எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஜீ-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த நாளை ஏற்பு – ஈரானில் உச்சி மாநாடு நாளை ஆரம்பம்

mahinda-raja_1.jpgஈரான் தலைநகர் தெஹ்ரானில் நாளை (17) ஆரம்பமாகும் ஜீ – 15 நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பொறுப்பை ஏற்கின்றார். ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்திடமிருந்து தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கின்றார்.

ஜீ – 15 நாடுகளின் 14 ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இந்த அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.

ஜீ – 15 அமைப்பில் அங்கம் வகிக்கும் 18 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டார்கள். ஜீ – 15 அரச தலைவர்களின் 14 ஆவது உச்சி மாநாடு நாளை (17) ஆரம்பமாகிறது. நேற்றைய மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெல்கிரேட்டில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 9ஆவது உச்சி மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய ஜீ – 15 அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒத்துழைப்பின் ஊடாக பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது இதன் நோக்கமாகும்.

பதினைந்து நாடுகளுடன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 18 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஈரான், அல்ஜீரியா, ஆர்ஜன்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஜெமெய்கா, மெக்ஸிகோ, கென்யா, நைஜீரியா, பேரு, செனகல்,  இலங்கை, வெனிசுலா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த நாடுகள் உலக சனத்தொகையில் 1/3 வீதத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதுடன் மசகு எண்ணெய் உற்பத்தியில் 25% இந்த நாடுகளால் மேற்கொள்ளப் படுகின்றன. நாளை ஆரம்பமாகும் 14 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக் குழுவினர் தெஹ்ரான் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிருதங்க வித்துவான் கே.சண்முகம்பிள்ளை கொழும்பில் நேற்று காலமானார்

பிரபல மிருதங்க வித்துவான் கே.சண்முகம்பிள்ளை தனது 92 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் காலமானார்.இலங்கை வானொலியின் ஆரம்பகால கலைஞர்களில் இவரும் ஒருவர். மிருதங்க வித்துவானாக விசேட தரத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்துள்ளார். பல பிரபல இலங்கை, இந்திய கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்து சிறப்பித்தவர்.

மிருதங்கக்கலையை குருகுல வாசம் முறையில் இந்தியாவின் குற்றாலம் சிவவடிவேல் பிள்ளையிடம் கற்றுக்கொண்டவர்.கலாசார அமைச்சு கலாபூஷண விருதையும்,டவர் ஹோல் நிதியம் கலா மாண்ய விருதையும் இவருக்கு வழங்கி கௌரவித்தன.

இவர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் மற்றும் பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் விஸ்வநாதன் ஆகியோரின் தந்தையுமாவார்.அன்னாரின் பூதவுடல் இல. 89/2, பஸல்ஸ் லேன், வெள்ளவத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கனத்தை இந்து மயானத்தில் நடைபெறும்.

யாழ்ப்பாணத்திலிருந்து பொலிஸ்சேவைக்கு தெரிவானோர் வடக்கில் கடமையாற்றுவர்

sri-lanka-police.jpgயாழ். மாவட்டத்திலிருந்து பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 355 தமிழ் இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதும் அவர்களுக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சிக்கல்லூரியில் ஆறு மாதகால பயிற்சியளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியைப் பெற்ற பின்னர் அவர்கள் தமிழ் பிரதேச பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுவார்கள்.இவ்வாறு யாழ். உதவிப்பொலிஸ் அத்தியட்சர் நிஹால் மெண்டிஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய நடமாடும் சேவை நேற்று சனிக்கிழமை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் 1975 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முப்பது வருடங்களின் பின்னர் தற்போதுதான் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்படுகின்றனர். அரசின் திட்டத்தின்படி மூவாயிரம் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.

எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் பொலிஸ் அத்திட்சர்களே கடமையாற்றுவார்கள்.களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பொலிஸ் சேவையில் சேர்ந்துள்ள சிங்கள இளைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளும் தமிழ் இளைஞர்களுக்கும் வழங்கப்படும்.தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உங்களின் பகுதிகளில் சேவையாற்றப்போவதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன்.

இங்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு விரைவில் நியமனக்கடிதம் வழங்கப்படும் என்றார்.பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நல்லுறவையும் ஐக்கியத்தையும் வளர்க்கும் நோக்கமாக இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் போக்குவரத்து விதிமுறைகள்,மது,போதைவஸ்து என்பவற்றை தடுப்பது சம்பந்தமான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.வறிய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட வெள்ளம் – 37,000 பேர் கடும் பாதிப்பு

