எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக கல்வியாண்டு 2008/ 2009 மாணவர் அனுமதிக்கான தகுதிகாண் பரீட்சை

sri-lanka-university.jpgஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழத்தின் கல்வியாண்டு 2008/2009 மாணவர் அனுமதிக்கான தகுதிகாண் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கைப் பல்கலைக் கழங்களில் 2008/2009 கல்வியாண்டில் பட்டப்படிப்பை மேற்கொள்வது தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வெளியிட்ட கையேட்டில் 3.2 பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச அனுமதித்தகுதி கொண்டவர்கள் இத்தகுதிகாண் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தொழில் முயற்சியும் முகாமைத்துவமும் கணினி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், விலங்கு விஞ்ஞானமும் ஏற்றுமதி விவசாயம், தேயிலை தொழில்நுட்பமும் பெறுமதி சேர்ப்பும், கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம், நீர்வாழ் வளங்கள் தொழில்நுட்பம், விருந்தோம்பல் சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம், கனியப்பொருள் வளங்களும் தொழில்நுட்பமும் பனை இனத்தாவரம் மற்றும் இறப்பர் பால்தொழில்நுட்பமும் பெறுமதி சேர்ப்பும் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காகவே இத்தகுதிகாண் பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பப்படிவம் மற்றும் தகுதிகாண் பரீட்சைத் திகதி போன்றவை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். விண்ணப்பதாரிகள் ஏ4 தாளின் ஒரு பக்கத்தில் மட்டும் தயார் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களுடன் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இலங்கை வங்கி பதுளை கிளையின் கணக்கு இலக்கம் 3114820 இற்கு 250 ரூபாவை வைப்புச்செய்த காசோலையையும் இணைத்து அனுப்பவேண்டும்.

இத்தகுதிகாண் பரீட்சையில் தகுதி காண்பதற்கான வினாத்தாள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடநெறி தொடர்பான அறிவை பரிசோதிக்கும் வகையிலான வினாத்தாள் என இரண்டு வினாத்தாள்கள் வழங்கப்படும்.இப்பரீட்சை ஆங்கில மொழி மூலம் மட்டுமே நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விண்ணப்பங்களை 25.02.2009 இற்கு முன்னர் கிடைக்குமாறு பதிவாளர் ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம், பசறைவீதி பதுளை என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். கடிதவுரையின் இடதுபக்க மேல் மூலையில் தகுதி காண் பரீட்சை 2008/2009, என குறிப்பிடல்வேண்டும்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் 2008/2009 கல்வியாண்டில் மேற்குறிப்பிடப்பட்ட பட்டப்படிப்புகளை மேற்கொள்ளவுள்ளோர் ஏனைய தகுதிகளுடன் இத்தகுதிகாண் பரீட்சையிலும் தகுதி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த யாழ்., மன்னார் மக்களை சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும்

thomas-sawndaranayakam.jpgஜனாதி பதியிடம் யாழ்.ஆயர் வேண்டுகோள் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களை வவுனியாவுக்கு கொண்டு செல்லாது சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக யாழ்.ஆயரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னியில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து இதுவரை 35 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு வெளியேறும் மக்களை அந்தந்த மாவட்டங்களில் மீள குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து வன்னியில் இருந்த மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களில் மீளக்குடியேற்ற வேண்டும்.

யாழ்ப்பாண மக்களை தென்மராட்சியின் மிருசுவில் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் உள்ள காணிகளில் தற்காலிக வதிவிடங்களை அமைத்து மீளக்குடியேற்றலாம்.

