எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையம் – வடபகுதி மக்களுக்கு விமோசனம்

sri-lanka-petroleum.jpgவவுனியாவுக்கு வடக்கே எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான எரிபொருள் விநியோக உப நிலையம் நேற்று வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது. இதுவரை காலமும் அனுராதபுரத்திலிருந்தே எரிபொருள் விநியோகம் பெளசர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது ரயில் மூலம் வட பகுதிக்கான எரிபொருள் விநியோகமும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் வன்னி மாவட்டத்தில் 13 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கும் திட்டத்தின் கீழ் எட்டாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைச்சர் சுசில் கிளிநொச்சி நகரில் திறந்துவைத்தார்.

பெளஸர்கள் மூலம் எரிபொருள் வட பகுதிக்கு கொண்டு செல்வதால் போக்குவரத்துச் செலவுடனேயே வடபகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில்கள் மூலம் எரிபொருட்களை வட பகுதிக்கு கொண்டு செல்வதன் ஊடாக செலவினம் குறைக்கப்படுவதுடன் அந்த செலவினத் தொகையை நிவாரணமாக வடபகுதி மக்களுக்கே பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

1989 களில் வவுனியாவில் இயங்கிவந்த எரிபொருள் விநியோக நிலையம் கடந்த காலங்களில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்தது. வவுனியா குட்செட் வீதியில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலமைந்துள்ள மேற்படி விநியோக உப நிலையம் மீண்டும் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புதிய எரிபொருள் நிலையங்களை அமைத்து வருகிறது.

மீண்டும் இன்று (14ம் திகதி, எரிபொருள் நிரப்பிச் செல்லும் சரக்கு ரயில் வவுனியா நோக்கி புறப்படவுள்ளது. அனுராதபுரம் எரிபொருள் விநியோக உப நிலையத்திலிருந்தும் வவுனியா உப நிலையத்திற்கும் எரிபொருள் அனுப்பப்படவுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உகண்டா குண்டு வெடிப்பில் கொட்டாஞ்சேனை ராமராஜா கிருஷ்ணராஜா (50) பலி

உகண்டா குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளி விவகார அமைச்சு கென்னிய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித் தார்.

கொழும்பு 13, சென். பெனடிக் மாவத்தையைச் சேர்ந்த ராமராஜா கிருஷ்ணராஜா (50) எனும் குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் 2008ஆம் ஆண்டு முதல் உகண்டாவிலுள்ள இந்திய கம்பனியொன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றி வந்துள்ளார். இக்குண்டு வெடிப்புகளில் 74 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்புக்கு வெளியில் முதன்முறையாக கிளிநொச்சியில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

p.jpgஅரசாங் கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்புக்கு வெளியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கிளிநொச்சி படைத் தலைமையகத்தில் அமைச்சரவை கூடவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது.

கொழும்புக்கு வெளியில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைச்சரவைக் கூட்டங்களை நடாத்த அமைச்சரவை தீர்மானித்திருந்தது. இதன் பிரகாரம் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடத்தப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நடைபெறும். மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் ஜனாதிபதி சந்தித்து பேச உள்ளார். இன்று மாலை இரணைமடுவில் ஜனாதிபதி தலைமையில் பொதுக் கூட்டமொன்றும் நடாத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது.
இதனை குறிக்கும் வகையில் பல அபிவிருத்தித் திட்டங்களும் அங்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

கே பி யின் தற்போதைய நிலையைக் காட்டும் புதிய படம்!

Kumaran_Pathmanathan_New_Photoகே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனுடைய புதிய படம் ஒன்று இணையங்களில் உலாவருகின்றது. விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய நபரான இவரது உண்மைத் தோற்றம் கடந்த பல ஆண்டுகளாக அறியப்படாத இரகசியமாகவே பேணப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலங்களில் எடுக்கப்பட்ட படங்களால் மட்டுமே இவர் அறியப்பட்டு வந்தார்.

Kumaran_Pathmanathan_New_Photoதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளராக அறிவிக்கப்பட்ட போது ஒரு படம் வெளியிடப்பட்டு இருந்த போதும் அது கே பியின் உண்மைத் தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கவில்லை. அதன்பின் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட பின் வெளியிடப்பட்ட படமே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது கே பி யின் புதியபடம் ஒன்று இணையங்களில் உலாவவிடப்பட்டு உள்ளது. கைத்தொலைபேசியுடனும் சிரித்த முகத்துடனும் சந்தோசமான மனநிலையுடன் இவர் காணப்படுகின்றார். இப்படம் இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட படமா அல்லது கே பி க்கு எதிரானவர்களால் கே பி இலங்கை அரசின் ஆதரவில் மகிழ்ச்சியாக உள்ளார் என்பதை வெளிப்படுத்த அனுமதியற்று எடுக்கப்பட்ட படமா என்பது தெரியவில்லை.

