எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

“தமிழ் மக்கள் வாழ்வில் அமைதியை உருவாக்க அரசு துரித நடவடிக்கையெடுக்க வேண்டும்’

வன்னியில் அவதியுறும் தமிழ் மக்களின் வாழ்வில் அமைதியான வாழ்க்கையை உருவாக்க அரசாங்கம் துரித நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு வடக்கு ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான சீ.பி.வை.ராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் தமிழ் மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாழும் சூழலை பாகுபாடின்றி மகிந்த ராஜபக்ஷ, ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணக்கப்பாட்டோடு வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் இன்று இடம்பெயர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ள முடியும். விஷேடமாக கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் தொழிலுக்காக தங்கியுள்ளவர்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக வருவோர் தமது தேவைகளை தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்.

சுதந்திரமாக அச்சமின்றி நடமாடும் உரிமைகளையும் வழங்கி அங்கலாய்ப்பின்றி அமைதியாக வாழும் உரிமைகளுக்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களும் இலங்கையர்களே என்ற எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட வேண்டும். விஷேடமாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை களைவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இனங்களிடையே நல்லுறவு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது அரசின் தேவையாகும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நம்பிக்கையோடு வாழும் நிலைமையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து இடம் பெயர்ந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

அமெரிக்கா வழங்கிய பொருட்களை வன்னிக்கு அனுப்பமுடியாத நிலை

vanne.jpgவன்னியில் அகதிகளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு விநியோகிப்பதற்காக உலக உணவுத்திட்டத்துக்கு அமெரிக்கா வழங்கிய 6.9 மில்லியன் டொலர் பெறுமதியான உணவுப்பொருட்களை அந்த மக்களுக்கு வழங்குவதை காலவரையரையின்றி இடை நிறுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய ஊடகப்பேச்சாளர் கோர்டன்வைஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கில் யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் பணிகளில் ஈடுபடமுடியாத நிலையே இதற்கான முக்கிய காரணமாகும் .2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டதன் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதால் அங்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கும் கூடதலானோர்போர்முனைப்பகுதியில் சிறையுண்டிருப்பதால் அந்த மக்களுக்கு எந்தவித உணவு நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கோர்டன் வைஸ் தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி அமெரிக்கா வழங்கிய நிவாரணப்பொருட்களும் தம்மிடமுள்ள மனிதாபிமான உதவிகளும் களஞ்சியப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததால் மாத்திரமே நிவாரண உதவிகளை அங்கு கொண்டு சென்று விநியோகிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை படம் எடுக்க ஊடகவியலாளர்களுக்கு தடை

வன்னிப் பகுதியில் இடம்பெற்று வரும் அகோர ஷெல் தாக்குதல் படுகாயங்களுக்கு உள்ளாகி வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் பொதுமக்களை புகைப்படங்கள், வீடியோ படங்கள் எடுப்பதற்கு பொலிஸார் ஊடகவியலாளர்களுக்கு தடைவிதித்துள்ளனர். மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவினால் ஊடகவியலாளர்களுக்கு இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்கள் தொடர்பான படங்கள், விபரங்கள் வெளியுலகுக்கு தெரியக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள காயமடைந்த வன்னி மக்களை வவுனியாவில் உள்ள அவர்களின் உறவினர்களும் சந்தித்துப் பேசுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன

தமிழகம் முழுவதும் காலவரையின்றி கல்லூரிகள் மூடல் – விடுதிகளையும் காலி செய்ய உத்தரவு

college.jpgதமிழகம் முழுவதும் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து தனியார், அரசு கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகளை மூட அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் சில கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில், கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், விடுதிகளை மறு உத்தரவு வரும்வரை உடனடியாக மூடுமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு நேற்று இரவு தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ஏற்கனவே சில கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழ்நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

போர் நிறுத்தம் கோரி தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்தவர் கைது!

