இலங் கையில் பொது மக்கள் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா.அமைதிகாக்கும் படையை அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக் குழுவினர் தலைவர் ரொபேர்ட் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழ்மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற தலைப்பில் ரொபேர்ட் இவான்ஸ் ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
அதில் ரொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:
ஐயா! இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமொன்று உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
எவ்வாறாயினும் பொதுமக்கள் குருதிப்பெருக்கைத் தவிர்ப்பதற்கு நாட்டுக்குள் ஐ.நா. அமைதிகாக்கும் குழுவை அனுமதிக்குமாறு ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்துவதற்கான வேளைவந்துள்ளதாக நான் நம்புகிறேன்.
இலங்கையின் வடக்குப்பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலிருந்து மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருப்பதாக நாட்டிலிருந்து வெளியாகும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தனது பக்கத்திற்கு வருமாறு இலங்கை அரசு தமிழ் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. ஆனால், அவ்வாறு வருவதுதொடர்பான இயற்கையான தயக்கமும் அச்சமும் உள்ளன. இதற்கு சமாந்தரமாக தனது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் மக்கள் தப்பிச்செல்ல முயற்சித்தால் புலிகள் அவர்களை சுட்டுவிடுவார்கள் என்பது தொடர்பான செய்திகளும் உள்ளன.
தமிழ் மக்கள் அதிகளவுக்கு இழப்புகளையும் அழிவுகளையும் எதிர்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.இலங்கை படையினர் மற்றும் அவர்களின் முகாம்கள் தொடர்பாக அவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் வித்தியாசமான மொழி குறித்துக் குறிப்பிடத்தேவையில்லை. சர்வதேச சமூகம் உடனடியாக செயற்படாவிடின் சுமார் 2 1/2 இலட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பேரனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.
மேலதிகமாக ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் இந்த மக்களுக்கு மனிதாபிமான உதவி சென்றடைவதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துமாறு நான் அழைப்பு விடுகின்றேன். அத்துடன் சர்வதேச பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் செல்வதற்கு முழு அளவில் அனுமதி வழங்கவேண்டும். காலம் கைநழுவிச் சென்று கொண்டிருக்கிறது. முன்னுரிமை கொடுத்து இந்த உதவியை மேற்கொள்ள வேண்டும்.