எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் – 02 : போனஸ் ஆசன முறை சிறுபான்மையினருக்கான விமோசனம் அல்ல – புன்னியாமீன்

srilanka_parliament_02.jpgவிகிதாசார தேர்தல் முறையின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படும்போது தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்படுவதினால் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தினைவிட,  விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலமாக சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்தகவு அதிகமானது என்பதைக் கடந்த வாரம் நோக்கினோம்.

பெரும்பான்மை தேர்தல் முறையினையும்,  விகிதாசார தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராயக்கூடிய ஏனைய தலைப்புக்களை இன்று நோக்குவோம்.

நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும்முறை

முதலாம் குடியரசு அரசியலமைப்பின் 70ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவின்படி தேசிய அரசுப் பேரவை (நாடாளுமன்ற) உறுப்பான்மைக்கான தகுதியின்மை எனும் தலைப்பில் விபரிக்கப்பட்ட தகுதியீனங்களுக்கு உரித்தாகாத தேர்தல் யாப்பில் பெயர் பதிவாகியுள்ள எந்த ஆளுக்கும்,  நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் மூலமாகவோ, சுயேட்சை வேட்பாளராகவோ நேரடியாகத் தாக்கல் செய்ய முடியும்.
இந்த முறையின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் உரிமை இருந்தாலும் கூட,  மக்கள் மத்தியில் பிரபல்யமான அரசியல் கட்சியொன்றினூடாக சிறுபான்மை வேட்பாளர் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது கேள்விக் குறியே.

ஏனெனில்,  தேர்தல் தொகுதியொன்றிற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் ஒரு வேட்பாளரை மாத்திரமே அபேட்சகராக நிறுத்தமுடியும். எனவே,  சிறுபான்மை இனத்தவர்கள் செறிவாக வாழும் வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் அமைந்துள்ள தொகுதிகளில் – குறிப்பாக பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் தொகுதிகளில் பிரதான கட்சிகள் இச்சந்தர்ப்பத்தினை வழங்கமாட்டாது. (பல அங்கத்துவ,  இரட்டை அங்கத்துவ தொகுதிகள் நீங்கலாக)  இதனால் விகிதாசார தேர்தல் முறை அறிமுகமானதை அடுத்து இலங்கையில் தோற்றம் பெற்றுள்ள சிறுபான்மை அரசியல் கட்சிகளால் வடக்கு,  கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எந்தவொரு பிரதிநிதியையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும்.
யதார்த்த பூர்வமாக நோக்குமிடத்து வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களிலும் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியையும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சுற்றியே வாக்காளர்களின் விருப்புக்கள் அமைவதினால் சுயேட்சையாகவோ,  அன்றேல் ஒரு சிறுபான்மைக் கட்சியின் மூலமாகவோ போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினமான காரியமே.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நியமனப் பத்திரம் தாக்கல் செய்தல்

1978 யாப்பின் கீழ் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் யாப்பின் 99ம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1 ம் குடியரசு அரசியலமைப்பைப் போல இங்கு நேரடியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் மாவட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஊடாக அல்லது சுயேட்சை குழுவாக ஒரு பட்டியலையே தாக்கல் செய்ய வேண்டும்.

யாப்பின்படி பட்டியலைத் தாக்கல் செய்கையில் தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றிலொரு பங்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படல் வேண்டும். யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்திற்கமைய பட்டியலைத் தயாரிக்கும்போது தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவாகவுள்ள அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றைக் கூட்ட வேண்டும்.

உதாரணமாக கண்டி தேர்தல் மாவட்டத்திற்கு 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டுமாயின் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் அல்லது சுயேட்சைக் குழுக்களும் பின்வரும் எண்ணிக்கைக்கமைய பட்டியலைத் தயாரித்தல் வேண்டும். 12+03 = 15 வேட்பாளர்கள் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்போது பிரதான கட்சிகள் அத்தேர்தல் மாவட்டத்திலுள்ள சிறுபான்மைச் சமூகங்களினது வாக்குகளையும் பெற்றுக் கொள்ள விழைவதினால் பட்டியலில் சிறுபான்மை சமூக வேட்பாளர்களுக்கும் இடம் வழங்குதல். எனவே,  பெரும்பான்மை பிரதிநிதித்துவ முறையில் கிடைக்காத வாய்ப்பு இங்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தினால் கிடைக்கிறது.