சென்னை சென்ரல் ரெயில் நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீக்குளிக்க முடிவு செய்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் இன்று காலையில் சென்ரல் ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிற்பகல் வரை யாரும் வரவில்லை.

இதற்கிடையில் திடீரென்று மாலையில் வாலிபர் ஒருவர் இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் போட்டபடி கையில் பெட்ரோல் கேனுடன், மெமோரியல் ஹால் அருகே வந்தார். இது பற்றி தகவல் கிடைத்தவுடன் பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரது பெயர் ராஜி என்ற ராஜசேகரன். சென்னை ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவர் சப்ளையராக பணிபுரிகிறார். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக அவர் மீது வழக்கு போட்டு நீதிமன்ற காவலில் அவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.

மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே ரவி தீக்குளித்தார் – டிஜிபி ராஜேந்திரன்

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளிக்கவில்லை. மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே தீக்குளித்தார் என டிஜிபி ராஜேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (40). இவர் மனைவி சித்ரா. 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு வருவது உண்டு. ரவி மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. 3 கஞ்சா வழக்குகள், 2 கள்ளச் சாராய வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். அவற்றில் 4 வழக்குகளில் தண்டனை கிடைத்து விட்டது. கடைசி வழக்கில் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

ரவி தனது மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு 30-ந் தேதி மாலை 5 மணி அளவில் வீட்டின் அருகே தீக்குளித்து விட்டார். அதைத் தொடர்ந்து அவரை நிலக்கோட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரிடம் மரண வாக்குமூலம் கேட்கப்பட்டது. மரண வாக்குமூலம் தர அவர் மறுத்துவிட்டார். தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் ரவி தீக்குளித்தாரே தவிர, வேறு எதற்காகவும் அல்ல என்றார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செல்போன் டவரிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயற்சி.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் ஒரு இளைஞர் செல்போன் டவரிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பலத்த காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்தார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் ரவி என்பவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போன் டவரிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேத்தியாத்தோப்பைச் சேர்ந்தவர் தீனதயாளன். 22 வயதாகும் இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக கட்சி சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நடந்து வந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அங்கிருந்த ரிலையன்ஸ் செல்போன் டவர் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்தார் தீன தயாளன். அப்போது அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

நடிகர் நாகேஷ் உடல் தகனம்

nagesh.jpgசென்னையில் நேற்று காலமான நடிகர் நாகேஷின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தினர். உடல்நலக் குறைவால் அவதிபட்டு வந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார்.

நாகேஷின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல், சோ, கே.ஆர்.விஜயா, சச்சு, பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உட்பட பலர் நாகேஷின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர் காலை 10.30 மணியளவில் நாகேஷ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 11 மணியளவில் இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மயானத்தை சென்றடைந்தது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன.  இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

வடக்கில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு தெற்கில் அரச பயங்கரவாதம் தலைதூக்குகிறது – திஸ்ஸ அத்தநாயக்க

மக்களை அச்சுறுத்தும் வகையில் இரு டிபென்ட்டர் வாகனங்களில் ஆயுததாரிகள் மாத்தளை பிரதேசத்தில் நடமாடி வருவதை ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். மாத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இத்தகவலை தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க,ஆயுதங்களுடன் இந்த வாகனங்களில் பயணம் செய்பவர்கள் சோதனைச் சாவடிகளில் ஆள் அடையாளத்தைக் காட்டி விட்டு அச்சமின்றிச் செல்கின்றனர் என்றார்.

தம்புள்ள வீதியில் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் வீட்டுக்கு முன்னாள் பொலிஸ் அனுமதியின்றி வீதித் தடைகள் போடப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வாகனங்களில் செல்வோர் அடையாளம் காணப்படுகின்றனர்.  மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிந்து கொண்ட பின் அதனைத் தடுப்பதற்காக இவ்வாறு அரசு நடந்து கொள்கின்றது.