அமிர்தலிங்கம். யோகேஸ்வரன் ஆகியோரது 21வது நினைவுநாள் இன்று நினைவு கூரப்பட்டது.

Amirthalingam_A_TULFதமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும் 21வது நினைவு தினம் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்.மாவட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா தலைமையில்  இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரை கூட்டணியின் முன்னால் உடுவில் கிராமசபை தலைவர் ச.முத்துலிங்கம்.  கூட்டணியின் முத்த உறுப்பினர்களில் ஒருவரான த.பூலோகரட்ணம் ஆகியோர் ஏற்றினர்.  அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலத்தப்பட்டது.

தொடர்ந்து நினைவுரைகள் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் செ.முத்துலிங்கம், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் செ. விஜயரத்தினம், ச.முத்துலிங்கம், திருஞானசம்பந்தர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்த நன்றியுரையினை தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகச்செயலாளர் த.கஜன் நிகழ்த்தினார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

”தர்சிகாவின் மரணம் குறித்த உண்மை நிலை தெரிவது அத்தியாவசியமானது.” ஈ.பி.டி.பி அறிக்கை!

மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு உண்மைகள் வெளிவரவேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 ‘வேலணை மத்திய மருந்தகத்தில் குடும்பநல உத்தியோகத்தராகப் பணியாற்றி கடந்த 10ஆம் திகதி மரணமடைந்த கைதடி தெற்கைச் செர்ந்த தர்சிகா என்ற பெண்ணின் மரணம் தொடர்பர்க மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. இது தொடர்பாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவோடு பல்வேறு தரப்பினர் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் இம்மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இவ்விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு மக்கள் மத்தயில் நிலவுகின்ற சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். குறித்த மரணம் தெர்டர்பாக மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதால் தீவப்பகுதி உட்பட யாழ்.குடாநாட்டில் ஒருவித பதற்ற நிலை உருவாகி வருகின்றது. எனவே, விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு உண்மை நிலை பொதுமக்களுக்கு தெரிய வேண்டியது அத்தியாவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, தர்சிகாவின் இறுதிக் கிரிகைகள் நேற்று கைதடி தெற்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட குடும்ப நல சுகாதார சேவைகள் ஊழியர்கள் அனைவரும் கறுப்புப்பட்டி அணிந்து தர்சிகாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரேத ஊர்வலம் கைதடிச் சந்தியை அடைந்தபோது, சந்தியில் நின்று அரை மணிநேரம் வரையில் மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துக்கள் சில நிமிடங்கள் தடைப்பட்டன.

பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமென இஸ்லாம் வலியுறுத்து – அமைச்சர் பீரிஸ்

gl.jpgஇனங்களுக் கிடையில் புரிந்துணர்வு, நல்லெண்ணம் ஏற்படுவதன் மூலம் சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும். கருத்துக்களை பரிமாறி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார். கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜம்மியதுல் இஷாஅதுல் அஹ்லுஸ் ஸ¤ன்னா அமைப்பு ஏற்பாடு செய்த இக் கருத்தரங்கிற்கு மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா தலைமை வகித்தார்..இந்தியா, மாலைதீவு, பாகிஸ்தான், கட்டார், எகிப்து, சவூதி அரேபியா, யமன், லிபியா உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் மார்க்க அறிஞர்கள் இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட உலமாக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட அரசியல் பிரமுகர்கள், முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் பங்குபற்றிய இக் கருத்தரங்கில் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தொடர்ந்து உரையாற்றும் போது; தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.1 ஆக காணப்படுகின்றது. நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை காணப்படுவதன் காரணமாக இந்த வளர்ச்சி வீதம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்து வதன் மூலம் எமக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வும் நல்லுறவும் ஏற்படுவதன் மூலமாக நாட்டில் சமாதானத்தை இலகு வாக கட்டியெழுப்பலாம். இனங்களுக் கிடையே முரண்பாடுகளை கலைப்பதற்கு ஒவ்வொருவரிடமும் நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

ஆயுதக் கலாசாரமும், போராட்டங்களும் உலகில் சமாதானத்திற்கு தடையாக உள்ளது. சமய விழுமியங்களின் அடிப்படையில் செயல்பட்டால் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும். இன்றைய கால கட்டத்தில் இது போன்றதொரு உலக சமாதான மாநாடு இலங்கையில் நடைபெறுவது மிகப் பொருத்தமானது. மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் அமைதியான சூழ்நிலையில் சமாதானத்தை வலியுறுத்தும் இந்த மாநாடு எமது நாட்டிற்கு மிகவும் அவசியமானதொன்றாகும்.