வாக்களிக்கும் முறை

1972ம் ஆண்டு குடியரசு யாப்பின் கீழ் வாக்களிப்பது நேரடி முறையாகும். வாக்குரிமை பெற்ற எவரும் தொகுதி ரீதியாக தான் விரும்பும் வேட்பாளருக்கு நேரடியாக புள்ளடி இடுவதன் மூலம் வாக்களிக்கலாம். எனவே,  பெரும்பான்மைச் சமூகத்தினர் அதிகமாக வாழும் தேர்தல் தொகுதிகளில் பெரும்பான்மைப் பிரதிநிதிகள் தெரிவாக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இங்கு அதிகமாக உள்ளன.

2ம் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் போது வாக்களிப்பு 2 கட்டங்களாக நிகழ்த்தப்படும்.

1. தான் விரும்பும் கட்சிக்கு சுயேட்சைக் குழுவிற்கான வாக்கு.
2. விருப்புத் தெரிவு வாக்கு

விகிதாசார முறையின் கீழ் வாக்களிக்கும் விளக்கங்கள் 1981 இலக்கம் 1 பாராளுமன்ற தேர்தல் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்டியல் சிங்கள அகரவரிசைக்கமைய வரிசைப்படுத்தப்பட்டு,  அபேட்சகர்களுக்கு இலக்கங்கள் ஒதுக்கப்படும். இதில் கூடியது 3 அபேட்சகர்களுக்கு விருப்புத் தெரிவு வாக்குகளை வழங்குமாறு வாக்காளர் கோரப்படுவர்.

விருப்புத் தெரிவு வாக்குமுறை வேட்பாளர் மத்தியில் போட்டி நிலையையும்,  குரோதங்களையும் ஏற்படுத்துவதால்,  விருப்புத் தெரிவு முறை பற்றி பலத்த கண்டனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும்கூட சிறுபான்மையினத்தவர்களுக்கு தமது சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வாக்களிக்கும் நிலை சாத்தியப்படுவதை நிராகரித்து விடமுடியாது.

உதாரணமாக 2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 2 முஸ்லிம் பிரதிநிதிகளும்,  தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியுமாக மொத்தம் 3 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்றால் விகிதாசார தேர்தல் முறையில் விருப்புத் தெரிவு வாக்குமுறையும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட முடியாது.  மாறாக பெரும்பான்மைத் தேர்தல்முறை அமுல்படுத்தப்பட்டிருந்தால் 3 முஸ்லிம் பிரதிநிதிகள் கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாக முடியுமா என்பது கேள்விக்குறியே.

ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யும்முறை

பெரும்பான்மைத் தேர்தல் முறையின் கீழ் தொகுதி ரீதியாக நடைபெறும் தேர்தலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் நேரடியாக உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார். உதாரணமாக x எனும் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட A, B, C  ஆகிய வேட்பாளர்கள் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளனர் எனக் கொள்வோம்.

A – 18.332
B – 16.218
C – 573

இதில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் A ஆவார். இதன்படி X எனும் தேர்தல் தொகுதிக்கு A என்பவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல்.
1978ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் ஆசனங்களைப் பகிர்ந்தளிக்க பின்வரும் 6 படிமுறைகள் கையாளப்படும்.

1ம் படிமுறை : போனஸ் ஆசனத்தினை வழங்குதல்
2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள்
    குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்
3ம் படிமுறை : தொடர்புடைய வாக்குகளைக் கணித்தல்
4ம் படிமுறை : முடிவான எண்ணைக் கணித்தல்
5ம் படிமுறை : முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்
6ம் படிமுறை : மிகுதிப் பெரும்பான்மை முறைக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

மேற்குறித்த 6 படிமுறைகளுக்கமையவே தேர்தல் மாவட்டத்துக்கான பிரதிநிதிகளைத் தீர்மானிப்பர். இப்படிமுறைகளினால் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்புக்களும் உள்ளன. நன்மைகளும் உள்ளன. இதனைப் பின்வரும் உதாரணத்துக்கமைய ஆராய முடியும்.