எனவே, இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களை வவுனியாவுக்குக் கொண்டு செல்லாது அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஷ, புனர்வாழ்வு அமைச்சர் ரிச்சோட் பௌடின் மற்றும் வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 5 வயதுக்கும் குறைவான சிறுவர்களில் 22 வீதத்தினர் போஷாக்கின்மையால் பாதிப்பு – உலகவங்கி அறிக்கை

world-bank-01.jpgஇலங்கை யில் ஐந்து வயதுக்குக் குறைவாக உள்ள சிறுவர்களில் 22 சதவீதத்தினர் நிறைகுறைவான பிள்ளைகளாக காணப்படும் நிலையில், இச் சிறுவர்களின் போஷாக்கை கணிசமான அளவுக்கு மேம்படுத்த வேண்டுமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

மிலேனியம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இச்சிறுவர்களின் போஷாக்கை மேம்படுத்தவுள்ளதுடன், அதே அளவுக்கு போஷாக்கின்மையால் அவதியுறும் மக்களின் போஷாக்கின் நிலையை மேம்படுத்த வேண்டியுள்ளதையும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஐந்து வயதுக்கும் குறைவான சிறுவர்களில், 18 வீதத்தினர் குறைந்த வளர்ச்சி நிலையைக் கொண்டுள்ளதுடன், 15 வீதத்தினர் மிக மெலிந்த உடலமைப்பை கொண்டுள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இலங்கையில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு அபிவிருத்திக்கான கூட்டான முயற்சிகளை முன்னெடுக்க வாய்ப்புகள் காணப்படுவதுடன், அரசசார்பற்ற நிறுவனங்கள், பொது சுகாதார சேவைகள் ஊடாக, சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிவகைகள் பற்றியும் ஆராய்ந்து வருவதாக, உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர், நாகோ இஸ்கீ தெரிவித்தார்.

போஷாக்கை மேம்படுத்துவதற்கான, புதிய வழிமுறைகள் வெற்றியளிக்குமாயின், சத்துணவுக்கான நன்கொடை வழங்கலை மேலும் அதிகரிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

போட்டியடிப்படையில், போஷாக்கை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இதன்மூலம் தெற்காசியாவில் வாழும் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கை மேம்படுத்தும் புதிய அணுகுமுறையிலான திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க முடியுமென உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உபதலைவர், இஸ்ஸாபெல் கியூறேறோ குறிப்பிட்டார்.

போஷாக்கின்மையின் பாதிப்பால், தெற்காசியாவில் இளம் சிறுவர்கள், குழந்தைகள் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் வழக்கு சி.ஐ.டி. பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை

sri-lanka-airport.jpgகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத குற்றப்புலனாய்வுப்பிரிவு விசேட விசாரணைப்பகுதி பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ.ரி. ரட்னாயக்க முன்னிலையில் நடைபெற்ற போது இந்த அழைப்பாணையை நீதிபதி பிறப்பித்தார்.

முக்கியமான வழக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து எந்த ஒரு அதிகாரியும் நீதிமன்றத்திற்கு வருவதில்லை என நீதிபதியின் கவனத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி பொறுப்பதிகாரியை மன்றில் ஆஜராகுமாறு நீதிபதி அழைப்பாணை பிறப்பித்தார்.

2001 ஜூலை 24 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன். இரத்தின சிங்கம் புஷ்பகுமரன், விக்டர் அல்பிறட் டொமினி, சுப்பிரமணியம் தவராஜசிங்கம், நாகேந்திரம் நாகலஷ்மன் மற்றும் தனபாலசிங்கம் ஜெயலக்ஷ்மி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிரிகளில் சுப்பிரமணியம் தவராஜசிங்கம் என்பவர் சிலரால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எதிரிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் 422 சாட்சிகள் உள்ளன. அவர்களில் அதிகமானோர்கள் பொலிஸார். கட்டு நாயக்க விமான நிலையத்தாக்குதலில் பதினொரு விமானங்கள் அழிக்கப்பட்டன. இருபத்தைந்து விமானங்கள் சேதமடைந்தன.