மகிந்த சிந்தனையை மத்திய மாகாண மக்கள் புறக்கணித்து விட்டனர் என்பதையே தேர்தல் நிலைமைகள் வெளிப்படுத்துகின்றன.  வடக்கே யுத்தத்தில் 98 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் மீதி 2 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும் அரசு கூறி வருகிறது. கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு இயல்பு நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே மீதி 2 சதவீத வெற்றியை அரசு பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

வடக்கில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு வருகின்ற போதும் தெற்கில் அரச பயங்கரவாதம் தலைதூக்கும் நிலைமை தோன்றியுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 48 மணிநேரக்காலக்கெடு முடிவடைந்துவிட்டது. ஆழ ஊடுருவும் படை ஊடுருவுமா? – ஏகாந்தி

sl_navy.jpgஇலங்கையில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்றுவரும் யுத்தத்தில் மனிதாபிமான நெருக்கடிமிக்க ஒரு கட்டத்தில் தற்போதைய யுத்த நிலை காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மாவிலாறில் ஆரம்பித்த எதிர்நடவடிக்கை படிப்படியாக முன்னேற்றமடைந்து இன்று விடுதலைப்புலிகளின் பலத்தை சுமார் 35 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவமிக்க பல இடங்களை படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவை கைப்பற்றுவதில் அரச படையினர் முழுமூச்சாக இருப்பதாக தெரிகின்றது.

இங்கு அவதானிக்கக்கூடிய முக்கிய விடயம் விடுதலைப் புலிதரப்பில் கட்டுப்பாட்டுப் பிரதேச எல்லை சுருங்கியுள்ளதால் இப்பிரதேசத்தினுள் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை என்னவாகும் என்பதாகும்.

வன்னி நிலப்பரப்பில் அகப்பட்டிருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கைப் பற்றி இதுவரை உத்தியோகபூர்வமான கணிப்பீடு வெளியிடப்படவில்லை. பொதுவாக 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் இப்பிரதேசத்தினுள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. நேற்றைய தினம் (31) அமைச்சர் மஹிந்த சமரசிங்க முல்லைத்தீவுப் பிரதேசத்தினுள் 1 இலட்சத்து 20ஆயிரம் மக்கள் இருப்பதாக கிடைக்கும் தகவல்களின் ஊடாக உறுதிப்படுத்த முடியுமென தெரிவித்தார்.

எவ்வாறாயினும் முல்லைத்தீவுப் பிரதேசத்துக்குள் பெருமளவு பொதுமக்கள் சிக்குண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் வன்னி நிலப்பரப்பில் மோதல் நடைபெறும் பிரதேசங்களிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு அரசாங்கம் வழங்கிய நாற்பத்தெட்டு மணித்தியால கால அவகாசம் நேற்று இரவுடன் முடிந்தது.

palitha_koahana.jpg48 மணி நேர கெடு முடிந்ததும், ராணுவம் தாக்குதலைத் தொடங்கி விடும் என இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொஹனா எச்சரித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த கெடுவை ஏற்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே இடம் பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது பற்றி இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தகவல் தெரிவிக்கையில்  கடந்த 48 மணி நேரத்தில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 171 சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக  தெரிவித்தார். அதேநேரம்,  பாதுகாப்புப் படையினரால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கி பொது மக்கள் வருகை தந்துள்ளனரா இல்லையா என்பது தொடர்பாக தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசுவமடு பிரதேசத்தை நோக்கி நேற்றுக் காலை 16 குடும்பங்களைச் சேர்ந்த 63 சிவிலியன்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் 38 ஆண்களும், 25 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, முல்லைத்தீவு வலைமடு பிரதேசத்திலிருந்து புல்மோட்டையை நோக்கி 43 சிவிலியன்கள் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.

