் 17 கட்சிகளும் 28 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 360 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 18 கட்சிகளும் 48 சுயேச்சைக் குழுக்களும் களம் இறங்கியுள்ள நிலையில், 660 வேட்பாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். புத்தளத்தில் 15 கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 338 பேர் களம் இறங்கியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களும் 300 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. கண்டியில் 14 கட்சிகள் 17 சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 465 வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
பதுளையில் 12 கட்சிகளும் 05 சுயேச்சைக்குழுக்களும் 187 பேரை நிறுத்தியுள்ளன.
 
மாத்தளை மாவட்டத்தில் 16 கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் 319 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் 388 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன.கம்பஹா மாவட்டத்தில் 14 கட்சிகளும் 15 சுயேச்சைக் குழுக்களும் 699 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 14 கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் 468 பேரை களமிறக்கியுள்ளன.

புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஹம்மது நபியின் போதனை கைகொடுக்கும்

he_the_president.jpgசகிப்புத் தன்மை, புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்களால் போதிக்கப்பட்ட சகோதரத்துவமும் கைகொடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் உதவ முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது :-

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றைய தினத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று அவர்கள் உலகம் முழுவதும் உள்ள சகோதரர்களோடு இணைந்து மீலாதுன் நபியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

முஹம்மது நபி பிறந்த தினமான இன்றைய தினம் முஸ்லிம்கள் அவரின் போதனைகளை நினைவு கூரும் ஒரு தினமாகும். சமாதானம், நல்லிணக்கம், கருணை, சுயநலமின்மை, தர்மம் என்பன பல உயர் விழுமியங்களை புனித நபி அவர்கள் தனது போதனைகள் மூலம் முன்வைத்தார்.

இலங்கையில் மீலாதுன்நபி விழா தேசிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது. இம்முறை இந்தத் தேசிய கொண்டாட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாவில் இடம்பெறுகின்றது. அங்குள்ள முஸ்லிம் மக்களின் சமய மற்றும் கலாசாரச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. இலங்கை முழுவதும் ஜனநாயகம், மீள ஸ்தாபிக்கப்பட்டு சமாதானமும் நிலைநிறுத் தப்பட்டுள்ள நிலையில் அமைதியான சூழலில் இம்முறை முஸ்லிம்கள் மீலா துன் நபியைக் கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய முக்கிய தினத்தில் இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு நான் எனது மனப்பூர்வ மான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு சமாதானம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சகிப்புத்தன்மை என்பவற்றை சகல சமூகங்கள் மத்தியிலும் கட்டியெழுப்பவும் அவற்றை ஸ்திரப்படுத்தவும் தீவிர பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

உயிருடன் மீட்கப்பட்ட சிசு தொடர்பாக பொலிசார் தீவிர விசாரனை

images-baby.jpgஎப்பாவெல பகுதியில் 16 வயது சிறுமி ஒருவருக்கு பிறந்த குழந்தை உரையொன்றில் கட்டபட்ட நிலையில் பொலிசாரலால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை மார்ச் 2ஆம்

rauff-hakeem.jpgதமக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் படி உத்தரவிடக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை மார்ச்   2ஆம் திகதி நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பதில்  பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, நீதியரசர்கள் ஜகத் பாலபட்டபெந்தி, கே.ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்தத் திகதியை நீதிமன்றம் விசாரணைக்குத் தீர்மானித்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை அடுத்து எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது. அதனை ஆட்சேபித்தே ரவூப் ஹக்கீம் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல்  செய்துள்ளார்.