உதாரண எடுகோள்

X எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும்,  இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.

கட்சி A = 5,400 வாக்குகள்
கட்சி B = 3,600 வாக்குகள்
கட்சி C = 1,410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
மொத்தமாக செல்லுபடியான வாக்குகள் 11700

1 ம்படிமுறை – போனஸ் ஆசனத்தினை வழங்குதல்

விகிதாசார தேர்தல் முறையில் ஆசனங்களைப் பதிவு செய்யும்போது பேணப்படும் 1வது படிமுறை போனஸ் ஆசனத்தை வழங்குவதாகும். அதாவது குறிப்பிட்ட ஒரு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களுள் எந்தக் கட்சி அல்லது குழு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதோ, அந்தக் கட்சி அல்லது குழுவிற்கு வழங்கப்படும் அன்பளிப்பு ஆசனத்தையே போனஸ் பிரதிநிதித்துவ ஆசனம் என அழைக்கின்றோம்.

எனவே, எமது உதாரண எடுகோளின்படி அதிக வாக்குகளைப் பெற்றுள்ள கட்சி A ஆகும். எனவே A கட்சிக்கு ஒரு போனஸ் ஆசனம் வழங்கப்படும்.
போனஸ் ஆசன முறையின் கீழ் சிறுபான்மைக் கட்சிகளுக்கு வாய்ப்புக்கள் உண்டு எனப்பொருள் கொள்ள முடியாது. பெரும்பாலும் இதன் மூலம் பிரதானக் கட்சிகளுக்கே வாய்ப்பு அதிகம். இலங்கையில் இதுகால வரை நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களில் போனஸ் ஆசனங்கள் பெற்ற கட்சிகளைப் பின்வரும் அட்டவணை மூலம் கண்டு கொள்ளலாம்.; வடக்கு,  கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே சிறுபான்மைக் கட்சிகள் நன்மை பெற்றுள்ளன.

1989/ 1994 /2000/ 2001/ 2004ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற அதிகமான வாக்குகளைக் கொண்டு போனஸ் ஆசனம் பகிரப்பட்ட முறை. மேற்குறிப்பிட்ட ஆண்டு ஒழுங்கில் மாவட்டத்தில் வெற்றியடைந்த கட்சிகள் தரப்பட்டுள்ளன.

தேர்தல் மாவட்டம் : 1989/1994/ 2000/ 2001 / 2004
1. கொழும்பு : ஐ.தே.க / பொ.ஜ.மு /ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.  
2. கம்பஹா:  ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
3. களுத்துறை: ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
4. கண்டி: ஐ.தே.க /ஐ.தே.க /பொ.ஜ.மு / ஐ.தே.க/ ஐ.தே.க.
5. மாத்தளை : ஐ.தே.க/பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
6. நுவரெலியா : ஐ.தே.க/ ஐ.தே.க / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
7. காலி : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
8. மாத்தறை : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
9. ஹம்பாந்தோட்டை:  ஐ.தே.க / பொ.ஜ.மு / ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஜ.மு. 
10. யாழ்ப்பாணம்: சுயேட்சை/ சுயேட்சை/ ஈ.பி.டி.பி/ த.ஐ.வி.மு/  இ.த.அ.க
11. வன்னி : த.வி.கூ/ புளொட் / டெலோ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
12. மட்டக்களப்பு:த.வி.கூ/ த.வி.கூ / த.வி.கூ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
13. திகாமடுல்லை: ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஐ.மு/ ஸ்ரீ.ல.மு.க /பொ.ஜ.மு. 
14. திருகோணமலை: ஸ்ரீ.சு.க/ ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க /  இ.த.அ.க
15. குருநாகலை : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு. 
16. புத்தளம்: ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
17. அநுராதபுரம்:  ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு
18. பொலன்னறுவை: ஐ.தே.க / பொ.ஜ.மு / ஜ.தே.க / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
19. பதுளை: ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.
20. மொனராகலை: ஐ.தே.க / பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / பொ.ஐ.மு /  பொ.ஜ.மு. 
21. இரத்தினபுரி : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு. 
22. கேகாலை: ஐ.தே.க / ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த போனஸ் ஆசன முறையால் ஆளும்கட்சிக்குத் தன் பலத்தை ஓரளவேனும் அதிகரித்துக் கொள்ளும் ஒரு ஏற்பாடாகவே இம்முறை காணப்படுகின்றது என கூறப்படுகின்றது. மேலும், இலங்கையில் இதுவரை நடைபெற்ற 5 பாராளுமன்ற தேர்தல்களின் போதும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்கள் தவிர ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களிலும் ஐ.தே.க.கட்சியும், பொ.ஐ. முன்னணியுமே முன்னணியில் நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது.