43 சிவிலியன்களில் 16 சிறுவர்களும், 14 ஆண்களும், 13 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு சிறிய ரக படகுகள் மூலமே இவர்கள் வருகைத் தந்துள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, வவுனியா, ஓமந்தைச் சோதனைச் சாவடியை நோக்கி 35 குடும்பங்களைச் சேர்ந்த 65 சிவிலியன்கள் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான நேரத்திற்குள் வருகை தந்துள்ளனர். இந்த 65 சிலியன்களில் 12 சிறுமிகள், 10 சிறுவர்கள், 34 பெண்கள் மற்றும் 9 ஆண்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்த நிலையில், 48 மணி நேர கெடு முடிந்துள்ள நிலையில் இராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்குமிடத்து பொதுமக்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியாகிவிக் கூடிய நிலையுள்ளதுடன்,  ராணுவம் நடத்தப் போகும் கடும் தாக்குதலில் சிக்கி பெருமளவில் உயிரிப்புகள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு, விஸ்வமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் யுத்தம் நடைபெறுகின்றது. பரந்தன் முல்லைத்தீவு வீதியில் A35 மையமாக வைத்தே நடைபெறும் இந்த யுத்தம் முடிவுக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக படைத் தரப்பு கூறுகின்றது. 15 கிலோமீற்றர் X 15 கிலோமீற்றர் பரப்பளவில் புலிகள் உள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படும் அதேநேரத்தில் இப்பகுதியினுள்ளே பொதுமக்களை கேடயங்களாக புலிகள் பயன்படுத்தி வருவதாகவும் அரச தரப்பு அறிவிக்கின்றது.

தற்போது புலிகளின் வசம் எஞ்சியிருக்கும் முக்கிய நகரான புதுக்குடியிருப்பை பிடித்துவிடவே படையினர் முயல்கின்றனர். இந்த நகரையும் கைப்பற்றி விட்டால் A35 வீதியையும் கைப்பற்றி புலிகளுக்கான கடைசி விநியோகப் பாதையையும் மூடிவிட முடியும் என கருதுகின்றனர். அத்துடன்,  புலிகளின் பகுதியையும் மிகவும் குறுகளாக்கி A35 வீதிக்கு வடக்கே செவ்வகம் போன்றதொரு பகுதிக்குள் முடக்கிவிட வேண்டுமென கருதுவதால் எட்டுத் திக்கிலிருந்தும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம் விடுதலைப் புலிகள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும், முல்லைத்தீவு கடற்பரப்பில் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிவேக டோறா பீரங்கிப் படகுகள், தாக்குதல் படகுகள், விரைந்து தாக்குதலை நடத்தும் படகு அணிகள் என முல்லைத் தீவு முதல் வட மேற்கே சாலை வரையான கடற்பரப்பு பலத்த பாதுகாப்பு வலயமொன்றை அமைத்துள்ளனர். தரையில் தற்போது படையினர் புலிகளின் பகுதியை U வடிவில் சுற்றி வலைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Protest_UK_Jan31எனவே இலங்கையின் களநிலைகள் இவ்வாறிருக்க முன்னெப்போதுமில்லாத வகை சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் உணர்வலைகள் ஒன்றிணைந்து வெளிப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது. ஆனாலும்,  இத்தகைய கவனயீர்ப்பு நடவடிக்கைகளினால் இலங்கை அரசாங்க நடவடிக்கைகளுக்கு பாரிய தாக்கங்கள் ஏற்படுவதை காணமுடியவில்லை.

banki-moon.jpgசிலதினங்களுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பங்கிமூங் வெளியிட்டிருந்த கருத்துக்களைப் பார்க்கும்போது வன்னியில் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு வலயமொன்றை அறிவித்தமையை பான் கீ மூன் வரவேற்றிருந்தார்.