அத்துடன் விமானப்படையைச் சேர்ந்தவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வன்னியில் பொதுமக்கள் இழப்பு தொடர்ந்து அதிகரிப்பு

artilary13.jpgமுல்லைத்தீவு தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் நேற்று முன்தினம் வியாழக் கிழமை இடம்பெற்ற கடும் ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களினால் 132 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 358 பேர் காயமடைந்துமுள்ளனர்.  வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து “புதினம்’ மற்றும் “தமிழ்நெற்’ இணையத்தளங்கள் கூறுகையில்;

தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் ஷெல், பீரங்கி மற்றும் பல்குழல் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாள் முழுவதும் ஆறாயிரம் ஷெல்கள் வரை வீழ்ந்து வெடித்ததில் 132 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 358 பேர் காயமடைந்துமுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 91 பேர் மாத்தள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பத்துப்பேர் சிகிச்சை வழங்கப்பட்டுக்கொண்டிருக்கையில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் ஆபத்தாயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இடம் பெயர்ந்தோர் 3 வருடங்கள் தடுத்து வைக்கப்படுவர் என்ற செய்தி உண்மை அல்ல’

risard.jpgவன்னியிலி ருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த பொது மக்கள் 3 வருடங்களுக்கு நலன்புரி முகாம்களிலேயே தடுத்து வைக்கப்படுவர் என்ற செய்திகளில் எந்த உண்மையும் கிடையாதென மறுத்திருக்கும் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னிப் பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்கமெதுவும் அரசாங்கத்துக்குக் கிடையாதென்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வன்னிப் பகுதியிலிருந்து நேற்று (காலை) வரை மொத்தமாக 34,430 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைந்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அமைச்சர் பதியுதீன் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்:

“”வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் பொது மக்கள் 4 கட்டங்களாக உள்வாங்கப்படுகின்றனர். வரும் மக்களுக்கு படையினரால் முதலில் சத்துணவுகள் வழங்கப்பட்டு பின்னர் ஏனைய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. இன்று (நேற்று) வரை 34,430 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளனர். இன்னும் சுமார் 65 ஆயிரம் மக்களே அரச கட்டுப்பாடற்ற பகுதியில் எஞ்சியிருக்கின்றனர்.

இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கென அரை நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கமைய 10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

அத்துடன், வவுனியாவில் ராமநாதன், கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி, அருணாசலம் ஆகிய பெயர்களில் 4 நலன்புரி கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாடசாலை, வங்கி, சுகாதாரம் என சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேநேரம், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இப்போதே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டோம். மன்னார்சிலாபத்துறை பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் வழங்க ஆரம்பிக்கப் பட்டுவிட்டன. பூநகரிசங்குப்பிட்டி பாலத்தின் புனரமைப்புகள் ஆரம்பமாகிவிட்டன. யாழ்ப்பாணம்மன்னார் “”ஏ32′ வீதியை கூடிய விரைவில் செப்பனிடும் பொருட்டு 12 ஒப்பந்தகாரர்களிடம் அந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மாங்குளம் பகுதிக்கும் அடுத்த வாரமளவில் மின்சாரம் வழங்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.

இடம்பெயர்ந்து வந்தவர்களை கூடிய விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம். அதைவிடுத்து நலன்புரி முகாம்களிலேயே மக்கள் 3 வருடங்களுக்கு தடுத்து வைக்கப்பட போவதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது.

அதுமட்டுமல்லாது, வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்களை அரசாங்கம் குடியேற்றப் போவதாக சிலர் இப்போதே பிரசாரம் தொடங்கிவிட்டனர். ஆனால் வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அதற்கான அவசியமும் எமக்கில்லை.

இதேநேரம், இடம்பெயர்ந்து வந்த மக்களுடன் 8, 9 புலி உறுப்பினர்களும் வந்துள்ளனர். சிலர் அவர்களே அதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் திருந்தி மக்களுடன் வாழ விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களை மக்களுடன் இணைத்து வைத்திருக்க முடியாது.

