மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு உண்மைகள் வெளிவரவேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘வேலணை மத்திய மருந்தகத்தில் குடும்பநல உத்தியோகத்தராகப் பணியாற்றி கடந்த 10ஆம் திகதி மரணமடைந்த கைதடி தெற்கைச் செர்ந்த தர்சிகா என்ற பெண்ணின் மரணம் தொடர்பர்க மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. இது தொடர்பாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவோடு பல்வேறு தரப்பினர் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் இம்மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இவ்விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு மக்கள் மத்தயில் நிலவுகின்ற சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். குறித்த மரணம் தெர்டர்பாக மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதால் தீவப்பகுதி உட்பட யாழ்.குடாநாட்டில் ஒருவித பதற்ற நிலை உருவாகி வருகின்றது. எனவே, விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு உண்மை நிலை பொதுமக்களுக்கு தெரிய வேண்டியது அத்தியாவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, தர்சிகாவின் இறுதிக் கிரிகைகள் நேற்று கைதடி தெற்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட குடும்ப நல சுகாதார சேவைகள் ஊழியர்கள் அனைவரும் கறுப்புப்பட்டி அணிந்து தர்சிகாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரேத ஊர்வலம் கைதடிச் சந்தியை அடைந்தபோது, சந்தியில் நின்று அரை மணிநேரம் வரையில் மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துக்கள் சில நிமிடங்கள் தடைப்பட்டன.