மோதல் நடைபெறும் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களின் நிலை குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை இராணுவத்தினருக்கும்,  விடுதலைப் புலிகளுக்கும் ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் போர்நிறுத்தத்திற்கான சர்வதேசத்தின் அழைப்புகளுக்கு மத்தியிலும் வெற்றியில் கவனத்தைக் குவித்து இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், தங்களுக்கு பாதுகாப்பான இடம் எதுவென்று மக்கள் உணருகிறார்களோ அங்கு செல்வதற்கு மக்களை அனுமதிக்கவேண்டுமென விடுதலைப்புலிகளைக் கோரியுள்ள ஐ.நா.செயலர், மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்கள் சர்வதேச நடைமுறைமைகளுக்கேற்ப நடத்தப்படுகிறார்கள் என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வன்னி மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளபோதிலும் அங்குள்ள மக்களின் நிலை குறித்து தான் தொடர்ந்தும் கவலையடைவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் பிரகாரம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வெளியேறுவதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை உண்மைத் தன்மையுடன் ஏற்படுத்தவும் தம்மால் இயன்ற அனைத்தையும் விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் மேற்கொள்ளவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதவிர, விரும்பிய இடங்களுக்கு மக்கள் செல்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனிதாபிமான அமைப்புகள் முழு அளவில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் நிலைவரம் மிகவும் துக்ககரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அரச திணைக்களம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா.வின் உதவி அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. அரச திணைக்களத்தில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் நாளாந்த நிகழ்வின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த திணைக்களத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ரொபேர்ட் வூட், மோதல்கள் விரைவில் முடிவுக்கு வருமென அமெரிக்கா நம்புவதாகவும் தெரிவித்தார்.

unicef_2301.jpgஇந்நிலையில், மோதல் பகுதிக்குள் சிக்குண்டுள்ள சிறுவர்களின் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்), கொல்லப்படும் அல்லது காயமடையும் சிறுவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.  மேலும் இங்கு நடைபெறும் மோதல்களால் சிறுவர்கள் கொல்லப்படுவது குறித்தும் காயமடைவது குறித்தும் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக யுனிசெப்பின் தென்னாசியாவுக்கான பிராந்திய பணிப்பாளர் டானியல் ரூல் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு சூழ்நிலையிலும் பாடசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் என்பன பாதுகாப்பு வலயங்களாக கருதப்படவேண்டுமெனத் தெரிவித்துள்ள அவர், மோதல் பகுதிக்குள் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சிக்கியிருப்பது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இப் பகுதிகளில் இருக்கும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமெனவும் யுனிசெப் அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுள்ளது.

redcrose2801.jpgமோதல்கள் காரணமாக காயமடைந்து வன்னிப் பிரதேசத்தின் மீட்கப்படாத பிரதேசங்களில் சிக்கியிருக்கும் பொது மக்களை அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டு வருவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு (ஐ.சி.ஆர்.சி) அரசாங்கத்துடனும் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கின்றது.  அரச கட்டுப்பாடற்ற பகுதியில் மேலதிக வைத்திய உதவி தேவைப்படும் மக்கள் பெருமளவில் உள்ளனர். இந்நிலையில் அவசர சிகிச்சை தேவைப்படுகின்ற இவர்களுக்கு உதவுவது அவசியமானதென்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இரு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளதாகவும் அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சரசி விஜயரட்ண தெரிவித்தார்.

குறிப்பாக மோதல்கள் நடைபெற்றுவரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே பெருமளவு பொதுமக்கள் ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்து உரிய வைத்தியசாலை வசதிகளின்றி பெரும் அவல நிலையை எதிர்கொள்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரசாங்கத்தின் காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவுற்றது. இதைத் தொடர்ந்து வன்னி நிலைகள் குறித்த செய்திகளை இச்செய்தி எழுதப்படும்வரை தெரிந்துகொள்ள முடியவில்லை. படைத் தரப்பிலிருந்து கிடைக்கும் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் அடிப்படையில் முல்லைத்தீவில் புலிகளைப் பிடிப்பதற்கு ஆழ ஊடுருவும் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரியவருகின்றது.