எனவே, அவர்களை நீதி அமைச்சின் பொறுப்பில் ஒப்படைத்து புனர்வாழ்வளித்து, அத்துடன் தொழிற் பயிற்சிகளையும் வழங்கி, வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை வழங்க திட்டமிடப் பட்டுள்ளன’ என்றார்.

ஐ.நா. அமைதி காக்கும் குழுவை அனுமதிக்க பான் கீ மூன் இலங்கையை வலியுறுத்த வேண்டியவேளை வந்துவிட்டது

robert-evans.jpgஇலங் கையில் பொது மக்கள் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா.அமைதிகாக்கும் படையை அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக் குழுவினர் தலைவர் ரொபேர்ட் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழ்மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற தலைப்பில் ரொபேர்ட் இவான்ஸ் ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

அதில் ரொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:

ஐயா! இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமொன்று உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எவ்வாறாயினும் பொதுமக்கள் குருதிப்பெருக்கைத் தவிர்ப்பதற்கு நாட்டுக்குள் ஐ.நா. அமைதிகாக்கும் குழுவை அனுமதிக்குமாறு ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்துவதற்கான வேளைவந்துள்ளதாக நான் நம்புகிறேன்.

இலங்கையின் வடக்குப்பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலிருந்து மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருப்பதாக நாட்டிலிருந்து வெளியாகும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தனது பக்கத்திற்கு வருமாறு இலங்கை அரசு தமிழ் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. ஆனால், அவ்வாறு வருவதுதொடர்பான இயற்கையான தயக்கமும் அச்சமும் உள்ளன. இதற்கு சமாந்தரமாக தனது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் மக்கள் தப்பிச்செல்ல முயற்சித்தால் புலிகள் அவர்களை சுட்டுவிடுவார்கள் என்பது தொடர்பான செய்திகளும் உள்ளன.

தமிழ் மக்கள் அதிகளவுக்கு இழப்புகளையும் அழிவுகளையும் எதிர்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.இலங்கை படையினர் மற்றும் அவர்களின் முகாம்கள் தொடர்பாக அவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் வித்தியாசமான மொழி குறித்துக் குறிப்பிடத்தேவையில்லை. சர்வதேச சமூகம் உடனடியாக செயற்படாவிடின் சுமார் 2 1/2 இலட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பேரனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.

மேலதிகமாக ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் இந்த மக்களுக்கு மனிதாபிமான உதவி சென்றடைவதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துமாறு நான் அழைப்பு விடுகின்றேன். அத்துடன் சர்வதேச பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் செல்வதற்கு முழு அளவில் அனுமதி வழங்கவேண்டும். காலம் கைநழுவிச் சென்று கொண்டிருக்கிறது. முன்னுரிமை கொடுத்து இந்த உதவியை மேற்கொள்ள வேண்டும்.

1600 பேர் வருகை.

mullai-ahathi.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இன்று அதிகாலை 1657 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதில் 1208 பேர் விஸ்வமடு பகுதியில்  படையினரிடம் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவிலியன்கள் பஸ் மீது கைக்குண்டுத் தாக்குதல்: ஒருவர் பலி, 12 பேர் காயம்

udaya_nanayakkara_.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருநது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்களை ஏற்றி வந்த பஸ் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதல் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று  அதிகாலையில் இடம் பெற்றதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கைக்குண்டுத் தாக்குதலில் வயதான ஐந்து ஆண்கள், இரு சிறுவர்கள், வயதான ஐந்து பெண்கள், இரு பெண்கள் ஆகியோர் அடங்குவர். இந்தச் சம்பவம் புளியங்குளம்-வவுனியா வீதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அனைவரும் இராணுவ பஸ் வண்டிகள் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவரின் சடலமும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து வருகின்றவர்களுக்கு தற்காலிக உறுதியான வீடுகள்!

srilanka_displaced.jpgமுல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருகின்றவர்களுக்கென தற்காலிக உறுதியான வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். இத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஐந்து நலன்புரி கிராமங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் 8ஆயிரம்  வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.