2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்

ஒரு தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 1/20 பங்கு (5%) வாக்குகளைப் பெறாத கட்சிகளை அல்லது சுயேட்சைக் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல். வெட்டுப்புள்ளி வாக்குக் கணிப்பு, சிறுபான்மைக் கட்சிகளின் வளர்ச்சிக்கும் , சிறிய கட்சிகளின் வளர்ச்சிக்கும், பெரிதும் தடையாகும். விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் இந்த வெட்டுப்புள்ளி 1/8 பங்கு (அதாவது 12.5 % ஆகக் காணப்பட்டது. 1988ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பிரகாரமே 1/20 பங்காக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உதாரண எடுகோளை எடுத்து நோக்கும்போது வெட்டுப்புள்ளிக் கணிப்பு பின்வருமாறு அமையும். வெட்டுப்புள்ளி வாக்கு = செல்லுபடியான வாக்கு X 1/20 எமது உதாரணத்தின்படி =11700X1/20 =    585

எனவே 585 வெட்டுப்புள்ளி வாக்குகளைப் பெறாத கட்சிகள், குழுக்கள் நீக்குதல் வேண்டும். இதன்படி 540 வாக்குகளைப் பெற்ற சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்படும்.

இதே போல நடைபெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலிலும்,  5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் போட்டியிலிருந்து நீக்கப்படும். எதிர்வரும் பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 8 இல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை அரசியல் திட்டத்துக்கு அமைய 22 மாவட்டங்களில் இருந்து மக்களை பிரதிநிதிதுவம் படுத்தும் வகையில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும், 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கடந்த கால அனுபவங்களை வைத்து நோக்குமிடத்து இம்முறை போட்டியிடக்கூடிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் 90 வீதத்துக்கும் அதிகமான கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் ஐந்து வீத வாக்குகளைப் பெறாமல் நீக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

மாவட்டங்களுக்கு ஆசனங்கள் பகிர்ந்தளிக்கக் கூடிய முறைப்பற்றியும, சிறுபான்மைக்கு ஏற்படக்கூடிய சாதக பாதக நிலைப் பற்றியும் தொடர்ந்தும் இடம்பெறும்.

(தொடரும்…….)

69 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 69 மேலதிக வாக்குக ளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் கிடைத்தன.

பிரதி பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்புகள் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்கு பண்டார தலைமையில் நடை பெற்றது.

நேற்று சபையிலிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. க்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். இவர்களுடன் ஜே. வி. பி. உறுப் பினர்களும்,  ஐ. தே. கவினரும் எதிர்த்தே வாக்களித்தனர்.

அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக தொடர்ந்தும் ஆதரவளித்து வாக்களித்து வந்த ஜே. வி. பி.யினர் முதல்முறையாக எதிர்த்து வாக்களித்தனர். சபைக்குள் மனோ கணேசனுடன் ஐ. தே. க. உறுப்பினர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.

கலைக்கப்பட்டஇலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடுகிறது

srilanka_parliament_02.jpgகலைக் கப்பட்ட இலங்கை பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்திற்காக ஜனாதிபதி தனது மேலான அதிகாரத்தின் மூலம் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூட்டுகிறார்.
 
அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ள இன்றைய கூட்டத் தொடரில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கலைக்கப்பட்ட பாராளுமன்றம் கூட்டப்படுவது இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இது இரண்டாவது தடவையாகும்.

பொன்சேகாவுக்கு எதிராக இன்னும் சில தினங்களில் இராணுவ நீதிமன்ற விசாரணை – சிவிலியன் உட்பட 35 பேரிடம் சாட்சியம் பதிவு

sarath_fonseka.jpgகைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு இராணுவத் தளபதியிடம் கடந்தவாரம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:- குறிப்பிட்ட சாட்சியங்களின் தொகுப்பில் 35 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 22 இராணுவத்தினரிதும் 7 பொலிஸ் உத்தியோகத்தரினதும் ஏனையவை பொது மக்களிடமிருந்தும் கிடைத்துள்ளன. சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய மேற்படி அறிக்கை தற்போது இராணுவத்தின் சட்டப் பிரிவு அதிகாரிகளால் பரிசீலிக்க ப்பட்டு வருகிறது. இந்த பரிசீலனை முடிவுற்றதும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவு செய்யப்பட்டுள்ள சாட்சியங்களின் படி முன்னாள் இராணுவத் தளபதி மீது ஐந்துக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும். அடுத்த சில நாட்களில் இந்த குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படும். இராணுவ சட்டத்தின் விதி முறைகளின்படி இராணுவ நீதிமன்றத்தில் வைத்தே அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

சரத் பொன்சேகா மீது இந்த குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டதும் உடனடியாக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகும். 3 அல்லது 5 நீதிபதிகளைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தும். அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதியினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு ஏற்ப இராணுவ தளபதி மேற்படி 3 அல்லது 5 நீதிபதிகளை நியமிப்பார். இந்த நீதிபதிகள் குழுமம் மேற்படி இராணுவ நீதிமன்றத்தில் முன்னாள் இராணுவ தளபதி மீது விசாரணை நடத்தும்.

குறிப்பிட்ட இந்த இராணுவ நீதிமன்றம் எந்த இராணுவ முகாமில் இடம் பெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும் – அமைச்சர் பாடலி

minister-patali.jpgஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில மேலைத்தேய நாடுகளும், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் முயன்று வருகின்றன. ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை தோற்கடிக்கப்படும். 2/3 ற்கும் அதிகமான நாடுகள் எம்முடனே உள்ளது என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தவும் படை வீரர்களின் கெளரவத் துக்கு களங்கம் ஏற்படுத்தவும் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில மேலைத்தேய நாடுகளின் தலையீட்டினால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்தது தொடர்பாக ஆராய ஆலோசனைக் குழுவொன்றை அமைக்க ஐ. நா. செயலாளர் தயாராகி வருகிறார். இதனை ஜனாதிபதி முழுமையாக நிராகரித்துள்ளார். ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் தங்கியுள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைகளினால் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. எதுவும் செய்யவில்லை. சகல நாடுகளையும் ஐ.நா. சமமாக நடத்த வேண்டும். ஆனால் இந்தக் கொள்கைளை ஐ.நா. மீறியுள்ளது. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட முடியாது என ஜனாதிபதி தெளிவாக ஐ.நா. செயலாளருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அச்சமற்ற தைரியமான செயற்பாட்டை நாம் வரவேற்கிறோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக வார இறுதி நாட்களில் 50 ஆயிரம் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றனர். யாழ்ப் பாணத்தில் இருந்து ஒரு இலட்சம் தமிழ் மக்கள் தெற்கிற்கு வருகின்றனர். இந்த சுமூகமான சூழ்நிலையை குழப்ப புலிகளுக்கு ஆதரவான சக்திகள் முயற்சி செய்கின்றன.

சில வேட்பாளர்களுக்கு புலி ஆதரவாளர்களே வாக்குப் பெற்றுத்தர உள்ளனர். ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும். கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல் வாக்கெடுப்பில் இலங்கை 2/3 பெரும்பான்மையுடன் வென்றது. சகல ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை. ஒரு சில நாடுகளே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன.