9colombo.jpgநாட்டில் பரவலாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் சுமார் 7848 குடும்பங்களைச் சேர்ந்த 37,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் கரையோரத்தை அண்டியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்த போதும் கம்பஹா, களுத்துறை, கொழும்பு மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்பட்டன. கொழும்பு, களுத்துறை மாவட்டத்தில் சுமார் 4108 குடும்பங்களைச் சேர்ந்த 20,540 பேர் பாதிக்கப்பட்ட போதும் நேற்று இவர்கள் தமது வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். எனினும் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பகுதியில் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியதால் சுமார் 3740 குடும்பங்களைச் சேர்ந்த 16,410 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கான உடனடி நிவாரண உதவிகளை அந்தந்த கிராம சேவகர் மட்டத்தில் வழங்குவதற்கு அரசு நட வடிக்கை எடுத்துள்ளது. வத்தளை பகுதியில் 14 கிராம சேவகர் பிரிவுகளே பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, அழுத்கம, பண்டாரகம பகுதியே பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மதுரமீமுல்ல பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்த குடும்பங்கள் அப்புறப் படுத்தப்பட்டுள்ளன.  கொழும்பிலும், களுத்துறை மாவட்டத்திலும் மழை வீழ்ச்சி நேற்று குறை வாக காணப்பட்டதால் இடம்பெ யர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு நேற்று செல்ல ஆரம்பித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சராக சுபைர் நாளை பதவியேற்பு

கிழக்கு மாகாண சபையின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மொகமட் சரிப் சுபைர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை பதவியேற்கிறார்.

கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டி இடுவதற்காக மாகாண அமைச்சர் பதவியையும், சபை உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்த அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் சுபைர் புதிய அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

புதிய சுகாதாரத்துறை அமைச்சரின் பதவி ஏற்பு விழா நாளை திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு திருகோண மலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற வுள்ளது. நிகழ்வில் புதிய அமைச்சர் மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம முன்னிலையில் பதவி ஏற்பார் என ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.

சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றவர் கைது

பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற 14 வயதுடைய பாடசாலைச் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று தடுத்து வைத்த சம்பவம் தொடர்பாக 28 வயது டைய சந்தேக நபர் ஒருவரை பதுரலிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

பாடசாலைச் சிறுமி மோல்காவ அஸ்கெலிவத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர் வைத்திய பரிசோதனைக்காக நாகொட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. பதுரலிய பொலிஸார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில் கண்ணிவெடியகற்றும் வாகனம் தட்புரண்டதில் ஆறு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர்!

‘ஹலோட்ரஸ்ற்’ நிறுவனத்தின் கண்ணிவெடியகற்றும் வாகனம் ஒன்று நேற்று (15th May 2010) கண்ணிவெடியகற்றும் பணியினை முடித்துக் கொண்டு அலுவலகம் திரும்பும் வழியில், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் வைத்து தடம்புரண்டது. இதன்போது இவ்வாகனத்தில் பயணித்த அறு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். ஒன்பது பணியாளர்களை ஏற்றிக்கொண்டு குறித்த வாகனம் சென்று கொண்டிருக்கையில், எதிரே பாடசாலை மாணவர்கள் சென்றதால் சடுதியாக வாகனம் நிறுத்தப்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த பெண்பணியாளர்கள் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே வேளை, தற்போது வன்னியில் கண்ணிவெடியற்றும் பணிகளில் அதிகளவிலான தமிழ் யுவதிகள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

”குடாநாட்டில் குற்றச்செயல்கள் தொடருமானால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” யாழ். படைத்தளபதி

Mahinda_Hathrusinge_Major_Genயாழ். குடாநாட்டில் தொடர்ந்து குற்றச்செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில் தேவைப்பட்டால் மேலும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்.படைத்தளபதி  மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மக்கள் பீதியும் அச்சமுமின்ற வாழ வசதியாக பாதுகாப்பு விடயத்தில் சில கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

”குடாநாட்டில் தொடர்ந்து நடைபெறும் குற்றச்செயல்களை முடிவிற்கு கொண்டுவர அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இச்சம்பவங்களுக்கு காரணமான பலரை கைது செய்துள்ளோம். பொலிசார்  தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இக்குற்றச்செயல்களுக்கு பின்னணியில் இருப்பவர்களைக் கண்டு பிடித்து, சட்டம், ஒழுங்கைப் பேணி, மக்களின் அச்சத்தை நீக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குடாநாட்டில் சாவகச்சேரி மாணவனின் படுகொலையுடன் ஆரம்பித்து பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதனால் மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”வன்செயல்களை முடிவிற்கு கொண்டுவருவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் கலந்தரையாடியுள்ளேன். சட்டம் ஒழங்கை நிலைநாட்டி. மக்களின் அச்சநிலையைப் போக்கி, அவர்களுக்கான இயல்பு வாழ்வினை ஏற்படுத்த ஏற்பாடு செய்யுமாறு அவர் எமக்கு அறிவுறுத்தியுள்ளார். அவரது வழிகாட்டலில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாமல் விட்டால் மேலும் பல நடவடிக்கைளை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நீதிபதிகளுக்கோ, சட்டத்தரணிகளுக்கோ, வேறு எவருக்குமோ அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நாம் வழங்குவோம்” என்றும் படைத்தளபதி குறிப்பிட்டார்.