இஸ்லாம் சாந்தி சமாதானத்தை வலியுறுத்துகிறது. புனித அல்குர்ஆனும், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாக்கும் உலகில் முழுமையாக பின்பற்றப்படுமேயானால் எந்தப் பிரச்சினைகளுக்கும் வழி ஏற்படாது. புனித அல்குர்ஆனையும், அல்ஹதீஸையும் முழுமையாக படிக்கும் ஒரு மனிதன் ஒரு போதும் வழிதவற மாட்டான் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.

எமக்கிடையேயான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என்பதை புனித இஸ்லாம் வலியுறத் துகின்றது. அதற்காகவே ‘சூறா’ அமைப்பு முறை இஸ்லாம் சமயத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அயல் வீட்டாரை நேசிக்கும் பண்பும் நட்புறவும் மனித சமுதாயத்தை மேம்பாடடைய செய்யும். அயலாரை நேசிக்கும் இஸ்லாத்தின் உயரிய பண்பை கற்றுக்கொண்ட எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது அயல் நாடான மாலைதீவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுத்தார்.

இது எம் அனைவரிற்கும் சிறந்ததொரு முன்னு தாரணமாகும். இந்த வழியில் பயணித்து அனைத்து தரப்புக்களும் ஒன்றுபட்டு புரிந்துணர்வுடன் செயல்பட முடிந்தால் எமது நாட்டிலும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்று சமாதானத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த சமாதான மாநாட்டில் பங்குபற்ற வருகைதந்துள்ள இஸ்லாமிய நாடுகளின் அறிஞர்களை இலங்கை அரசு சார்பில் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இந்த மகாநாட்டினை சிறப்பாக ஒழுங்கு செய்தமை குறித்து நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.

சட்டவிரோதமான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவு , கொக்கொட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களில் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் இன்று மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த பெருமளவிலான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைப் பணிப் பெண்கள் பஹ்ரைனில் வேலை பகிஷ்கரிப்பு

housemaids.jpgபஹ்ரைன் நாட்டிலுள்ள சுமார் 800 இலங்கைப் பணிப் பெண்கள் வேலைப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது. இவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வேலைப் பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டுவர தூதரக அதிகாரிகளினூடாக நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக மேலதிக பொது முகாமையாளர் எம். ருகுணுகே நேற்று கூறினார்.

13 மணி நேரம் வேலை வாங்குவதாகவும் உரிய சம்பளம் வழங்குவதில்லை எனவும் தொழிலாளர்களின் நலன்களை கவனிப்பதில்லை என்றும் கூறி மேற்படி இலங்கைப் பணிப்பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். உணவு மற்றும் குடிநீர் என்பன உரிய முறையில் வழங்குவதில்லை எனவும் இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இலங்கைப் பணிப்பெண்களின் போராட்டம் குறித்து குவைத் தூதரகம், பஹ்ரைன் கொன்சூலர் பிரிவு என்பவற்றினூடாக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ருகுணுகே கூறினார். இலங்கைப் பணிப்பெண்கள் இன்று முதல் வேலைக்குத் திரும்பும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பம்

அமைச்சரவைக் கூட்டம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயம் என்பவற்றையொட்டி கிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இன்றும் நாளையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன. இந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்டச் செயலக மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டமொன்றும் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பல கிளிநொச்சியில் நடைபெறுவதையிட்டு கிளிநொச்சி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உட்பட அரச உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி இன்று காலை கிளிநொச்சி கரச்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துடன் இணைந்ததான எரிபொருள் நிரப்பும் நிலையத்தினை பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். நாளைய தினம் 14ம் திகதி கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையும் மில்கோ நிறுவனமும் இணைந்து கிளிநொச்சியில் பால் பொதிசெய்யும் தொழிற்சாலையொன்றை அமைக்கவுள்ளதுடன் இத்தொழிற்சாலையை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.

அத்துடன் கலாசார அமைச்சு ஏற்பாடு செய்துள்ள மாவட்டக் கலாசார பயிற்சிப் பட்டறை நிகழ்வொன்று மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதுடன் இந்நிகழ்வில் அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி கலந்துகொள்ளவுள்ளார். சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் மக்கள் சேவை நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இந்நிகழ்வில் கலந்துகொள்வார். குறிப்பாக வட மாகாணத்திலுள்ள முதியோர் பயன்பெறும் வகையில் இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.

அதேவேளை; நேற்று முன்தினம் அமைச்சர் டியூ குணசேகரவின் தலைமையில் விசேட நடமாடும் சேவை கிளிநொச்சியில் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.