சென்னையில் நேற்று காலமான நடிகர் நாகேஷின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தினர். உடல்நலக் குறைவால் அவதிபட்டு வந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார்.
நாகேஷின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல், சோ, கே.ஆர்.விஜயா, சச்சு, பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உட்பட பலர் நாகேஷின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர் காலை 10.30 மணியளவில் நாகேஷ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 11 மணியளவில் இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மயானத்தை சென்றடைந்தது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.