”சட்டத்தரணிகள் தங்கள் பகிஸ்கரிப்பு நடவடிக்கையை நிறுத்தி சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இச்செய்தியை உங்களிடம் கூறுமாறு பாதுகாப்புச் செயலாளர் என்னைப் பணித்துள்ளார்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  நேற்று நடைபெற்ற இச்சந்திப்பில்; யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜாவும் கலந்து கொண்டார்.

சட்ட விரோத ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியாவில் கடும் சட்டம்

australias.jpgதமது நாட்டுக்கு ஆட்களைக் கடத்தி வருவதைத் தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.  இதற்கென ‘ஆட்களைக் கடத்துவதற்கு எதிரான சட்டமூலம் 2010’ அறிமுகப் படுத்தப்படுகிறது. இதன்மூலம், ஆட்களைக் கடத்தும் சம்பவங்களைப் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கையாள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழி வகுக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய சட்ட மா அதிபர் றொபர்ட் மெக்கலண்ட் எம்.பி, குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் செனட்டர் கிறிஸ் ஈவன்ஸ், உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ ‘ கொனர் எம்.பி. ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்து வதற்கான சட்ட மூலத்தை விபரித்துள்ளனர்.

புதிய சட்ட மூலத்தின் பிரகாரம், அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுத் துறையினருக்கு, ஆட்கடத்தல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.  தவிரவும், ஆட்கடத்தலுக்கு நிதியுதவி அளிப்பது ஆதரவளிப்பதும் பாரதூரமான குற்றமாகக் கருதப்படும்.

அவ்வாறு உதவிபுரிந்து குற்றவாளியாகக் காணப் படுபவருக்கு 10 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனையோ அல்லது 110,000 டொலர் அபராதமோ அல்லது இரண்டு தண்டனையுமோ விதிக்கப்படும்.

கடத்தலில் ஈடுபடுவதுடன் அவர்களிடம் பணம் பரித்தல் உயிராபத்தை ஏற்படுத்தல் அல்லது கடுமையான பாதிப்புகளை உண்டுபண்ணுவோருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையோ அல்லது 2,20,000 டொலர் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.

வெள்ளத்தில் மூழ்கிய தலைநகர் – இயல்பு நிலை ஸ்தம்பிதம்

9colombo.jpgகொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்று (14) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையின் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் கூடுதலான பாதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடி, மின்னல் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் வீடுகளும் இதர கட்டடங்களும் சேதமாகியுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமுற்றுள்ளனர். வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும் வெள்ளப் பெருக்கினாலும் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன.

கொழும்பு நகரின் பல வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அன்றாட அலுவல்கள் ஸ்தம்பிதமடைந்தன. வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துகள் முடங்கின. பொதுமக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளானதோடு, அரச, தனியார் அலுவலகப் பணியாளர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் அவதியுற்றதைக் காண முடிந்தது.

சனப்புழக்கம் கூடுதலாக உள்ள கேந்திர முக்கியத்துவமான வியாபார வீதிகளில் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொருள் சேதமும் ஏற்பட்டிருந்ததையும் காண முடிந்தது. சில பாடசாலைகள் மூடப்பட்டதுடன், இயங்கிய பாடசாலைகளில் மாணவர்கள் வரவு குறைவாகக் காணப்பட்டது. நேற்றுப் பிற்பகல் வரை கொழும்பு நகரில் இந்த ஸ்தம்பித நிலை நீடித்தது.

கொழும்பில், கொட்டாஞ்சேனை, ஜோர்ஜ் ஆர். டி. மாவத்தை, ஆமர் வீதி, ஹெட்டியாவத்தை, புலுமெண்டல் வீதி, ஜம்பட்டா வீதி, கிராண்ட்பாஸ், தெமட்டகொட பேஸ் லைன் வீதி, தர்மராஜ வீதி, கிருலப்பனை பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பகுதி, கறுவாத்தோட்ட பகுதியில் பல்கலைக்கழக வீதி, தேஸ்டன் கல்லூரி வீதி, பிளவர் வீதி, ஹோர்டன் வீதி, உட்பட பல வீதிகள் நீரில் மூழ்கியிருந்தன. இதனால் காலை வேளையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

களுத்துறை பகுதியில் கொழும்பு- மத்துகம வீதி, வெலிபென், ஹொரன, பன்னல, அளுத்கம- மதுகம வீதிகள் நீரில் மூழ்கின. கம்பஹா, காலி ஆகிய பகுதிகளிலும் பல வீதிகள் நீரில் முழ்கியதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. மாலபே- கண்டி வீதி பியகம வீதி என்பனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.

மேல் மாகாணத்தில் ஓரிரு தினங்கள் தொடர்ந்து காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளைகளில் மழையை எதிர்பார்ப்பதாகவும் காலநிலை அவதான நிலையம் கூறியது. இதேவேளை மின்னல் தாக்கியதில் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் ஒரு பகுதி கூரை சேதமாகியுள்ளது.

9colombo.jpg