ஐ.நாவின் எந்த மனித உரிமை விசார ணைக்கும் எமது அரசாங்கம் இடமளிக்காது. ஐ.நா. முன்வைக்கும் விடயங்களுக்கு நாம் பதிலளிக்கத் தயார். ஆனால் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட இடமளிக்கமாட் டோம் என்றார்.

இணையம் அடிப்படை உரிமை ஆகும்: பிபிசி கருத்து வாக்கெடுப்பில் முடிவு

internet.jpgபிபிசி உலக சேவைக்காக குலோப்ஸ்கேன் நிறுவனத்தார் நடத்திய ஒரு புதிய உலக அளவிலான சுற்றாய்வில் நம்மிலே ஐவரில் நால்வர் இணைய வசதியை அடிப்படை மனித உரிமை என்று கருதுவதாகத் தெரியவந்துள்ளது.

உலகெங்கிலிருந்தும் எழுபத்து ஒன்பது சதவீதமானோர் இணையத்தைப் பாவிக்கும் வசதியும் அனுமதியும் இருப்பது ஒரு அடிப்படை மனித உரிமை என்று கருதுகின்றனர்.

இணையத்தை பாவிப்பவர்கள் மட்டுமல்லாமல் இதுவரை இணையத்தை பாவிக்காதவர்கள் மத்தியிலும் இதே கருத்துதான் நிலவுகிறது என்றும் தெரிகிறது.

இந்தியா – இலங்கையுடன் இணைந்து கல்வித்துறையை மேம்படுத்த நடவடிக்கை

nirupama.gifஇந்தியா,  இலங்கையுடன் இணைந்து கல்வித்துறை மேம்பாடு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் மூலம் மிக நீண்டகாலமாக இருந்து வரும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

கண்டி – பெனிதெனிய வில் அமைந்துள்ள ஆங்கில ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் கல்வி நிலையத்தில் இந்தியா – இலங்கை ஆங்கிலம் கற்றல் தொடர்பான ஆசிரியர் மத்திய நிலைய மொன்றையும் மொழியியல் கூடமொன்றை யும் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே செயலாளர் நிருபமா ராவ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இரு நாடுகளுக்குமிடையில் இவ்வாறு ஆங்கில அறிவு தொடர்பான விருத்திகளை முன்னெடுத்து செல்ல மஹிந்த சிந்தனைத் திட்டம் உறுதுணையாக விருந்தது எனவும் கூறினார்.

இந்தியாவுக்கு வருமாறு கிழக்கு முதலமைச்சருக்கு நிருபமா அழைப்பு!

chandrakanthan.jpgகிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு நிருபமா அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவு  செயலாளர் நிருபமா ராவ் இன்று சிவனேசத்துரை சந்திரகாந்தனை கொழும்பில் வைத்துச் சந்தித்தார். இதன் போதே இவ் அழைப்பை அவர் விடுத்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்புத் தொடர்பில் அவர் எமக்கு மேலும் தெரிவிக்கையில், இந்திய வெளிவகார செயலாளர் நிருபமா ராவ் என்னைச் சந்திக்க வேண்டுமென கோரியிருந்தார். இதனையடுத்து அவரை நான் சந்தித்தேன்.

இதன் போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, பிரச்சினைகள், நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் விதவைகளுக்கான உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினோம்.

அத்துடன் அதிகாரப் பகிர்வு, 13 ஆவது திருத்தச் சட்டம், அதனை அமுல் படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கினேன். கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு இந்தியா உதவும் என நிருமா ராவ் எனக்கு உறுதியளித்திருந்தார்.

இலங்கை விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவு ம் அவர் என்னிடம் தெரிவித்தார்  என சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறினார்.

இம்மாதம் நடுப்பகுதியில் இடைக்கால பருவப் பெயர்ச்சி மழை – காலநிலை அவதான நிலையம் எதிர்பார்ப்பு

rain.jpgஇம்மாதம் நடுப்பகுதியில் இடைக்கால பருவப் பெயர்ச்சி மழை பெய்யூம் என எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலைய பேச்சாளர் ஒருவர் தொவித்தார்.

தற்பொழுது நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளைகளில் சிறிது மழை பெய்து வருவதாக குறிப்பிட்ட அவா; ஒரு மாத காலமாக வரட்சியான காலநிலை நாடு பூராவூம் காணப்படுகிறது எனக் கூறினார். தற்பொழுது நிலவிவரும் வரட்சியான காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் தொpவிக்கின்றது.

தற்பொழுது ஊவா சப்ரகமுவ மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் மாலை வேளைகளில் இடைக்கிடை மழை பெய்து வருவதாகவூம் காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. நேற்று காலையூடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நுவரெலியாவில் 5 மில்லி மீட்டரும் இரத்மலானையில் 1.2 மி. மீ. உம் மழை பெய்துள்ளது.

பலமான குடும்ப உறவே பலமான நாட்டை கட்டியெழுப்ப அடித்தளம் – நாமல் ராஜபக்ஷ

namal.jpgபலமான குடும்ப உறவே பலமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம். இதனைக் கொள்கையாகக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமென ‘இளைஞர்களுக்கான நாளை’ அமைப்பின் தலைவரும் ஜனாதிபதியின் புதல்வரும் வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை சிபோபுர சிங்கப்பூர் நட்புறவு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- இந்நாட்டில் இளைஞர்கள் படையிலிருந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் போதும் பாடசாலை பல்கலைக்கழ கத்துக்குப் போய் மீள வீடு திரும்பும் வரை பெற்றோர் அஞ்சி நடுங்கிய யுகம் ஒன்றிருந்தது. இதன்போது உள, உடல் ரீதியில் எவரும் பீடனைக்குள்ளானவர்கள் எமது தாய்மாரே.

எமது சகோதரரும் கடற்படையில் கடமைபுரிவதால் பயங்கரவாத யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமது பெற்றோரும் இத்தகைய தாக்கங்களுக்கே உள்ளானார்கள் என என்னால் கூறமுடியும். லங்கையைப் பொறுத்தவரை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பினை பெண்களே வழங்குகின்றனர்.

வீட்டின் பொருளாதாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பவற்றை இதில் முக்கியமாகக் குறிப்பிட முடியும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு தற்போது அமைதி சூழல் நிலவுகிறது. இதனால் நிம்மதியடைந்தவர்கள் எமது தாய்மாரே.  இதனால் எமது கலாசாரம் தேசியத்துவம் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.

எனது முன்னேற்றத்தில் எனது பெற்றோரினது பங்களிப்பு முக்கியமானது. எனது தாயாரிடம் நான் கற்ற பாடமே எனக்குப் பெரிதும் உந்துதலளித்தது. அரசியலில் எனது தந்தையாரின் வழிகாட்டல் எனக்கு உதவியது. இதுவே எனக்கான அரசியல் சூழலை உருவாக்கித் தந்தது.

இந்நாட்டில் பெண்களின் பொருளாதாரம் சக்திபடுத்தப்பட வேண்டும். அரசியலில் பொருளாதார ரீதியில், தொழில்நுட்பத் துறையில் பெண்கள் முன்னேற்றப்பட வேண்டும். அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான உறவும் பலப்படுவது மிகவும் முக்கியமாகும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான பலமான உறவு இல்லாவிட்டால் நாம் எத்தகைய அபிவிருத்தியை ஏற்படுத்தியும் அதில் பயனில்லை என்பதே எனது கருத்து.

குடும்ப உறவு பலப்படுத்தப்படல், பொறுமை இவையிரண்டும் நல்ல குடும்பம், நல்ல பிள்ளைகள் உருவாக மிகவும் அவசியமாகும். குடும்பம் பலம்பெறும் போது சமூகம் பலம்பெறுகிறது. சமூகம் பலம் பெறும்போது கிராமம் பலம்பெறுகிறது.  கிராமம் பலம்பெறும் போது நாடு பலம் பெறுகிறது. நாம் பலம் மிக்க நாடொன்றைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் உழைப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.